Thursday, August 31, 2006

ராஜீவ் காந்தி

-நடராஜா முரளிதரன்-

15 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவர் இந்திய நாட்டின் பிரதமராக இருக்கவில்லை. ஆனாலும் அவர் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று கூறப்படுகின்ற இந்திய தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆயினும் அன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் கொல்லப்பட்ட சில தினங்கள் கழித்து நடைபெற இருந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பாரதப் பிரதமராக முடிசூடிக் கொண்டிருந்திருப்பார். விமான விபத்தில் சஞ்சய் காந்தி கொல்லப்பட்ட போது வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர்தான் ராஜீவ் காந்தி. பின் இந்திரா காந்தியின் படுகொலையை அடுத்து அவரது வெற்றிடத்தை ராஜீவ் காந்தி நிரப்ப முற்பட்ட போது நவீன இந்தியாவின் நிர்மாணம் தொடர்பான சிந்தனைகள் இந்தியாவில் வலுப்பெறத் தொடங்கியிருந்த காலகட்டமாகும்.

நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் இந்திய மக்களுக்குத் தலைமை தாங்கிய காலகட்டங்களில் சோசலிச முகாம் சார்ந்த அணிசேரா நாடுகள் அணியில் இந்தியா வகித்த பாத்திரம் “பனிப்போர்” உலகு சார்ந்த வகையில் மிகவும் முக்கியமானது. ஆயினும் ராஜீவ் காந்தி வருகையின் பின்னர் கணணி மயப்படுத்தப்பட்ட நவீன இந்தியா, திறந்த பொருளாதாரம் என மேற்குலகு நோக்கிய சாய்வினை இந்தியா துரித கதியில் மேற் கொள்ள ஆரம்பித்து விட்டது எனலாம்.

எனவே 1991 மேயில் எதிர்பார்க்கப்பட்ட ராஜீவின் மீள்வருகை இந்தியாவினை “உலகமயமாதல்” நிகழ்ச்சி நிரலுக்குள் மேலும் உந்தித் தள்ளும் நிகழ்வினை உள்ளடக்கிய வாய்ப்பினைப் பெரும்பாலும் கொண்டிருந்தது. எனவே உலக முதலாளித்துவமும், இந்தியத் தரகு முதலாளி வர்க்கமும் பெரும் எதிர்பார்ப்புடன் உறுதியான அரசியல் தலைமையை எதிர்பார்த்துக் கிடந்த காலகட்டத்திலே நடைபெற்ற ராஜீவ் படுகொலையானது இந்திய உபகண்டத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டுப் 15 வருடங்களுக்குப் பின்னரும் அக் கொலையினால் எழுகின்ற அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்மானங்கள், கொள்கை வகுப்பாய்வுகள் ஆகியவற்றின் பாதிப்புக்குள்ளாhன சமூகமாக ஈழத் தமிழர் சமூகம் தொடர்ந்தும் ஆட்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது இந்திய ஆளும் வர்க்கங்களின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த அரசியல் என்ற வகையறாவுக்குள் மட்டுமே உள்ளடக்கப்பட்ட பிரச்சினைதான் ஈழத்தமிழர் பிரச்சினையா? என்பதை முடிவுறா விவாதமாக ஈழத்தமிழர்களாகிய நாம் இன்றும் சுமந்து கொண்டு திரிகிறோம்.

அண்மையில் தமிழர் தரப்பு நிலைப்பாடுகளை உலகளாவிய ரீதியில் பரப்புரை செய்வதில் முதன்மைப் பிரதிநிதியாகத் திகழும் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ராஜீவ் படுகொலை குறித்து இந்தியத் தொலைக்காட்சிக்குத் தெரிவித்திருந்த கருத்துக்கள் கடந்த வாரங்களில் இலங்கை-இந்திய அரசியல் அரங்கில் சூடு பிடித்து ஒரு கலக்குக் கலக்கியமையை இங்கு நோக்கலாம்.

ராஜீவ் காந்தி படுகொலையை “மாபெரும் துயரம்” என வர்ணித்த அவர் சோகம் ததும்பிய இத்தகைய வரலாற்றுப் பெருந் துன்பியல் நிகழ்வுக்காக நாங்கள் மிகுந்த துயர் அடைவதாகவும் அத் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருந்தார். மேலும் அவர் தொடர்கையில் “இந்திய அரசாங்கத்திடமும், இந்திய மக்களிடமும் நாம் வேண்டுவது யாதெனில் பெருந்தன்மையுடன் கடந்த காலத்தை ஒரு புறம் வைத்து விட்டு இலங்கை இனப்பிரச்சினையில் புதிய அணுகுமுறையுடன் கூடிய கையாளுதலை மேற்கொள்ளுங்கள் என்பதே” என்றும் சொல்லியிருந்தார்.

இந்திய இராணுவத்தின் சீக்கியப் புனிதப் “பொற் கோவில்” மீதான தாக்குதல் நடவடிக்கையைக் கண்டித்துப் பழிவாங்குதல் நடவடிக்கையாகவே சீக்கிய மெய்ப் பாதுகாவலர்களால் 1984 ஒக்ரோபரில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலையின் எதிரொலியாக இந்திய நாடெங்கணும் வாழ்ந்து வந்த பல்லாயிரக்கணக்கிலான சீக்கிய அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டும், அவர்களது சொத்துக்கள் எரித்து நாசமாக்கப்பட்டும் மனித சமூகமே வெட்கித் தலைகுனியும் வகையிலான வெறியாட்டம் சீக்கிய மக்களுக்கு எதிராக இந்திய மக்களால் (அதற்கான பொறுப்பை முழு இந்திய இந்திய சமூகத்திடமும் நாம் திணித்து விட முடியாது) நிகழ்த்தப்பட்டது.

அந்தச் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்து 20 வருடங்களுக்கும் மேலாகி விட்டன. ஆனால் இன்று சோனியா காந்தி வழங்கிய ஆசீர்வாதத்தால் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராகப் பதவியில் உள்ளார். அதை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு இந்திய மக்களின் மனோநிலை மிகத் தாராள நிலையிலுள்ளது என்பதே இங்கு உற்று நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஈழத் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்குமான உறவு “தொப்புள் கொடி உறவு” என்று கூறுவார்கள். ஐந்து கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ் நாட்டில் வசித்து வந்த போதும் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையிலான மேலாதிக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையை ஜே.ஆர் அரசுக்கு சாதகமாக ஏன் மேற்கொண்டது? என்பது சராசரித் தமிழ் மக்களது பார்வையில் பெரும் புதிராகவே தோன்றும்.

1987 யூலை மாதத்தில் ராஜீவ் காந்தியினால் உருவாக்கப்பட்ட “இந்திய-இலங்கை ஒப்பந்தம்” ஈழத் தமிழ் மக்களுக்காக இதுவரை காலமும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் மிகவும் வலுவானது, தமிழ் மக்களுக்கு கூடுதல் உரிமைகளை வழங்க வல்லது என வாதிப்போரை இன்றும் எம்மிடையே நாம் காணலாம். இவர்கள் முன் வைக்கும் வாதமானது

(1) இலங்கை நாடென்பது பல்லின, பல் மத நாடாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இவ் அங்கீகாரமானது சிங்கள, பௌத்த பேரினவாதிகளின் பேரினவாதச் சிந்தனைக்கு சாவு மணி அடிப்பதாகும்.

(2) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி இலங்கை என்ற நாட்டின் வட-கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களினதும், முஸ்லீம் மக்களினதும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தொடர்ச்சியான வாழ்நிலைப் பிரதேசங்களாகும்.

(3) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

(4) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி தமிழ் மொழி உத்தியோக மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

(5) அதி உச்சமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 13வது அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தத்தின் மூலம் இலங்கை என்ற நாட்டில் அதிகாரப் பரவலாக்கல் முறை ஏற்படுத்தப்படுகின்றது. இதனூடாக மாகாண சபைகள் பிறப்பெடுக்கின்றன என்ற ஐந்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைகிறது.

மறுபுறத்தில் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான இந்திய அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த பல விமர்சனங்களும் உண்டு. இந்திரா காந்தியின் மரணச்சடங்குக்காக ஜே.ஆர் டில்லி சென்றிருந்த வேளையில் சம்பிரதாய முறைப்படி ராஜீவை சந்தித்துக் கொண்டார். அந்த முதற் சந்திப்பிலேயே ஜே.ஆரின் அரசியல் சாணக்கிய அணுகுமுறைக்குள் ராஜீவ் விழுந்து கொண்டதாகவும் அதனால் ராஜீவுக்கு ஜே.ஆரை நன்கு பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியேற்று சிறிது காலத்துக்குள்ளாகவே இந்திராவுக்கு நெருக்கமாயிருந்த பார்த்தசாரதி போன்ற வெளிவிவகாரக் கொள்கை ஆலோசகர்களையும், இராஜதந்திரிகளையும் புறக்கணிக்கத் தொடங்கியிருந்தார். புதியவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

இதன் பின்னர் இலங்கை தொடர்பான இந்திய அணுகுமுறை கடுமையான போக்கிலிருந்து இலங்கை அரசு மீதான மென்மையான நட்புறவுடன் கூடிய புதியவகை அணுகுமுறையாக மாற்றம் பெற ஆரம்பித்தது. இதன் தொடர் விளைவாகவே போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு பூட்டானின் தலைநகரான திம்புவில் தமிழர் தரப்புக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் 1985 யூலை 8ம் தேதி ஆரம்பித்து ஆறு நாட்கள் வரை நடைபெற்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக இந்திய அரசிடம் ஈழத் தேசிய விடுதலை முன்னணியானது ( புளொட், கூட்டணி தவிர்ந்த ஏனைய முக்கிய 4 தமிழ் அமைப்புக்களின் கூட்டு) ஆரம்பிக்கப்படவிருக்கும் திம்புப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையாக சிறிலங்கா அரசானது தமிழரின் இனப்பிரச்சினை குறித்து ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும் எனச் சிறிலங்கா அரசினைக் கோருமாறு எடுத்தியம்பியது. அவ்வாறுகோரியமை இந்திய அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியமையால் ஈழத் தேசிய விடுதலை முன்னணியானது இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டு பல்வேறு வகையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டமை என்பது வரலாறு. இவ்வாறு நிகழ்ந்த திம்புப் பேச்சுவார்த்தையின் போது தமிழர் தரப்பு ஒருங்கிணைந்து தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படையான பின்வரும் நான்கு மூலக் கோட்பாடுகளை முன் வைத்தார்கள்.

(1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்.

(2) தமிழ் மக்களுக்கு இனம் காணக் கூடிய தனித்துவமான தாயகம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.

(3) தமிழர் தேசத்துக்கு எவராலும் பறித்தெடுக்க முடியாத சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.

(4) சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படையான உரிமைகளும் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.

இந்தக் கோட்பாடுகளைத் திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட சிறிலங்காத் தரப்பு ( ஜே.ஆரின் சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனா சிறிலங்கா அரச தூதுக் குழுவுக்குத் தலைமை வகித்திருந்தார்) இறுதிக் கோட்பாடு நீங்கலாக அனைத்தையும் முற்றாக நிராகரித்ததினாலும், அக் காலகட்டப் பகுதியில் வட-கிழக்கு மாகாணங்களில் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட யுத்த நிறுத்த மீறல்களாலும் வரலாற்றிலே முதன்முதலாக இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இடம்பெற்ற திம்புப் பேச்சுக்கள் முறிவடைந்து போயின.

இந்த முதலாவது (திம்புப் பேச்சுவார்த்தைகளில்) தோல்விக்குப் பின்னர் மீண்டும் ராஜீவ் தலைமையிலான இந்திய அரசு 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தெற்காசிய நாடுகளின் ( சார்க் ) உச்சி மாநாடு பெங்க@ரில்">பெங்க@ரில் ஏற்பாடாகியிருந்த வேளையில் தமிழர் தரப்புக்கு மீண்டுமொரு நெருக்குதலைக் கொடுத்து ஜே.ஆரினால் முன் வைக்கப்பட்ட பிறிதொரு தீர்வுத்திட்டத்தை ( இத் தீர்வுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் மூன்று கூறுகளாகாகப் பிரிக்கப்பட்டன) ஏற்குமாறு பலவந்தப்படுத்தியது.

இதன் மூலம் பெங்க@ர்">பெங்க@ர் சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இராஜதந்திர சாதனை படைத்து ராஜீவினதும், இந்தியாவினதும் ஆளுமை முத்திரையைப் பதித்து விட இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் எண்ண்pயிருந்தார்கள். விளைவு – தமிழர் தரப்பின் பிரதான அமைப்பு இவ் அரைகுறைத் தீர்வுத்திட்டம் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தைக் கூறு போடுகிறது என்று கூறி அத் திட்டத்தை அடியோடு நிராகரித்தது.

இந்தச் சந்தர்ப்பத்திலே நான் குறித்த ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது என எண்ணுகின்றேன். ஏறத்தாள 31 மாதங்கள் சிறிலங்காவின் இராணுவச் சிறைகளில் வாடிவதங்கிய நான் இறிதியாக 1986 டிசம்பர் 23ம் தேதி வெலிக்கடைச் சிறையிலிருந்து விடுதலையானேன்.

இரு நாட்களின் பின் யாழ்பாணம் சென்ற எனக்கு 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாத முற்பகுதியில் யாழ் நல்லூர் கோவிலின் அருகே அமைந்துள்ள அலுவலகத்தில் தமிழர் தரப்பின் பெருந் தலைவரை சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

அந்தச் சந்திப்பின் போது “கூறு போட்டுச் சிதைக்கப்பட்டதும், அதிகாரமற்றதுமான மாகாண அரசின் முதல்வராக முடிசூடுமாறு இந்திய அரசு வலிந்து என்னை அழைத்த போதும் அதனை நான் நிராகரித்தேன்” என்று என்னிடம் கூறியதை என்னால் நினைவு மீட்டுக் கொள்ள முடிகிறது.

Thursday, August 17, 2006

ஐரோப்பிய யூனியன் இன்று தடை செய்யுமா?

-நடராஜா முரளிதரன்-

இன்று மே வெள்ளி 19ல் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு(யூனியன்) தமிழர் தரப்புத் தொடர்பாக எடுக்கவுள்ள முடிவு தமிழ் பேசும் ஈழத்தவர்களுக்கு எத்தகைய தாக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தாது என்பது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சூடு பிடிக்கப்போகிறது.

ஏறத்தாள 4 இலட்சம் இலங்கைத் தமிழ் மக்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் செறிந்தும், பரவலாகவும் வாழ்வதால் அந்த நாட்டு அரசியலாளர்கள் அது குறித்து அக்கறைப்பட வேண்டியவர்களாக உள்ளார்கள்.

மேலும் தமிழ் அகதிகள் வருகை அதிகரிப்பினால் எழக்கூடிய சிக்கல்களை எவ்வாறு மட்டுப்படுத்துவது என்பது குறித்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சில கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக உள்ளார்கள். மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள மேற்படி நாடுகளுக்கு சிறிலங்காவிலே இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த அவதானங்களை, அபிப்பிராயங்களை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டு.

எல்லாவற்றையும் விட மேலானதாக அந்தந்த நாடுகளின் பூகோள, இராணுவ, பொருளாதார, தேசிய அரசியல் நலன்களின் பெறுபேறுகளை மையமாகவே வைத்து கொள்கை வகுப்பாய்வாளர்கள் வகுக்கும் கோட்பாடுகளின் அடிப்படையில் நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கை தீர்மானிக்கப்படுகின்றது என்று கூறுவதே மிகப் பொருத்தமானது.

எனவே நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்த வகையில் எமக்குச் சாதகமாக அமைவது மற்றவருக்குப் பாதகமாக அமையலாம். எமக்குப் பாதகமாக அமைவது மற்றவருக்குச் சாதகமாக அமையலாம்.

அண்மையில்; இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொனால்ட் காம்ப் தமிழர் தரப்பைத் தடை செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐரோப்பிய யூனியனைக் கோரியுள்ளதாக கூறியிருந்தார்.

உலகப் பெரு வல்லரசான அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் மீது கொடுக்கும் அழுத்தமானது மிகவும் முக்கியமானதொன்றாகவே கருதப்படும்.25 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் புருசெல்சில் எடுக்க உள்ள இந்த முடிவானது தமிழ் பேசும் மக்களுக்குப் பாதகமாக அமைந்து விடும் தமிழர் தரப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுவிடும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஐரோப்பிய இராஜதந்திரிகள்
மட்டத்திலிருந்து செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.

ஏதாவது பேரதிசயங்கள் நிகழ்ந்து முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டோ அல்லது சாதகமான வாய்ப்புக்கள் நிகழ்ந்தோ மாறுதல் அமைவதற்கான சூழ்நிலை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. ஐரோப்பியச் சூழ்நிலையில் ஏற்கனவே பிரிட்டன் தமிழர் தரப்பைத் தடை செய்து விட்டது. ஐரோப்பிய யூனியன் கடந்த வருடம் செப்ரம்பர் மாதம் தழிழர் தரப்பின் மீதான பிரயாணத் தடையை அமுல்படுத்திருந்தது.உலக அளவில் தடைகள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா,கனடா போன்ற நாடுகளில் ஏலவே அமுல்படுத்தப்பட்டுள்ளன.

தடைகள் என்பது அடக்கப்பட்ட மக்கள் மீது பிரயோகிக்கப்படும் போதெல்லாம் அதன் விளைவுகள் இன்னும் அதன் எல்லைகளைத் தாண்டி வன்முறைகள் மோசமாக நிகழ்வதற்கான தள நிலைமைகளை உருவாக்கிவிடுகிறது என்பதுதான் உண்மை.

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் அரசு அமுல்படுத்திய தடை தமிழர்களின் அரசியல் வன்முறை ஈடுபாட்டை மேலும் துரிதப்படுத்திய வரலாற்றுண்மையை இங்கு நோக்கலாம்.இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு வடகிழக்கு மாகாணசபையை வழங்குவதாகக் கூறிக் கொண்டு வந்த இந்திய இராணுவம் நடுநிலையாளர் ஸ்தானத்திலிருந்து விலகி தாக்குதலாளனாக மாறிய போது ஏது நிகழ்ந்தது?

இலங்கை அரசு, இந்திய அரசு, மாற்று அமைப்புக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து ஜே.ஆர் ஆட்சிக் காலத்தில் அமைத்த முக்கூட்டு பலமானதாக ஏன் அமையவில்லை? அடக்குமுறையைத் தனது மேலாதிக்கத்துக்காகப் பிரயோகிக்கும் எந்தப் பலம் பொருந்திய அமைப்பும் ஈற்றில் தகர்ந்து விடுகிறது.

ஐரோப்பிய யூனியன் ஏற்புடுத்த உள்ள இத்தடையானது கீழ்கண்ட பிரச்சினைகளைக் கிளப்பி விடும் என அரசியல் அவதானிகள் கருத்துக் கூறுவது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.

1) சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு தமிழர் தரப்பை ஊக்குவிப்பதற்குப் பதிலாக மேலும் தமிழர் தரப்பை அந்நியப்படுத்தும் நிகழ்வாக அமைந்து விடும்.

2) சிறிலங்கா அரசானது இதனைத் தமக்குச் சாதகமான சமிக்ஞையாகக் கருதிக் கொண்டுவிட ஜே.வி;.பியும், ஜாதிகஹெல உறுமய போன்ற போன்ற பேரினவாதக் கட்சிகளின் கூட்டும், முன்னெடுப்பும் முழு அளவிலான போரைத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவதற்கான வாய்ப்புகளை அரசுக்கு ஏற்படுத்திவிடும்.

3) தமிழ்-சிங்கள இனங்கள் மத்தியில் தற்போது காணப்படும் பதட்ட சூழ்நிலையானது தமிழ்-சிங்கள இனக் கலவரம் நடைபெறுவதற்கான ஏதுக்களை இட்டுச் சென்று விடும்.

4) ஐரோப்பாவில் இத் தடை அமுல்படுத்தப்படும்போது அங்கு வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கு பல சிரமங்களையும், தொல்லைகளையும் நடைமுறை வாழ்வில் விளைவித்து விடும்.

நடைமுறையில் இவ்வாறான தடைகள், அழுத்தங்கள் எதைச் சாதித்தன என்பது குறித்து ஆராயும் சில ஆய்வாளர்களது வியாக்கியானங்கள் வேறுவகையில் அமைகிறது.

1995 ஒக்ரோபரில் கனடா நாட்டில் மாணிக்கவாசகம் சுரேஸ் அவர்கள் கைது செய்யப்பட்டு தமிழர் தரப்பு மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டபோது அதனால் பாரதூரமான பாதிப்பு ஏதும் நிகழ்ந்து விடவில்லையே என்று என்னிடம் ஓர் ஆய்வாளர் கூறினார்.

1996 ஏப்ரல் 10ம் தேதி சுவிஸ் நாட்டில் தமிழர் தரப்புச் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு இலட்சக்கணக்கிலான பணம் வங்கியில் முடக்கப்பட்டுப் பாரிய அளவில் பொலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் விளைவு பொது மக்களிடம் அனுதாபமும், எழுச்சியும் மேலோங்கியது. நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் அரச தரப்பு தோல்வியைத் தழுவிக் கொண்டது மட்டுமல்லாது குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு ந~;டஈடும் பெற்றுக் கொண்டார்கள்.

தடைக்குள்ளான நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலே கூட தமிழர் தரப்புச் செயற்பாடுகள் ஓரளவு தொடருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவேதான் நோய்க்கான காரண காரியங்களை அறிதலின் மூலம் நோயைக் கட்டுப்படுத்துவதும், நோயாளியைக் குணப்படுத்துவதும் சிறந்த வைத்தியனின் சேவையாக அமைகிறது.

எனவே தடைகள் மூலம் தமிழர் தரப்பின் மீது பிரயோகிக்;கப்படும் அழுத்தங்கள் முற்றிலுமாக செயற்பாடுகளை நிறுத்திவிடுமா? என்பது போன்ற கேள்விகள் மக்கள் மனங்களில் இயல்பாக எழுவதும் அதற்கான பதில்கள் அவரவர் நிலைப்பாட்டில் வழங்கப்படுவதும் புலம் பெயர் வாழ்வில் பொதுவானதாகும்.

இந்த அடிப்படையில் ஐரோப்பியத்தடை நிகழுமாயின் போர் மேகங்கள் ஈழ வானில் இடிகளை முழக்கும். இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும்.
நாகரீகங்களின் மோதல்

-நடராஜா முரளிதரன்-

அண்மையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “விடுதலை” என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் அந்த நூலில் அமெரிக்க வரலாற்று அறிஞர் “சாமுவேல் ஹண்டிங்ரன்” முன்வைத்த “நாகரீகங்களின் மோதல்” என்ற வரலாற்றுக் கோட்பாடு தொடர்பாக “உலக வரலாறும் மனித விடுதலையும்” என்ற தலைப்பிலான கட்டுரையில் பாலசிங்கம் அவர்கள் சுருக்கமாகவும், சுவைபடவும் சில விடயங்களைக் கூறியுள்ளார்.

அவற்றில் என் வாசித்தலுக்கூடாகப் பெறப்பட்டவை குறித்து சிறிது அலசலாம்; என்று எண்ணுகின்றேன். சமகால, எதிர்கால உலக நெருக்கடிகளின் உச்சப் பரிமாணமாக வேறுபட்ட நாகரீகங்களைச் சேர்ந்த மக்கள் இனங்கள் மோதிக்கொள்வது வாயிலாகவே மனித வரலாறு கட்டவிழ்ந்து செல்லும் என்பதே “சாமுவேல் ஹண்டிங்ரனின்” கோட்பாட்டு மையமாகும்.

அவரது கோட்பாட்டை மேலும் அழுத்தியுரைக்கு முகமாக 1997 ஆம் ஆண்டு “நாகரீகங்களின் மோதலும் உலக ஒழுங்கை மீளமைத்தலும்” என்ற நூல் அவரால் மேலும் வெளியிடப்பட்டது. பனிப் போர் முடிவு கருத்தியல் முரண்பாடுகளையும், சிந்தாந்தச் சிக்கல்களையும் செயலிழக்க வைத்த நிலையில் சித்தாந்தங்களும், அரசியல் அமைப்பு வடிவங்களும், பொருளாதாரக் கட்டமைப்புக்களும் சமுதாயங்களின் தனித்துவத்தை ஆழ்ந்து அவதானிக்கத் தவறிவிட்டன. ஆனாலும் பண்பாட்டு அடையாளங்களே மனித சமூகங்களின் தனித் தன்மைகளை, அடையாளங்களை வரையறை செய்கின்றன. ஏந்த மக்கள் கூட்டமும் தங்களை இனம் கண்டு கொள்ளவும், இனம் காட்டிக் கொள்ளவும் பண்பாட்டு அம்சங்களே ஆதாரங்கள் .
பண்பாட்டின் அதி உயர் தோற்றமே நாகரீகம் எனலாம். சமூகங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியானது மனித நாகரீகங்களின் கதை சொல்லல்களாக முடிவுறாத தொடர்ச்சியாக நீள்கிறது.
இத் தொடர்ச்சியில் வளர்ச்சி பெற்ற, வளர்ச்சி பெற முயலும் பெரு நாகரீகங்கள் ஆதிக்கப் போட்டியை நிகழ்த்துகின்றன. முரண்பட்டுக்; கொள்கின்றன. புரட்சிகள் எழலாம்.விழலாம்.சமுக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். விதி விலக்காக கால வெள்ளத்தில் அமிழ்ந்து போன நாகரீகங்கள் இருந்த போதிலும் பெரு நாகரீகங்கள் இந்தக் காலச் சூறாவளிகளையெல்லாம் கடந்து தாக்குப் பிடிக்கின்றன என்றெல்லாம் “சாமுவேல் ஹண்டிங்ரன்” கூறுகின்றார்.

இந்த “நாகரீகங்களுக்கான மோதல்” வரலாற்றில் பெரிது, சிறிது என்ற எல்லைகளைக் கடந்து அனைத்து வகை மக்கள் கூட்டத்துக்குமான பொதுமையாக அமைந்து விடுமா? ஏன்ற கேள்வியே என் ஆழ் மனதில் நெருடிக் கொண்டிருந்தது.

சிறிலங்காவிலே இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இன முரண்பாட்டில் தமிழ், சிங்கள ஆகிய இரு இனங்களும் மொழி, மதம், பண்பாடு என அனைத்திலும் வேறுபாடு கொண்டவை. இந்த முரண்பாட்டினை தேசிய இன முரண்பாடாகவே உலகம் கண்டு கொள்கிறது. இவற்றை நாகரீகங்களுக்கிடையிலான மோதலாகவும் நோக்க முடியுமா? ஏன்பது குறித்தே நான் சிந்திக்க விழைகிறேன்.

இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சியின் வரலாற்றுப் போக்கு மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்தோடு முரண்படுவதை இன்று நாம் காணுகின்றோம். பல கோடி முஸ்லீம் மக்கள் தமது மதத்தை நாகரீகச் சின்னமாக நோக்குவதை, தமது வாழ்வின் அர்த்த பரிமாணங்களை இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு ஊடாகப் பெற முயல்வதை நாம் அவதானிக்க முடியும்.

இஸ்லாமிய மதமானது சமூக, அரசியல், பண்பாட்டுக் கருத்துருவாக்கங்களைத் தீவிர நிலையில் வழிநிலைப்படுத்த முயல்வதால் ஆயுதம் தாங்கிய இராணுவ வாதமாகவும் அது மாறி விடுகிறது. சிறிலங்காவை எடுத்துக் கொண்டால் சிங்கள நாகரீகமானது தனது பண்பாட்டின் தனித்துவத்தையும், சிறப்பான அம்சங்களையும் வலுப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அதனைத் தமிழ் நாகரீகத்தின் மீது திணித்து விட முயற்ச்சிப்பதாக கருதிக் கொள்ள முடியுமா? அல்லது தனது நாகரீகத்தின் இருப்புக் குறித்த அச்சம் காரணமாக தமிழ் நாகரீகத்தின் மீது மேலாதிக்கத்தை ஏற்படுத்தித் தமிழ் நாகரீகத்தைக் கட்டுக்குள் கொணர விழைந்ததன் விளை பொருள்தானா இன்று நிகழும் கோர யுத்தம்?

மறு புறத்தில் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அதிகார சக்திகள் இனங்களுக்கிடையிலான முரண்களைக் கிளறி விடுவதாகக் கூறிடும் வாதங்கள் மேற் குறிப்பிட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் அர்த்தம் இழந்து போவதையும் நோக்க முடியும்.

நாகரீகங்களுக்கிடையில் ஏற்படும் முரண்நிலைப் போக்கே எதிர்கால உலக அரசியலையும், மானுடத்தின் வரலாற்றையும் தீர்மானிக்கும் என்ற “சாமுவேல் ஹண்டிங்ரன்” நிலைப்பாடு உலகமயமாதலில் மேற்குலக கிறீஸ்தவ நாகரீகம் தனது பண்பாட்டு விழுமியங்களை சர்வதேசியப்படுத்தும் வேளைகளில் ஓரளவு பலம் வாய்ந்த நிலையில் காணப்படும் சீன, இஸ்லாமிய நாகரீகங்களோடு மோதுகின்ற களங்களை உருவாக்கி வந்த போதும் இன்றைய உலகின் போர்க்களங்களை நிர்மாணிப்பது இன நெருக்கடிகளால் விழைந்த இன மோதல்களே என்கிறது.

பிளவுபட்டு நிற்கும் பண்பாட்டு உலகங்கள் மத்தியில் ஒத்திசைவு ஏற்படாதென்றும், இந் நாகரீகங்கள் தங்களை உச்சநிலை வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல மாட்டாதவையென்றும் கூறும் “ஹண்டிங்ரன்” இவற்றினால் பேரழிவுகளே விழையும் என்றும் எதிர்வு கூறுகிறூர். இவ்வாறு நாகரீகக் கோட்பாட்டின் அடிப்படையில் உலக உறவுகளை ஆராய முற்படும் ஹண்டிங்ரனை நோக்கிச் சில கேள்விகளையும் பாலசிங்கம் அவர்கள் எழுப்புகிறார்.

ஈராக் மீதான அமெரிக்கப் போரை கிறீஸ்தவ-இஸ்லாமிய நாகரீக மோதலாக மட்டுமே எடை போட முடியுமா?மேற்குலக கிறீஸதவ நாகரீகத்தைச் சேர்ந்த நாடுகள் மத்தியிலே எழும் முரண்பாடுகளை எவ்வாறு புரிந்து கொள்வது?

இஸ்லாமிய நாகரீகத்தைச் சார்ந்த நாடுகள் ஒரே பண்பாட்டு உலகமாக ஒன்றுபட்டு நிற்காது பிளவுபட்டு முரண்படுவதேன்?

சீன தேசத்தை மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்திற்கு விரோதமான சக்தியாக கருத முடியுமா?
போன்றவை அவர் எழுப்பிய கேள்விகளுள் முக்கியமானவை. அதைத் தொடர்ந்து “மனிதர்களின் சமூக வாழ்வில் பண்பாடு முக்கியமானதே. பண்பாடானது சமூகங்களின் ஆன்மாவாக, சமூக உறவுகளுக்கு ஆதாரமாக , சமூக ஒழுங்குகிற்கு அத்திவாரமாகத் திகழ்கிறது. எனினும் மனித அபிலாசைகளின் பரிமாணம் அகன்றது. அவற்றைப் பண்பாட்டு உலகுக்குள் முடக்கி விட முடியாது” என்ற கருத்தையும் பாலசிங்கம் அவர்கள் முன்வைக்கிறார்.

சுதந்திரமும், வாழ்நிலை முன்னேற்றமுமே மனித சமூகங்கள் யாவற்றினதும் பொதுவான விருப்பாய் , வரலாற்றின் அசைவியக்கமாய் அமைந்து நிற்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அதே வேளை சமுதாயங்கள் பண்பாட்டு உலகங்களினுள் சிறையுண்டிருப்பதையும் நிராகரித்துவிட முடியாது.

Wednesday, August 16, 2006

புஸ்பராஜாஓர் நோக்கு-4

-நடராஜா முரளிதரன்-

1971ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி அல்பிரட் துரையப்பாவுக்கு இலக்கு வைத்து அவரின் காரில் வைக்கப்பட்ட குண்டு, நேரம் முந்தி வெடித்ததால் துரையப்பா உயிர் தப்பியிருந்தார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சிவகுமாரன் முயற்ச்சியில் தோல்வியுற்றாலும் அவரால் நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதல் நிகழ்வானது அன்றைய காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்களால் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இன்னும் ஒருபடி மேலே கூறுவதானால் தமிழ்-சிங்கள தேசிய முரண்பாடு அரசியல் வன்முறையாக மாற்றம் பெற்றுக் கொண்டிருப்பதை இத்தகைய நிகழ்வுகளுக்கூடாக ஊடறுத்துக் காண முடியும். 1974ம் ஆண்டு தை மாதம் 10ம் தேதி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள்; மாலை நிகழ்வுக்காக யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தார்கள். மாநாட்டு மேடையிலே தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நயினார் முகமது பேசிக் கொண்டிருந்தார். அவ் வேளையிலே தான் யாழ் பொலீஸ் உதவி அதிபர் சந்திரசேகரா தலைமையில் பொலீஸார் குழப்பம் விளைவிக்க ஆரம்பித்தனர். இந்தக் குழப்பம் ஏன் உண்டானது? என்பது குறித்து பல்வேறு வகையான வதந்திகள் அன்று உலாவின. அவற்றில் முக்கியமான ஒன்றை இங்கு குறிப்பிட எண்ணுகின்றேன்.

வீரசிங்கம் மண்டபத்தின் முன்றலில் பொதுக்கூட்டம் ஒன்றை நிகழ்த்துவதற்கான அனுமதியை பொலீஸார் வழங்கவில்லையென்றும் ஆனாலும் மாநாட்டின் இறுதி நாளன்று மக்கள் பெருந்திரளாக எழுச்சியுடன் அங்கு கூடியிருந்தமையால் கூட்டத்தை மண்டபத்துக்கு வெளியே நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு ஏற்ப்பட்டதாகவும் என்பது அதில் ஒன்று. திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு பிரமித்த பொலீஸார் ஆரம்பத்தில் நடவடிக்கை எதனையும் எடுக்கத் துணிச்சல் பெறாதவர்களாக தத்தளித்துக் கொண்டிருந்தனர். இரவு பத்தரை மணியளவில் ஏ.எஸ்.பி சந்திரசேகரா மேலிடத்து ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு மாநாட்டு அமைப்பாளர்களுக்கு நேரம் தாண்டிக் கொண்டிருப்பதான பிரச்சினையை முன்வைத்து கூட்டத்தை மேலும் நீடிக்காமல் நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். மேலிடத்து ஆலோசனையின் பின்னணியில் அல்பிரட் துரையப்பா செயற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அங்கு குழுமியிருந்த மக்கள் திரள் ஏ.எஸ்.பியின் அழுத்தத்துக்கு அடிபணிய மறுத்துக் கூட்டத்தை தொடர்ந்து நடத்துமாறு கூட்ட அமைப்பாளர்களுக்கு கூக்குரல் இடத் தொடங்கியது. அவ்வேளையிலேதான் வெறி கொண்டவராக மாறிய சந்திரசேகரா கூட்டத்தைக் கலைத்து விரட்டுமாறு பொலீஸ் படைக்குக் கட்டளையிடுகிறார். பின்பு தான் எல்லா விபரீதங்களும் நிகழ்ந்தன.

புஸ்பராஜாவின் நூலிலே ஷஷநான் சுபாஸ் கபேயில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். பெருந்திரளான சனங்கள் அங்கும் இங்கும் எனக் கதறிய வண்ணம் ஓடிக் கொணடிருந்தனர். அவர்கள் உயிருக்குப் பயந்து ஓடுவது போல தென்பட்டனர். உடனே வெளியே வந்து என்ன நடந்தது என அறிய முயன்றேன். பொலீஸ் சுடுகின்றனர், பொலீஸ் குண்டெறிகின்றனர் என ஆளுக்கொரு தகவல் சொல்லிக்கொண்டு சிதறி ஓடிக்கொணடிருந்தனர்……….. சனங்கள் முண்டியடித்துக்கொண்டு ஒருவரையொருவர் தள்ளிவிட்டபடி, ஏறி மிதித்தபடி ஓடினர். அப்பொழுது எனது தங்கை புஸ்பராணி, சிவகுமாரன் போன்றவர்கள் வருவதைக் கண்டேன். விபரம் கூறிய சிவகுமாரன், சனங்களைப் பாதுகாப்பாக பஸ்களில் ஏற்றி அனுப்புவோம், வாருங்கள் ஒழுங்குகள் செய்வோம் என்றார். ……………சனங்களை ஏற்றி ஒரு பஸ்ஸை சிவகுமாரன் எடுத்தார்………..அன்றைய இரவு 9 தமிழர்களைப் பலி கொண்டது. 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந் நிகழ்ச்சியால் இளைஞர்கள் கொதித்துப் போனர். சிவகுமாரன் பைத்தியம் பிடித்தவர் போல் காணப்பட்டார். இந்தக் கொலைகளுக்குக் காரணமான ஏ.எஸ்.பி சந்திரசேகராவைக்…………….எனச் சிவகுமாரன் சபதம் போட்டார். (பக்-97,99) என உள்ளது.

சந்திரசேகரா யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அண்மையில் குடியிருந்தார். தினமும் யாழ் பொலீஸ் நிலையத்துக்குக் கைலாசப் பிள்ளையார் கோவிலைக் கடந்தே போவார். இதன்படி தாக்குதல் நிகழ்த்துவதற்கான இடமாக கைலாசபிள்ளையார் கோவிலடி தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரான்சிஸ், அளவெட்டி ஆனந்தன், நடேசானந்தன் ஆகியவர்களை சிவகுமாரன் தேர்ந்தெடுத்திருந்தார். கையால் தயாரிக்கப்பட்ட சன்னங்கள் போட்ட துப்பாக்கியால் சந்திரசேகரா மீது தாக்குதல் நிகழ்த்த சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சி, அது வெடிக்காததால் வீணானது. ஆயினும் மனந்தளராத சிவகுமாரன் சந்திரசேகராவை ஜீப்பில் இருந்து வெளியே இழுத்துத் தாக்குதல் நிகழ்த்த முற்படுகிறார். சென்றவர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கைகூடாததால் அவரது முயற்ச்சி தோல்வியைத் தழுவிக் கொள்கிறது. தப்பிச் சென்றுவிடுகிறார். இவ்வாறு சிவகுமாரன் முன்னெடுத்த தாக்குதல் நடவடிக்கைகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முழுவெற்றியை ஈட்டிக் கொள்ளவில்லை. நான் சிவகுமாரனுடன் அவர் இறக்கும் வரைக்கும் மிக நெருக்கமாகப் பழங்கியவன். இந்த ரீதியில் எனக்குப் பல உண்மைகள் தெரியும். சிவகுமாரனின் அனைத்து முயற்ச்சிகளும் தோல்வியில் முடிந்தது. சிவகுமாரனின் தூய்மையான எண்ணமும், விசுவாசமும், நேர்மையும், திறமையும், வீரமும் எப்படி எல்லா முயற்ச்சிகளிலும் தோல்வியைக் கொடுத்தன என்பதை ஆய்வு செய்ய வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். சிவகுமாரன் தனது தளபதிகளாக தேர்ந்தெடுத்தவர்களின் விவேகமின்மையே அவரின் தோல்விக்குக் காரணம் என எம்மால் ஒரு முடிவுக்கு வரக் கூடியதாக உள்ளதென(பக்-117) இந்தத் தோல்விகளுக்கான முழுக்காரணங்களையும் புஸ்பராஜா தனது நூலில் சிவகுமாரனைச் சூழவிருந்த சகாக்கள் அல்லது அவரோடு இணைந்து பங்கேற்றவர்கள் தலைகளில் பொறித்து விடுதல் ஏற்புடையதாக இல்லை.

வென்றால் உரிமை தலைவனுக்கு. தோற்றால் தொண்டன் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போல அல்லவா இருக்கிறது. கட்டுப்பாடு, சிறந்த பயிற்ச்சி, ஒருங்கிணைப்பு, தகவல் சேகரிப்பு, சிறந்த உபகரணங்கள் போன்ற விடயங்களை உள்வாங்கி நீண்ட கால அடிப்படையில் நிதானித்து செயற்படுவதன் மூலமே எந்த விடுதலை வரலாறும் வெற்றிக் கனிகளைப் பறித்திருக்கும்.

தமிழ் பேசும் மக்களுடைய உரிமைப் போராட்ட வரலாற்றிலே சிவகுமாரனது வரலாற்றினை பதிவுக்குள்ளாக்குவது, முன்னிலைப்படுத்துதல் என்ற தளத்தில் புஸ்பராஜா தனது நூலிலே சிவகுமாரனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

சிவகுமாரன் தலைமை தாங்கிய இறுதி நடவடிக்கை கோப்பாய் கிராமிய வங்கிக் கொள்ளை முயற்ச்சியாகும். இதில் சிவகுமாரனோடு இணைந்து கொண்டவர்கள் ஜீவராஜா, மகேந்திரன், பிரான்சிஸ் போன்றவர்கள். மருதனாமடம் சந்தியிலிருந்து கடத்தப்பட்ட காரினை வெளியே நிறுத்தி விட்டு வங்கியின் உள்ளே சிவகுமாரன் தலைமையிலான குழு கொள்ளையிட நுழைந்தது. ஆனால் வங்கி ஊழியர்கள் உசாரடைந்து மக்கள் போட்ட கூக்குரலில் பொலீசுக்கும் தகவல் சென்று விட்டது. வெளியே ஓடி வந்தவர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மூலம் தப்ப முயன்றும் முடியவில்லை. வெறும் காலால் ஓட்டம் பிடித்தார்கள்.

புகையிலைத் தோட்டங்களுக்கு ஊடாக ஓடிக்கொண்டிருந்த வேளையில் சிவகுமாரன் சுலபமாக பொலீசாரினால் சுற்றி வளைக்கப்பட்டார். இறுதியாக சிவகுமாரன் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியைப் பயன்படுத்திச் சண்டையிடுகிறார். ஆனால் ரவைகள் தீர்ந்து விடுகின்றன. தப்ப முடியாத நிலையில் சயனைட் சாப்பிடுகின்றார். சயனைட் சாப்பிட்ட நிலையில் மயங்கிய சிவகுமாரன் பொலீசாரினால் கைது செய்யப்பட்டு யாழ் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலீஸ் காவல் தொடர்கிறது. மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை பலர் வற்புறுத்தியும் பெற்றுக்கொள்ள மறுத்த சிவகுமாரன் ஈற்றில் வீரச்சாவை அறுவடை செய்து கொண்டார்.

அந்த நாள் 1974ம் ஆண்டு ஆனி மாதம் 5ம் நாள். ஈழத் தமிழினம் இச் சோக நாளை தம் வரலாறு முழுவதும் காவித் திரிவர்.

Friday, August 11, 2006

பொன்.கணேசமூர்த்தி -ஓர் அஞ்சலி

-நடராஜா முரளிதரன்-

வழமை போல் அன்றும் காலையில் எழுந்தவுடன் பல்லைத் துலக்குவதற்கு முன்பாகவே கணணியின் முன்பாக அமர்ந்து கொண்டு இணைய வலயத் தளங்களுக்குள் நுழைந்து கொண்டேன்.

வலயத் தளங்களுக்கூடாக ஒரு சுற்றுச் சுற்றி வரும் வேளையில் நிதர்சனத்துக்குள் புகுந்த எனக்குத் “தின்னவேலியில் வங்கி முகாமையாளர் சுட்டுப் படுகொலை” என்ற செய்தி தடுத்து நிறுத்தியது. இன்னும் அந்தச் செய்திக்குள் ஆழப் புகுந்த போது என்னோடு சிறுவயது முதற் கொண்டே பேசிப் பழகிய, கவிதை-பேச்சு-நாடகம்-அரசியல் போன்ற துறைகளில் கூட்டாக இணைந்து இயங்கிய, அரசியல் முரண்பாடுகள் குறித்துப் பலமுறைகள் என்னோடு கடுமையாக விவாதித்த, என்னைவிடக் குறைந்தது பத்து வருடங்களாவது வயதில் மூத்த “கணேசமூர்த்தி அண்ணை” என என்னால் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அந்தப் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி, கலை இலக்கியவாதி தின்னவேலித் தலங்காவல் பிள்ளையார் கோவிலுக்கு மிகச் சமீபமாக “ஹெல்மட்” அணிந்த நிலையில் தரையோடு தரையாக வீழ்த்தப்பட்டுக் கிடந்த நெஞ்சை அதிர வைத்த அந்தக் காட்சி, அது எழுப்பிய துயரம் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட முடியாதது. மரணம் வாய் பிளந்து நிற்கும் அந்தப் பூமியில் கொடூரமாக வீழ்த்தப்பட்ட உன்னருகில் உன்னவள் திலகமணி நினைவைக் கொன்று, வேதனையைக் கொன்று ஒரு நடைப் பிணமாய் குந்தியிருக்கும் பேய் அறைந்த நிலை என்னை இதனை எழுத வைக்கின்றது.

அரசியல் அத்காரத்தை வென்றெடுக்க நீ துப்பாக்கி ஏந்தவில்லை. இன்னும் ஒருபடி மேலே கூறுவதானால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் சீர்குலையும் தருணங்கள் வரை கூட்டணியின் மிதவாதப்பாதையோடு ஒத்துப் போனவன். தமிழ் இளைஞர் பேரவைக் காலங்களில் உமாமகேஸ்வரனுக்கு நெருக்கமான நண்பன். வர்க்கப் பார்வையோடு கூடிய இடதுசாரிச் சிந்தனைக்கு மேலாகக் கூர்மையடைந்துள்ள அடக்குமுறைக்கு உள்ளான தமிழ் பேசும் மக்களின் தமிழ்த் தேசியவாதமானது முற்போக்கான பல்வேறு குணாம்சங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்ற வாதத்தைப் பலமாக நம்பியவன் நீ.

ஆனாலும் உனது சிந்கனைத் தடத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வீழ்ச்சி எற்படுத்திய மாற்றம் கணிசமானது என்று நான் எண்ணுகின்றேன். அதுவும் குறிப்பாக உனது நெருங்கிய நண்பன், தமிழ்த் தேசியவாதி நா.கருணானந்தசிவம் (இளந் தமிழர் மன்ற நிறுவனர், ஆசிரியர்) அமைதிப் படையென வந்த இந்தியப்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வேளைகளில் வேதனைகளின் உச்சி வரை இழுத்துச் செல்லப்பட்டாய் நீ என்பதை நான் அறிவேன்.

அந்நியச் சிறகுகளின் அரவணைப்பில் உண்மையான சுதந்திரம் பெறப்பட முடியாதது என்பது மட்டுமல்ல “அரவணைத்த சிறகுகளின் என்புகளே இதயங்களைக் குத்திக் கிழிக்கும்” என்ற “வேலியே பயிரை மேய்ந்த கதையை” வரலாறு எங்கணும் நாம் பார்க்க முடியும்.

நீயும், உனது குடும்பமும் வாழ்ந்த பூமியிலிருந்து அடித்து விரட்டப்பட்டு வன்னி மண்ணுக்குச் சென்று வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் உனது மகன் போராளி அமைப்பில் தன்னைப் பிணைத்துக் கொண்டதையிட்டு நீ பெருமைப்பட்டுக் கொண்டதை எனது தையிட்டி நண்பன் தயாளசீலன் எனக்குக் கூறியிருந்தார்.

அவ் வேளைகளில் உன்னால் உருவாக்கப்பட்ட படைப்புக்களான “மண்ணுக்காக” திரைப்படமும், “சந்தனக்காடு” நாடகமும் தமிழ்த் தேசிய விடுதலைப் போருக்கு வலுச் சோப்பதாகவே அமைந்திருந்தது. உன்னால் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பும், இயற்றப்பட்ட இசைப்பாடல்களும் கூட அது குறித்த உருவகங்களே.

புஸ்பராஜா எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற நூலில் உனது பெயர் பலதடவை குறிக்கப்பட்டும், உனது மனைவி திலகமணி ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுத மயமாக்கப்பட்ட தருணங்களில் பங்களிப்புச் செய்த பெண்களில் முன்னுரிமை பெற்றவர் என்றும் எழுதப்பட்டுள்ளதை இங்கு பதிவுக்குள்ளாக்க விழைகின்றேன். ஏனெனில் உங்களது பங்களிப்புக்கான ஆதாரங்கள் பல்வேறு முனைகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்றன. ஆதன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஏதாவதோர் பக்கங்களிலாவது உங்களது பங்களிப்பு செறிவாக்கப்பட வேண்டும் என்று அவாவுறுகின்றேன்.

எனது தமிழ் ஆசிரியை குறமகள் வள்ளிநாயகி கணேசமூர்த்தி குறித்த நினைவுகளை “ஈழநாடு” பத்திரிகையில் எழுதுகையில் இந்திய இராணுவம் அமைதிப்படையாக வந்திறங்கிய நாட்களில் முன்பு விரட்டப்பட்டு ஓடிய காங்கேசன்துறைச் சமூகம் சங்கக்கடைக்கு வந்து தமக்குரிய பொருட்களைப் பெற்றுச் செல்லும் போது கடைசி முறையாகச் சந்தித்தோம். அவர் அப்போதும் எந்த அமைப்போடும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. “இனிச் சமாதானம் வருமென்று நினைக்கிறீர்களா ரீச்சர்?” என்று கேட்டார். “தமிழீழம் வராவிட்டாலும் மாகாண ரீதியான சமஸ்டி வரக்கூடும். இந்தியத் தலையீடு எப்படியும் சமாதானத்தைக் கொண்டு வரத்தானே வேண்டும் என்றேன்”. “நடந்ததை விட மோசமான யுத்தமும் நமக்கு அழிவும் தான் வரும். நான் சொன்னதை நீங்கள் ஒருக்காலும் மறக்க மாட்டீர்கள்” என்று கணேசமூர்த்தி கூறியதைப் பதிவாக்கியுள்ளார்.

எனவே சர்வதேச அரசியலைத் தெளிவாகப் புரிந்து கொண்ட கணேசமூர்த்தியிடம் இந்தியத் தலையீடு குறித்த தெளிவான விளக்கம் இருந்ததை இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

1986 டிசம்பரில் நான் விடுதலையாகி வெளிவந்த சில நாட்களில் இளந் தமிழர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பாரதி விழாவுக்குச் சென்றிருந்தேன். விழாவில் பட்டி மன்ற நிகழ்வும் ஒன்று. பட்டி மன்றத் தலைப்பு “குற்றவாளிக் கூண்டில் இந்திய சமாதானத் தூதுவர்கள்”. என்னையும் அதில் கலந்து கொள்ளுமாறு கணேசமூர்த்தியும், நண்பர் பாப்பாவும் “அழுங்குப்பிடி” பிடித்தார்கள். இறுதியில் பட்டி மன்றத் தீர்ப்பாளராக அந்த மன்றிலே பங்குபற்றியிருந்தேன்.

கணேசமுர்த்தி அவர்கள் “இந்திய சமாதானத் தூதுவர்கள் குற்றவாளிகளே” எனப் பல்வேறு ஆதாரங்களையும், புள்ளிவிபரங்களையும் முன்வைத்துச் சொற்போர் புரிந்தார். எனவே இந்தியா குறித்த அவரது நிலைப்பாடு தேடலோடு இணைந்த ஆழ்ந்த அரசியல் பிரக்ஞையை உள்ளடக்கியதெனலாம்.

நினைத்துப் பார்க்கின்றேன். 1976ம் ஆண்டு. தின்னவேலி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மாணவர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த வழக்காடு மன்றம். வழக்காடு மன்றத் தலைப்பு: “குற்றவாளிக் கூண்டில் தமிழ் ஈழப் பிரிவினை வாதிகள்”. தமிழ் ஈழப் பிரிவினை வாதிகள் குற்றவாளிகள் அற்றவர் என்ற தரப்பில் கருணானந்தசிவம், கணேசமூர்த்தி, சிவதாசன் போன்றோர்.

மறுபுறத்தில் குற்றவாளிகளே என வாதம் புரியப் புதுமைலோலன், நாவேந்தன் போன்ற மிகச் சிறந்த பேச்சாளர்கள். அந்தச் சொற்போரிலே கணேசமூர்த்தி சிங்களப் பேரின வாதத்தின் விளைவே தமிழ் பிரிவினைவாதம் எனவும் அதன் உருவாக்க்தினால் விளைந்ததே தமிழீழப் பிரிவினை வாதிகள் என்றும் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்து மிகச் சிறப்பாக சொற்பொழிவாற்றியிருந்தார்.

இளந் தமிழர் மன்றம் காங்கேசன்துறையிலே பாரதி விழாவை இரு நாட்கள் நடத்துவார்கள். முதல் நாள் யாழ் மாவட்டம் அடங்கலாக நாடகங்கள் கொணரப்பட்டு அதில் ஐந்து சிறந்த நாடகங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நாடகப் போட்டி இடம்பெறும். இரண்டாவது நாள் பட்டிமன்றம், கவியரங்கம், மன்ற நாடகம் , பரிசளிப்பு வைபவம் எனத் தொடரும்.

அவ்வேளைகளிலே கணேசமூர்த்தி முதல் நாள் நாடக நடுவராக மறுநாள் பட்டிமன்றம், கவியரங்கம், மன்ற நாடகம் என அனைத்திலும் பங்குறும் பன்முக ஆளுமை கொண்ட கலைஞனாகப் பரிணமித்ததை இன்றும் என்னால் நினைவுகூரக் கூடியதாக உள்ளது.

சிறுவயதில் எனக்குப் பேசுவதற்கு பேச்சு எழுதித் தந்தவராக, வாசிப்பதற்கு கவிதை எழுதித் தந்தவராக இருந்தவர் நீங்கள். ஒருவகையில் எனக்கு நீங்கள் ஆசிரியரும் கூட. நான் இன்று அந்த மண்ணிலே உயிரோடு இருந்திருந்தால் தரையோடு வீழ்த்தப்பட்ட அந்தப் புன்னகை தவழும் உடல் தாங்கிய அந்தப் பேழையை எனது தோள் சுமந்திருக்கும். அதனால் என் மனமும் பரித்திருக்கும்.

இன்று ஒட்டாத மண்ணில் உயிரைச் சுமந்து கொண்டு “பயங்கரவாதி” என்ற பட்டத்தையும் காவிக் கொண்டு அலைந்து திரியும் பறவை நான்.
எதைத் தான் என்னால் செய்வது? இதையே நான் தருவேன். ஏற்றுக் கொள்ளுங்கள்.

எல்லோரையும் போல
மரணத்தைக் கண்டு
நானும் அச்சப்படுகின்றேன்
ஆனாலும் கதவைத் தட்டாமலே
உள்ளே நுழைந்து கொண்டு
உன்னை மரணத்திற்கு
அழைத்துச் சென்ற
அந்த மரண தூதுவர்கள்
எனக்கு
மிகப்பெரிய அச்சத்தை
ஏற்படுத்துகிறார்கள்
ஆனாலும்
மரணத்தை
வெல்லும் உனது வாழ்வு
எனது வாழ்க்கை
பற்றிய பிடிப்பில்
மீண்டும் என்னை
அழைத்துச் செல்கிறது.