Monday, July 13, 2009

பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன
-நடராஜா முரளிதரன்-



1962இல் இந்தியப் பிரதமராக இருந்த நேரு இந்தியா மீதான சீனப் படையெடுப்பின் போது இந்தியப் பாராளுமன்றத்தில் பிரிவினை கோருகின்ற, பிரிவினை வாதம் பேசுகின்ற கட்சிகள் தடை செய்யப்படும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுகின்றார். அப்போது “அண்ணா” தலைமையிலான “திராவிடமுன்னேற்றக்கழகம்” அது வரை முழங்கிய, கோசித்த “திராவிடநாடு” தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுக் கொண்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள தன் வீட்டுத் திண்ணையில் குந்தியிருந்து கொண்டாவது திராவிடத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடாது இறுதிவரைக்கும் போராடுவேன் என்று கூறிய “அண்ணா” ஆயுதப் போராட்டத்தைத் தனது போராட்ட நெறியாக வரித்துக் கொள்ளாதவர். ஆயினும் அந்தக் கோசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்களால் சாதிக்க முடியாத “மக்கள் அமைப்பைக் கட்டுதல்” என்ற வியாக்கியானத்தைத் தமிழகத்தில் செயற்படுத்திய வலுப்படைத்தவராக அண்ணா அவர்களைக் கருத முடியும்.

இவ்வாறான அண்ணா திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுகின்ற அவ்வேளையில் கூறிய வாசகம் இந்தியக் கூட்டாட்சி வரலாற்றிலே மிகப் பிரசித்தமானது. இன்றும் கூடத் தமிழக வரலாற்று ஆய்வாளர்களால் அவ்வாசகம் எடுத்தியம்பப்படுகின்றது.
நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம். ஆனால் பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்ற கூற்றே அண்ணா கூறிய அந்தப் பிரசித்தி பெற்ற வாசகமாகும்.

மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி அதிகாரங்களை உள்ளடக்கிய மொழி வழி மாநிலங்களைக் கொண்ட இந்தியக் கூட்டாட்சி அமைப்பின் கீழ் தமிழ்மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அன்றைய சென்னை மாநிலத்தின் சார்பிலே அண்ணா அந்த வாதத்தை முன்னெடுத்திருந்தார். எனினும் திராவிடத்தின் உள்ளடக்கமான ஆந்திர,கர்னாடக,கேரள மக்களது ஆதரவு கிஞ்சித்தும் அந்தக் கோரிக்கைக்குக் கிடைத்திருக்கவில்லை.

அந்த வாதம் முன்னெடுக்கப்படும் அவ்வேளைகளில் இந்திய இராணுவம் தமிழகத்தின் எந்த மூலைகளுக்குள்ளும் நுழைந்திருக்கவில்லை. அடக்குமுறை வெறியாட்டம் காட்டுமிராண்டித்தனமான வகையில் தமிழகத்து மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கவில்லை. உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான மனித உரிமை மீறல்கள் உச்சம் பெற்றதற்கான சாட்சியங்கள் அங்கு ஏதுமில்லை. அதற்காக அங்கு எல்லாம் இனிதே நிகழ்ந்தன என்று கூறவும் நான் முற்படவில்லை. அத்தகைய சூழ்நிலையிலே தொடர்ந்து அண்ணா எழுப்பிய முக்கிய கோசமானது “மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி” என்ற முக்கிய சுலோகமாகும். அந்தச் சென்னை மாநிலம்தான் பின்னர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் பெறுகின்றது.

இதைக் கூறிவிட்டு அறுத்துக் கொண்டு உடனே பின்னடைவுக்குள்ளான ஈழவிடுதலைக்கான போராட்டம் குறித்துக் கருத்துக் கூறுகின்ற குர்திஸ் தேசியவாதி “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களிடம் செல்லவிரும்புகின்றேன். கடந்த சில வாரங்களாக இவர் ஈழப் போராட்டத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை குறித்துக் கூறிய கருத்துக்கள் இணையத்தள, மின் ஊடகங்கள் பலவற்றில் வெளியாகிப் பிரபலமடைந்துள்ளன. பின்னால் இந்த இருவர் கருத்துக்களுக்குமான தொடர்புகள் பற்றிப் பார்ப்போம். “ளூநஒஅரஒ யுஅநவ” அவர்கள் கூறுகின்றார், இன்று விடுதலைப் புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டம் பின்னடைவுக்குள்ளானது போன்று வரலாற்றில் குர்திஸ் மக்களும் தங்கள் விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு தடவைகள் தோல்வியடைந்துள்ளார்கள் என்று.

1925, 1938, 1946, 1975, 1988, 1991 என குர்திஸ் மக்கள் அடைந்த தோல்விகளின் வரலாற்றுப் பட்டியல் நீளுகின்றது. அது மட்டுமல்லாது இன்றும் அவர்கள் “குர்திஸ்தான்” என்ற தனிநாட்டை அமைப்பதில் வெற்றி பெற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்கத் தலையீட்டின் காரணமாக ஈராக்கில் அமைந்துள்ள “குர்திஸ்தான்” மாத்திரம் ஈராக்கிய மத்திய ஆட்சிக்குட்பட்ட வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையுடைய சுயாட்சிப் பிரதேசமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அவர் மேலும் கூறுகையில் உங்கள் போராளிகள் இறுதிவரை நெஞ்சுரத்தோடு போராடி மரணித்த இவ்வரலாறானது உங்கள் மொழியில் அமையப்பெறும் பாடல்களிலும் , இலக்கியங்களிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் சாட்சியங்களாக எதிர்கால வரலாற்றில் அமையப் பெறும் என்று குறிப்பிடுகின்றார்.

தொடர்ந்து அவர் முன் வைக்கும் விமர்சனத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் எதிர்பார்ப்புகள் மிக இறுக்கமானவை என்று கூறுகின்றார். “தங்களது தமிழீழத் தாயகக் கோரிக்கைக்குப் பரந்துபட்ட பன்னாட்டு ஆதரவு திரளாத நிலையில் இலங்கையில் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்;பந்தத்தை ஏற்பதே யதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும். அதே சமயம் இலங்கை அரசானது தொடர்ந்து தமிழ்மக்களின் ஆதார உரிமைகளை மீறும் பட்சத்தில் இந்தப் போராட்டத்தைத் தமிழ்மக்களின் அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கவும் வழிவகுத்திருக்கும். அந்தக் கட்டத்தில் கூட்டாட்சி அடிப்படையில் அமைந்த தமிழர்களின் சுயாட்சி அரசுக்கு மேலதிக பன்னாட்டு அங்கீகாரம் கிட்டியிருக்க முடியும். தவிர, விடுதலைப்புலிகள் அமைப்பு “பயங்கரவாத அமைப்பு” என்ற முத்திரையுடன் மேற்கத்தேய அரசுகளால் தனிமைப்பட்டுப் போகாமல் இருந்திருக்கலாம்” என்ற வகையிலெல்லாம் அவருடைய விமர்சனம் அமைகின்றது.

ஆனால் தமிழ்த்தேசியத்தின் தீவிர ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் வாதமானது சிறிலங்கா அரசானது எந்தச் சூழ்நிலையிலும் இனப்பிரச்சினைக்கு மாற்றுத்தீர்வாக ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்டுத் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வாக இதயசுத்தியுடன் “சமஸ்டி” அடிப்படையிலான எந்த அரைகுறைத் தீர்வையும் கூட நடைமுறைப்படுத்தத் தயாராக இருக்கவில்லை என்பதேயாகும். அதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் நிரம்பவே இருக்கின்றன. எனவேதான் “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களின் மேற்கூறிய விமர்சனத்தில் உள்ள இலங்கையில் தமிழர்கள் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்;பந்தத்தை ஏற்பதே யதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும் என்ற விமர்சனத்தை நடைமுறைச் சாத்தியமானதுதானா என்ற தர்க்கத்த்pன் அடிப்படையோடு ஒப்பிட்டு நோக்க வேண்டியுள்ளது.

“உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன், எவ்வளவு இழப்புகள். எவ்வளவு குருதிப்பெருக்கு. யாவும் ஒடுக்கப்பட்ட, சொல்லமுடியாத துயரம் இந்த ஒரு வரியில் வெளிப்படுகிறது. நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் என்று சொன்ன புரட்சிக் கருத்துகளை நேற்று வரை கொண்டாடி வந்த பலரும் இன்று வன்முறையிலான பாதை தவறானது. வன்முறையில்லாமல் நாம் அமைதியாகப் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் .ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்பத் திரும்பச் சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாடச் சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்திய சுதந்திரப் போரில் வெள்ளையர்களால் அடிபட்டும், வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும். நான் வன்முறையை வளர்க்கச் சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்திப் போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது” என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் தனது இணையத்தளத்தில் பின்னடைவுக்குள்ளான ஈழப்போராட்டம் குறித்து எழுதுகிறார்.

ஏனவேதான் “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களின் இறுதி விமர்சன வார்த்தைகளான “அறிவும் திறமையும் ஆற்றலும் கொண்ட ஈழத்தமிழ் மக்களே, இந்தச் தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம்! உம் கனவுகள் உயிரோட்டத்துடன் இருக்கட்டும், அப்போது துப்பாக்கித்தோட்டாக்களோ, வாக்குச்சீட்டுகளோ கொண்டு நீங்கள் ஈழத்தை அடைவதும் நிச்சயம்!” என்ற சொல்லாடல்களையும் பொருத்திக் கொண்டு அண்ணா மொழிந்த “நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம். ஆனால் பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்ற வார்த்தைகளுக்குள் நுழைவதற்கான சாத்தியங்கள் குறித்து சிந்திக்கத் தலைப்படுகின்றேன்.

No comments: