Monday, October 30, 2006

வடக்குக் கிழக்கு மக்களின்
இணைப்பும் பிரிப்பும்

-நடராஜா முரளிதரன்-

சில தினங்களுக்கு முன் சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் வட-கிழக்கு மாகாணங்களின் இணைப்பை சட்ட விரோதமானது எனக் கூறித் தீர்ப்பளித்தமை இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய செய்தியாகும்.
1987ஆம் ஆண்டு யூலையில் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைய 1988 இல் வட, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களையும் இணைப்பதற்கு N;ஜ.ஆர் அவசரகாலச் சட்ட விதிகளையே பயன்யடுத்தியிருந்தார்.
வரலாற்று ரீதியாகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த பாரம்பரிய நிலப்பிரதேசம் என்ற அடிப்படையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கூடாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதித் தீர்மானம் ஏற்படுத்தப்படும் வரைக்கும் தற்காலிக இணைப்பு அமுலில் இருக்கும் என்பதாகவே இந்திய-இலங்கை ஒப்பந்த ஏற்பாட்டாளர்களால் அன்றைய காலகட்டத்தில் இவ் இணைப்புத் தொடர்பாகக் கூறப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்பட்ட காலம் முதல் தமிழ் பேசும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாகவோ அல்லது அவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பவைகளில் ஒன்றாகவோ “வடக்கு- கிழக்கு” இணைந்த “தாயக நிலம்” விளங்கி வந்ததை நாம் அறிவோம்.
1957ஆம் ஆண்டு யூலையில் இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும், தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற பண்டா – செல்வா உடன்படிக்கையின் போதும் மாகாண எல்லைகளைத் தாண்டி இரண்டோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோ பிரதேச சபைகள் இணைவதற்கான விதி இடம் பெறுவதாக அவ் உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் நான் இங்கு இப் பத்தியை எழுதுவதற்கான நோக்கம் வேறு வகையிலானது எனலாம். ஏனெனில் சிறிலங்காவின் பெரும்பான்மைச் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும், அதனால் இயங்குதலுக்குள்ளாக்கப்படும் அரசு யந்திரங்களில் ஒன்றான நீதித்துறைக்கும் வட,கிழக்கு இணைப்பை சிதைப்பதற்கும், பலவீனப்படுத்தவதற்குமான நோக்கங்கள் இருப்பது குறித்து நாம் யாரும் கவலை கொண்டு விட முடியாது.

கிழக்கிலே பெருமளவில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரைக்கும் தங்களது மத கலாச்சார, பண்பாடடு விழுமியங்களைக் காப்பதில், தங்களது தனித்துவத்தை பேணுவதில் உள்ள கரிசனையை, அக்கறையை அது தொடர்பான அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்துவதில் உள்ள தர்க்க, நியாங்களை நாம் யாரும் புறந்தள்ளி விட முடியாது.
ஆனால் கிழக்கிலே வாழும், வாழ்ந்த முஸ்லீம் சாராத தமிழ் மக்கள் சிலரால் அண்மைக் காலமாகக் கிளப்பப்பட்டு வரும் கிழக்குத் தொடர்பான “மண் வாசைன” மற்றும் அதனுடன் கூடவேயான “யாழ்பாண மேலாதிக்க வாதம்” தொடர்பான குற்றச்சாட்டுக்களில் எத்தகைய குணாம்சங்கள் அவர்களிடம் இருந்து வெளித்தள்ளலுக்கு உள்ளாகி வருகின்றன என்பது குறித்த பிரக்ஞை அல்லது சிந்தனைத் தளம் இங்கு அவசியமானது என்று நான் கருதுவேன்.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் மக்கள் கூட்டம் தாம் வாழும் மண் சார்ந்து உரிமையையும், உணர்வையும் ஒருங்கிணைத்து வாழுதல் இயல்பானது. இத்தகைய குணாம்சமானது முற்போக்கான பல கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. அத்தகைய உணர்வுநிலை சார்ந்த உளவியல் போக்கை அது சார்ந்த கிழக்கு வாழ் தமிழ் மக்களின் “மண் வாசனையை” அங்கீகரிக்க வேண்டிய புத்தி ஜீவிதத்தை தலைமை தாங்கும் சக்திகள் கொண்டிருத்தல் அவசியமாகின்றது.

அதே வேளை கிழக்கை வாழிடமாகக் கொண்ட தமிழ் “அதிகாரத்துவ சக்திகள்” சில தங்கள் “தலைகளைப்” பலப்படுத்துவதற்கான வேட்டைக் களத்தில் பிரித்தாளும் கோசங்களுக்கு உருவேற்றி அப்பாவிகளைப் “பலியாடுகள்” ஆக்கும் அவலத்தையும் உண்டுபண்ணி நிற்கின்றன.
தேசிய விடுதலைக்கான பரிமாணத்தில் பல் வேறுபட்ட சக்திகள் ஒருங்கிணைந்த ஒரு வகைக் கலவை நிலை உண்டு. இதை உணர மறுத்துச் செல்வதானது பேரினவாதத்தின் வேலைகளை இலகுவாக்கி விடுகிறது.

“தலித்துக்களின்” விடிவுக்காகப் போராடிய பெரியார் எழுப்பிய தனித் திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள சகல மொழி பேசும் மக்களையும் இணைத்துக் கொள்ள முயன்றதையும் அது சாத்தியத்திற்குள்ளாகாத வரலாற்றையும் காணுகின்றோம்.
கிழக்கிலே வாழ்ந்து வரும் சராசரித் தமிழ் மக்களிடத்தில் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் சமூகத்தின் அங்கங்களாக செயற்படும் போக்குத்தான் ஒப்பீட்டளவில் வரலாற்று ரீதியாக மேலோங்கிக் காணப்படுகின்றது. அதை யாராவது மறுதலித்துச் செயற்பட முனைந்து நிற்பார்களேயானால் அவர்கள் இன்றைய வட,கிழக்கு இணைப்பைத் துண்டாடி மகிழ்ந்து நிற்கும் சக்திகளுக்கு துணை போவதாகவே கருத முடியும்.

“மேலாதிக்க வாதம்” எத்தகைய சூழ்நிலையிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் முற்போக்குச் சக்திகள் ஒரே சிந்தனை படைத்தவர்களாகவே இருப்பார்கள்.

ஆயினும் மிகப் பலம் பொருந்திய “பொது எதிரி” யை வீழ்த்துதற்கான தளத்தில் ஒன்றிணைவதும் பின் மீண்டும், மீண்டும் எமது உரிமைகளுக்கான போராட்டங்களை விளிம்பு நிலை மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, உழைக்கும் வர்க்கத்துக்காக என நீட்சிப் படுத்துதலுமே போர்க்குணாம்சம் பொருந்தியவர்களின் கடமையாகிறது.

Monday, October 23, 2006

நான் நேரில் காணாத ஏ.ஜே.கனகரட்ணா!
-
-நடராஜா முரளிதரன்-

சென்னையிலிருந்து இணைய மடல் மூலம் வ.கீதா “ஏ.ஜே.கனகரட்ணா கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்” என்ற சேதியை அறிவித்தபோதுதான் அந்தத் துயரச் செய்தி எனது காதைக் கவ்விக் கொண்டது. இது வரைக்கும் நான் அந்த “ஆபூர்வ மனிதரை” நேரில் சந்திக்கக் கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் என் கண் காணாத அந்த மனிதரின் இழப்பு ஏன் என்னுள் இவ்வளவு துடிப்பை, சலனத்தை நிகழ்த்தி நிற்கிறது என்பதற்கான விடையை நான் எழுதும் இந்த வரிகளுக்கூடாகப் பெற்றுவிட முடியுமா? ஏன்பதையும் என்னால் கூற முடியாதுள்ளது. ஏனெனில் அந்த எல்லைகளையும் தாண்டி அவர் மீதான எனது நேசிப்பு விரவிக் கிடக்கிறது என்பதே உண்மையாக அமையும்.

எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது 1972 இல் முதல் தடவையாக அவரது மொழிபெயர்ப்புக் கட்டுரையொன்றினை “மல்லிகை” சிற்றிதழில் வாசித்த ஞாபகம். 1987 களில் நான் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்த வேளைகளில் அவர் குறித்து தமி;ழ் நாட்டின் மிகப்பெரும் இடதுசாரி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.வி;.ராஜதுரை அவர்களும், பத்திரிகையாளரான ஏ.எஸ்.பன்னீர்செல்வமும் நிறையவே என்னிடம் பேசியிருந்தார்கள். அப்படியொரு சமயத்தில்தான் பன்னீர்செல்வம் அவரது “மார்க்சீயமும் இலக்கியமும் - சில நோக்குகள்” (அலை வெளியீடு) என்ற தொகுப்பு நூலை எனக்கு வாசிக்கத் தந்திருந்தார். அந்த நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை தொடர்வதாகவே நான் எண்ணுகின்றேன். இந்தக் குறிப்புக்களை எழுதுவதற்கு முன் அப் புத்தகத்தையும், “காலம்” சஞ்சிகை வெளியிட்ட ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழையும் செல்வத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருந்தேன். “காலம்” சஞ்சிகை வெளியிட்ட ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழில் எஸ்.வி;.ராஜதுரை அவர்கள் “கலாச்சாரக் கமிசார்களின் ரசனைகளுக்கும் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கும் அவர்களது கறாரான அரசியல் தேவைகளுக்கும் வளைந்து கொடுக்காமல், அதே வேளை, மார்க்சிய தரிசனத்திலிருந்து சிறிதும் வழுவாமல் தமிழ் மொழிக்களத்தில் பண்பாட்டுச் செயற்பாடுகளை ஏறத்தாள நான்கு தசாப்தங்களாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் மனிதர்” என ஏ.ஜேயை விதந்துரைத்துள்ளார்.

ஆதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் சக்திகள், அதிகாரத்தை ஏற்கனவே கைப்பற்றியவர்கள் என எல்லோருமே கலை, இலக்கிய வடிவங்களைத் தாங்கள் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் கோட்பாடுகளுக்கு அமைய உற்பத்தி செய்யுமாறு உத்தரவுகளைப் பிறப்பித்தோ, கோசங்களை எழுப்பியோ வரும் வேளைகளில் அது குறித்த விசாரணைகளைத் விரிந்த தேடற் பரப்பில் ஆழ்ந்து நோக்கிய புலமை கொண்ட மனிதராகவே நான் ஏ.ஜே அவர்களைக் காணவிழைகின்றேன்.

ஏ.ஜே அவர்கள் தனது “மார்க்சீயமும் இலக்கியமும்” என்ற கட்டுரையொன்றிலே பின்வருமாறு கூறுகின்றார். “ஏனைய கலைஞர்களைப் போன்று, எழுத்தாளர்களும் தமது கற்பனையென்னும் ஆழியில் முத்துக் குளித்து வெளிக் கொணர்பவைதான் உன்னத படைப்புக்கள் என ஒரு சாரார் கருதி வருகின்றனர். இவர்களுடைய கொள்கைப்படி கலைஞர் புற உலகத்தை மறந்து அக உலகத்தில் இரண்டறக் கலந்து நிற்பவர்கள். இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் கலைஞர்கள் சூனியத்தில் வாழ்பவர்கள். இவ் வாதத்தினை மார்க்சீயம் ஏற்றுக் கொள்ளாது. சமுதாய ஒழுங்கு முறைகளுக்கிடையே ஏற்படும் தொடர்புகளின் விளைவாகவே அரசியல், சட்டம், சமயம், தத்துவம், கலை, இலக்கியம் போன்றவை தோன்றுகின்றன. உற்பத்தி முறைகள் அடித்தளம் என்றால் மேலே குறிப்பிட்ட கலை, இலக்கியம் போன்றவை மேற் கட்டுமானம். அடித்தளத்திற்கும், மேற் கட்டுமானத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை வரையறுப்பது அவ்வளவு எளிதன்று. அடித்தளம் எவ்வாறு மேற்கட்டுமானத்தைப் பாதிக்கின்றதோ அதே போன்று மேற்கட்டுமானமும் அடித்தளத்தைப் பாதிக்கின்றது. ஆதலால் பொருளாதார அடிப்படைகளும், கலை - இலக்கியம் போன்றவற்றிற்கும் இடையில் உள்ள தொடர்புகள் மிகச் சிக்கலானவை.”

இவற்றின் வழியே நெடுங்காலமாக அரசியல், இலக்கியத் துறைகளுள் இடது சாரிச் சித்தாந்தங்கள் கொச்சைப்படுத்தப்பட்டும், வழிபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதுமான அவலங்களைத் தமிழ்ச் சூழலுக்குப் புரிய வைப்பதில் ஏ.ஜே.கனகரட்ணா 1966களிலிருந்தே பெரிதும் முயன்று வந்துள்ளார். உலகின் உன்னதங்கள் என்று கருதப்பட்ட பல்வேறு சிந்தனைப் போக்குகளை ஏ.ஜே தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஒரு நூலினை இலக்கியம் என்று ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்று தீர்மானிப்பதற்கு, முதலில் அந்நூல் இலக்கியமா இல்லையா என்பதனை நிர்ணயித்த பின்புதான் மார்க்சீயக் கோட்பாட்டினைக் கொண்டு அதனை மதிப்பிடுதல் வேண்டுமென ரொட்ஸ்கி “இலக்கியமும் புரட்சியும்” என்ற நூலில் குறிப்பிட்டதையும் ஏ.ஜே.கனகரட்ணா தனது கட்டுரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலக்கியத்தினை உரிய முறையில் புரியாத எவரும் கோட்பாட்டு அளவுகோல்களை ஏந்துவது விபரீதத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். கட்சி, கலை, இலக்கியம் என எந்த வட்டங்களுக்குள்ளும் அகப்படாதவர். அவருள் அடங்க மறுத்த அறிவுப் பசியை மற்றவர்கள் ஒப்புதல் பெறாமலே அவரிடமிருந்து அள்ளிச் செல்ல அனுமதி அளித்தவர். கற்றுத் தெளிதலும், கற்றுக் கொடுத்தலும், உரையாடல்களுக்கூடாக ஊட்டம் அளித்தலும் அதற்கும் அப்பால் எண்ணிறைந்த இலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் பின்னணி முன்னாணாகத் திகழந்தவர் ஏ.ஜே அவர்கள்.

ஏ.ஜே அவர்களை பிரபலமான சிங்களப் புத்திஜீவியும், எழுத்தாளருமான ரெஜி சிறிவர்த்தனா முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொழும்புக்கு குடிபெயர்ந்து வருமாறு அழைப்பு விடுத்தபோது தான் “சேற்றில் அழுந்திய தடி” மாதிரி இருப்பதாகவும், தன்னைக் கொழும்பில் “மறுநடவு” செய்யத் தனக்கு விருப்பம் இல்லையெனவும் பதிலளித்திருந்தார். மேலும் ரெஜி கூறுகிறார். “உலகக் குடிமகனுக்குரிய கலாச்சாரமும், சர்வதேசப் பிரக்ஞையும் உடைய புத்திஜீவியான ஏ.ஜே யாழ்ப்பாண மண்ணிலும், அதன் வாழ்விலும் அனுபவத்திலும், மொழியிலும் வேரூன்றி உள்ளார் என்பதை அதிலிருந்து நான் உணர்ந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தை அதன் சோதனைக் காலத்தில் விட்டு வருவதை ஒரு துரோகச் செயல் என்று அவர் கருதி இருக்கலாம்.”

இலக்கியத்தைக் காதலித்தவர் என்று கருதப்படும் ஏ.ஜே தனி மனித வாழ்வில் கட்டைப் பிரமச்சாரி. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைக் கற்ற அவரின் தனிப் பெருந்துறையாக ஆங்கில இலக்கியம் விளங்கியது. “டெய்லி நியுஸ்”, “கோப்பிறேற்றர்”, “சற்றடே றிவ்வியு”, திசை போன்ற பத்திரிகைகளின் ஆசிரியர், துணை ஆசிரியர் பொறுப்புக்களில் பணியாற்றிய சிறந்த பத்திரிகையாளரும் கூட. பத்திரிகையாளர்
ஏ.எஸ்.பன்னீர்செல்வத்தின் பார்வையில் “ஏ.ஜேதான் யாழ்ப்பாண வாழ்வின் சிக்கல்களை எனக்குப் புரிய உதவியவர். யாழ்ப்பாணத்தை ஆண்ட துப்பாக்கி ஏந்திய பலர் வைத்த அடிப்படைச் சட்டங்களை, முடிச்சவிழ்த்தற்குரிய இன்றியமையாத தடயங்களைத் தந்தவர்.யாழ்ப்பாணத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் துயரங்கள் கூட மற்றவர்கள் தொலைவிலிருந்து காட்டிய மாதிரியிலிருந்து ஏ.ஜேயின் மாதிரி மிக வித்தியாசமானது. மண்ணை விட்டுப் பிரிய மறுத்த அந்த மகத்தான “மண்ணின் மைந்தன்” தான் துறை போகக் கற்றறிந்த உலக இலக்கியங்களுக்கூடாகவும், தனது வாழ்வின் ஊடாகவும் எமக்கு விட்டுச் சென்ற சேதிகளை எப்போது நாம் மறு வாசிப்புக்கு உள்ளாக்குவோம்.

Tuesday, October 10, 2006

“மறை பொருள்” குறுந் திரைப்படம்

-நடராஜா முரளிதரன்-

பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் போன்ற ஜனநாயக விழுமியங்கள் எத்தகைய விட்டுக் கொடுப்புகளுக்கும், சமரசங்களுக்கும் உட்படுத்தப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் ஓங்கி ஒலித்து வரும் இன்றைய உலகச் சூழலில் ஒரு படைப்பை மறுக்கும் உரிமையை தனி மனிதர்; ஒருவர் மேற்கொள்ளுகிற போது சமூகம் எத்தகைய அவலத்துக்குள் சிக்குண்ண நிகழ்கிறது என்பதையே இரு வாரங்களுக்கு முன் ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நிகழ்ந்த குறுந் திரைப்பட விழா தொடர்பான விமர்சனங்களில் “மறை பொருள்” குறுந் திரைப்படம் தொடர்பான “தர்சனின்” விமர்சனத்தை கடந்த வாரத்துக்கு முந்தைய “வைகறை” இதழ் ஒன்றில் வாசித்துக் கொண்ட போது என்னால் உணரக் கூடியதாக இருந்தது.

“மறை பொருள்” குறுந் திரைப்படம் சித்தரிக்கும் கருப் பொருள் “முஸ்லீம் பெண்கள் “பர்தா” அணிவதை ஒடுக்குமுறையாகப் பார்க்கிறார்கள் என்பதே” என்றும் அவ் விமர்சனத்தில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக நானும் எழுத்தாளர் தேவகாந்தனும் உரையாடிக் கொண்ட போது அவர் தெரிவித்த கருத்தொன்றினை இங்கு குறித்தல் பொருத்தம் என்று எண்ணுகின்றேன். “மறை பொருள்” என்ற படைப்பாக்கத்தில் உருவகிக்கப்படும் அப் பெண் பாத்திரம் அத்தகைய (“பர்தா” அணிவதை ஒடுக்குமுறையாகக் கருதும்) கருத்து நிலைப்பாட்டைக் கொண்டவளாக இருப்பின் அதில் ஏதும் தவறில்லையே? ஏன்று என்னிடம் சொல்லியிருந்தார்.

படைப்பாளியொருவன் தனது புனைவில் முழுச் சுதந்திரங்களோடு செயற்பாடு கொள்வது சமூக நிர்பந்தங்களால் பாதிப்புக்குள்ளாகுமானால் அதையும் மீறி அவன் முழு வீச்சோடு “சிருஸ்டி” புரியும் போது அதைச் சமூகக் காரணிகளைச் சுட்டிக்காட்டி மறுதலிப்பதானது எவ்வளவு தூரம் அபாயகரமானது என்பதையே இங்கு நான் எண்ணிப் பார்க்கின்றேன். இக் கருப்பொருள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனாலும் “இது ஏற்கக் கூடிய கருப்பொருள் அல்ல” என்று எப்படிக் கூறிவிட முடியும்?எனக்குத் தெரிந்த வரையில் முஸ்லீம் பெண்கள் “முக்காடு” அணிவதையோ, “பர்தா” அணிவதையோ ஒடுக்குமுறையாகப் பார்க்கவில்லை என்பதற்காக அவ்வாறான கருத்துடைய “முஸ்லீம் பெண்கள்” இவ்வுலகில் வாழவேயில்லை என்று அர்த்தப்படுத்தி விட முடியுமா?

நடுவர்கள் இப் படத்திற்கு விருது வழங்கவில்லை என்பதை இங்கு பிரச்சினைக்கு உரியதாக நான் கருதவில்லை.

ஆனாலும் “பர்தா” அணிவதை எப்படி உணர்கிறேன் என்பதை ஒரு முஸ்லீம் பெண் மட்டுமே சொல்ல வேண்டும், சொல்ல முடியும் என்ற கட்டளைகளைத் “தர்சன்” பிறபிப்பது படைப்பாக்கத்துக்கான எல்லைகளை வரையறை செய்து விடுவதில், மட்டுப்படுத்துவதில் படைப்பாளியை அல்லது கலைஞனைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்பதையே இங்கு நான் எடுத்துக் கூற விழைகின்றேன்.

முஸ்லீம் பெண்கள் எல்லோருமே “பர்தா” அணிவதில்லை. இந்தியாவிலே, துருக்கியிலே, பாலஸ்தீனத்திலே “பர்தா” அணியாத எத்தனையோ முஸ்லீம் பெண்களை நாம் காண முடியும். ஒரு குறுந் திரைப்படத்துக்கான மொழியைப் பேசுவதில், மாற்றுச் சினிமாவிற்கான பிரக்ஞையைக் கட்டுவதில் “மறை பொருள்” என்ற குறுந் திரைப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றுக் கொண்டதாகவே நான் கருதுவேன். படத்தைப் பார்த்த சிலரது கருத்துக்களும் அதற்கு வலுச் சேர்ப்பதற்கான சாட்சியமாக அமைந்ததை இங்கு குறிப்பிடலாம்.

உரையாடல் எதுவுமே இடம்பெறாது ஒற்றைப் பாத்திரத்தைக் கொண்டு நகர்ந்த அக் குறுந் திரைப்படத்தில் பருவப் பெண்ணொருத்தி கண்ணுக்கு மை தீட்டி, அழகான உடை தேர்ந்து நிலைக் கண்ணாடி முன்னே நின்று, நிமிர்ந்து அழகுப் பதுமையாகத் தன்னை அழகு செய்து கொள்ளுகிறாள். தன் அழகு மேலும் பூரித்திட மெருகூட்டும் முயற்சியிலே தன் கவனத்தையெல்லாம் குவித்து மேலும், மேலும் அது குறித்து அவள் முயன்று கொண்டிருந்தாள். ஏற்றத் தாழ்வுகள் படைத்த இச் சமூகச் சூழலிலும் கூட பால் பேதங்கள், வர்க்க பேதங்களையெல்லாம் கடந்து நாமெல்லாரும் ஓடிப் பிடிக்க முனைவதில், வெறி கொண்டு அலைவதில், விரட்டிச் செல்வதில் “அழகுணர்ச்சியும்” முக்கியமான ஒன்று.

எனவே அந்த அழகுக்கு உரியவள் தனக்கான ஒப்பனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த மறு கணங்களிலே கரிய “பர்தாவினால்” தனது உடலை உடுத்திப் போர்த்திக் கொள்ளுகிறாள். போர்த்தி முடித்த கையோடு நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளுகிறாள். பின் தனது கண்களை முடிக் கொள்ளுகிறாள். “மறை பொருள்” குறுந் திரைப்படமும் அத்தோடு முடிந்து கொள்கிறது.

அந்த முடிவோடு அது ஏற்படுத்திய தாக்கம் என்னை, எனது உணர்வுகளை உறைந்து போக வைத்தது. ஏன் அவள் தனது கண்களை இறுக மூடிக் கொண்டாள்? அந்த உளவியல் அர்த்தப்படுத்த விழையும் செய்திதான் என்ன? மொழியே பேசப்படாத அந்தக் “குறுஞ் சினிமா” வெளிப்படுத்திய சேதியால் மதம், பண்பாடு சார்ந்த முஸ்லீம் உணர்வுகள் காயப்படுத்தப்படுவதாக, மறுக்கப்படுவதாகக் “தர்சனால்” கிளப்பப்படும் கூற்றுக்களுக்கு பதிலாக அமைவதெல்லாம் “சினிமா” என்பது எப்போதும் சமூகத்தின் கதையை மாத்திரம் சொல்வதல்ல. மாறாக சமூகத்தின் தனிமாந்தர்களின் விருப்பு, வெறுப்புக்களையும் அவர்களது சொந்தக் கதைகளையும் கூட நல்ல சினிமா சொல்ல விழைகிறது.

மத அடிப்படை வாதத்தையும், அதன் கட்டுமானத்தில் இருந்து எழுப்பப்படும் பிற்போக்கான பெண் ஒடுக்குமுறை சார்ந்த கருத்தியல் நிலைப்பாடுகளையும் கடுமையாக விமர்சிக்கும் எத்தனையோ முஸலீம் அறிஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமிது.

என்னைப் பொறுத்தவரையில் “மறை பொருள்” குறுந் திரைப்படத்தை விழாவுக்கான திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்த துணிச்சலையிட்டு குறுந் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் காத்திரமான பங்களிப்பொன்றை குறுந் திரைப்படத் துறைக்கு ஆற்றியுள்ளார்கள் என்றே கருதுகின்றேன்.

1993 ஆம் ஆண்டு பங்களாதேசைச் சேர்ந்த “தஸ்லீமா நஸ்ரீன்” என்ற முஸ்லீம் பெண் எழுத்தாளர் “லஜ்ஜை“ என்ற நாவலை வெளியிட்ட போது “பங்களாதேஸ்” அரசு மதவெறியர்களுக்கு இசைந்து அந்த நாவலைத் தடை செய்தது. அதை முஸ்லீம் விரோத நாவல் என்று கூறிய மத வெறியர்கள் அவரைக் கொல்பவர்களுக்கு பரிசு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்கள். மதங்களால் மனித சமுதாயத்திற்கு விமோசனமில்லை என்ற கருத்துடைய “தஸ்லீமா” “மனித நேயம் என்பது மதத்திற்கான மற்றொரு பெயராக இருக்கட்டும்” என்று கூறினார். பெண்ணின் உடல் ஆணினால் உடமை கொள்ளப்பட்டு ஆணின் அதிகாரம் அங்கு நிறுவப்படுகிற போது பெண் தன் உடல் மீது தான் கொண்டுள்ள உரிமையை இழந்து விடுகிறாள்.

அதற்கு மேலாக ஆணாதிக்க சமூக மனோபாவமும் “பண்பாடு சார்ந்த அடையாளங்கள்” என்ற கட்டளைகளை பிறப்பிப்பதன் மூலம் இலகுவான இன்பம் சார் நுகர்வுப் பொருளாக பெண்ணை ஆக்குவதில் வெற்றி கண்டு விடுகிறது. எனவே அதனைக் கலை வடிவம் ஒன்றுக்கூடாகப் புரிய வைப்பதில் பெரு வெற்றி பெற்ற “மறை பொருள்” குறுந் திரைப்பட இயக்குனர் பொன்.சுதாவை மெச்சுவதற்கு எனது மனம் அவாவுறுகிறது.