Monday, July 13, 2009

என்னவர்களை நோக்கியே...
-நடராஜா முரளிதரன்-

தொடைகளுக்குள்
அழுந்தி நெரியும்
யோனிகளை
அளவளாவவே
எனது பார்வை
தெறித்தோடுகின்றது

முனைதள்ளி நிற்கும்
மேடுகளையும்
நுனிப்புல் மேய்ந்தவாறே

மனைவியோடு
பிள்ளையோடு
நண்பனோடு
பேசாத
கனிவான வார்த்தைகள்
அங்கு கொட்டுகின்றன

அன்றொரு நாள்
யேசு வாங்கிப்
பெற்றுக்கொண்ட
கற்களைக் கூடைகளில்
சேகரித்துக்கொண்டு
எறிவதற்காய்
எல்லோரையும் நோக்கி
குறிபார்த்தல்
தொடருகிறது.

வார்த்தைகளை
இரவல் வாங்கியவனாகி
விடக்கூடாது
என்பதற்காய்
வாசித்தலையே மறுத்து
துறவறம் பூணுகின்றேன்

ஆயினும்
பிரபஞ்சமெங்கணும் இருந்து
எனக்கான
படிமங்களை வேண்டியும்
இன்னும் அதற்கு மேலாயும்
இரந்து வேண்டி
இன்னுமோர் தவத்தில்
மோனித்திருப்பதாய்
கூறிக்கொள்ளுகின்றேன்

எனினும்
ஓங்கியொலிக்கும்
மனித ஓலம்
பெருக்கெடுத்தோடும்
மனிதக் குருதி
மூச்சுக் குழல்களை
அடைத்து நிற்கும்
பிணவாடை
என்னை மீண்டும்
என்னவர்களை
நோக்கியே
அழைத்துச் செல்கிறது

No comments: