நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஜனநாயகத் தேர்தல்
-நடராஜா முரளிதரன்-
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலே புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களில் ஒருசாரார், இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் இக்கணம் வரை இலங்கையில் வாழும் தமிழ்மக்களுக்குச் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்து இழைத்து வரும் அநீதிகள் தொடர்பாகக், குறிப்பாகத் தற்போதைய ராஜபக்ச அரசின் தமிழ் மக்கள் மீதான மிலேச்சத்தனமான அடக்குமுறைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ் பேசும் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, தமிழ் பேசும் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் என்ற அடிப்படையில் தலையீடு செய்யக் கோரி கவன ஈர்ப்புப் போராட்டங்களை எவ்வித இடைநிறுத்தல்களும் இன்றித் தொடர்ச்சியாக அமெரிக்கத் தூதரக, அரசு அலுவலகங்களுக்கு முன்பாக நிகழ்த்தி வருகிறார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவரீதியாகக் களத்திலே தோற்கடிக்கப்பட்ட பின்னும் இந்தப் போராட்டம் எத்தகைய விட்டுக்கொடுப்பும் இன்றித் தொடருகின்றது. கடந்த மே மாதம் 19ம், 20ம் தேதிகளுக்கு முன்னர் இங்கு வாழும் தமிழ்மக்களுக்கு இத்தகைய போராட்டங்கள் தொடர்பாக இருந்த ஆர்வம் தற்போதைய சூழ்நிலையில் குன்றியிருந்த போதிலும் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
விடுமுறை நாட்களில், மாலை வேளைகளில் கணிசமான அளவு மக்கள் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடுகின்றார்கள். கடந்த வாரம் திங்கட்கிழமை மாலை வேளையில் எனது ஊரான காங்கேசன்துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்தப் போராட்டத்திலே தங்களை ஈடுபடுத்தியிருந்தார்கள். இவ்வாறான போராட்டங்களின் போது எழுப்பப்படும் பல்வேறு கோசங்களில் ஒன்றாக விடுதலைப் புலிகள் அமைப்பை அங்கீகரிக்குமாறு வேண்டுவதும், தடையை நீக்குமாறு கேட்பதும் வழக்கம். எவை எப்படியிருந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசின் இராஜாங்கத் திணைக்களம் சென்ற கிழமை மீண்டும் அறிவித்துள்ளது.
அவ்வறிவிப்பில் விடுதலைப் புலிகளினால் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகக் கடல் கடந்த “தமிழ் ஈழ அரசு” என்ற அறிவிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தொடர்ந்து அந்த அமைப்பை ஓர் பயங்கரவாத அமைப்பாகவே கருதுவதாகவும் குறிப்பிடுகிறது அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்.
இதேவேளை, பயங்கரவாதத்தைக் களைந்து ஜனநாயக ரீதியில் உரிமைகளை வென்றெடுக்கப் போவதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை வரவேற்கத்தக்கதெனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நம்பிக்கை ஏற்பட இன்னும் நீண்ட காலம் எடுக்கும் எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள உயரதிகாரி “கிரெக் சுல்வியான”; தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலச் சூழ்நிலையின் வரலாற்றுக் கட்டர்யமாகும் என்ற தர்க்கத்தின் இயங்குதளத்தில் அங்கு வாழும் மக்களினது இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்துச் சிந்திப்பதுதான் சரியானதும், நேர்மையானதும் என்ற வகையிலே விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தலைமை சிந்திப்பதாகத் தெரிகின்றது.
தாயகத்தின் தற்போதைய நிலையில் - சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் தமது வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்திருக்கும் மக்களுக்கும், போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பன அதற்குள் உள்ளடக்கம்..
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அப்பாவிப் பொதுமக்களைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க அரசு ஜனநாயக நெறிமுறையில் இணைந்து கொள்வது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மெய்யான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் எனவும், அவர்களது ஜனநாயகம் நோக்கிய பயணத்தை அமெரிக்க அரசு மிக உன்னிப்பாக அவதானிக்கும் எனவும் குறிப்பிடுகின்றது.1997ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்து வந்துள்ளது அமெரிக்க அரசு.
இங்குதான் எனது கேள்விகள் எழுகின்றது. அமெரிக்கா போன்ற அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கையை இவ்வாறான போராட்டங்கள் முழுவதுமாக மாற்றியமைத்து விடுமா ? இந்தக் கேள்விக்கு இல்லையென்ற பதிலைக் கூறுவதற்கு எவரும் மிகப் பெரிய அரசியல் ஞானம் படைத்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் எமது பிராந்தியத்திலே புவியியல் ரீதியில் மிக நெருக்கமாக அமைந்துள்ள இந்தியா போன்ற பேரரசுகளின் மூலம் கிடைக்கப் பெறும் அரசியல், இராணுவ, பொருளாதார நலன்களைக் காட்டிலும் எம்மிடமிருந்து எதுவும் கிடைக்கப் போவதில்லை அமெரிக்க அரசுக்கு. எனவே குறுகிய காலநோக்கில் உடனடிக் கால அட்டவணைக்கான நிகழ்ச்சி நிரலின்படி தென்னாசியாவுக்கான இந்து மகாசமுத்திரத்தில் தற்காலிகமாக இந்தியாவின் மேலாண்மையை ஆதரித்தாக வேண்டிய கடப்பாடு அமெரிக்காவுக்கு உண்டு. இது ஒப்பீட்டளவில் தன்னால் முழுமையாக உடன்படவும், முரண்படவும் முடியாத நாடாகிய சீனாவைக் கட்டுப்படுத்த ஓரளவுக்கு உதவக் கூடும.;
இந்த அடிப்படையின் மீதே இவை தொடர்பான எமது மொழியாடல்களைக் கட்டமைக்க வேண்டும். நடந்து முடிந்த இனப் படுகொலையை நாம் உட்பட யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும், தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த போராட்டங்கள் தமிழர்களால் நடத்தப்பட்டது. எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் மேற்கொள்வதாகக் கருதிக்கொண்டு மிகுந்த நம்பிக்கையின் பேரில் செயற்பட்டோம். இருந்தபோதும் உலக நாடுகளை ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக வென்றெடுப்பதில் தோல்வியையே தழுவிக்கொண்டோம்..
தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து அனைத்துலக அளவில் எழுந்த கண்டனங்கள் வெற்றுச் சுலோகங்களாக நம் கண் முன்னேயே வீழ்ந்து மடிந்தன. தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது போராளி இயக்கத்தைப் பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.
ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு இந்து சமுத்திரப் பிராந்தியப் புவிசார் அரசியலை நன்கு பயன்படுத்தியும், அனைத்துலக ஒழுங்கு முறைமை இயங்கும் நடைமுறையைக் கருத்திற்கொண்டும் உலக நாடுகளை அது தனது பக்கம் பெரும் அணியாகச் சேர்த்துக் கொண்டு தமிழர் தேசம் மீதான போரை நடத்தியது.
இந்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்களின் பின்னணியிலேதான் மே மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் சிறப்பு அமர்வில் சிறிலங்கா அரசு மேற்குலகின் எதிர்ப்பையும் மீறி வெற்றி ஈட்டியது. தொடர்ந்தும், அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்களப் பெருந்தேசியவாத மேலாண்மையை தமிழ் மக்கள் மீது திணிக்கவே சிறிலங்கா அரசு முயல்கிறது.
எனவே அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற முடியாது. பாதிப்புற்றிருக்கும் நமது மக்களுக்கு ஆதரவாக உலகை எவ்வாறு திருப்பப் போகிறோம்?
உலக ஒழுங்கு அறத்தின் பாற்பட்டுச் சுழல்வதல்ல. அது தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருப்பது. ஆகவே இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது சாத்தியமாகுமா? இவ்வாறான விமர்சனங்களையே தமிழ்த் தேசியச் சார்பாளர்கள் முன் வைக்கின்றார்கள்.
எனவேதான் நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்கத் தலைப்பட வேண்டுமாயிருந்தால் தமிழ் மக்களுக்குள் உள்ளும், வெளியுமாய் ஜனநாயகச் சூழலுக்கான அத்திவாரம் கட்டமைக்கப்படுதல் வேண்டும். கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகள் ஆரோக்கியமான சமூக வாழ்வின் சகஜமான நிகழ்ச்சிப் போக்குகளாகும். வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்ற விதியை நாம் ஏற்பவர்களாக இருக்கும் பட்சத்தில் புலம் பெயர் வாழ்தமிழ்மக்களால் தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் நாடு கடந்த நிலையில் தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய தமிழ்மக்கள் சார்ந்த அனைத்துக் கட்சிகளும் பங்குபற்றுவதற்கான ஜனநாயகத் தேர்தல் ஒன்றினை நாம் ஏன் நிகழ்த்த முடியாது?
அவ்வாறு நிகழ்த்துவதன் மூலம் ஈழத்தமிழ்மக்களுடைய அரசியல் உரிமைப் போராட்டத்தினை வரலாற்றின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும்.
