Saturday, February 23, 2008

அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி

நடராஜா முரளிதரன்

கடந்த சில வாரங்களுக்கு முன்பாகக் “குறமகள்”(வள்ளிநாயகி) அவர்களினால் எழுதி வெளியீடு செய்யப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலை அந்நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற போது வாங்கிக் கொண்டேன். பின்பு அந்நூலை வாசித்தபோது அதனூடகக் கிடைத்த தகவல்களில் சிலவற்றை இங்கு மீட்பதே இப்பத்தியில் எனது நோக்கம்.

யாழ்ப்பாணச் சமூகம் என்பது பெரும் படிப்பைப் பாரம்பரியமாகக் கொண்டது என்ற “பெரும் புழுகுக்குள்” தோய்ந்து மூழ்கி எழும் பழக்கமும். வழக்கமும் வாய்க்கப் பெற்ற பாரம்பரியத்தில் வந்துதித்த என் போன்றோருக்கு வெறும் 175 வருட காலங்களுக்கு முன்னேதான் விரல் விட்டு எண்ணக் கூடிய யாழ்ப்பாணப் பெண்கள் சிலர் எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலே எழுதவும், வாசிக்கவுமான ஆரம்பக் கல்வியை கற்க ஆரம்பித்தார்கள் என்ற வரலாற்றுண்மையை அந் நூலின் வாயிலாகப் பெறக்கூடியதாக அமைந்த போது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. எனவேதான் இங்கு ஓர் கேள்வி எம்முள் இயல்பாகவே எழுப்பப்படுகிறது.

எமது பாரம்பரிய இந்துச் சமூகத்தில் காலங்காலமாக கடைக் கொள்ளும் அல்லது பேணப்படும் பெண் பற்றிய கருத்து நிலைப்பாடு என்பது யாது? இந்துக்களுக்கும் இந்துக்கள் என்ற அணியினுள் இன்று உள் அழுத்தப்பட்ட சைவ, சமண, சாக்த, வைணவ மதத்தவர் யாவருக்கும் “மனு தர்மமே” நெறிகாட்டும் வழிகாட்டியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த “மனு தர்மத்தில்”; பெண் என்றவள் இழிந்தவளாக, மிகக் கொடூரமான கட்டுக்குள் வளர்த்தெடுக்கப்படவேண்டியவளாக, ஆடை-ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட வேண்டியவளாக சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

அன்றைய நூல் வெளியீட்டு வைபவத்தில் இது தொடர்பாக கவிஞர் சேரன் விரிவாக எடுத்துக் கூறியும் இருந்தார். “இந்து” என்ற வார்த்தையை இந்திய சமூகக் கட்டுமானத்துக்குள் ஒர் பதப் பிரயோகமாகப் பயன்படுத்தியவர்கள் அல்லது கொணர்ந்தவர்கள் பர்சியர்கள் மற்றும் பிரிட்டிசார் என்றே வரலாறு கூறுகிறது. ஆனால் இன்று “இந்து” என்ற அந்த வார்த்தை பரந்து, விரிந்த இந்திய உபகண்ட சமூகங்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டும் வலுப்படைத்த “தேசிய” ஆயுதமாகப் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. எனவே இவ்வாறான வளர்ச்சியடையாத இறுக்கமான சமூகக் கட்டுமானத்துக்குள் இருந்து வெளிக்கிளம்புதல் என்பது அன்றைய யாழ்ப்பாணப் பெண்களைப் பொறுத்தவரையில் மிகக் கடினமானதாகவே இருந்திருக்கும்.

பெண்ணை ஆணிலும் பார்க்கத் தாழ்ந்தவளாகக் கருதும் கருத்துநிலையின் தளம் இந்தியச் சமூகத்திற்கு மாத்திரம் உரியதொன்றன்று. அது மேல்நாட்டுச் சமூகங்களுக்கும் உரிய ஒன்றாகும். இதற்கான காரணம், இச்சிந்தனை மரபு தந்தை வழி அதிகாரச் சமூகத்தின் நியமமாகும் என்று அந்நூலின் முகவுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.

1820களின் ஆரம்பத்தில் தெல்லிப்பளை, உடுவில் ஆகிய பகுதிகளிலேதான் முதன்முதலாகத் தமிழ்ப் பெண்களுக்கான கல்வி அமெரிக்க மிசனறிகளால் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே இங்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கிய மெதடிஸ்த திருச்சபையும், அங்கிளிக்கன் திருச்சபையும் இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டு இயங்குகையில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசன்களது கல்விசார் தொழிற்பாடு பிரிட்டனின் காலனித்துவக் கொள்கைகளோடு முரண்படுகின்ற கல்விப் போக்கினைக் கொண்டிருந்தது எனக் கூறப்படுகின்றது.

ஒரு பெண் கிறீஸ்தவளாக மாற்றப்பட்டுவிட்டால்; அவளது குடும்பத் தொடர்ச்சியே கிறீஸ்தவ மயப்பட்டுவிடும். ஏனவே மத விரிவாக்கலுக்கு பெண் கல்வி அத்தியாவசியமானது என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்ட கிறீஸ்தவ மதக் குழுக்கள் தங்களது மனித நேய அணுகுமுறையினூடாக யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களுக்கான சமூக அசைவியக்கத்தினை உந்தித் தள்ளுவதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தினை வகித்திருந்தனர். ஆனாலும் இந்தக் கிறீஸ்தவ மதக் குழுக்களை காலனியாதிக்க விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும் கொள்ள முடியும். ஏனெனில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுக் காலனியாதிக்கத்தின் விஸ்தீரணத்தை விரிவுபடுத்துகின்ற அதியுச்ச அதிகாரம் படைத்த மன்னனுக்கும் இந்த மத நிறுவனங்களுக்கும் இடையிலான நெருக்கங்கள் மிகவும் பின்னிப் பிணைந்தவை.

யாழ்ப்பாணப் பெண்கல்வியின் ஆரம்பகால வளர்ச்சிப்போக்கு புரட்டஸ்தாந்து மதநிறுவனங்களால் குடும்பங்களுக்குள் கிறீஸ்த்துவத்தை வலுப்படுத்தும் நோக்கினால் ஆனதாக ஏற்படுத்தப்பட்டதாக அமைந்தாலும் சமூக வரலாற்று வளர்ச்சிப் போக்கில் புரட்டஸ்தாந்து மதபோதகர்களும், அவர்களது சமூகம் பற்றிய கண்ணோட்டங்களும் ஏற்கனவே யாழ்ப்பாண மண்ணில் வேரூன்றியிருந்த இந்து, சைவப் பாரம்பரியங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் முன்னேறியவையே. ஆங்கிலேய காலனித்துவம் தனது நிர்வாக இயந்திரத்தை வலுப்படுத்துவதற்காக ஆங்கிலக்கல்வி பெற்ற அரசாங்க உத்தியோகங்களில் ஆண்களை அமர வைத்தபோது அங்கு ஒருவகைப் புதிய நடுத்தர வர்க்கம் தோற்றம் பெற்று வந்ததையும் இங்கு நாம் கண் கொள்ள வேண்டியதாக உள்ளது. எனவே அத்தகைய புதிய வர்க்கத்திலே பெண் தனது புதிய பாத்திரத்தைச் செம்மையாக வகுத்துக் கொள்ள அவளினதும் அவள் சார்ந்த குடும்பத்தினதும் ஆங்கிலக்கல்வி தொடர்பான அணுகுமுறை புதிய பரிமாணத்தைப் பெற்றது என்றும் கூறிவிடலாம். அத்துடன் ஆங்கிலக் கல்வி பெற்ற பெண் ஏற்கனவே நிலவி வந்த சமுதாயக் கட்டுமானங்களை உடைத்தெறியும் முழு உத்வேகம் பெற்றவளாக மாறிவிடாமலும் அதனோடு சார்ந்து பயணிப்பவளாகவும் அமைகிறாள். மேலும் அந்தப் பெண்ணானவள் தனது பிள்ளைகளை மேலும் கல்வியறிவு பெற்றவர்களாக உருவாக்கிவிடுவதன் மூலம் அரச உத்தியோகங்களை அவர்கள் பெறுவதற்கான வாய்ப்புக்களினால் சமூக அந்தஸ்த்து படிநிலையேற்றத்தை வேண்டி நிற்பதான சமூகப்பிராணியாகவும் மாற்றம் பெற்றவளாகி விடுகிறாள். இது இன்றைய கட்டம் உட்பட எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடியதாகவே அமைகிறது. மேலும் காலனித்துவம் உண்டாக்கியிருந்த பெண்களுக்கான இவ்வாறான படிநிலையேற்றத்தைச் சமூக,பண்பாட்டு,கருத்தியல் ஊடுருவலாகக் கட்டமைத்துக் கொண்ட ஆறுமுகநாவலர் போன்றோர் சைவமும், தமிழும் ஒருங்கே இணைந்த உணர்வு அலைகளைத் தோற்றுவித்தபோதும் சாதீயம், பெண்ணைக் கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்களில் புதிய சிந்தனைகளைப் பெற மறுத்தவர்களாகளாக அமைந்தமையினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதற்கும், பெண்களை மேலும் கடுமையான விதிமுறைகளுக்குள் ஆழ்த்துவதற்குமான கோட்பாடுகளை அதிதீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகளுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் அதை நோக்கிய திசைமுகத்தையே யாழ்ப்பாணச் சமூகத்திற்கு காட்டுபவர்களாகவுமே அமைந்தார்கள்.

“பாரம்பரிய பேணுகையை மேல்நாட்டுப் மத. பண்பாட்டு ஊடுருவலுக்கு எதிரான ஒரு கேடயமாகக் பயன்படுத்த விரும்பிய ஆறுமுகநாவலரிடம் கிறீஸ்தவப் பாதிரிகளிடமிருந்து எதிர்பார்ப்பதைப் போன்று பெண் கல்வியை எதிர்நோக்குவது சிரமமே” என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுகின்றார். ஆனால் குடும்பத்திற்கான பொறுப்புக்களை மாத்திரம் அல்ல அவளது உணர்வுகளைச் சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் ஆறுமுகநாவலர் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். 1865இல் அவரால் எழுதப்பட்ட “நான்காம் பாலபாடம்” என்னும் நூலில் அவரால் எழுதப்பட்ட நல்லொழுக்கம், கற்பு போன்ற விடயங்கள் வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பத்தாம் பசலித்தனமான பிற்போக்குக் கருத்துக்களால் நிறைந்து வழிவதாக நூலாசிரியர் சுட்டுவதை ஆழ்ந்த கவனத்தக்கு இட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது. “விதவைகள் மொட்டையடித்தல்” யாழ்ப்பாணச் சமூக மரபில் காணப்படாத போதிலும் இந்தியப் பிராமணியக் கருத்தியல்களை “இறக்குமதி” செய்து கொண்ட ஆறுமுகநாவலர் அதனை யாழ்ப்பாணச் சைவத் தமிழ்சமூக மரபிலும் ஒட்டுவதற்கு முனைந்துள்ளார்.

காலமாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு மரபு செழிப்புறுதலா அல்லது மரபுகளை உடைத்துக் கொண்டு சமூகம் மாறுதலுக்குள்ளாவதா அல்லாவிடின் இரண்டும் இணைந்தும், முரண்பட்டும் வரலாறு இயங்கியலுக்குள்ளாவதா என்பது போன்ற வாதப்பிரதிவாதங்கள் சமூகங்களில் தொடர்ச் சக்கரமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஒருவகையில் ஆறுமுகநாவலரது அடுத்த கட்டத் தொடர்ச்சியாகவே சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தோடு வந்த சேர்.பொன்.இராமநாதனை (ஆங்கிலேயப் பெண்மணியை அவர் மணம் முடித்தபோதும்) நோக்க முடியும். இலங்கை முழுமைக்குமான தேசிய அரசியலில் நாட்டம் கொண்டு பிரபல்யம் அடைந்திருந்த இராமநாதனே முதன்முதலாகப் பெண்களுக்கான சைவப்பாடசாலையை அதுவும் விடுதிப்பாடசாலையாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் அமைந்த மருதனாமடத்தில் 1913இல் நிறுவினார். 1820 களின் ஆரம்பத்தில் கிறீஸ்தவ மதக் குழுக்களினால் பெண் விடுதிப் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்ட வேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்பிள்ளைகள் அப் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதற்கும், கல்வி பெறுவதற்கும் யாழ்ப்பாண உயர் வேளாள குலம் பல்வேறுவகைகளில் தடைகளையும், குளறுபடிகளையும் விளைவித்திருக்கின்றது.

Wednesday, June 13, 2007

தேசம், தேசியம்,

தேசிய இயக்கங்கள்

-நடராஜா முரளிதரன்-

''தேசம், தேசியம், தேசிய இயக்கங்கள் ஆகியன எந்தவொரு இறுக்கமான சூத்திரத்துக்கும் கட்டுப்பட்டவையல்ல. தேசங்கள் “இயற்கையாக” உருவாகின்றவையல்ல, மாறாகக் “கற்பிதம் செய்யப்பட்ட சமூகங்களே”.

-பெனடிக்ற் அன்டர்சன்-

இவ்வாறு “அன்டர்சன்” மொழிகின்ற போது “கற்பனைச் சமூகம்” என்ற உடனடி முடிதலுக்கு விரைந்திடாது இவ்வுலக நடைமுறை யதார்த்தங்களின் அக, புறக் காரணிகளின் அடிப்படையினால் கட்டமைந்த புரிதலுக்குள்ளான “கற்பிதமாகவே” மேற் கண்ட சொல்லாடல்களை நான் பொருள் கொள்ளவிழைகின்றேன்.

உலகப் போர்களின் போது பெரு வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் இருந்து எழுந்த “தேசிய வெறி” அந்த நாடுகளைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் தனது தேசத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா அல்லது தனது தொழிலாளி வர்க்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா என்ற மாபெரும் வினாவைத் தொடுத்து நின்றது.

அசுர வளர்ச்சி கண்ட முதலாளித்துவம் ஏகாதிபத்திய விரிவு பெற்று சந்தைப் போட்டியில் இறங்கியதன் விளைவான உலகப் போர்கள் அந்தப் பேரரசுகள் சிதைந்து போகாமலே அவற்றைப் பொதுவுடமை அரசுகளாக மாற்றம் காணச் செய்து விடும் என்பதில் மார்க்சீய அறிஞர்களில் பலர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

எனவே அவ்வாறான பேரரசுகளுக்குள் உள்ளடங்கியிருந்த தேசங்களுக்கும்,தேசிய இனங்களுக்கும் விடுதலை வழங்குவது குறித்து உரிய கோட்பாடுகளை நெறிப்படுத்துவதில் பொதுவுடமைசார் அறிஞர்களில் பெரும்பகுதியினர் மிகுந்த தயக்கம் காட்டியே வந்துள்ளார்கள்.

ஆனால் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஓடி வந்த எங்களுக்கு அந்த நாடுகளில் காணப்படும் தேசியங்களோ தாங்கொணாத சமூக, பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளாகவே கருதப்படுகின்றது.

தேசியம் என்பது “இடது” அல்லது “வலது” வகைப்பட்ட சித்தாந்த வலைக்குள் சிக்குண்டிருக்கலாம். புரட்சிகரமானதாகவோ அல்லது பழமை சார்பானதாகவோ கூட இருக்கலாம். ஆயினும் அரசியல் கருத்தாக்கம் என்ற வகையில் அது ஏற்கனவே சமூகத்தில் நிலைபெற்றுள்ள அரசியல் கேள்விக்குள்ளாக்கப்படும் வேளைகளில் தனது கருத்தாக்கச் சக்தியை நிறுவுவதற்கான வாய்ப்பான தளத்தில் எழுந்து நிற்கிறது.

பாசிசமாக எழுந்து நின்ற ஜேர்மனியத் தேசியவாதம் தொட்டு முற்போக்குப் பதாகைகளைத் தாங்கிய ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்கத் தேசியங்கள் ஈறாக அனைத்துத் தேசியங்களுமே தமது பண்டைய வரலாறுகளை, பழமை வாய்ந்த கலை - இலக்கியப் பெருமைகளை, இதிகாசத் தொன்மங்களை முரசறைவது வழக்கம்.

அண்மைக் காலத் தமிழகத்தின் வரலாறு கூட சாதியொழிப்புப் போராட்டமாக, பார்ப்பனீய எதிர்ப்புப் போராட்டமாக, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டமாக வீரியம் பெற்று ஈற்றில் தமிழ்த் தேசியமாக மாற்றம் பெற்றதை உற்றுப் பார்க்கையில் உள்ளக உணர்வுக் கிடக்கைகளான மொழியுணர்வு, பண்பாட்டுணர்வு போன்றவை சமூகங்களை ஈர்ப்பதில், அணி கொள்ள வைப்பதில் அபரிமித ஆற்றல் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன.

ஆகவேதான் சமுதாயப் பிரச்சினையைத் தேசியப் பிரச்சினையிலிருந்து முற்றாகப் பிரித்துப் பார்ப்பதென்பது அந்த சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரப் பரிமாணங்களை விளங்கிக் கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்தி விடக் கூடும்.

நவீன தமிழகத்தில் எழுச்சியடைந்திருக்கும் தலித் விடுதலை உணர்வுகளும் கூட அதன் தமிழ்த் தேசியக் கலப்பிலிருந்து விடுபடவே முடியாத சம கால வரலாற்றுச் சூழலை நாம் அவதானிக்கலாம்.

தேசியம் பற்றிய எந்தவொரு கோட்பாட்டையும் வகுக்காததுதான் மார்க்சீயத்தின் மிகப் பெரும் தோல்வியாகும் என மார்க்சிய அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். ஆயினும் மார்க்சீய வழித் தடத்திலே பயணித்த “லெனின்” பின்வருமாறு கூறியிருந்தார்.

“ சுய நிர்ணய உரிமை என்ற அரசியல் சுதந்திரத்தை நாம் ஏற்கிறோம். அதாவது ஒடுக்கும் தேசங்களிலிருந்து பிரிவினையைக் கோருகின்றோம். அதற்குக் காரணம் நாம் பொருளாதார அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதற்குக் கனவு கண்டோம் என்பதாலோ அல்லது சிறிய அரசுகளை உருவாக்குதல் என்ற இலட்சியத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதாலோ அல்ல. மாறாக உண்மையான ஜனநாயக அடிப்படையில், உண்மையான சர்வ தேசிய அடிப்படையில், மேலும் பெரிய அரசுகளையும் மேலும் நெருக்கமான ஒற்றுமையையும் ஏன், தேசங்கள் இரண்டறக் கலந்து விடுவதையும் கூட விரும்புகின்றோம் என்பதால்தான். பிரிந்து போகும் சுதந்திரமில்லாமல் இதை நினைத்துப் பார்க்கவே முடியாது.”

“மார்க்சீயத்திற்கும் தேசியத்திற்கும் இடையேயான உறவு ஒரு சிக்கல் மிகுந்த உரையாடலாகவே தொடருகின்றது” என்று இன்னுமொரு மார்க்சீய அறிஞர் குறிப்பிட்டிருந்தார்.

எனவேதான் பொதுவுடமைச் சித்தாந்தத்தின் பேரால் உலகெங்கணும் பொதுவுடமையாளர்களும், பொதுவுடமை இயக்கங்களும் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாகப் புரிந்த வரலாற்றுத் தவறுகளையும், குற்றங்களையும் மறந்து விடாது மீண்டுமொரு முறை வரலாற்றின் குப்பைத் தொட்டிகளுக்குள் ஆழ்ந்து அவற்றை மீண்டுமொரு முறை புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.

சகல சித்தாந்தங்களின் பேரால் அமைக்கப்பட்ட அரசுகள் யாவுமே மக்களின் தனித்துவங்களை, அவர் தம் அடையாளங்களைப் புறந்தள்ளித் தீர்வுகளை மேலிருந்தவாறு திணித்து ஒடுக்குதலுக்குள்ளாக்கியதன் விளைவாகவே தேசியமும், தேசிய இயக்கங்களும் தோன்றின. புதிய தேசங்களும் பிறந்தன.

(துணை நூல்; : எஸ்.வி.ஆர் எழுதிய “தேசிய இனப்பிரச்சினை” என்ற கட்டுரை)

பிரிவினைக் கோரிக்கைகள்

-நடராஜா முரளிதரன்-

“சமஸ்டி” வடிவங்களை ஆய்வு செய்வதனூடாக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வுகளை முன் வைப்பதன் மூலம் இனப்பதற்றம் நிலவும் சமூகச் சூழ்நிலைகளில் ஓரளவு தணிவுகளை ஏற்படுத்தும் வரலாற்றுக் கள நிலவரங்களை சமாதான ஏற்பாட்டாளர்கள் என்று கூறிக் கொள்வோர் ஊக்குவிக்கும் முறைமையை உலகெங்கணும் நாம் பரவலாகக் காணுகின்றோம்.

இதே வகையான அடிப்படையைக் கருத்திற் கொண்டு 2002களில் தமிழர் தரப்பும், சிறிலங்கா அரசும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்த வேளைகளில் “ஒஸ்லோ பிரகடனம்” என்ற பதம் ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகப் பிரபல்யம் அடைந்திருந்தது. இந்த “ஒஸ்லோ பிரகடனம்” மூலம் பிரிவினைக் கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிட்டுவிட்டதாகவே உலகப் பத்திரிகைகள் எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தன.

உள்ளக “சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பிரதேச சுயாட்சிக்கு உரித்துடையவர்கள் என்ற முறைமையில் அது தொடர்பான தீர்வுத்திட்டங்களைப் பரிசீலிக்கத் தயார்” என்ற தமிழர் தரப்பின் அறிக்கைகள் திம்புப் பேச்சுவார்தைக் காலம் தொட்டு அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு வந்துள்ளன.

ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின் போது கனடாவைச் சேர்ந்த அரசியலமைப்பு அறிஞர் குழாம் ஒன்று “சமஸ்டி ஆட்சியமைப்பின்” அரசியலமைப்பு அடுக்கு முறைமைகள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் ஆலோசனைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இதில் முன்னாள் ஒன்ராறியோ மாகாண முதல்வர் “பொப் ரே”யும் அடங்கியிருந்தார்.

கனடா நாட்டின் அரசிலமைப்பு நிபுணர்கள் இரு தரப்பினரோடும் கருத்துக் கூறல்களையும், உரையாடல்களையும் நிகழ்த்தியதன் விளைவாகவே “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் ஐக்கியமான இலங்கைக்குள் சமஸ்டி ஆட்சி முறை தழுவிய தீர்வு” ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.

தேசங்கள் அமைக்கப்பட்டுவிட்டாலும் தேசத்துள் வாழும் மக்களுக்கான பிரச்சினைகள் வேறு ரூபங்களில் தொடரவே செய்யும் எனக் கருத்துக் கூறும் அறிஞர்கள் வலிமையுடைத்த தேசியம் சந்தையை விரிவு படுத்தவும், புவியியல் பரப்பு எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், உள்ளக மக்களின் பிரச்சினைகளைத் திசைதிருப்பி விடவும் வன்முறை சார்ந்த வழித்தடத்திலேயே பயணிக்கின்றது என்பதில் நம்பிக்கை கொள்ளுகிறார்கள்.

பெரியார் ஓரிடத்தில் கூறுகிறார். “இந்தியா ஒரு தேசமா? அதற்கு மொழி ஏது? மதம் ஏது? இந்து மதத்தால் இந்தியா தேசம் ஆயிற்று என்றால்….இஸ்லாமியருக்கும், கிறீஸ்தவருக்கும், பௌத்தர்களுக்கும், பார்சிக்களுக்கும் இந்தியா தேசமாகுமா?....மொழியைக் கொண்டு தேசம் பிரிப்பது என்றால் மாகாணம் ஒன்றுக்கு நான்கு, ஐந்து தேசங்கள் ஆகிவிடாதா?”

இங்குதான் உருவாக்கப்பட்ட, மற்றும் உருவாகி வரும் தேசங்களுக்குள்ளேயும் மேலும் புதிய வகைப் பிரச்சினைகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. கனடாவில் பிரஞ்சு மொழி பேசும் மக்களின் கியூபெக் பிரிவினைப் போராட்டத்தின் போது இப் பிரச்சினை ஒட்டாவோவின் அதி உயர் நீதிமன்றத்தால் கையாளப்பட்ட போது அதன் தீர்ப்பின்; சாரமானது இவ்வாறு கூறுகின்றது.

“அரசியல் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அல்லது நிறுவிக் கொள்ளும் உரிமையான வெளியக சுயநிர்ணய உரிமை, மேலாட்சிக்கு உட்பட்டு வாழும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் உரித்தானதாகும். ஒரு மக்கள் சமூகம் இன்னொரு சமூகத்தின் மேலாதிக்கத்தினுள் சிக்குண்டு தவிக்கும் போது அடக்குதலுக்கு உள்ளான சமூகமானது வெளியக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டலாம்.” “மேலும் ஒரு மக்கள் சமூகம் தனது உள்ளக சுயநிர்ணய உரிமையை அர்த்தபூர்வமான முறையில் அடைவதற்குத் தடை ஏற்படுமானால் இறுதி வழிமுறையாகப் பிரிந்து செல்லும் உரிமையைப் பிரகடனப்படுத்த அந்த மக்களுக்கு உரிமையுண்டு.”

இதே வகையிலான அம்சங்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை தொடர்பான பிரகடனங்களையும் நாம் கண்டு கொள்ள முடியும். இங்கு வெளியக சுயநிர்ணய உரிமையென்பது ஒரு மக்கள் சமூகமானது தனது அரசியல் தலைவிதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ளுமுகமாகப் பிரிந்து சென்று தனது அரசை நிறுவிக் கொள்ளுதல் என்பதாகும்.

அவ்வாறு ஓர் அரசைத் தமிழ்த் தேசியம் நிறுவ முற்படுகையில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்துகின்ற வடக்கு-கிழக்கு இணைந்த நிலப்பிரதேசத்தில் கிழக்கின் புவியியல் அமைவிடம் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் பரவலாகவும், செறிவாகவும் வாழும் சூழ்நிலை காணப்படுகின்றது.

எனவே இங்கு தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் அடிப்படை சார்ந்து கட்டமைக்கப்படும்(எதிர்காலத்தில் கட்டமைக்கப்படுமாயின்) தமிழ் அரச நிறுவனமானது எவ்வாறு முஸ்லீம், சிங்கள மக்களின் அரசியல் இருப்புக்களையும், எதிர்பார்ப்புக்களையும் எத்தகைய சவால்களுக்கூடாக கையாள முனையும் என்பதிலேயே தமிழ்த் தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் தீர்மானகரமாக வெளிப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்கு உள்ளக, வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளை தமிழ்த் தேசத்துக்குள் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு வழங்குவதில் எவ்வாறான அணுகுமுறையைப் பிரயோகித்தல் என்ற மாபெரும் கேள்வி எம் முன்னே கிளர்ந்தெழுகின்றது.

இவ்வாறான சிறுபான்மை இனங்களின் நியாமான அபிலாசைகளை அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் கையாள மறுத்து நிற்கும் போக்கே ஏற்கனவே கட்டப்பட்ட தேசங்களிலும், தேசியங்களிலும் பல்வேறு வகையான குழப்பகரமான நிலைகளுக்குத் தோற்றுவாய்களாய் அமைந்தன. தேசங்களின் கட்டமைவானது உலகப் போர்களாகவும், இனங்களுக்கிடையேயான வன்முறைக் களங்களாவும் மாறுண்ட போது மனிதநேயம், மானுடம் போன்றவை தூக்கி வீசியெறியப்பட்டன.

தேசங்கள் உடைகின்றன. எல்லைகள் இல்லாத, கடவுச் சீட்டுக்களின் தேவையேற்படாத ஒரு உலகம் குறித்த கனவுகள் பிறக்கின்றன.

எனவேதான் அமைய முற்படும் “தமிழ்த் தேசமும்” தமிழ் வெறியும், இன்னும் பல “வெறிகளும்” கொண்ட தேசமாக மாறி விடக் கூடாது.

Sunday, May 27, 2007

தேசியம் என்பது கதையாடலா?

நடராஐh முரளிதரன்

தேசம், தேசியம் என்ற சொல்லாடல்கள் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உலகச் சூழலே இன்று மேலோங்கியுள்ளது. இன்றைய உலக நெருக்கடிகள் பலவும் இந்தச் சொற்பதங்களின் உச்சக்கட்டத் தாக்கங்களை உள்ளடக்கியதாகவே கிளர்ந்த வண்ணம் உள்ளன.

நாடுகளுக்கு நாடுகள், தேசங்களுக்குத் தேசங்கள் இச் சொற்றொடர் குறித்த வியாக்கியானங்களோ அல்லது வரைவிலக்கணங்களோ வேறுபட்டுக் காணப்படுகின்றன. மொழித் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு தேசங்களும், தேசியங்களும் நவீன வரலாற்றில் பிறப்பெடுத்தமை குறித்த வரலாறுகளைப் பதினெட்டாம்; நுற்றாண்டு கால ஐரோப்பிய அரசியல், அறிவியல் புரட்சிகளின் வெளிப்பாடுகளாகவே ஆய்வாளர்கள் நோக்குகின்றனர். தேசியத்தின் எழுச்சியும், மதச் சிந்தனைகளின் வீழ்ச்சியும் சமகால அளவில் நிகழ்ந்ததன் விளைவாகப் பதினெட்டாம் நூற்றாண்டு கால ஐரோப்பாவில் நவீன தேசங்கள் தொடர்பான கட்டுமானங்கள் வலுப்பெறத் தொடங்கியிருந்தமையை உணர முடியும்.

இத்தகைய நவீன தேசங்களின் எழுச்சியில் காலனியாதிக்கம், மத நிறுவனங்களின் ஏகபோகம், முடியாட்சி போன்ற அதிகாரபீடங்களுக்கெதிரான கிளர்வுகளின், எழுச்சிகளின் உணர்வுகள் ஊட்டம் பெற்றிருந்தன. ஆயினும் தேசியம் என்பதானது மரபு, இனம், மதம், மொழி போன்ற ஒருமைப்பாடுகளிலிருந்து எழும் அல்லது கட்டப்படும் பொதுவான உளவியல் சார்ந்த உணர்வுத்தளத்தையே பெரிதும் சார்ந்து நிற்கிறது.

அவரவர் முகிழ்த்து வந்த அரசியல் அடியினையொற்றித் தேசிய இனம் தொடர்பான கருத்துருவாக்கங்கள் எம்மால் பேசப்பட்டு வந்துள்ளன. இந்த வகையில் தேசிய இனம் தொடர்பாக நான் வரித்துக் கொண்டிருந்த கருத்தமைவானது மொழி, பண்பாடு, தொடர்ச்சியாக வாழ்ந்த நிலப்பிரதேசம், தங்களுக்கேயுரித்தான பொருளாதார வாழ்வு போன்ற வரைமுறைகளைக் கொண்டிருக்கும் மக்கள் குழுமங்களைத் தேசிய இனங்களாக வரையறுத்துக் கொள்ளலாம் என்பதாகவே அமைந்தது. இங்கு மதம் இணைந்து கொள்ளவில்லை. ஏனெனில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் பரிமாணங்களுக்கு வலுவூட்டுவதே நான் சார்ந்திருந்த அரசியல் போக்கின் நலன்களுக்கு அமைவாக இருந்தன.

“தேசியவாதம் உச்சத்திலிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியத் தேசியங்களால் அவற்றிற்கு முட்டுக்கொடுப்பதற்காக உருவான சமூகவிஞ்ஞானக் கற்கைநெறிகள் இன்று முற்றாக மறக்கப்பட வேண்டியவை, மாற்றியமைக்கப்பட வேண்டியவை என்பது உலகப் பொதுக் கல்விக் கருத்து” எனத் தனது உரையொன்றில் பேராசிரியர் பொ.இரகுபதி குறிப்பிட்டிருந்தார்.

மொழி, மதம், வரலாறு, பொருளாதாரம், புவியியல் அமைவிடம் போன்ற பொதுக் காரணிகளை அடிப்படையில் வைத்துக் கட்டப்பட்ட தேசங்களுக்குள்ளேயும் புதியவகைச் சிக்கல்கள் எழுந்த வண்ணமே இருந்தன.

வர்க்கப்பிரச்சினை தீர்க்கப்படுழ் சமூகங்களில் இன, மத, மொழி முரண்பாடுகளுக்கான வாய்ப்புக்கள் அழிந்தொழிந்து போய்விடும் என்பதான சூத்திரத்தையே இடதுசாரிகளில் பெரும்பாலோனோர் ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள்.

மார்க்சீய-லெலினியக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சோசலிச நாடுகளிலேயும் கூட சிறுபான்மைத் தேசிய இனங்கள் அடக்குதலுக்கு உள்ளான வரலாறுகள் கண் முன்னே விரிந்து கிடக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலைகளுக்கு இடையே இங்கு நான் விசாரிப்புக்கு உட்படுத்த முனையும் விடயமானது ஈழத்திலே வாழுகின்ற தமிழ்பேசும் மக்களைத் தேசியம் என்ற வேலிக்குள் அடைப்பது தொடர்பான விடயத்தை ஒட்டியதெனலாம்.

ஈழத்தமிழ்த் தேசியமாக உச்ச வளர்ச்சியுற்ற யாழ்ப்பாணியம் கீழ்த்தட்டு மக்கள் குறித்துக் கவலை கொள்ளவில்லை - கிழக்கு மக்கள் குறித்தோ, முஸ்லீம் மக்கள் குறித்தோ அக்கறைப்படவில்லை - தலித்துக்கள் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற வகையில் இவ்வாறான தொடர் குற்றச்சாட்டுக்கள் மாற்றுக்கருத்தாளர்களால் ஈழத்தமிழ்த் தேசியத்தை நோக்கி முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

வளர்ச்சியுறும் எத்தேசியத்துக்குள்ளும் அதிகாரசக்திகள் தங்கள் நலன்களைப் பேணுமுகமாக மரபுகளின் காத்தலை, பழமையின் தொடர்ச்சியை நிறுவுதலுக்கான அவாவினைக் கொண்டிருப்பர்.

மறுபுறத்தில் தேசிய இனவிடுதலையென்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலையல்ல. விடுதலை குறித்த பயணத்தில் ஒரு படிக்கட்டமாக அதனை ஊடறுத்தலே ஏற்புடையதாக அமையும்.

“உலகம் கிராமமாகச் சுருங்கிவிட்டது”, “தேசம் என்ற கருத்தமைவு உடைந்து நெடு நாளாயிற்று” என்பது போன்ற கருத்துருவாக்கங்கள் வீரியம் பெற்றுவரும் இன்றைய உலகச் சூழுலிலும் கூடத் தேசங்களுக்குள்ளும், தேசியங்களுக்குள்ளும் காலகாலமாக நசிக்கப்பட்ட மக்கள் குழுமங்கள் தங்கள் நியாயத்தீர்ப்புக்காக குரலெழுப்புவதைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாதுதான்.

அதேவேளை இந்த முரண்பாடுகளையெல்லாம் வெளித்தாண்டிப் பலம் பொருந்திய இன்னுமோர் சக்தி இந்த முரண்தழைகளுக்குள் சிக்குண்ட சமூகங்களை அடக்குதலுக்கு உட்படுத்த முனையுமாக இருந்தால் அவ்வாறான சமூகங்கள் எடுத்தாள வேண்டிய நிலைப்பாடுதான் என்ன? இவ்வாறான எனது கூறலைப் “பச்சை யாழ்ப்பாணியம்” என்று பிரகடனப்படுத்த உங்களில் பலர் துடித்தெழலாம்.

எவ்வாறு ஒடுக்குதலுக்கு உட்பட்டதால் விழைந்த தேசியவாதம் குறுந்தேசியவாதமாக மாறிவிடக்கூடாதோ அதே சமாந்தரத்தில் வரலாற்றுச் சக்கரங்களைப் பின்னோக்கி இழுத்து நிறுத்துகின்ற குளறுபடிகளையும் அதிகாரத்தை நோக்கி உண்மை பேசுவதாகக் கூறிக்கொள்வோர் நிகழ்த்தி விடக் கூடாது.

கடந்த 25 வருடங்களாக மக்களே மகத்தான சக்திகள், அவர்களே இறுதியில் வரலாற்றைத் தீர்மானிப்பார்கள் என்று மொழிந்து வந்தபோது ஏற்படாத சந்தேகம் இன்று வரலாறு திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுவதாகவோ அன்று யாழ் குடாநாட்டு மத்தியதர வர்க்கத்தின் அபிலாசைகளுக்காகத் திணிக்கப்பட்ட “பெருங்கதையாடலாகவோ” தமிழ்த் தேசியம் சித்தரிக்கப்படுவதும் பல முனைகளில் வiலாற்றுத்திரிபுகளும், மிகைப்படுத்தல்களுமாய் நிறைந்து வழிகின்றது.

சமூக விடுதலைக்கான போர்த்தொடுப்பில் தேசியக் கருத்தமைவின் பெறுமானங்களைக் கேள்விக்குட்படுத்துதல் அதன் குறைபாடுகள் குறித்த பரிமாணங்களை அளவைப்படுத்துதல் என்பவை குறித்து எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது.

மாறாக அவற்றை முற்றிலும் நிராகரிப்பது குறித்தோ அவையுள்ளடக்கி வைத்திருக்கும் முற்போக்குக் குணாம்சங்களை மறுதலிப்பது குறித்தோ பெரிதும் அச்சப்படுகின்றேன்.

Friday, December 08, 2006

நான் போக முடியாத “மாவீரர் நாள்”

-நடராஜா முரளிதரன்-

1998 இன் நடுக்கூறில் நான் கனடாவிற்குள் நுழைந்த பின் அரசியல் தஞ்சம் கேட்டு 40 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தேன். அதன் பின் ஏறத்தாள இரண்டரை மாதங்கள் வரை கனடியச் சிறைகளுள் அடைக்கப்பட்ட பின்னர் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் கனடிய டாலர்கள் பிணை(ஒரு இலட்சம் வீடு, ஐம்பதினாயிரம் பணம்) அரசியல் செயல்பாடுகள் தொடர்பான 14 நிபந்தனைகள் உட்பட இரு வாரங்களுக்கு ஒரு தடவை “இமிக்கிரேசன்” அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திடல் போன்ற கண்டிப்பான நீதிமன்ற உத்தரவுகளின் பேரிலேயே நான் விடுதலை செய்யப்பட்டிருந்தேன்.

அதன் பின் ஏழரை வருடங்களின் பின் இவ்வருட மத்தியில் எனது பெயருக்கு முதற் தடவையாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடிய வேலை செய்ய அனுமதிக்கும் பத்திரம் வழங்கப்பட்டது. ஆயினும் இது வரை இலவச மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான “ஹெல்த் கார்ட்” எனக்கு வழங்கப்படவில்லை.

எனது மகள் உயர் கல்வி பெறுவதற்காக பல்கலைக் கழகத்துள் உட் புகுந்த போது அவளால் எந்தக் கடனுதவியையும் “ஒன்ராரியோ” அரசிடமிருந்து பெற முடியாமல் போனது. மாறாக “வெளிநாட்டு மாணவர்” என்ற இலச்சினை பொறிக்கப்பட்டு இரண்டரை மடங்குக்கு மேலான (குடியுரிமை பெற்ற அல்லது நிரந்தர வதிவிட உரிமை பெற்ற மாணவர்களோடு ஒப்பிடுகையில்) கட்டணத்தைப் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்துமாறு நிர்பந்திக்கப்பட்டாள்.

இவ்வாறான கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகள் ஒரு புறமிருக்க அரசியல் செயல்பாடுகள் தொடர்பான நீதிமன்றத்தின் கண்டிப்பான 14 நிபந்தனைகளும் எத்தகைய மீறல்களுக்கும் உட்படுத்தப்படாமல் என்னால் பேணப்பட வேண்டியவை. அல்லாவிட்டால் எனது பிணைகள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டு நானும் சிறையுள் மீண்டும் தள்ளப்படலாம்.

அத்தகைய நிபந்தனைகளுள் “விடுதலை புலிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ஆதரிக்கும் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் போன்றவற்றில் நான் பார்வையாளனாகவோ அல்லது பங்காளனாகவோ கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை என்பது முக்கியமான ஒன்று.

அரசியல் வேலைத் திட்டங்களை ஆழ் மனதில் புதைத்துக் கொண்டு கனடாவுக்கு நான் வந்ததாக யாரும் என்னை சந்தேகிக்கத் தேவையில்லை. ஆயினும் “மாவீரர் நாள்” வந்து போகும் வேளைகளில் அவ்வாறான நிகழ்வொன்றுக்கு நான் போக முடியாதது குறித்து எனது மனம் துயருறுவது வழக்கம்.

இத்தகைய எனது துயரத்துக்கு “அரசியல் முலாம்” பூசி விட முடியாது. நான் சார்ந்த அல்லது சார முயலுகின்ற அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டுச் சாதாரண தனி மனிதனாவே அந்த வேதனையின் வெளிப்பாடுகளைச் சுமந்து செல்ல நேருகிறது. ஈழப் போராட்ட களம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல்களில் இருந்து கொப்பளித்துப் பாய்ந்த குருதி வெள்ளத்தினால் சேறாகிய “குருN~த்திரமாகவே” கடந்த இரு தசாப்தங்களாகக் காட்சியளிக்கிறது.

அந்த மண்ணில் வாழ்ந்த, வாழும், வீழ்ந்த, வெளியேறிய மண்ணின் மைந்தர்கள் யாவருக்கும் அந்த மண்ணோடு பிணைந்த சொல்ல முடிந்த, சொல்லில் வடிக்க இயலாச் சரிதங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றாக என்னை மிகவும் பாதித்து நிற்கின்ற ஈழப் போர்க்களத்தில் வீழ்ந்து மடிந்த எனது நண்பன் “லிங்கம்” பற்றிய எண்ண அலைகள் சிலவற்றையே இங்கு மீட்க முயலுகின்றேன்.

1970 களில் காங்கேசன்துறை, தையிட்டியிலுள்ள “பொன்னுச்சாமி” வீட்டிற்கு மலையகத்திலிருந்து பத்து வயசு வேலைக்காரச் சிறுவனாக யாழ்ப்பாண “மேலாதிக்கப்” பேச்சு வழக்கில் “வடக்கத்தைப் பெடியனாக” லிங்கம் வந்திருந்தான்.

பொன்னுச்சாமி குடும்பத்தினர் கோவில், திருமண விழாக்களுக்கு சப்பறம் கட்டுதல், மாலை கட்டுதல், சிறிய கோவில்கள் சிலவற்றுக்குப் பூசை செய்தல் போன்ற பணிகளைப் புரிந்து கொண்டு “பாஸ்கரன் கோ~;டி” என்ற பெயரில் சிறிய இசைக் குழுவொன்றையும் இயக்கிக் கொண்டிருந்தார்கள்.

வந்த ஆரம்பத்தில் “லிங்கம்” அந்தக் குடும்பத்திற்குத் தேவையான எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். அந்த வேளைகளில் மாலை கட்டுவதற்குத் தேவையான முல்லை மலர்களைக் கொய்வதற்காக அடிக்கடி அவன் எனது வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அந்த வேளைகளில்தான் அவனுக்கும், எனக்குமான நட்பு மலர ஆரம்பித்தது. பின்பு அவை வாசிகசாலைச் சந்திப்பு, மாலை நேரங்களில் விளையாட்டு மைதானங்களில் சந்திப்பு எனவும் அவ் வேளைகளில் எங்களுக்குத் தெரிந்த அரசியல் குறித்துப் பேசிக் கொள்ளுதல் எனவும் நீண்டு விரிந்து சென்றது.

வழமையான யாழ்ப்பாண நடைமுறைகளுக்கு மாறாகப் “பொன்னுச்சாமி” குடும்பத்தினர் “லிங்கத்தை” தங்களில் ஒருவனாகக் கருதி அவனது பெயரை “பாஸ்கரன்” எனப் பெயர் மாற்றப் பதிவும் செய்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன் மிகச் சிறிய வயதுகளில் வசதி படைத்த பரங்கிய, சிங்களக் குடும்பங்களின் வீடுகளில் வீட்டு வேலைகள் புரிந்தமையினாலும், மலயகப் பின்னணியில் பிறந்து வளர்ந்தமையினாலும் “லிங்கம்” அந்தச் சின்ன வயதுகளிலேயே சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் மிகச் சரளமாகப் பேசக் கூடியவனாக இருந்தமை எங்களில் பலரைப் பிரமிக்க வைத்தது.

எங்கள் இருவரையும் பிணைத்துக் கொண்ட அந்தப் பால்ய சிநேகிதம் காரணமாக நாளடைவில் நான் சார்ந்த அரசியல் கருத்துக்கள் பால் அவன் ஈர்க்கப்படலானான் என்று கூறுவதை விடவும் என்னால் அதை நோக்கி இழுக்கப்பட்டான் என்று கூறுவது மிகப் பொருத்தமான உண்மையாக அமையுமோ எனச் சில வேளைகளில் நான் எனக்குள் நினைத்துக் கொள்வது வழக்கம்.

அவனுக்குத் தாய், தந்தையர், சகோதரர்கள், சொந்த உறவுகள் என யாரும் இருந்ததில்லை. எங்களோடு சேர்ந்து நாடகம் நடிப்பது, இசைக்குழுவில் “தபேலா” வாசிப்பது, ஓய்வான மாலைப் பொழுதுகளில் “கிரிக்கெட்” ஆடுவது போன்றவைகள் அவனைப் பரவசப்படுத்தின. சில வேளைகளில் நானும், லிங்கமும், எங்களது இன்னுமொரு நெருங்கிய நண்பனுமான நிமலேந்திரனும் சேர்ந்து கொண்டு காங்கேசன்துறைக் கடற்கரையில் “பனங்கள்” அருந்திப் “பார்ட்டி” கொண்டாடினோம். எனது மனைவியைக் குரும்பசிட்டியிலிருந்து நான் தூக்கிக் கொண்டோடி வருவதற்கு என்னோடு கூடவே அவனும் வந்திருந்தான்.

ஆனாலும் 80களில் வரலாறு இறுக்கிய “இன முரண்” சிக்கல்கள் வரலாற்றில் என்றுமேயில்லாத வகையில் இலங்கைத் தீவைப் பிரளயத்தை நோக்கித் தங்குதடையின்றிப் பயணிக்குமாறு உந்தித் தள்ளியது.

நாங்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. நான் ஏற்கனவே இரகசியமாகப் பணிபுரிந்து கொண்டிருந்த அமைப்பை நியாயப்படுத்துவதிலும், அதன் அமைப்பு வேலைகளைக் கட்டுவதிலும் தீவிரமாக ஈடுப்டிருந்த வேளைகளில் இயல்பாகவே “உணர்ச்சிவசப்படும்” இயல்பு படைத்த “லிங்கம்” எனக்கு உதவ முன் வந்தான்.

நாள் தோறும் இரவுகளைப் பகலாக்கி எம்மால் முடிந்தளவு அரசியல் வேலைத்திட்டங்களில் எங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தோம். அவ்வேளைகளில்தான் ஓர் நாள் இரவு “கர்ப்பிணியாக” இருந்த எனது மiவியைப் பார்க்கச் சென்ற சமயம் பார்த்து பலாலி இராணுவத்தினரால் நான் கைது செய்யப்பட்டேன்.

எனது கைது ஏற்படுத்திய காயம், அதனால் எழக்கூடிய சிக்கல்கள் அனைத்துமே “லிங்கத்தை” போர்க் கோலம் பூணுமுகமாக தமிழ்நாட்டுப் பயிற்ச்சி முகாமை நோக்கிப் படகேற வைத்தது. பயிற்ச்சி முடிந்து ஆயுதம் தாங்கிய “போராளியாக” மீண்ட “லிங்கம்” “யஸ்ரின்” என்ற புதிய பெயர் கொண்டு அழைக்கப்பட்டான்.

நான் சிறைக்குள் கம்பிகளை எண்ணிக்கொண்டிருந்த வேளைகளில் களங்கள் பல புகுந்த “யஸ்ரின்” பல விழுப்புண்களைத் தனதாக்கிக் கொண்டிருந்தான்.

அந்த “யஸ்ரின்” ஆகிய எனது “லிங்கம்” காலச் சூறாவளி என்னைச் “சுவிசில்” கரை சேர்த்த 90 களில் மணலாற்றில் இடம்பெற்ற “போர் விமானக் குண்டுவீச்சில்” பொடித் துகள்களாக்கப்பட்டான். சுக்கு நூறாக்கப்பட்ட அவனது தசைப் பிண்டங்களையோ, நொருங்கி முறிந்த அவனது எலும்புத் துண்டங்களையோ யாராலும் சேகரிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

என் மண் குறித்த “பிரக்ஞையை” தூண்டிவிட்ட “யாழ்ப்பாணத்தவன்” நான் தப்பிவிட, இழப்பதற்கு “உயிர்” தவிர ஏதுமற்ற அசல் பாட்டாளியான மலை நாட்டுத் தோட்டத் தொழிலாளி குடும்பத்தின் “லயனுகளுக்குள்” பிறந்து வளர்ந்த “லிங்கம்” தன்னை ஏன் ஆகுதியாக்கிக் கொண்டான்?

அவனது இறப்புக் குறித்து அழுவதற்கு இரத்த உறவுகள் எவருமே அற்ற இந்த உலகில் “லிங்கம்” அவன் மரியாதைக்கு உட்படுத்தப்படும் அன்றைய நாளிலாவது தனி மனிதனாக என்னால் சென்று சில கணங்கள் தொழப்படுதற்கான தடைகளை ஏன் என்னால் வெற்றி கொள்ள முடியாதுள்ளது?

Thursday, November 09, 2006

தேர்தலும், தமிழ் வேட்பாளர்களும்

-நடராஜா முரளிதரன்-

நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் நகரசபை, பிரதேச சபை, கல்விச் சபைத் தேர்தல்களில் வாக்களிப்பது தமிழர்களின் வரலாற்றுக் கடமையெனவும், கனடாவில் தமிழர்களுக்கு “அரசியல் தலைமைத்துவம்”, “பிரதிநிதித்துவம்” தேவையெனவும் கடந்த சில தினங்களாகப் பத்திரிகைப் பத்திகள் எழுதப்பட்டும் , பேட்டிகள் வழங்கப்பட்டும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பரப்புரைகள் ரொறொன்ரோ, மார்க்கம், மிசிசாகா எங்கணும் பரவலாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.

1977 இல் இடம்பெற்ற இலங்கைப் பொதுத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழீழத்துக்கான மக்கள் ஆணையைப் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்;பாகவும், இறுதித் தேர்தலாகவும் அத் தேர்தலைப் பிரகடனப் படுத்துவதாகக் கூறி ஒட்டுமொத்ததாகத் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அதற்கு ஆதரவாக வாக்களிப்பது வரலாற்றுக் கடமையென அழைப்பு விடுத்திருந்தார்கள். ஆனால் இன்று ஏறத்தாள மூன்று தசாப்தங்களைக் கடக்கின்ற சூழலிலும் சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் சாசனத்துக்குள் உட்பட்டுத் தமிழர் தரப்பின் அனைத்து வகையினரும் பங்கு கொண்ட தேர்தல் களங்களாகவே அண்மைய தேர்தல் களங்கள் யாவும் இலங்கைத் தீவில் அரங்கேறியிருந்தன.

எனவேதான் தேர்தல் காலத்து அரசியல்வாதிகளின் பிரச்சாரப் பரப்புரைகளின் போது வழங்கப்படும் வாக்குறுதிகள் குறித்த மக்களின் நம்பகத் தன்மை மேற்குலக நாடுகள் தொட்டு, மூன்றாம் உலக நாடுகள் ஈறாக எவ்வாறு அமையப் பெறுகின்றன என்பது மக்களைப் பொறுத்த வரையில் மிகச் சிக்கலான, சோகமான விடயமாக அமைந்து வருகின்றன.
கனடாவில் ரொறொன்ரோ (மார்க்கம், மிசிசாகா உட்பட) போன்ற பல்லினச் சமூகங்கள் நிறைந்து வாழும் பெரு நகரம் ஒன்றில் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் கனடியத் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கலாம் என்று மொழியப்படும் வாதங்களோ , அல்லது இங்கு வாழுகின்ற தமிழ் மக்களுடைய உணர்வுகளை, அபிலாசைகளைப் பிரதிபலிக்கலாம் என்பவை போன்ற கருத்துக்களோ மிகுந்த விவாதத்திற்கு உரியன என்றே நான் கருதுகின்றேன்.
சம~;டி ஆட்சி முறை அமுலில் இருக்கும் கனடா போன்ற நாட்டில் அதிகாரங்கள் தேசிய அரசு, மாகாண அரசு, உள்ளுராட்சிச் சபைகள் என்பவற்றுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நகர சபைகள் போக்குவரத்து, சூழல், பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், பாதுகாப்பு, வரி போன்ற பல விடயங்களைக் கையாளுகின்றது.

எனவே பல்லின மக்கள் செறிந்து வாழும் பெரு நகர மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யப் புறப்பட்டுத் “தேர்தல் களத்தில்” குதித்தவர்கள் தாம் சார்ந்த குறித்த ஓர் “இன” மக்களையோ, அவர்கள் சார்ந்த நலன்களையோ அடையாளப்படுத்த முனைவதாகக் கூறுவது தமிழ் “வாக்கு வங்கியினைக்” கவர்ந்திழுப்பதற்கான உத்தியாகவே கருத முடியும்.

மறு புறத்தே போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் இவ்வாறான தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் கனடா வாழ் தமிழ்ச் சமூகத்திற்கு கனடாவின் “தேசிய நீரோடையில்” இணைவதற்கான நம்பிக்கை ஊட்டத்தை வழங்க முடியும் என்பது ஏற்புடையதாக அமையும். பல்வேறு துறைகளில் கால் பதித்திருக்கும் தமிழர்களது வளர்ச்சி மேலும் வலுவடைவதற்கான படிக்கட்டுக்களில் ஒன்றாக அரசியலில் உட்புகுதலும் ஒன்று என்ற கணிப்பு அண்மைக் காலங்களில் தமிழ் பேசும் சிலரால் கூறப்பட்டு வருகிறது.

கனடா வாழ் தமிழ் சமூகம் என்பது கனடிய சிவில் சமுதாயத்தின் கூறுகளில் ஒன்று. உலக அரங்கில் கனடா ஜி-7 நாடுகளில் ஒன்று. அதாவது உற்பத்தித் தொழில் துறையில் அதி முன்னணியில் நிற்கும் உலக நாடுகளில் ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை பட்டியலிடும் உலகின் மிகச் சிறந்த நாடுகள் வரிசையில் பல தடவைகள் முதலிடத்தைத் தட்டிக் கொண்ட நாடு கனடா. அந்த வகையில் இன்றைய உலகு தழுவிய “முதலாளித்துவச் சமூக” முறைமைக்குள் பல்வேறு வகை “அனுகூலங்களைப்” பெற்றுத் திளைக்கும் நாடுகளில் கனடாவும், அங்கு வாழும் தமிழ்ச் சமூகமும் அமைகிறது.

எனவே மூன்றாம் உலக நாடுகளில் வாழும் 95 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வறிய மக்களோடு ஒப்பிடுகின்ற போது எமது கனடா வாழ் தமிழ் சமூகம் வலுப்படைத்து விளங்குகிறது என்றே நான் எண்ணுவேன். ஆகவே அத்தகைய “வளம்” படைத்த சமூகத்தை மேலும் வலுப் படைத்தாக மாற்றி “வீறு” கொண்டெழுவதற்கான பயணமாக இங்கு நிகழும் உள்ளுராட்சித் தேர்தல் அரங்குகள் அமையப் போவதில்லை.

அரசியல் பிரவேசத்துக்கான ஆரம்ப கட்டமாக நகரசபை அரசியல் ஊடாக தமிழர்கள் அரசியல் நிகழ்த்தத் தயார் நிலையில் உள்ளதாக நாங்கள் “புல்லரித்துப்” போவதாலோ, “புளகாங்கிதம்” அடைவதாலோ தினந்தோறும் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் எம் ஈழத்துத் தமிழ் சகோதரர்களுக்கு நல்லது எதுவும் நிகழப் போவதில்லை.

தனி மனிதர்களைப் பலப்படுத்துவதற்கான “வேட்டைக் களங்களில்”;, “அரசியல் சூதாட்டத்தில்” தேர்தல்கள் எவ்வாறு எமது சக தமிழ் வேட்பாளர்களால் அல்லது அவர்கள் சார்ந்தவர்களால் கையாளப்பட்டது என்பதை கடந்த உள்ளுராட்சித் தேர்தல்களின் போது தமிழ் வாக்காளர்கள் பட்டு உணர்ந்து கொண்டதையும் இச் சமயத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

மறு புறத்தில் வெற்றி பெற்ற பின் தமிழ் வேட்பாளர்கள் கர்வம் கொண்டும், மாலைக்கு அலையும் “பிரமுகர்களாக” மாறியும், முழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டும் “மூன்றாம் உலக” அரசியலை இங்கு இழுத்து வரும் அவலத்தையும் நிகழ்த்தி விடக் கூடாது.

ஆனால் இவ்வாறான குழப்பகரமான எனது “கருதுகோள்களுக்கு” மத்தியிலும் மார்க்கம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் பேராசிரியர் இலகுப்பிள்ளையும், மார்க்கம் (7,8) வட்டாரத்துக்கான கல்விச் சபை வேட்பாளர் நீதன் சண்முகராஜாவும் தங்களது கடந்த காலச் சேவை வரலாற்றாலும், கல்வித் தகமைகளாலும் ஒப்பு நோக்கில் மற்றைய தமிழ் வேட்பாளர்களை விடவும் வேறுபடுத்தி நோக்கு நிலைப்படுத்தப் பட வேண்டியவர்களாக உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் மறைத்து விட முடியாது.

