Tuesday, February 09, 2010

இன்னுமொருமுறை எழுதுவேன்.. உயிர்த்தெழுந்து பார்.. காத்திருப்பேன்

01. இன்னுமொருமுறை எழுதுவேன்

நான் சிறு பையனாக
இருந்தவேளை
எனது அம்மம்மா சொல்வாள்
தான் பிறந்த வாழ்ந்த
ஓடு வேய்ந்த
சுண்ணாம்புக் கட்டிட வீடு பற்றி
ஊடுருவி உறைந்து

காலக்கண்ணாடியில் படிந்து
சடத்துவமாய் காட்சி தந்து
மூலக்கூற்றுக் கவர்ச்சி விசையிலிருந்து
பிரிந்து அவை
எங்கே செல்ல முடியும்

அந்தவேளையில்
அது அழிக்கப்பட்டு
அதன்மீது குந்தியிருந்தது
இன்னுமோர் சீமெந்துக் கட்டிட வீடு

என்னுள் அடங்கிய ஆர்ப்பரிப்புச் சுழல்களின்
மூல இருப்பை
சுருங்கிய ஆதாரத்தின்
மைய மோகிப்பை
உந்தித்தள்ளிய விசையின்
திமிறலை
என்னால் எடுத்துரைக்க முடியாது

சூழ இருந்தது தோட்டம்
மா பலா வாழை மாதுளை எலுமிச்சை
வேம்பு பனை தென்னை புளியென
எல்லாமே அங்கு பூத்துக் கிடந்தது

கல் விளைந்த அப்பூமியில்
என் முன்னோர்
பயிர் விளைக்க முனைந்த கதை
கழிவிரக்கத்தால்
இங்கு பாடுபொருள் ஆகியது

எனது அப்பு பென்சனில் வந்து
அந்த மண்ணுக்குள்ளே
புதைந்து கொண்டு
வெளியே வர மறுத்தார்
தனது ஊனினை உருக்கி
ஓர் தவம் புரிந்தார்
பச்சைத் தாவரங்களின்
தழுவல்களுக்கிடையில்

சேர்ந்து சுகித்த
காலங்களின் வதையை
மோதி உராய்ந்து
சுக்கிலத்தைச் சிதறியும்
கலத்தில் ஏற்றியும்
ஏறியும் புரண்டும்
உச்சத்தில் ததும்பியும்
மது வேண்டியும்
திளைத்து நின்ற இழந்த
அந்த மண்ணின் வரலாற்றை
நான் எப்படியும்
இன்னுமொருமுறை எழுதுவேன்

02. உயிர்த்தெழுந்து பார்

நீ கறை படிந்தவன்
எப்படி எமது புனிதப்போரில்
உன்னை எம்மோடு இணைத்துக் கொள்வது

கங்கையிலே மூழ்கி
இமயமலையின்
உச்சியிலே ஏறியமர்ந்து
எத்தனை தவமியற்றினாலும்
உனது பாவங்களைக் கழுவ முடியாது

உனக்குத் தேவர்கள் வரமளித்து
உன்னை மீட்டெடுப்பார்கள்
என்று மனப்பால் குடியாதே

நீ மதம் மாறிப்
பாவமன்னிப்புக் கோர
எந்தத் திருச்சபையும்
உன்னை அனுமதிக்கப் போவதில்லை

நாங்கள் புனிதர்கள்
அதனால் எத்தகைய கேள்விகளுக்கும்
உட்படுத்தப்பட முடியாதவர்கள்
ஆதலால் தீர்ப்பு வழங்கும் பேறு பெற்றவர்கள்

எனவேதான் உன்னைச்
சிலுவையில் அறைகின்றோம்
முடியுமானால்
மூன்று நாள் கழித்து உயிர்த்தெழுந்து பார்

03. காத்திருப்பேன்

ஒடுங்கிய உடற்கூட்டிலிருந்து
வழிந்து விழுந்த ஊனமாய்
எகிறிப் பாய்ந்த இச்சைகளாய்
இன்னும் என்னவாயோ எல்லாம்
சில என்னுள் அடியுண்டு கிடக்கின்றன

அனைத்தையும்
சுமந்து கொண்டு
எனது நடைபாதைப் பயணம் தொடருகின்றது

விளங்காத கதையொன்றை
வெறி கொண்டு வாசிக்கும்
சிலரைப் பார்த்து
அசட்டை செய்யாது
அகன்று கொண்டிருக்கிறது
பெரும் மக்கள் கூட்டம்

அந்தக் கூட்டம் எழுப்பிய பேரொலி
இன்னும் ஓயவில்லை
அது எழுப்பிய அலை வெள்ளத்தில்
அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர்

அன்றொரு நாள்
நான் காலணியற்ற பாதத்துடன்
நடந்து கொண்டிருந்தபோது
பாதம் பதித்த நிலமெலாம்
எமது நிலம் என்றார்கள்
இன்னும் சிலர் ஆங்காங்கே
ஓடிந்து கிடந்த துண்டுப்புலங்களையும்
தங்களது சொந்த நிலப்பரப்புக்கள்
என்று கூறினார்கள்

கடும் பனியில் நுழைந்து
பயணம் அமைந்ததுவாய்
பெருந்தூரம் அலைந்தாகி விட்டது

இன்னும் ஏன் அவை
என் நினைவுச்சுழியில்
உக்கி அழிந்து விடவில்லை
மரபணுக்களில் அவை அமர்ந்து
இன்னும் பல்லாயிரம் வருடங்கள்
பயணிக்கும் என்று
எவனோ ஒரு கவிஞன் கூறும்
நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பேன்