Tuesday, July 14, 2009

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஜனநாயகத் தேர்தல்

-நடராஜா முரளிதரன்-

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலே புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களில் ஒருசாரார், இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் இக்கணம் வரை இலங்கையில் வாழும் தமிழ்மக்களுக்குச் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்து இழைத்து வரும் அநீதிகள் தொடர்பாகக், குறிப்பாகத் தற்போதைய ராஜபக்ச அரசின் தமிழ் மக்கள் மீதான மிலேச்சத்தனமான அடக்குமுறைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ் பேசும் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, தமிழ் பேசும் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் என்ற அடிப்படையில் தலையீடு செய்யக் கோரி கவன ஈர்ப்புப் போராட்டங்களை எவ்வித இடைநிறுத்தல்களும் இன்றித் தொடர்ச்சியாக அமெரிக்கத் தூதரக, அரசு அலுவலகங்களுக்கு முன்பாக நிகழ்த்தி வருகிறார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவரீதியாகக் களத்திலே தோற்கடிக்கப்பட்ட பின்னும் இந்தப் போராட்டம் எத்தகைய விட்டுக்கொடுப்பும் இன்றித் தொடருகின்றது. கடந்த மே மாதம் 19ம், 20ம் தேதிகளுக்கு முன்னர் இங்கு வாழும் தமிழ்மக்களுக்கு இத்தகைய போராட்டங்கள் தொடர்பாக இருந்த ஆர்வம் தற்போதைய சூழ்நிலையில் குன்றியிருந்த போதிலும் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
விடுமுறை நாட்களில், மாலை வேளைகளில் கணிசமான அளவு மக்கள் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடுகின்றார்கள். கடந்த வாரம் திங்கட்கிழமை மாலை வேளையில் எனது ஊரான காங்கேசன்துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்தப் போராட்டத்திலே தங்களை ஈடுபடுத்தியிருந்தார்கள். இவ்வாறான போராட்டங்களின் போது எழுப்பப்படும் பல்வேறு கோசங்களில் ஒன்றாக விடுதலைப் புலிகள் அமைப்பை அங்கீகரிக்குமாறு வேண்டுவதும், தடையை நீக்குமாறு கேட்பதும் வழக்கம். எவை எப்படியிருந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசின் இராஜாங்கத் திணைக்களம் சென்ற கிழமை மீண்டும் அறிவித்துள்ளது.
அவ்வறிவிப்பில் விடுதலைப் புலிகளினால் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகக் கடல் கடந்த “தமிழ் ஈழ அரசு” என்ற அறிவிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தொடர்ந்து அந்த அமைப்பை ஓர் பயங்கரவாத அமைப்பாகவே கருதுவதாகவும் குறிப்பிடுகிறது அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்.
இதேவேளை, பயங்கரவாதத்தைக் களைந்து ஜனநாயக ரீதியில் உரிமைகளை வென்றெடுக்கப் போவதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை வரவேற்கத்தக்கதெனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நம்பிக்கை ஏற்பட இன்னும் நீண்ட காலம் எடுக்கும் எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள உயரதிகாரி “கிரெக் சுல்வியான”; தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலச் சூழ்நிலையின் வரலாற்றுக் கட்டர்யமாகும் என்ற தர்க்கத்தின் இயங்குதளத்தில் அங்கு வாழும் மக்களினது இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்துச் சிந்திப்பதுதான் சரியானதும், நேர்மையானதும் என்ற வகையிலே விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தலைமை சிந்திப்பதாகத் தெரிகின்றது.
தாயகத்தின் தற்போதைய நிலையில் - சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் தமது வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்திருக்கும் மக்களுக்கும், போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பன அதற்குள் உள்ளடக்கம்..
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அப்பாவிப் பொதுமக்களைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க அரசு ஜனநாயக நெறிமுறையில் இணைந்து கொள்வது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மெய்யான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் எனவும், அவர்களது ஜனநாயகம் நோக்கிய பயணத்தை அமெரிக்க அரசு மிக உன்னிப்பாக அவதானிக்கும் எனவும் குறிப்பிடுகின்றது.1997ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்து வந்துள்ளது அமெரிக்க அரசு.
இங்குதான் எனது கேள்விகள் எழுகின்றது. அமெரிக்கா போன்ற அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கையை இவ்வாறான போராட்டங்கள் முழுவதுமாக மாற்றியமைத்து விடுமா ? இந்தக் கேள்விக்கு இல்லையென்ற பதிலைக் கூறுவதற்கு எவரும் மிகப் பெரிய அரசியல் ஞானம் படைத்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் எமது பிராந்தியத்திலே புவியியல் ரீதியில் மிக நெருக்கமாக அமைந்துள்ள இந்தியா போன்ற பேரரசுகளின் மூலம் கிடைக்கப் பெறும் அரசியல், இராணுவ, பொருளாதார நலன்களைக் காட்டிலும் எம்மிடமிருந்து எதுவும் கிடைக்கப் போவதில்லை அமெரிக்க அரசுக்கு. எனவே குறுகிய காலநோக்கில் உடனடிக் கால அட்டவணைக்கான நிகழ்ச்சி நிரலின்படி தென்னாசியாவுக்கான இந்து மகாசமுத்திரத்தில் தற்காலிகமாக இந்தியாவின் மேலாண்மையை ஆதரித்தாக வேண்டிய கடப்பாடு அமெரிக்காவுக்கு உண்டு. இது ஒப்பீட்டளவில் தன்னால் முழுமையாக உடன்படவும், முரண்படவும் முடியாத நாடாகிய சீனாவைக் கட்டுப்படுத்த ஓரளவுக்கு உதவக் கூடும.;
இந்த அடிப்படையின் மீதே இவை தொடர்பான எமது மொழியாடல்களைக் கட்டமைக்க வேண்டும். நடந்து முடிந்த இனப் படுகொலையை நாம் உட்பட யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும், தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த போராட்டங்கள் தமிழர்களால் நடத்தப்பட்டது. எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் மேற்கொள்வதாகக் கருதிக்கொண்டு மிகுந்த நம்பிக்கையின் பேரில் செயற்பட்டோம். இருந்தபோதும் உலக நாடுகளை ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக வென்றெடுப்பதில் தோல்வியையே தழுவிக்கொண்டோம்..
தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து அனைத்துலக அளவில் எழுந்த கண்டனங்கள் வெற்றுச் சுலோகங்களாக நம் கண் முன்னேயே வீழ்ந்து மடிந்தன. தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது போராளி இயக்கத்தைப் பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.
ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு இந்து சமுத்திரப் பிராந்தியப் புவிசார் அரசியலை நன்கு பயன்படுத்தியும், அனைத்துலக ஒழுங்கு முறைமை இயங்கும் நடைமுறையைக் கருத்திற்கொண்டும் உலக நாடுகளை அது தனது பக்கம் பெரும் அணியாகச் சேர்த்துக் கொண்டு தமிழர் தேசம் மீதான போரை நடத்தியது.
இந்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்களின் பின்னணியிலேதான் மே மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் சிறப்பு அமர்வில் சிறிலங்கா அரசு மேற்குலகின் எதிர்ப்பையும் மீறி வெற்றி ஈட்டியது. தொடர்ந்தும், அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்களப் பெருந்தேசியவாத மேலாண்மையை தமிழ் மக்கள் மீது திணிக்கவே சிறிலங்கா அரசு முயல்கிறது.
எனவே அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற முடியாது. பாதிப்புற்றிருக்கும் நமது மக்களுக்கு ஆதரவாக உலகை எவ்வாறு திருப்பப் போகிறோம்?
உலக ஒழுங்கு அறத்தின் பாற்பட்டுச் சுழல்வதல்ல. அது தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருப்பது. ஆகவே இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது சாத்தியமாகுமா? இவ்வாறான விமர்சனங்களையே தமிழ்த் தேசியச் சார்பாளர்கள் முன் வைக்கின்றார்கள்.
எனவேதான் நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்கத் தலைப்பட வேண்டுமாயிருந்தால் தமிழ் மக்களுக்குள் உள்ளும், வெளியுமாய் ஜனநாயகச் சூழலுக்கான அத்திவாரம் கட்டமைக்கப்படுதல் வேண்டும். கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகள் ஆரோக்கியமான சமூக வாழ்வின் சகஜமான நிகழ்ச்சிப் போக்குகளாகும். வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்ற விதியை நாம் ஏற்பவர்களாக இருக்கும் பட்சத்தில் புலம் பெயர் வாழ்தமிழ்மக்களால் தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் நாடு கடந்த நிலையில் தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய தமிழ்மக்கள் சார்ந்த அனைத்துக் கட்சிகளும் பங்குபற்றுவதற்கான ஜனநாயகத் தேர்தல் ஒன்றினை நாம் ஏன் நிகழ்த்த முடியாது?
அவ்வாறு நிகழ்த்துவதன் மூலம் ஈழத்தமிழ்மக்களுடைய அரசியல் உரிமைப் போராட்டத்தினை வரலாற்றின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும்.

தேடும் என் தோழா
-நடராஜா முரளிதரன்-

சூரியப் பந்தத்தைக்
கைகளால் பொத்தி
அணைத்து விட்டு
சந்திரனுக்கு ஒளியைப்
பாய்ச்சி விடும்
கைங்கரியத்தில்
ஆழ்ந்து போயிருக்கும்
என் தோழா

நீ புனைவுக்காரன்
சூனியமான சந்திரனைப்
பிரவாகம் கொள்ள
வைத்தது
உனது கவிதைகள்தான்
என்று கூறுவாய்

பாய்ந்து வந்த
கோடானுகோடி
கதிர் வெள்ளத்தின்
நதிமூலத்தை
அங்கீகரிக்க மறுத்த
கற்பனாவாதி நீ

சாவுக் களங்களில்
கொள்ளிக் குடங்கள்
துளையுண்டு
தண்ணீர் கொட்டும்
வேளைகள்
வாய்க்கரிசி நிறைந்து
வழியும் கணங்கள்
நட்சத்திரங்கள்
எரிந்து வீழும்
பொழுதுகள்
எனது கனவுகளைக்
குலைத்து விடுகின்றன

எனவேதான்
நித்தியத்தைத்
தேடியலைய
என் ஆன்மா
மறுத்து விடுகின்றது

ஆழ்ந்து மோனித்து
கடைந்தெடுத்து
உன்னையும் காணாது
என்னையும் கண்டடையாது
இறுமாப்பில் பெருமிதம்
கொள்ளும் என் தோழா

யுகங்களாய்
தொடரும் தேடல்கள்
முற்றுப்புள்ளியைத் தேடி
முடிவிலி வரை
பயணம் புரிகின்றன

Monday, July 13, 2009

அந்த இரவு
-நடராஜா முரளிதரன்-

இரவின் மீது பிரியமுடன்
நடந்து செல்லும்
நாளை நோக்கிக்
காத்திருக்கும் எனக்கு

ஒளியை இழந்த
அந்த இரவினைக் கடப்பது
என்றும் போல்
அன்றும் கடினமாயிருந்தது

சந்திரன் தொலைந்து
நட்சத்திரங்கள்
விழுங்கப்பட்ட
அந்த இரவு

காற்றில் எழுதப்பட்ட
வரிகளை
சுவாசிக்கவும்
திராணியற்ற
அந்த இரவு

காலமெல்லாம்
கிளர்ந்தெழும்
காமத்தை
மறுத்த
அந்த இரவு

உறைந்து போய்
ஒரு வெளியாய்
திரண்டு போயிருக்கும்
அந்த இரவு

எனக்கு வேண்டிய
சேதிகளைச்
சொல்ல மறுத்து
நிற்கிறது
அலைதலின் பின்னான குற்றச்சாட்டு
-நடராஜா முரளிதரன்-



எனது இருப்புக்கான
ஒரு கூடு தேடி
அலைதலில்
எத்தனை புனைவுகளை
இழிபேச்சுக்களை
ஒப்புதல் வாக்குமூலங்களை
கழுத்தை நெரித்த
மாலைசூடல்களை
இன்னும் என்னென்னவோ
எல்லாவற்றையும்
நான் காவிச் செல்லுகின்றேன்

நீயோ
எனைப் பார்த்து
எக்காளமிட்டுச் சிரிக்கின்றாய்
ஏனெனில்
மாட்சிமை தங்கிய
மகாராணிக்குப்
பிரியமானதைப்
படைத்துவிட்ட
குதூகலிப்பு உனக்கு

நான் அன்று
விட்டுப் புறப்பட்ட
கூடு
இன்றும்
சிறைப்பட்டே
சிதைந்து
போய்க் கிடக்கின்றது

இறக்கைகளை விரித்து
ஏகாந்தத்தைக் கிழித்து
மேலெழும்
என் அவா
என் நண்பர்களாலேயே
கேள்விக்கு
உட்படுத்தப்படுகின்றது

கோசங்களை ஓங்கியுரைத்து
உணர்ச்சிகளுக்குள்
உட்புகுந்து மறைவதில்தான்
எனது மக்கள்
எவ்வளவு
பிரியமாயிருக்கின்றார்கள்

இவற்றையெல்லாம்
போட்டுடைத்துப்
புதியவைகளை
நான் கூறப்
புறப்படுகையில்
காதுகளை அவர்கள்
அறைந்து மூடுகிறார்கள்

நான்
உரையாற்றுவதற்கெனத்
தயார்படுத்தப்பட்ட
மேடை குப்புறக்
கவிழ்க்கப்படுகின்றது
ஒலிவாங்கிகள்
பறித்தெடுக்கப்படுகின்றது
காற்று
எனது கருத்துக்களை
பறித்துச் செல்கிறது

முதுகுப் பின்னால்
இருந்து இன்னுமொருவர்
நீயும்
முன்னொரு காலத்திலே
இத்தகைய அடாவடித்தனங்களில்
ஈடுபட்டதாகக்
குற்றச்சாட்டு உள்ளதே
என்று குசுகுசுக்கின்றார்

சிவம்; மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்

-நடராஜா முரளிதரன்-

என்னோடு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் “சென்ற்.ஜோர்ஜ்” சப்வேக்கு அருகாமையில் இருந்த “ரொறன்ரோ” பல்கலைக்கழக மண்டபத்திலே நடைபெற்ற கூட்டத்தை முடித்துக் கொண்டு “ஸ்காபுரோ ரவுண்சென்ரர்” கார்த்தரிப்பிடம் வரை நடந்து கொண்டும், “சப்வேயிலே” பயணித்தபடியும் உரையாடிக்கொண்டே வந்த “சிவம்” என்ற கலை, இலக்கிய நண்பர் அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உயிர் பிரிந்திருக்கின்றார். பத்து வருடங்களுக்கு முன்னரே நான் அவரைக் கண்டிருக்கின்றேன். அப்போது அவர் பெயர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் கரககரத்த அவர் “குரல் ஒலி” அவரை மற்றையோரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற அடையாளமாக ஒலித்ததை என்னால் இன்னும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடிகிறது. அந்த நிகழ்வு ஏதோ ஓர் நூல் தொடர்பான “விமர்சனக் கூட்டத்தில்” ஏற்பட்ட சந்திப்பு என நினைக்கின்றேன். அன்று நான் அவரோடு அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக அவரை அவ்வப்போது அடிக்கடி சந்திக்கும்படியான வாய்ப்புக்கள் ஏற்பட்ட வண்ணமேயிருந்தது. அவையெல்லாம் “இலக்கியச் சந்திப்புக்களாகவோ”, “நூல் வெளியீட்டு விழாக்களாகவோ”, “படைப்பிலக்கிய விமர்சனக் கூட்டங்களாகவோ” அல்லது இலங்;கையின் இனப்பிரச்சினை தொடர்பான “கருத்தரங்கங்களாகவோ” இருந்தன. அவற்றில் சில எனது வீட்டிலே கூட நடைபெற்றன. அந்தச் சந்திப்புக்களின் போதெல்லாம் அவர் என்னை நோக்கி வந்து “உரையாடலை” ஆரம்பிப்பது வழக்கமாயிருந்தது. அவர் என்னை நோக்கி, நோக்கியே வந்து கொண்டிருந்தார் என்பதே பொருத்தமான சொற்றொடர்.

முழுக்க முழுக்க இடதுசாரிச் சிந்தனைகளோடு பொதுவாழ்வுக்குள் பிரவேசித்த மனிதர் சிவம். தொழிலாளர்கள் தலைமையிலான “வர்க்கப் போராட்டத்தை” முன்னெடுத்து அதனை வெற்றிகொள்ளச் செய்வதன் மூலம் மனித சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஓரளவு வெற்றி கொள்ள முடியும் என்ற “பொதுவுடமைச் சித்தாந்தத்தின்” அடித்தளத்தில் வேரூன்றியிருந்த நம்பிக்கையின் பாற்பட்டது அது. “இடதுசாரிச் சிந்தனைகள்” பரந்தும், “தேசிய இன ஒடுக்குமுறைக்கு” எதிரான உணர்வுகள் மேலோங்கியும் ஒருங்கிணைந்த நிலையில் அரசியலுக்குள் உந்தப்பட்டவன் நான். இன ஒடுக்குமுறையின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டு அரசியலுக்குள் ஈர்க்கப்பட்ட பலரை “இடதுசாரிக் கருத்தியல்கள்” ஆகர்சித்திருக்கின்றன. அண்மைக்கால உலக வரலாறுகள் எங்கணும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது விடிவு குறித்துப் பிரக்ஞை கொள்ளவோ, போராடவோ புறப்படுகின்ற வேளைகளில் பல்வேறு காரணங்களை முன்வைத்துப் பொதுவுடமைக் கோட்பாடுகளைப் புறந்தள்ள முடியாத அக, புறச்சூழ்நிலகள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றன. அந்த வகையில் இங்கு என்னை விடப் பத்து வருடங்களுக்கு முன்னால் பிறந்திருந்த சிவம் அவர்கள் இளவயதிலேயே “சமதர்மக் கருத்துக்களால்” ஈர்க்கப்பட்டு அன்று அவர் வாழ்ந்த யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவிய சாதீய அடக்குமுறைகளுக்கு எதிரான “சமூகப் போராளியாகப்” பொதுவுடமைக் கட்சியொன்றின் பின்னணியோடு முகிழ்த்தெழுகின்றார்.

1949களில் இந்திய-பாகிஸ்தானியப் பிரஜாவுரிமைச் சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 1960 களில் “தமிழ்த் தேசியம்” மிகவும் வலுப்படைத்ததாக மாறுகின்ற தருணங்களிலேயும் தமிழ் பேசும் மக்களிடையே தம்மின மக்கள் என்று கூறிகொள்வோரிடையே ஒரு சாரார் பிறிதோர் சாராரை மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட வகையில் சாதியின் பேரால் இழிநிலைக்கு உள்ளாக்குகின்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட வண்ணமே இருந்தன. அவற்றின் கொடூரம் தற்போது தணிந்து காணப்பட்டாலும் நம்மவரிடையே சாதீயம் பல்வேறு வடிவங்களில் தொடரவே செய்கின்றன. சிவம் அவர்கள் வாழ்ந்த வடமராட்சிப் பிரதேசத்தில் சாதீய ஒடுக்குமுறைகள் உச்சம் பெற்றிருந்த காலகட்டத்திலே “தாழ்த்தப்பட்டவர்கள்” என்று கூறப்படுபவர்களுக்கு எதிராக மேல் சாதியினர் இழைத்த கொடுமைகளையெல்லாம் நேரிலேயே கண்டுகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இருந்திருக்கும். மற்றும் அவரது குடும்பப் பின்னணியில் பெரிய தந்தையார் பொன்.கந்தையா பொதுவுடமை இயக்கத்தின் தலைமைப்பீடத்தில் இருந்தவர். பருத்தித்துறைப் பாராளுமன்றத் தொகுதியில் பொதுவுடமைக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே தமிழர். அப்பகுதி மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த தன்னலமற்ற தியாகி அவர். எனவே இயல்பாகவே “மனிதநேயம்” கொண்ட எவரையும் பற்றியிழுக்கக் கூடிய பொதுவுடமைக் கருத்தியல் கோட்பாடுகள் சிவம் என்ற மனிதரையும் காலூன்ற வைத்திருக்கின்றது சமூக ஒடுக்குமுறைத் தளத்தில்.

ஆனாலும் 1980களில் சிறுபான்மையினரான தமிழ்பேசும் மக்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாதம் கொடுஞ் சூறாவளியாக சுழன்று சூறையாடிய வேளைகளில் சிவம் போன்ற சமதர்மப் போராளிகள் இன,மத,மொழி பேதமற்றுத் தொழிலாள வர்க்கம் தலைமை தாங்க வேண்டிய வர்க்கப் போராட்டத்திற்;கும் அப்பால் அசுரபலம் கொண்டு ஆர்ப்பரிக்கின்ற தேசிய இன ஒடுக்குமுறை குறித்துத் தீவிரமாகச் சிந்திப்பவர்களாக மாற்றம் பெறுகின்றார்கள் என்பதையே என்னால் உய்த்துணரக் கூடியதாக இருக்கின்றது. எனவே அத்தகைய தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற தேசிய விடுதலைப் போராட்டம்; பொதுவுடமைக் கருத்தியல்கள் என்ற விழுதுகளைப் பற்றிக்கொண்டு எழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கொண்டவர்களில் ஒருவராகவே சிவம் அவர்கள் அமைந்திருந்திருப்பார் அல்லது அமைந்துள்ளார்.

அவர் என்னை நோக்கி ஓடியோடி வந்த வேளையில் எல்லாம் குறைந்த பட்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்; மானுடத்தின் விடுதலையை நேசிக்கின்ற சக்திகளுக்கிடையில் ஓர் புரிந்துணர்வை, ஐக்கியத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற ஓயாத உந்துதல் அவர் மன ஆழத்தில் இருந்திருக்க வேண்டும். எனவேதான் அவர் என்னை மாத்திரமல்லாமல் இன்னும் பலரையும் நோக்கி ஓடிக்கொண்டே இருந்திருப்பார். இன்னும் சிலரை அவர் துரத்திக்கொண்டும் இருந்திருப்பதற்கான வாய்ப்புக்களைக் குறைத்து மதிப்பிடவும் முடியாமல் இருக்கின்றது. வெறுமனே தத்துவங்களை மாத்திரம் பேசிக்கொண்டிராமல் அரசியல், சமூக விடுதலைக்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுகின்ற நடவடிக்கையாளர்கள் வரலாற்றை முன்நோக்கி நகர்த்துவதற்கான அதீத ஆவலினால் இவ்வாறு உந்தப்பெற்று மிகச் சரியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அலைந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்களை முன்னிறுத்திப் பிரபல்யம் பெறுகின்ற, இலாபம் தேடுகின்ற அரசியலுக்குள் தங்கள் மூக்கை நுழைத்துக் கொள்வதில்லை. இவர்களில் ஒருவராக “யார் குத்தியும் அரிசி ஆக வேண்டும்” என்பதால் தன் உளவியலை நிறைத்துக் கொண்டு திருப்தியடையும் மனிதராகவே சிவம் இப்போதும் என்முன் காட்சியளிக்கின்றார். சோவியத்யூனியன் சிதறுண்டு, பொதுவுடமை அரசுகள் வீழ்ந்து, செஞ்சீனத்துக்குள் திறந்த பொருளாதாரம் நுழைந்து பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு என்னென்னவோ ஆகியபோதிலும், எப்படியிருந்த போழ்தும் சிவத்தின் ஆழ்மனம் அந்தச் சிந்தாந்தங்களை வலுவாக அணைத்தபடியே இருந்தது. அவை தொடர்பான விவாதங்கள் எங்கள் இருவரினதும் சம்பாசணைகளுக்குள் அகப்படாதபோதும் என்னால் அதை உறிதியாகக் கூறமுடியும். சிவம் என்ற மனிதரது வாழ்வியல் பரப்பென்பது எனது கண் நோக்கும் காட்சியெல்லைகளைக் கடந்தது. அவற்றில் நான் உற்று நோக்கும் சிறு துளிப்பிரதேசங்களைத் துல்லியப்படுத்துவதே இங்கு நான் மேற்கொள்ளும் வலிதான முயற்சி.;
கடந்த வருடம் நான் மற்றும் டானியல் ஜீவா, மெலிஞ்சிமுத்தன் ஆகிய மூவருமாக இணைந்து இலக்கியம் சார் உரையாடல்களுக்கான களத்தை இங்கு ரொறன்ரோவில் வேறோர் தளத்தில் திறப்பதற்கான முயற்சியை ஆரம்பித்திருந்தோம். பல்வேறு இலக்கிய நண்பர்கள் இலக்கியம் தொடர்பாக வௌ;வேறு வேலைத்திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள் என்பதையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். இதன் முதற்கட்டமாக சில நூல்கள் குறித்த விமர்சனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் அனைத்திற்க்கும் சிவம் அவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தந்து விடுவதோடு மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களையும் அழைத்துக் கொண்டு வருவார். இளங்கோ எழுதிய “நாடற்றவனின் குறிப்புகள்” என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சன உரையாடலை நாங்கள் ஓர் நாள் நிகழ்த்திக் கொண்டிருந்தோம். அப்பொழுது எனது முறை வந்தபோது கவிதை விமர்சனத்துக்குள் நுழைவதற்கு முன்பாக நான் கவிதை என்பதை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது, எழுதப்படும் எல்லா வரிகளையும் கவிதைகளாகக் கொள்ளலாமா? என்பது குறித்துக் கருத்துக்களை கூற ஆரம்பித்திருந்தேன். நான் தொடங்கிச் ஒரு,சில நிமிடங்கள் ஆகியிருக்கும். சிவம் அவர்கள் வாயை ஒருபக்கம் இழுத்து முகத்தைக் கோணலாக்கிக் கொண்டு “முரளி உதை விட்டிட்டு விசயத்துக்குப் வோவம்” என்றார். அன்று நான் அந்த விமர்சனக் கூட்டத்திற்கு மயிலிட்டியைச் சேர்ந்த எனது நண்பன் அருளையும் அழைத்து வந்திருந்தேன். கூட்டம் முடிவடைந்து வீட்டுக்குச் சென்ற அருள் “ஏன் மச்சான் அவர் உன்னோடை உப்பிடிக் கதைச்சவர்” என்று தொலைபேசி மூலம் என்னிடம் விசாரித்தான். எனது நண்பன் இலக்கியப் பரிச்சயம் இல்லாதவன். அதற்கும் அப்பால் ஏன் அவர் அவ்வாறு சொன்னார் என்பதற்குப் பதிலாக நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் நோக்கில் பல்வேறு விடைகளையிறுத்து விடலாம். அவ்வாறு சொல்லப்படும் விடைகளில் சிலவோ, பலவோ என்னைக் கசப்பில் ஆழ்த்துவதாகவும் அமையலாம். எதுவாக இருந்தபோதிலும் விசயத்துக்குள் துரிதமாகச் சென்று விடவேண்டும் என்ற அந்தரமே அவ்வாறு அவர் கூறியதற்கான காரணமாக என்னால் கற்பித்துக் கொள்ள முடிகிறது.

மீண்டும் இக்கட்டுரையின் முதல் பந்திக்கு வருகின்றேன். என்னோடு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் நடந்து கொண்டும், “சப்வேயிலே” பயணித்தபடியும் உரையாடிக்கொண்டே வந்த “சிவம்” எதையெல்லாம் பற்றி என்னோடு உரையாடிக்கொண்டு வந்தார் என்பதை பதிவுக்குள்ளாக்க வேண்டிய பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். அப்போது எங்களோடு சிவத்தின் நண்பரான அருளும் உடனிருந்தார். அதில் ஓர் பகுதியை அவருடைய இறுதி அஞ்சலிக்கான கூட்டத்தின் போது உரையாற்றியவேளையில் நிறைவேற்றிவிட்டேன். மீண்டும் எழுத்தில் பதிவுக்குள்ளாக்க வேண்டியுள்ளது மிகச்சுருக்கமாக சில வரிகளில். “முரளி இன்று வன்னிப்பிரதேசங்களி;ல் வாழும், போராடும் பொதுமக்களோ , போராளிகளோ அல்லது போராளித் தலைவர்களோ கொல்லப்படக் கூடாது. அவர்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்கு எங்களால் முடிந்ததைச் செய்யவேண்டும்” என்ற வார்த்தைகளே சிவம் அவர்கள் என்னிடம் விட்டுச் சென்றவை.
எனவேதான் எம்மையெலாம் விட்டுப்பிரிந்து போன சிவம் என்ற அந்த மனிதரை “மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்” என்று அழைக்க எனது மனம் அவாவுறுகின்றது.

அலைதலின் பின்னான குற்றச்சாட்டு
-நடராஜா முரளிதரன்-

எனது இருப்புக்கான
ஒரு கூடு தேடி
அலைதலில்
எத்தனை புனைவுகளை
இழிபேச்சுகளை
ஒப்புதல் வாக்குமூலங்களை
கழுத்தை நெரித்த
மாலைசூடல்களை
இன்னும் என்னென்னவோ
எல்லாவற்றையும்
நான் காவிச் செல்லுகின்றேன்

நீயோ
எனைப் பார்த்து
எக்காளமிட்டுச் சிரிக்கின்றாய்
ஏனெனில்
மாட்சிமை தங்கிய
மகாராணிக்குப்
பிரியமானதைப்
படைத்துவிட்ட
குதூகலிப்பு உனக்கு

நான் அன்று
விட்டுப் புறப்பட்ட
கூடு
இன்றும்
சிறைப்பட்டே
சிதைந்து
போய்க் கிடக்கின்றது

இறக்கைகளை விரித்து
ஏகாந்தத்தைக் கிழித்து
மேலெழும்
என் அவா
என் நண்பர்களாலேயே
கேள்விக்கு
உட்படுத்தப்படுகின்றது

கோசங்களை ஓங்கியுரைத்து
உணர்ச்சிகளுக்குள்
உட்புகுந்து மறைவதில்தான்
எனது மக்கள்
எவ்வளவு
பிரியமாயிருக்கின்றார்கள்

இவற்றையெல்லாம்
போட்டுடைத்துப்
புதியவைகளை
நான் கூறப்
புறப்படுகையில்
காதுகளை அவர்கள்
அறைந்து மூடுகிறார்கள்

நான்
உரையாற்றுவதற்கெனத்
தயார்ப்படுத்தப்பட்ட
மேடை குப்புறக்
கவிழ்க்கப்படுகின்றது
ஒலிவாங்கிகள்
பறித்தெடுக்கப்படுகின்றது
காற்று
எனது கருத்துகளை
பறித்துச் செல்கிறது

முதுகுக்குப் பின்னால்
இருந்து இன்னுமொருவர்
நீயும்
முன்னொரு காலத்திலே
இத்தகைய அடாவடித்தனங்களில்
ஈடுபட்டதாகக்
குற்றச்சாட்டு உள்ளதே
என்று குசுகுசுக்கின்றார்
என்னவர்களை நோக்கியே...
-நடராஜா முரளிதரன்-

தொடைகளுக்குள்
அழுந்தி நெரியும்
யோனிகளை
அளவளாவவே
எனது பார்வை
தெறித்தோடுகின்றது

முனைதள்ளி நிற்கும்
மேடுகளையும்
நுனிப்புல் மேய்ந்தவாறே

மனைவியோடு
பிள்ளையோடு
நண்பனோடு
பேசாத
கனிவான வார்த்தைகள்
அங்கு கொட்டுகின்றன

அன்றொரு நாள்
யேசு வாங்கிப்
பெற்றுக்கொண்ட
கற்களைக் கூடைகளில்
சேகரித்துக்கொண்டு
எறிவதற்காய்
எல்லோரையும் நோக்கி
குறிபார்த்தல்
தொடருகிறது.

வார்த்தைகளை
இரவல் வாங்கியவனாகி
விடக்கூடாது
என்பதற்காய்
வாசித்தலையே மறுத்து
துறவறம் பூணுகின்றேன்

ஆயினும்
பிரபஞ்சமெங்கணும் இருந்து
எனக்கான
படிமங்களை வேண்டியும்
இன்னும் அதற்கு மேலாயும்
இரந்து வேண்டி
இன்னுமோர் தவத்தில்
மோனித்திருப்பதாய்
கூறிக்கொள்ளுகின்றேன்

எனினும்
ஓங்கியொலிக்கும்
மனித ஓலம்
பெருக்கெடுத்தோடும்
மனிதக் குருதி
மூச்சுக் குழல்களை
அடைத்து நிற்கும்
பிணவாடை
என்னை மீண்டும்
என்னவர்களை
நோக்கியே
அழைத்துச் செல்கிறது
பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன
-நடராஜா முரளிதரன்-



1962இல் இந்தியப் பிரதமராக இருந்த நேரு இந்தியா மீதான சீனப் படையெடுப்பின் போது இந்தியப் பாராளுமன்றத்தில் பிரிவினை கோருகின்ற, பிரிவினை வாதம் பேசுகின்ற கட்சிகள் தடை செய்யப்படும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுகின்றார். அப்போது “அண்ணா” தலைமையிலான “திராவிடமுன்னேற்றக்கழகம்” அது வரை முழங்கிய, கோசித்த “திராவிடநாடு” தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுக் கொண்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள தன் வீட்டுத் திண்ணையில் குந்தியிருந்து கொண்டாவது திராவிடத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடாது இறுதிவரைக்கும் போராடுவேன் என்று கூறிய “அண்ணா” ஆயுதப் போராட்டத்தைத் தனது போராட்ட நெறியாக வரித்துக் கொள்ளாதவர். ஆயினும் அந்தக் கோசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்களால் சாதிக்க முடியாத “மக்கள் அமைப்பைக் கட்டுதல்” என்ற வியாக்கியானத்தைத் தமிழகத்தில் செயற்படுத்திய வலுப்படைத்தவராக அண்ணா அவர்களைக் கருத முடியும்.

இவ்வாறான அண்ணா திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுகின்ற அவ்வேளையில் கூறிய வாசகம் இந்தியக் கூட்டாட்சி வரலாற்றிலே மிகப் பிரசித்தமானது. இன்றும் கூடத் தமிழக வரலாற்று ஆய்வாளர்களால் அவ்வாசகம் எடுத்தியம்பப்படுகின்றது.
நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம். ஆனால் பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்ற கூற்றே அண்ணா கூறிய அந்தப் பிரசித்தி பெற்ற வாசகமாகும்.

மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி அதிகாரங்களை உள்ளடக்கிய மொழி வழி மாநிலங்களைக் கொண்ட இந்தியக் கூட்டாட்சி அமைப்பின் கீழ் தமிழ்மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அன்றைய சென்னை மாநிலத்தின் சார்பிலே அண்ணா அந்த வாதத்தை முன்னெடுத்திருந்தார். எனினும் திராவிடத்தின் உள்ளடக்கமான ஆந்திர,கர்னாடக,கேரள மக்களது ஆதரவு கிஞ்சித்தும் அந்தக் கோரிக்கைக்குக் கிடைத்திருக்கவில்லை.

அந்த வாதம் முன்னெடுக்கப்படும் அவ்வேளைகளில் இந்திய இராணுவம் தமிழகத்தின் எந்த மூலைகளுக்குள்ளும் நுழைந்திருக்கவில்லை. அடக்குமுறை வெறியாட்டம் காட்டுமிராண்டித்தனமான வகையில் தமிழகத்து மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கவில்லை. உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான மனித உரிமை மீறல்கள் உச்சம் பெற்றதற்கான சாட்சியங்கள் அங்கு ஏதுமில்லை. அதற்காக அங்கு எல்லாம் இனிதே நிகழ்ந்தன என்று கூறவும் நான் முற்படவில்லை. அத்தகைய சூழ்நிலையிலே தொடர்ந்து அண்ணா எழுப்பிய முக்கிய கோசமானது “மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி” என்ற முக்கிய சுலோகமாகும். அந்தச் சென்னை மாநிலம்தான் பின்னர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் பெறுகின்றது.

இதைக் கூறிவிட்டு அறுத்துக் கொண்டு உடனே பின்னடைவுக்குள்ளான ஈழவிடுதலைக்கான போராட்டம் குறித்துக் கருத்துக் கூறுகின்ற குர்திஸ் தேசியவாதி “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களிடம் செல்லவிரும்புகின்றேன். கடந்த சில வாரங்களாக இவர் ஈழப் போராட்டத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை குறித்துக் கூறிய கருத்துக்கள் இணையத்தள, மின் ஊடகங்கள் பலவற்றில் வெளியாகிப் பிரபலமடைந்துள்ளன. பின்னால் இந்த இருவர் கருத்துக்களுக்குமான தொடர்புகள் பற்றிப் பார்ப்போம். “ளூநஒஅரஒ யுஅநவ” அவர்கள் கூறுகின்றார், இன்று விடுதலைப் புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டம் பின்னடைவுக்குள்ளானது போன்று வரலாற்றில் குர்திஸ் மக்களும் தங்கள் விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு தடவைகள் தோல்வியடைந்துள்ளார்கள் என்று.

1925, 1938, 1946, 1975, 1988, 1991 என குர்திஸ் மக்கள் அடைந்த தோல்விகளின் வரலாற்றுப் பட்டியல் நீளுகின்றது. அது மட்டுமல்லாது இன்றும் அவர்கள் “குர்திஸ்தான்” என்ற தனிநாட்டை அமைப்பதில் வெற்றி பெற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்கத் தலையீட்டின் காரணமாக ஈராக்கில் அமைந்துள்ள “குர்திஸ்தான்” மாத்திரம் ஈராக்கிய மத்திய ஆட்சிக்குட்பட்ட வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையுடைய சுயாட்சிப் பிரதேசமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அவர் மேலும் கூறுகையில் உங்கள் போராளிகள் இறுதிவரை நெஞ்சுரத்தோடு போராடி மரணித்த இவ்வரலாறானது உங்கள் மொழியில் அமையப்பெறும் பாடல்களிலும் , இலக்கியங்களிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் சாட்சியங்களாக எதிர்கால வரலாற்றில் அமையப் பெறும் என்று குறிப்பிடுகின்றார்.

தொடர்ந்து அவர் முன் வைக்கும் விமர்சனத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் எதிர்பார்ப்புகள் மிக இறுக்கமானவை என்று கூறுகின்றார். “தங்களது தமிழீழத் தாயகக் கோரிக்கைக்குப் பரந்துபட்ட பன்னாட்டு ஆதரவு திரளாத நிலையில் இலங்கையில் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்;பந்தத்தை ஏற்பதே யதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும். அதே சமயம் இலங்கை அரசானது தொடர்ந்து தமிழ்மக்களின் ஆதார உரிமைகளை மீறும் பட்சத்தில் இந்தப் போராட்டத்தைத் தமிழ்மக்களின் அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கவும் வழிவகுத்திருக்கும். அந்தக் கட்டத்தில் கூட்டாட்சி அடிப்படையில் அமைந்த தமிழர்களின் சுயாட்சி அரசுக்கு மேலதிக பன்னாட்டு அங்கீகாரம் கிட்டியிருக்க முடியும். தவிர, விடுதலைப்புலிகள் அமைப்பு “பயங்கரவாத அமைப்பு” என்ற முத்திரையுடன் மேற்கத்தேய அரசுகளால் தனிமைப்பட்டுப் போகாமல் இருந்திருக்கலாம்” என்ற வகையிலெல்லாம் அவருடைய விமர்சனம் அமைகின்றது.

ஆனால் தமிழ்த்தேசியத்தின் தீவிர ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் வாதமானது சிறிலங்கா அரசானது எந்தச் சூழ்நிலையிலும் இனப்பிரச்சினைக்கு மாற்றுத்தீர்வாக ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்டுத் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வாக இதயசுத்தியுடன் “சமஸ்டி” அடிப்படையிலான எந்த அரைகுறைத் தீர்வையும் கூட நடைமுறைப்படுத்தத் தயாராக இருக்கவில்லை என்பதேயாகும். அதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் நிரம்பவே இருக்கின்றன. எனவேதான் “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களின் மேற்கூறிய விமர்சனத்தில் உள்ள இலங்கையில் தமிழர்கள் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்;பந்தத்தை ஏற்பதே யதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும் என்ற விமர்சனத்தை நடைமுறைச் சாத்தியமானதுதானா என்ற தர்க்கத்த்pன் அடிப்படையோடு ஒப்பிட்டு நோக்க வேண்டியுள்ளது.

“உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன், எவ்வளவு இழப்புகள். எவ்வளவு குருதிப்பெருக்கு. யாவும் ஒடுக்கப்பட்ட, சொல்லமுடியாத துயரம் இந்த ஒரு வரியில் வெளிப்படுகிறது. நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் என்று சொன்ன புரட்சிக் கருத்துகளை நேற்று வரை கொண்டாடி வந்த பலரும் இன்று வன்முறையிலான பாதை தவறானது. வன்முறையில்லாமல் நாம் அமைதியாகப் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் .ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்பத் திரும்பச் சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாடச் சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்திய சுதந்திரப் போரில் வெள்ளையர்களால் அடிபட்டும், வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும். நான் வன்முறையை வளர்க்கச் சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்திப் போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது” என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் தனது இணையத்தளத்தில் பின்னடைவுக்குள்ளான ஈழப்போராட்டம் குறித்து எழுதுகிறார்.

ஏனவேதான் “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களின் இறுதி விமர்சன வார்த்தைகளான “அறிவும் திறமையும் ஆற்றலும் கொண்ட ஈழத்தமிழ் மக்களே, இந்தச் தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம்! உம் கனவுகள் உயிரோட்டத்துடன் இருக்கட்டும், அப்போது துப்பாக்கித்தோட்டாக்களோ, வாக்குச்சீட்டுகளோ கொண்டு நீங்கள் ஈழத்தை அடைவதும் நிச்சயம்!” என்ற சொல்லாடல்களையும் பொருத்திக் கொண்டு அண்ணா மொழிந்த “நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம். ஆனால் பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்ற வார்த்தைகளுக்குள் நுழைவதற்கான சாத்தியங்கள் குறித்து சிந்திக்கத் தலைப்படுகின்றேன்.

Monday, March 23, 2009

நண்பர்கள்



நண்பர்கள்


நடராஜா முரளிதரன்

நண்பர்கள்
வர மறுத்தார்கள்
எதிரிகளாய்
பிரகடனப்
படுத்தப்பட்டவர்கள்
வந்து கொண்டிருந்தார்கள்

வர மறுத்தோர்
தங்கள் சுயத்தினை
அறைகூவுவதற்கான வெளியாக
அது அமையாது
என்று நினைத்தார்களோ

இலைகள் உதிர்ந்த மரங்கள்
நெடிதே உயர்ந்து நிற்கின்றன
இன்னும் இறக்காமல்
அதனூடே மொட்டையாக
வானை எட்ட முனையும்
கட்டிடக் காடுகள்

அடிவானைத் தொட்டு
அலையும் எனக்கு
புத்துயிர்ப்புத் தர
எந்த வண்ணங்களும்
குழைந்த காட்சி
எழுதப்படவில்லை அங்கு

Saturday, February 21, 2009

தீபச்செல்வனின் கவிதைகளை வாசித்தல்

மானுட சோகத்தை இலக்கியத்திற்கூடாகப் புரிந்து கொள்வதென்பது சரித்திரம் குறித்த வரலாற்று ஆவணங்களுக்கப்பால் மனிதசமூகத்தை எதிர்கொள்ளும் முறைமைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் நாம் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்த சமூகமானது சொல்லொணாத் துன்பங்களுக்கும், தாங்கொணா அடக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு மிலேச்சத்தனமான இனப்படுகொலை மூலம் அழித்தொழிக்கப்படுகின்ற வேளையில் அச் சமூகத்துக்குள் வாழும் படைப்பாளி ஒருவனால் அவை குறித்த இலக்கியப்பதிவுகள் வெளிப்பாடு கொள்ளும் வேளைகள் அபூர்வமானவை. அத்தகைய அபூர்வதளத்துக்குள் அறுபடாச் சங்கிலியால் தன்னைப் பிணைத்துக் கொண்டு கவி புனையும் தீபச்செல்வன் வன்னி மண்ணின் அவலங்களை உலகத்தின் முகத்தில் ஓங்கியுரைக்கும் சாட்சியமாய் எழுந்து நிற்கிறார். எனவே அவரது கவிதைகளை வாசித்தலும், கேட்டலும் இன்றைய ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அவலம் நிறைந்த வாழ்வின் மத்தியில் நாம் வாழும் புலம்பெயர் மண்ணில் எமக்கு அத்தியாவசியமாகிறது. ஆகவே இலக்கியத்தையும், மானுடத்தையும் நேசிக்கும் தங்களையும் இவ்வாசிப்பில் கலக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

காலம் - 22-02-2009 (மாலை 6.00 மணி)
இடம்;; - 36 Salamander Street Scarborough
தொலைபேசி இலக்கம்- (647) 237-3619

வாசிப்பு ஏற்பாடு சார்பாக

murali

Sunday, August 10, 2008

வட-கிழக்கு மண்ணின் மைந்தர்கள் எழுகவே!

-நடராஜா முரளிதரன்-

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழ் “மசாலா” படத்துக்கே உரிய விறுவிறுப்புக் காட்சிகளோடு கூடிய முடிவிலி வரை நீளக்கூடியதுமான நாடகத்தொடர் போன்றே கிழக்கரசியல் நீளுவதாக என் கண்களுக்குத் தோற்றம் தருகின்றது. அண்மையில் கிழக்கின் முதல்வராகப்பட்ட “பிள்ளையான்” எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை நோக்கும்போது ஏறத்தாள இன்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக இரவல் படையின் கடாட்சத்தினால் வட-கிழக்கு மாகாணசபையின் முதல்வராகப் “பட்டாபிசேகம்” செய்து முடியையும் சூடிக்கொண்ட வரதராசப்பெருமாள் அவர்களையே எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையேற்படுகின்றது. அவர் “மணிமகுடத்தையும்” இழந்து ஏன் “பரிவாரங்களோடு” ஒரிசாவுக்குக் கப்பல் ஏறினார் என்ற கடந்த காலக் கதையை யாமெல்லோரும் நன்கு அறிவோம். அதை முற்கூட்டியே அன்றைய சூழ்நிலையில் யாராவது “அரசியல் ஆய்வாளர்கள்” ஆருடம் கூறியிருந்தார்களோ? என்பதும் இன்று எனக்கு நினைவில் இல்லை.

கட்டுக்கோப்பு, தியாகம், தலைமை விசுவாசம் போன்ற எவையுமே ஒரு குறிக்கோளுக்கான பயணத்தில் அக் குறிக்கோளுக்கான பயணத்தை மனசார வரித்துக் கொண்டவர்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுபவை. இவையெல்லாம் ஒரு சமன்பாட்டின் மாறிலிக்கான பரிமாணத்தை எப்போதும் கொண்டமைவதாகக் கட்டமைக்கப்படுவது சதா என்றுமே சுழற்ச்சிக்குள்ளாகும் மனித மனங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சமூகக் கட்டுமானங்களுக்கு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமாக அமைந்துவிட முடியாது.

கடந்த 25 வருடங்களாக நடைபெற்றுவரும் போரில் மிகப் பலம் வாய்ந்த எதிரிக்கு எதிராகப் பலவீனமான மக்கள் கூட்டம்(தமிழ் பேசும் மக்கள்) ஒன்று போராடுகின்றது என்பதே வரலாற்று உண்மையாகும்.. எதிரியின் பலம் என்பது அவனது பிரமாண்டமான மக்கள் தொகை, அவன் வசிக்கும் பாரிய நிலப்பரப்பு, இறைமை படைத்த அரசு என்ற வகையில் அவனுக்குக் கிடைக்கும் உலகளாவிய அரசுகளின் அரவணைப்பு என எதிரியின் பலத்துக்கான, மேலாண்மைக்கான பட்டியல் தொடர்ந்து நீண்டு கொண்டேயிருக்கும். எனவே பலம் பொருந்திய பகைவன் அவ்வப்போது பெறுகின்ற வெற்றிகள் என்ற தலைப்புக்குள் போராட்டத்தின் அறம் குறித்த நியாயத்தேடலைப் புதைத்துவிட முடியுமா?

பலவீனமான பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் அசுரபலம் பொருந்திய இஸ்ரேலினால் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது என்ற உண்மையினால் பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் அறத்தின் பாற்பட்டதல்ல என்று கூக்குரல் இட்டுவிட முடியுமா? மேற்குக்கரையென்றும், காசாவென்றும் பூகோள, புவியியல் தொடர்ச்சியற்ற நிலையிலும் அந்த மக்கள் தங்களை பாலஸ்தீனர்களாகக் காணுவதை எந்த வகையறாவுக்குள் இட்டு நிரப்ப முடியும்? ஏன் அந்த மக்கள் பிரதேசவாதிகளாக அறுந்துபடவில்லை?


“ஒஸ்லோ” உடன்படிக்கையும், “உலக நாயகன்” அமெரிக்காவும் தாரை வார்த்தளித்த வரையறுக்கப்பட்ட சுயாட்சியதிகாரங்களை உள்ளடக்கிய பாலஸ்தீன அரசு என்ற கட்டமைப்பு பாலஸ்தீன மக்களின் அடிப்படைத் தேவைகளையே வழங்க முடியாது ஏன் தோல்வியுறுகின்றது? என்ற பாடங்களை வரலாற்றின் சகதிக்குள் மீண்டும், மீண்டும் தமிழ் மக்களாகிய நாம் சுழியோடித் தேட வேண்டியிருக்கிறது. கிழக்கு மாகாணசபையின் தேர்தல் பட்டாசு வெடிச்சத்தங்களின் அதிர்வுகள் ஓயு முன்னரே கிழக்கு மாகாணத் தமிழ்மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்குமான இனப்போரின் ஆரம்ப கட்டங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுவிட்டன. இரு புறமும் வீழ்த்தப்பட்ட பிணங்கள் வரிசையாக அடுக்கப்படுகின்றன. இந்த இலடச்சணத்தில் தொப்புள் கொடி உறவை அறுத்தவர்கள், அறுந்து பட்டவர்கள் சனநாயக அரசியல் நீரோட்டத்தில் உள் இழுக்கப்பட்டதாகவோ அல்லது உள் நுழைந்து கொண்டதாகவோ வீண் வார்த்தைகள் உரைக்கப்படுகின்றது.

முன்னாள் முதல்வர் “பெருமாள்” மாகாணசபைக்கான மேசை கதிரைகளை வாங்குவதற்கே கொழும்புக்கு ஏறியும், இறங்கவும், அலையவும் வேண்டியுள்ளதே எனப் புலம்பியடித்தது நேற்று முளைத்த பிள்ளையானுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. 1956ஜூன் 5ம் தேதி பண்டாரநாயக்கா தலைமையிலான அரசு தனிச் சிங்களச்சட்டத்தை விவாதிப்பதற்காக நாடளுமன்றில் கூடிய போது கிழக்கின் மைந்தர்கள் தமிழ்த் தேசிய உணர்வின் தீப்பிழம்பானமைதான் உண்மை வரலாறு. திருமலை இராஜவரோதயம், பட்டிருப்பு இராசமாணிக்கம், அறப்போரணித் தலைவர் அரியநாயகம், இராஜதுரை, சம்மந்தன், ஜோசப் பரராஜசிங்கம், காசி ஆனந்தன் போன்றோர் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஆரம்பமாவாதத்திற்கு வெகுகாலத்திற்கு முன்னரே கிழக்கு மாகாணமெங்கும் தமிழ்த் தேசிய உணர்வுவாதப் பிரச்சாரத்தில் தீவிர பங்கெடுத்துக்கொண்ட கிழக்கின் மைந்தர்கள்.

1977ஆம் ஆண்டு மிதவாதத் தமிழ்த் தலைமைகளால் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு என்று கருதப்பட்ட தேர்தலில் திருமலை, மூதூர், மட்டக்களப்பு, அம்பாறை அடங்கலாகப் பெருவாரியான தமிழ்மக்கள் “தமிழீழ ஆணைக்கு” ஆதரவாக வாக்களித்த வரலாற்றுண்மையை யாரும் மறுதுரைக்க முடியாது.
தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்குள் வெட்டிப் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகளாக விளங்கியவர்களே வட-கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்கள். முஸ்லீம் மக்களின் சுயத்தையும், தனித்துவத்தையும் அங்கீகரிக்க வேண்டிய கடப்பாடு அந்த இருபகுதித் தமிழ்மக்களுக்கும் உண்டு. தேங்காய்பூவும், பிட்டுமாக ஒன்றி வாழ்ந்த சமூகமாகத் தமிழ் முஸ்லீம் சமூகங்களின் கடந்த கால உறவுகளை மேடைகள் தோறும், பத்திகள் தோறும் பிரகடனப்படுத்துகின்றோம். ஆனால் இன்றைய சமகால தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கிடையிலான மெய்யான யதார்த்தம் என்ன? இரு சமூகங்களுக்கும் இடையிலான மத,பண்பாட்டு, கலாச்சார இடைவெளிகளுக்கு அப்பால் பாரிய பிரிவினை கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் வேரோடி நிற்கிறது. அப் பிரிவினைக்கான பெரு மையம்பொருளாதா ஏற்றத்தாழ்வேயாகும்.

பாரம்பரியமாகவே முஸ்லீம்கள் வியாபாரிகள். ஆதனால் வரலாற்று ரீதியாகப் பெரு வளர்ச்சியடைந்த தமிழ்-சிங்கள முரண்பாடு இயல்பாகவே வியாபார சமூகத்ததைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு சாதகமான வாய்ப்புக்களைத் தோற்றுவித்திருக்கின்றது. அதற்கும் அப்பால் முஸ்லீம்களின் அரசியல் தலைமை கொழும்பின் அரசியல் அதிகார மையத்தோடு காலத்திற்குக் காலம் சமரச அரசியல் உறவினைப் பூணுவதன் மூலமே தனது நலன்களை மாத்திரமல்லாமல் தனது சமூகத்தின் நலன்களையும் தக்க வைத்துக் கொள்ள முயன்று வந்துள்ளது. இத்தகைய அணுகுமுறை முஸ்லீம்களை ஒப்பீட்டுரீதியில் பொருளாதார ரீதியில் கிழக்குத் தமிழர்களுக்கு மேலாக வளர்த்துச் சென்றுள்ளது.

எனவே இயல்பாய் எழுந்த இந்த முரண்பாடுகளுக்கும் அப்பால் சிங்களப் பேரினவாதம் முஸ்லீம் அடிப்படைவாதிகளை தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை முறியடிப்பதற்கு பயன்படுத்திய நீண்ட கதையும் இங்குண்டு எனவே இவற்றின் வெளிப்பாடுகளான மோதலையும், முரணையும் எவ்வாறு கையாள்வது என்பதும் பொது எதிரியை வென்றெடுப்பதில் எவ்வாறு “ஐக்கிய முன்னணியைக்” கட்டுவது என்பதில் அரசியல் பாடங்களைக் கற்றுக் கொள்வதும் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியர்கள் முன் உள்ள வரலாற்றுக் கடமையாகும். அதற்கும் அப்பால் எங்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமே கிடையாது என்பதும் குறிப்பிட்ட பிரதேசத்தைச் சார்ந்தவர்களால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டோம் என்பதும் குறிப்பிட்ட சில தனிமனிதர்களின் அபிப்பிராயங்களாக, கருத்துக்களாக அமையலாம். அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மறுதலிப்பதில் எள்ளளவும் பிரியப்படுபவன் அல்ல நான். ஆனால் மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமை பறிப்பு, ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பெற்ற தமிழ்மக்கள் மீதான இனப் படுகொலைகள், சிறைகளிலே தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கும், மரணத்திற்கும் உள்ளாக்கப்படும் தமிழ் இளைஞர்கள், தமிழ் பேசும் இனத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள், உயர்கல்வி வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் கடைப்பிடிக்கப்பட்ட பாரபட்சங்கள், அந்நிய இராணுவ ஆக்கிரமிப்பு போன்றவை அனைத்தும் (சிறிய வேறுபாடுகள் தவிர்ந்து) வட-கிழக்கு மாகாணங்கள் முழுமைக்கும் பொதுமையாகவும் மலையகம் அடங்கலாகவும் நடைபெற்றன. இன்றும் நடைபெறுகின்றன.

ஆகவேதான் ஓர் இனத்துக்கான சுயநிர்ணய உரிமை என்ற சர்வதேச சட்ட வரையறையின் பிரகாரம் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய சுயநிர்ணய உரிமைக்காக வட-கிழக்கு மண்ணின் மைந்தர்கள் எழுகவே! என்று வாய் விட்டுக் கத்த வேண்டும் போலுள்ளது எனக்கு. .

Saturday, February 23, 2008

அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி

நடராஜா முரளிதரன்

கடந்த சில வாரங்களுக்கு முன்பாகக் “குறமகள்”(வள்ளிநாயகி) அவர்களினால் எழுதி வெளியீடு செய்யப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலை அந்நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற போது வாங்கிக் கொண்டேன். பின்பு அந்நூலை வாசித்தபோது அதனூடகக் கிடைத்த தகவல்களில் சிலவற்றை இங்கு மீட்பதே இப்பத்தியில் எனது நோக்கம்.

யாழ்ப்பாணச் சமூகம் என்பது பெரும் படிப்பைப் பாரம்பரியமாகக் கொண்டது என்ற “பெரும் புழுகுக்குள்” தோய்ந்து மூழ்கி எழும் பழக்கமும். வழக்கமும் வாய்க்கப் பெற்ற பாரம்பரியத்தில் வந்துதித்த என் போன்றோருக்கு வெறும் 175 வருட காலங்களுக்கு முன்னேதான் விரல் விட்டு எண்ணக் கூடிய யாழ்ப்பாணப் பெண்கள் சிலர் எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலே எழுதவும், வாசிக்கவுமான ஆரம்பக் கல்வியை கற்க ஆரம்பித்தார்கள் என்ற வரலாற்றுண்மையை அந் நூலின் வாயிலாகப் பெறக்கூடியதாக அமைந்த போது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. எனவேதான் இங்கு ஓர் கேள்வி எம்முள் இயல்பாகவே எழுப்பப்படுகிறது.

எமது பாரம்பரிய இந்துச் சமூகத்தில் காலங்காலமாக கடைக் கொள்ளும் அல்லது பேணப்படும் பெண் பற்றிய கருத்து நிலைப்பாடு என்பது யாது? இந்துக்களுக்கும் இந்துக்கள் என்ற அணியினுள் இன்று உள் அழுத்தப்பட்ட சைவ, சமண, சாக்த, வைணவ மதத்தவர் யாவருக்கும் “மனு தர்மமே” நெறிகாட்டும் வழிகாட்டியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த “மனு தர்மத்தில்”; பெண் என்றவள் இழிந்தவளாக, மிகக் கொடூரமான கட்டுக்குள் வளர்த்தெடுக்கப்படவேண்டியவளாக, ஆடை-ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட வேண்டியவளாக சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

அன்றைய நூல் வெளியீட்டு வைபவத்தில் இது தொடர்பாக கவிஞர் சேரன் விரிவாக எடுத்துக் கூறியும் இருந்தார். “இந்து” என்ற வார்த்தையை இந்திய சமூகக் கட்டுமானத்துக்குள் ஒர் பதப் பிரயோகமாகப் பயன்படுத்தியவர்கள் அல்லது கொணர்ந்தவர்கள் பர்சியர்கள் மற்றும் பிரிட்டிசார் என்றே வரலாறு கூறுகிறது. ஆனால் இன்று “இந்து” என்ற அந்த வார்த்தை பரந்து, விரிந்த இந்திய உபகண்ட சமூகங்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டும் வலுப்படைத்த “தேசிய” ஆயுதமாகப் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. எனவே இவ்வாறான வளர்ச்சியடையாத இறுக்கமான சமூகக் கட்டுமானத்துக்குள் இருந்து வெளிக்கிளம்புதல் என்பது அன்றைய யாழ்ப்பாணப் பெண்களைப் பொறுத்தவரையில் மிகக் கடினமானதாகவே இருந்திருக்கும்.

பெண்ணை ஆணிலும் பார்க்கத் தாழ்ந்தவளாகக் கருதும் கருத்துநிலையின் தளம் இந்தியச் சமூகத்திற்கு மாத்திரம் உரியதொன்றன்று. அது மேல்நாட்டுச் சமூகங்களுக்கும் உரிய ஒன்றாகும். இதற்கான காரணம், இச்சிந்தனை மரபு தந்தை வழி அதிகாரச் சமூகத்தின் நியமமாகும் என்று அந்நூலின் முகவுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.

1820களின் ஆரம்பத்தில் தெல்லிப்பளை, உடுவில் ஆகிய பகுதிகளிலேதான் முதன்முதலாகத் தமிழ்ப் பெண்களுக்கான கல்வி அமெரிக்க மிசனறிகளால் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே இங்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கிய மெதடிஸ்த திருச்சபையும், அங்கிளிக்கன் திருச்சபையும் இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டு இயங்குகையில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசன்களது கல்விசார் தொழிற்பாடு பிரிட்டனின் காலனித்துவக் கொள்கைகளோடு முரண்படுகின்ற கல்விப் போக்கினைக் கொண்டிருந்தது எனக் கூறப்படுகின்றது.

ஒரு பெண் கிறீஸ்தவளாக மாற்றப்பட்டுவிட்டால்; அவளது குடும்பத் தொடர்ச்சியே கிறீஸ்தவ மயப்பட்டுவிடும். ஏனவே மத விரிவாக்கலுக்கு பெண் கல்வி அத்தியாவசியமானது என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்ட கிறீஸ்தவ மதக் குழுக்கள் தங்களது மனித நேய அணுகுமுறையினூடாக யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களுக்கான சமூக அசைவியக்கத்தினை உந்தித் தள்ளுவதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தினை வகித்திருந்தனர். ஆனாலும் இந்தக் கிறீஸ்தவ மதக் குழுக்களை காலனியாதிக்க விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும் கொள்ள முடியும். ஏனெனில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுக் காலனியாதிக்கத்தின் விஸ்தீரணத்தை விரிவுபடுத்துகின்ற அதியுச்ச அதிகாரம் படைத்த மன்னனுக்கும் இந்த மத நிறுவனங்களுக்கும் இடையிலான நெருக்கங்கள் மிகவும் பின்னிப் பிணைந்தவை.

யாழ்ப்பாணப் பெண்கல்வியின் ஆரம்பகால வளர்ச்சிப்போக்கு புரட்டஸ்தாந்து மதநிறுவனங்களால் குடும்பங்களுக்குள் கிறீஸ்த்துவத்தை வலுப்படுத்தும் நோக்கினால் ஆனதாக ஏற்படுத்தப்பட்டதாக அமைந்தாலும் சமூக வரலாற்று வளர்ச்சிப் போக்கில் புரட்டஸ்தாந்து மதபோதகர்களும், அவர்களது சமூகம் பற்றிய கண்ணோட்டங்களும் ஏற்கனவே யாழ்ப்பாண மண்ணில் வேரூன்றியிருந்த இந்து, சைவப் பாரம்பரியங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் முன்னேறியவையே. ஆங்கிலேய காலனித்துவம் தனது நிர்வாக இயந்திரத்தை வலுப்படுத்துவதற்காக ஆங்கிலக்கல்வி பெற்ற அரசாங்க உத்தியோகங்களில் ஆண்களை அமர வைத்தபோது அங்கு ஒருவகைப் புதிய நடுத்தர வர்க்கம் தோற்றம் பெற்று வந்ததையும் இங்கு நாம் கண் கொள்ள வேண்டியதாக உள்ளது. எனவே அத்தகைய புதிய வர்க்கத்திலே பெண் தனது புதிய பாத்திரத்தைச் செம்மையாக வகுத்துக் கொள்ள அவளினதும் அவள் சார்ந்த குடும்பத்தினதும் ஆங்கிலக்கல்வி தொடர்பான அணுகுமுறை புதிய பரிமாணத்தைப் பெற்றது என்றும் கூறிவிடலாம். அத்துடன் ஆங்கிலக் கல்வி பெற்ற பெண் ஏற்கனவே நிலவி வந்த சமுதாயக் கட்டுமானங்களை உடைத்தெறியும் முழு உத்வேகம் பெற்றவளாக மாறிவிடாமலும் அதனோடு சார்ந்து பயணிப்பவளாகவும் அமைகிறாள். மேலும் அந்தப் பெண்ணானவள் தனது பிள்ளைகளை மேலும் கல்வியறிவு பெற்றவர்களாக உருவாக்கிவிடுவதன் மூலம் அரச உத்தியோகங்களை அவர்கள் பெறுவதற்கான வாய்ப்புக்களினால் சமூக அந்தஸ்த்து படிநிலையேற்றத்தை வேண்டி நிற்பதான சமூகப்பிராணியாகவும் மாற்றம் பெற்றவளாகி விடுகிறாள். இது இன்றைய கட்டம் உட்பட எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடியதாகவே அமைகிறது. மேலும் காலனித்துவம் உண்டாக்கியிருந்த பெண்களுக்கான இவ்வாறான படிநிலையேற்றத்தைச் சமூக,பண்பாட்டு,கருத்தியல் ஊடுருவலாகக் கட்டமைத்துக் கொண்ட ஆறுமுகநாவலர் போன்றோர் சைவமும், தமிழும் ஒருங்கே இணைந்த உணர்வு அலைகளைத் தோற்றுவித்தபோதும் சாதீயம், பெண்ணைக் கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்களில் புதிய சிந்தனைகளைப் பெற மறுத்தவர்களாகளாக அமைந்தமையினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதற்கும், பெண்களை மேலும் கடுமையான விதிமுறைகளுக்குள் ஆழ்த்துவதற்குமான கோட்பாடுகளை அதிதீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகளுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் அதை நோக்கிய திசைமுகத்தையே யாழ்ப்பாணச் சமூகத்திற்கு காட்டுபவர்களாகவுமே அமைந்தார்கள்.

“பாரம்பரிய பேணுகையை மேல்நாட்டுப் மத. பண்பாட்டு ஊடுருவலுக்கு எதிரான ஒரு கேடயமாகக் பயன்படுத்த விரும்பிய ஆறுமுகநாவலரிடம் கிறீஸ்தவப் பாதிரிகளிடமிருந்து எதிர்பார்ப்பதைப் போன்று பெண் கல்வியை எதிர்நோக்குவது சிரமமே” என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுகின்றார். ஆனால் குடும்பத்திற்கான பொறுப்புக்களை மாத்திரம் அல்ல அவளது உணர்வுகளைச் சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் ஆறுமுகநாவலர் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். 1865இல் அவரால் எழுதப்பட்ட “நான்காம் பாலபாடம்” என்னும் நூலில் அவரால் எழுதப்பட்ட நல்லொழுக்கம், கற்பு போன்ற விடயங்கள் வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பத்தாம் பசலித்தனமான பிற்போக்குக் கருத்துக்களால் நிறைந்து வழிவதாக நூலாசிரியர் சுட்டுவதை ஆழ்ந்த கவனத்தக்கு இட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது. “விதவைகள் மொட்டையடித்தல்” யாழ்ப்பாணச் சமூக மரபில் காணப்படாத போதிலும் இந்தியப் பிராமணியக் கருத்தியல்களை “இறக்குமதி” செய்து கொண்ட ஆறுமுகநாவலர் அதனை யாழ்ப்பாணச் சைவத் தமிழ்சமூக மரபிலும் ஒட்டுவதற்கு முனைந்துள்ளார்.

காலமாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு மரபு செழிப்புறுதலா அல்லது மரபுகளை உடைத்துக் கொண்டு சமூகம் மாறுதலுக்குள்ளாவதா அல்லாவிடின் இரண்டும் இணைந்தும், முரண்பட்டும் வரலாறு இயங்கியலுக்குள்ளாவதா என்பது போன்ற வாதப்பிரதிவாதங்கள் சமூகங்களில் தொடர்ச் சக்கரமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஒருவகையில் ஆறுமுகநாவலரது அடுத்த கட்டத் தொடர்ச்சியாகவே சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தோடு வந்த சேர்.பொன்.இராமநாதனை (ஆங்கிலேயப் பெண்மணியை அவர் மணம் முடித்தபோதும்) நோக்க முடியும். இலங்கை முழுமைக்குமான தேசிய அரசியலில் நாட்டம் கொண்டு பிரபல்யம் அடைந்திருந்த இராமநாதனே முதன்முதலாகப் பெண்களுக்கான சைவப்பாடசாலையை அதுவும் விடுதிப்பாடசாலையாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் அமைந்த மருதனாமடத்தில் 1913இல் நிறுவினார். 1820 களின் ஆரம்பத்தில் கிறீஸ்தவ மதக் குழுக்களினால் பெண் விடுதிப் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்ட வேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்பிள்ளைகள் அப் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதற்கும், கல்வி பெறுவதற்கும் யாழ்ப்பாண உயர் வேளாள குலம் பல்வேறுவகைகளில் தடைகளையும், குளறுபடிகளையும் விளைவித்திருக்கின்றது.

Wednesday, June 13, 2007

தேசம், தேசியம்,
தேசிய இயக்கங்கள்

-நடராஜா முரளிதரன்-

''தேசம், தேசியம், தேசிய இயக்கங்கள் ஆகியன எந்தவொரு இறுக்கமான சூத்திரத்துக்கும் கட்டுப்பட்டவையல்ல. தேசங்கள் “இயற்கையாக” உருவாகின்றவையல்ல, மாறாகக் “கற்பிதம் செய்யப்பட்ட சமூகங்களே”.

-பெனடிக்ற் அன்டர்சன்-

இவ்வாறு “அன்டர்சன்” மொழிகின்ற போது “கற்பனைச் சமூகம்” என்ற உடனடி முடிதலுக்கு விரைந்திடாது இவ்வுலக நடைமுறை யதார்த்தங்களின் அக, புறக் காரணிகளின் அடிப்படையினால் கட்டமைந்த புரிதலுக்குள்ளான “கற்பிதமாகவே” மேற் கண்ட சொல்லாடல்களை நான் பொருள் கொள்ளவிழைகின்றேன்.

உலகப் போர்களின் போது பெரு வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் இருந்து எழுந்த “தேசிய வெறி” அந்த நாடுகளைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் தனது தேசத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா அல்லது தனது தொழிலாளி வர்க்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா என்ற மாபெரும் வினாவைத் தொடுத்து நின்றது.

அசுர வளர்ச்சி கண்ட முதலாளித்துவம் ஏகாதிபத்திய விரிவு பெற்று சந்தைப் போட்டியில் இறங்கியதன் விளைவான உலகப் போர்கள் அந்தப் பேரரசுகள் சிதைந்து போகாமலே அவற்றைப் பொதுவுடமை அரசுகளாக மாற்றம் காணச் செய்து விடும் என்பதில் மார்க்சீய அறிஞர்களில் பலர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

எனவே அவ்வாறான பேரரசுகளுக்குள் உள்ளடங்கியிருந்த தேசங்களுக்கும்,தேசிய இனங்களுக்கும் விடுதலை வழங்குவது குறித்து உரிய கோட்பாடுகளை நெறிப்படுத்துவதில் பொதுவுடமைசார் அறிஞர்களில் பெரும்பகுதியினர் மிகுந்த தயக்கம் காட்டியே வந்துள்ளார்கள்.

ஆனால் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஓடி வந்த எங்களுக்கு அந்த நாடுகளில் காணப்படும் தேசியங்களோ தாங்கொணாத சமூக, பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளாகவே கருதப்படுகின்றது.

தேசியம் என்பது “இடது” அல்லது “வலது” வகைப்பட்ட சித்தாந்த வலைக்குள் சிக்குண்டிருக்கலாம். புரட்சிகரமானதாகவோ அல்லது பழமை சார்பானதாகவோ கூட இருக்கலாம். ஆயினும் அரசியல் கருத்தாக்கம் என்ற வகையில் அது ஏற்கனவே சமூகத்தில் நிலைபெற்றுள்ள அரசியல் கேள்விக்குள்ளாக்கப்படும் வேளைகளில் தனது கருத்தாக்கச் சக்தியை நிறுவுவதற்கான வாய்ப்பான தளத்தில் எழுந்து நிற்கிறது.

பாசிசமாக எழுந்து நின்ற ஜேர்மனியத் தேசியவாதம் தொட்டு முற்போக்குப் பதாகைகளைத் தாங்கிய ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்கத் தேசியங்கள் ஈறாக அனைத்துத் தேசியங்களுமே தமது பண்டைய வரலாறுகளை, பழமை வாய்ந்த கலை - இலக்கியப் பெருமைகளை, இதிகாசத் தொன்மங்களை முரசறைவது வழக்கம்.

அண்மைக் காலத் தமிழகத்தின் வரலாறு கூட சாதியொழிப்புப் போராட்டமாக, பார்ப்பனீய எதிர்ப்புப் போராட்டமாக, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டமாக வீரியம் பெற்று ஈற்றில் தமிழ்த் தேசியமாக மாற்றம் பெற்றதை உற்றுப் பார்க்கையில் உள்ளக உணர்வுக் கிடக்கைகளான மொழியுணர்வு, பண்பாட்டுணர்வு போன்றவை சமூகங்களை ஈர்ப்பதில், அணி கொள்ள வைப்பதில் அபரிமித ஆற்றல் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன.

ஆகவேதான் சமுதாயப் பிரச்சினையைத் தேசியப் பிரச்சினையிலிருந்து முற்றாகப் பிரித்துப் பார்ப்பதென்பது அந்த சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரப் பரிமாணங்களை விளங்கிக் கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்தி விடக் கூடும்.

நவீன தமிழகத்தில் எழுச்சியடைந்திருக்கும் தலித் விடுதலை உணர்வுகளும் கூட அதன் தமிழ்த் தேசியக் கலப்பிலிருந்து விடுபடவே முடியாத சம கால வரலாற்றுச் சூழலை நாம் அவதானிக்கலாம்.

தேசியம் பற்றிய எந்தவொரு கோட்பாட்டையும் வகுக்காததுதான் மார்க்சீயத்தின் மிகப் பெரும் தோல்வியாகும் என மார்க்சிய அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். ஆயினும் மார்க்சீய வழித் தடத்திலே பயணித்த “லெனின்” பின்வருமாறு கூறியிருந்தார்.

“ சுய நிர்ணய உரிமை என்ற அரசியல் சுதந்திரத்தை நாம் ஏற்கிறோம். அதாவது ஒடுக்கும் தேசங்களிலிருந்து பிரிவினையைக் கோருகின்றோம். அதற்குக் காரணம் நாம் பொருளாதார அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதற்குக் கனவு கண்டோம் என்பதாலோ அல்லது சிறிய அரசுகளை உருவாக்குதல் என்ற இலட்சியத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதாலோ அல்ல. மாறாக உண்மையான ஜனநாயக அடிப்படையில், உண்மையான சர்வ தேசிய அடிப்படையில், மேலும் பெரிய அரசுகளையும் மேலும் நெருக்கமான ஒற்றுமையையும் ஏன், தேசங்கள் இரண்டறக் கலந்து விடுவதையும் கூட விரும்புகின்றோம் என்பதால்தான். பிரிந்து போகும் சுதந்திரமில்லாமல் இதை நினைத்துப் பார்க்கவே முடியாது.”

“மார்க்சீயத்திற்கும் தேசியத்திற்கும் இடையேயான உறவு ஒரு சிக்கல் மிகுந்த உரையாடலாகவே தொடருகின்றது” என்று இன்னுமொரு மார்க்சீய அறிஞர் குறிப்பிட்டிருந்தார்.

எனவேதான் பொதுவுடமைச் சித்தாந்தத்தின் பேரால் உலகெங்கணும் பொதுவுடமையாளர்களும், பொதுவுடமை இயக்கங்களும் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாகப் புரிந்த வரலாற்றுத் தவறுகளையும், குற்றங்களையும் மறந்து விடாது மீண்டுமொரு முறை வரலாற்றின் குப்பைத் தொட்டிகளுக்குள் ஆழ்ந்து அவற்றை மீண்டுமொரு முறை புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.

சகல சித்தாந்தங்களின் பேரால் அமைக்கப்பட்ட அரசுகள் யாவுமே மக்களின் தனித்துவங்களை, அவர் தம் அடையாளங்களைப் புறந்தள்ளித் தீர்வுகளை மேலிருந்தவாறு திணித்து ஒடுக்குதலுக்குள்ளாக்கியதன் விளைவாகவே தேசியமும், தேசிய இயக்கங்களும் தோன்றின. புதிய தேசங்களும் பிறந்தன.

(துணை நூல்; : எஸ்.வி.ஆர் எழுதிய “தேசிய இனப்பிரச்சினை” என்ற கட்டுரை)
பிரிவினைக் கோரிக்கைகள்

-நடராஜா முரளிதரன்-

“சமஸ்டி” வடிவங்களை ஆய்வு செய்வதனூடாக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வுகளை முன் வைப்பதன் மூலம் இனப்பதற்றம் நிலவும் சமூகச் சூழ்நிலைகளில் ஓரளவு தணிவுகளை ஏற்படுத்தும் வரலாற்றுக் கள நிலவரங்களை சமாதான ஏற்பாட்டாளர்கள் என்று கூறிக் கொள்வோர் ஊக்குவிக்கும் முறைமையை உலகெங்கணும் நாம் பரவலாகக் காணுகின்றோம்.

இதே வகையான அடிப்படையைக் கருத்திற் கொண்டு 2002களில் தமிழர் தரப்பும், சிறிலங்கா அரசும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்த வேளைகளில் “ஒஸ்லோ பிரகடனம்” என்ற பதம் ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகப் பிரபல்யம் அடைந்திருந்தது. இந்த “ஒஸ்லோ பிரகடனம்” மூலம் பிரிவினைக் கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிட்டுவிட்டதாகவே உலகப் பத்திரிகைகள் எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தன.

உள்ளக “சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பிரதேச சுயாட்சிக்கு உரித்துடையவர்கள் என்ற முறைமையில் அது தொடர்பான தீர்வுத்திட்டங்களைப் பரிசீலிக்கத் தயார்” என்ற தமிழர் தரப்பின் அறிக்கைகள் திம்புப் பேச்சுவார்தைக் காலம் தொட்டு அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு வந்துள்ளன.

ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின் போது கனடாவைச் சேர்ந்த அரசியலமைப்பு அறிஞர் குழாம் ஒன்று “சமஸ்டி ஆட்சியமைப்பின்” அரசியலமைப்பு அடுக்கு முறைமைகள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் ஆலோசனைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இதில் முன்னாள் ஒன்ராறியோ மாகாண முதல்வர் “பொப் ரே”யும் அடங்கியிருந்தார்.

கனடா நாட்டின் அரசிலமைப்பு நிபுணர்கள் இரு தரப்பினரோடும் கருத்துக் கூறல்களையும், உரையாடல்களையும் நிகழ்த்தியதன் விளைவாகவே “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் ஐக்கியமான இலங்கைக்குள் சமஸ்டி ஆட்சி முறை தழுவிய தீர்வு” ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.

தேசங்கள் அமைக்கப்பட்டுவிட்டாலும் தேசத்துள் வாழும் மக்களுக்கான பிரச்சினைகள் வேறு ரூபங்களில் தொடரவே செய்யும் எனக் கருத்துக் கூறும் அறிஞர்கள் வலிமையுடைத்த தேசியம் சந்தையை விரிவு படுத்தவும், புவியியல் பரப்பு எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், உள்ளக மக்களின் பிரச்சினைகளைத் திசைதிருப்பி விடவும் வன்முறை சார்ந்த வழித்தடத்திலேயே பயணிக்கின்றது என்பதில் நம்பிக்கை கொள்ளுகிறார்கள்.

பெரியார் ஓரிடத்தில் கூறுகிறார். “இந்தியா ஒரு தேசமா? அதற்கு மொழி ஏது? மதம் ஏது? இந்து மதத்தால் இந்தியா தேசம் ஆயிற்று என்றால்….இஸ்லாமியருக்கும், கிறீஸ்தவருக்கும், பௌத்தர்களுக்கும், பார்சிக்களுக்கும் இந்தியா தேசமாகுமா?....மொழியைக் கொண்டு தேசம் பிரிப்பது என்றால் மாகாணம் ஒன்றுக்கு நான்கு, ஐந்து தேசங்கள் ஆகிவிடாதா?”

இங்குதான் உருவாக்கப்பட்ட, மற்றும் உருவாகி வரும் தேசங்களுக்குள்ளேயும் மேலும் புதிய வகைப் பிரச்சினைகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. கனடாவில் பிரஞ்சு மொழி பேசும் மக்களின் கியூபெக் பிரிவினைப் போராட்டத்தின் போது இப் பிரச்சினை ஒட்டாவோவின் அதி உயர் நீதிமன்றத்தால் கையாளப்பட்ட போது அதன் தீர்ப்பின்; சாரமானது இவ்வாறு கூறுகின்றது.

“அரசியல் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அல்லது நிறுவிக் கொள்ளும் உரிமையான வெளியக சுயநிர்ணய உரிமை, மேலாட்சிக்கு உட்பட்டு வாழும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் உரித்தானதாகும். ஒரு மக்கள் சமூகம் இன்னொரு சமூகத்தின் மேலாதிக்கத்தினுள் சிக்குண்டு தவிக்கும் போது அடக்குதலுக்கு உள்ளான சமூகமானது வெளியக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டலாம்.” “மேலும் ஒரு மக்கள் சமூகம் தனது உள்ளக சுயநிர்ணய உரிமையை அர்த்தபூர்வமான முறையில் அடைவதற்குத் தடை ஏற்படுமானால் இறுதி வழிமுறையாகப் பிரிந்து செல்லும் உரிமையைப் பிரகடனப்படுத்த அந்த மக்களுக்கு உரிமையுண்டு.”

இதே வகையிலான அம்சங்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை தொடர்பான பிரகடனங்களையும் நாம் கண்டு கொள்ள முடியும். இங்கு வெளியக சுயநிர்ணய உரிமையென்பது ஒரு மக்கள் சமூகமானது தனது அரசியல் தலைவிதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ளுமுகமாகப் பிரிந்து சென்று தனது அரசை நிறுவிக் கொள்ளுதல் என்பதாகும்.

அவ்வாறு ஓர் அரசைத் தமிழ்த் தேசியம் நிறுவ முற்படுகையில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்துகின்ற வடக்கு-கிழக்கு இணைந்த நிலப்பிரதேசத்தில் கிழக்கின் புவியியல் அமைவிடம் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் பரவலாகவும், செறிவாகவும் வாழும் சூழ்நிலை காணப்படுகின்றது.

எனவே இங்கு தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் அடிப்படை சார்ந்து கட்டமைக்கப்படும்(எதிர்காலத்தில் கட்டமைக்கப்படுமாயின்) தமிழ் அரச நிறுவனமானது எவ்வாறு முஸ்லீம், சிங்கள மக்களின் அரசியல் இருப்புக்களையும், எதிர்பார்ப்புக்களையும் எத்தகைய சவால்களுக்கூடாக கையாள முனையும் என்பதிலேயே தமிழ்த் தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் தீர்மானகரமாக வெளிப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்கு உள்ளக, வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளை தமிழ்த் தேசத்துக்குள் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு வழங்குவதில் எவ்வாறான அணுகுமுறையைப் பிரயோகித்தல் என்ற மாபெரும் கேள்வி எம் முன்னே கிளர்ந்தெழுகின்றது.

இவ்வாறான சிறுபான்மை இனங்களின் நியாமான அபிலாசைகளை அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் கையாள மறுத்து நிற்கும் போக்கே ஏற்கனவே கட்டப்பட்ட தேசங்களிலும், தேசியங்களிலும் பல்வேறு வகையான குழப்பகரமான நிலைகளுக்குத் தோற்றுவாய்களாய் அமைந்தன. தேசங்களின் கட்டமைவானது உலகப் போர்களாகவும், இனங்களுக்கிடையேயான வன்முறைக் களங்களாவும் மாறுண்ட போது மனிதநேயம், மானுடம் போன்றவை தூக்கி வீசியெறியப்பட்டன.

தேசங்கள் உடைகின்றன. எல்லைகள் இல்லாத, கடவுச் சீட்டுக்களின் தேவையேற்படாத ஒரு உலகம் குறித்த கனவுகள் பிறக்கின்றன.

எனவேதான் அமைய முற்படும் “தமிழ்த் தேசமும்” தமிழ் வெறியும், இன்னும் பல “வெறிகளும்” கொண்ட தேசமாக மாறி விடக் கூடாது.