Monday, October 30, 2006

வடக்குக் கிழக்கு மக்களின்
இணைப்பும் பிரிப்பும்

-நடராஜா முரளிதரன்-

சில தினங்களுக்கு முன் சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் வட-கிழக்கு மாகாணங்களின் இணைப்பை சட்ட விரோதமானது எனக் கூறித் தீர்ப்பளித்தமை இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய செய்தியாகும்.
1987ஆம் ஆண்டு யூலையில் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைய 1988 இல் வட, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களையும் இணைப்பதற்கு N;ஜ.ஆர் அவசரகாலச் சட்ட விதிகளையே பயன்யடுத்தியிருந்தார்.
வரலாற்று ரீதியாகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த பாரம்பரிய நிலப்பிரதேசம் என்ற அடிப்படையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கூடாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதித் தீர்மானம் ஏற்படுத்தப்படும் வரைக்கும் தற்காலிக இணைப்பு அமுலில் இருக்கும் என்பதாகவே இந்திய-இலங்கை ஒப்பந்த ஏற்பாட்டாளர்களால் அன்றைய காலகட்டத்தில் இவ் இணைப்புத் தொடர்பாகக் கூறப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்பட்ட காலம் முதல் தமிழ் பேசும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாகவோ அல்லது அவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பவைகளில் ஒன்றாகவோ “வடக்கு- கிழக்கு” இணைந்த “தாயக நிலம்” விளங்கி வந்ததை நாம் அறிவோம்.
1957ஆம் ஆண்டு யூலையில் இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும், தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற பண்டா – செல்வா உடன்படிக்கையின் போதும் மாகாண எல்லைகளைத் தாண்டி இரண்டோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோ பிரதேச சபைகள் இணைவதற்கான விதி இடம் பெறுவதாக அவ் உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் நான் இங்கு இப் பத்தியை எழுதுவதற்கான நோக்கம் வேறு வகையிலானது எனலாம். ஏனெனில் சிறிலங்காவின் பெரும்பான்மைச் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும், அதனால் இயங்குதலுக்குள்ளாக்கப்படும் அரசு யந்திரங்களில் ஒன்றான நீதித்துறைக்கும் வட,கிழக்கு இணைப்பை சிதைப்பதற்கும், பலவீனப்படுத்தவதற்குமான நோக்கங்கள் இருப்பது குறித்து நாம் யாரும் கவலை கொண்டு விட முடியாது.

கிழக்கிலே பெருமளவில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரைக்கும் தங்களது மத கலாச்சார, பண்பாடடு விழுமியங்களைக் காப்பதில், தங்களது தனித்துவத்தை பேணுவதில் உள்ள கரிசனையை, அக்கறையை அது தொடர்பான அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்துவதில் உள்ள தர்க்க, நியாங்களை நாம் யாரும் புறந்தள்ளி விட முடியாது.
ஆனால் கிழக்கிலே வாழும், வாழ்ந்த முஸ்லீம் சாராத தமிழ் மக்கள் சிலரால் அண்மைக் காலமாகக் கிளப்பப்பட்டு வரும் கிழக்குத் தொடர்பான “மண் வாசைன” மற்றும் அதனுடன் கூடவேயான “யாழ்பாண மேலாதிக்க வாதம்” தொடர்பான குற்றச்சாட்டுக்களில் எத்தகைய குணாம்சங்கள் அவர்களிடம் இருந்து வெளித்தள்ளலுக்கு உள்ளாகி வருகின்றன என்பது குறித்த பிரக்ஞை அல்லது சிந்தனைத் தளம் இங்கு அவசியமானது என்று நான் கருதுவேன்.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் மக்கள் கூட்டம் தாம் வாழும் மண் சார்ந்து உரிமையையும், உணர்வையும் ஒருங்கிணைத்து வாழுதல் இயல்பானது. இத்தகைய குணாம்சமானது முற்போக்கான பல கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. அத்தகைய உணர்வுநிலை சார்ந்த உளவியல் போக்கை அது சார்ந்த கிழக்கு வாழ் தமிழ் மக்களின் “மண் வாசனையை” அங்கீகரிக்க வேண்டிய புத்தி ஜீவிதத்தை தலைமை தாங்கும் சக்திகள் கொண்டிருத்தல் அவசியமாகின்றது.

அதே வேளை கிழக்கை வாழிடமாகக் கொண்ட தமிழ் “அதிகாரத்துவ சக்திகள்” சில தங்கள் “தலைகளைப்” பலப்படுத்துவதற்கான வேட்டைக் களத்தில் பிரித்தாளும் கோசங்களுக்கு உருவேற்றி அப்பாவிகளைப் “பலியாடுகள்” ஆக்கும் அவலத்தையும் உண்டுபண்ணி நிற்கின்றன.
தேசிய விடுதலைக்கான பரிமாணத்தில் பல் வேறுபட்ட சக்திகள் ஒருங்கிணைந்த ஒரு வகைக் கலவை நிலை உண்டு. இதை உணர மறுத்துச் செல்வதானது பேரினவாதத்தின் வேலைகளை இலகுவாக்கி விடுகிறது.

“தலித்துக்களின்” விடிவுக்காகப் போராடிய பெரியார் எழுப்பிய தனித் திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள சகல மொழி பேசும் மக்களையும் இணைத்துக் கொள்ள முயன்றதையும் அது சாத்தியத்திற்குள்ளாகாத வரலாற்றையும் காணுகின்றோம்.
கிழக்கிலே வாழ்ந்து வரும் சராசரித் தமிழ் மக்களிடத்தில் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் சமூகத்தின் அங்கங்களாக செயற்படும் போக்குத்தான் ஒப்பீட்டளவில் வரலாற்று ரீதியாக மேலோங்கிக் காணப்படுகின்றது. அதை யாராவது மறுதலித்துச் செயற்பட முனைந்து நிற்பார்களேயானால் அவர்கள் இன்றைய வட,கிழக்கு இணைப்பைத் துண்டாடி மகிழ்ந்து நிற்கும் சக்திகளுக்கு துணை போவதாகவே கருத முடியும்.

“மேலாதிக்க வாதம்” எத்தகைய சூழ்நிலையிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் முற்போக்குச் சக்திகள் ஒரே சிந்தனை படைத்தவர்களாகவே இருப்பார்கள்.

ஆயினும் மிகப் பலம் பொருந்திய “பொது எதிரி” யை வீழ்த்துதற்கான தளத்தில் ஒன்றிணைவதும் பின் மீண்டும், மீண்டும் எமது உரிமைகளுக்கான போராட்டங்களை விளிம்பு நிலை மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, உழைக்கும் வர்க்கத்துக்காக என நீட்சிப் படுத்துதலுமே போர்க்குணாம்சம் பொருந்தியவர்களின் கடமையாகிறது.

Monday, October 23, 2006

நான் நேரில் காணாத ஏ.ஜே.கனகரட்ணா!
-
-நடராஜா முரளிதரன்-

சென்னையிலிருந்து இணைய மடல் மூலம் வ.கீதா “ஏ.ஜே.கனகரட்ணா கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்” என்ற சேதியை அறிவித்தபோதுதான் அந்தத் துயரச் செய்தி எனது காதைக் கவ்விக் கொண்டது. இது வரைக்கும் நான் அந்த “ஆபூர்வ மனிதரை” நேரில் சந்திக்கக் கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் என் கண் காணாத அந்த மனிதரின் இழப்பு ஏன் என்னுள் இவ்வளவு துடிப்பை, சலனத்தை நிகழ்த்தி நிற்கிறது என்பதற்கான விடையை நான் எழுதும் இந்த வரிகளுக்கூடாகப் பெற்றுவிட முடியுமா? ஏன்பதையும் என்னால் கூற முடியாதுள்ளது. ஏனெனில் அந்த எல்லைகளையும் தாண்டி அவர் மீதான எனது நேசிப்பு விரவிக் கிடக்கிறது என்பதே உண்மையாக அமையும்.

எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது 1972 இல் முதல் தடவையாக அவரது மொழிபெயர்ப்புக் கட்டுரையொன்றினை “மல்லிகை” சிற்றிதழில் வாசித்த ஞாபகம். 1987 களில் நான் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்த வேளைகளில் அவர் குறித்து தமி;ழ் நாட்டின் மிகப்பெரும் இடதுசாரி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.வி;.ராஜதுரை அவர்களும், பத்திரிகையாளரான ஏ.எஸ்.பன்னீர்செல்வமும் நிறையவே என்னிடம் பேசியிருந்தார்கள். அப்படியொரு சமயத்தில்தான் பன்னீர்செல்வம் அவரது “மார்க்சீயமும் இலக்கியமும் - சில நோக்குகள்” (அலை வெளியீடு) என்ற தொகுப்பு நூலை எனக்கு வாசிக்கத் தந்திருந்தார். அந்த நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை தொடர்வதாகவே நான் எண்ணுகின்றேன். இந்தக் குறிப்புக்களை எழுதுவதற்கு முன் அப் புத்தகத்தையும், “காலம்” சஞ்சிகை வெளியிட்ட ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழையும் செல்வத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருந்தேன். “காலம்” சஞ்சிகை வெளியிட்ட ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழில் எஸ்.வி;.ராஜதுரை அவர்கள் “கலாச்சாரக் கமிசார்களின் ரசனைகளுக்கும் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கும் அவர்களது கறாரான அரசியல் தேவைகளுக்கும் வளைந்து கொடுக்காமல், அதே வேளை, மார்க்சிய தரிசனத்திலிருந்து சிறிதும் வழுவாமல் தமிழ் மொழிக்களத்தில் பண்பாட்டுச் செயற்பாடுகளை ஏறத்தாள நான்கு தசாப்தங்களாக நிகழ