Monday, October 30, 2006

வடக்குக் கிழக்கு மக்களின்
இணைப்பும் பிரிப்பும்

-நடராஜா முரளிதரன்-

சில தினங்களுக்கு முன் சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் வட-கிழக்கு மாகாணங்களின் இணைப்பை சட்ட விரோதமானது எனக் கூறித் தீர்ப்பளித்தமை இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய செய்தியாகும்.
1987ஆம் ஆண்டு யூலையில் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைய 1988 இல் வட, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களையும் இணைப்பதற்கு N;ஜ.ஆர் அவசரகாலச் சட்ட விதிகளையே பயன்யடுத்தியிருந்தார்.
வரலாற்று ரீதியாகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த பாரம்பரிய நிலப்பிரதேசம் என்ற அடிப்படையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கூடாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதித் தீர்மானம் ஏற்படுத்தப்படும் வரைக்கும் தற்காலிக இணைப்பு அமுலில் இருக்கும் என்பதாகவே இந்திய-இலங்கை ஒப்பந்த ஏற்பாட்டாளர்களால் அன்றைய காலகட்டத்தில் இவ் இணைப்புத் தொடர்பாகக் கூறப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்பட்ட காலம் முதல் தமிழ் பேசும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாகவோ அல்லது அவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பவைகளில் ஒன்றாகவோ “வடக்கு- கிழக்கு” இணைந்த “தாயக நிலம்” விளங்கி வந்ததை நாம் அறிவோம்.
1957ஆம் ஆண்டு யூலையில் இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும், தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற பண்டா – செல்வா உடன்படிக்கையின் போதும் மாகாண எல்லைகளைத் தாண்டி இரண்டோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோ பிரதேச சபைகள் இணைவதற்கான விதி இடம் பெறுவதாக அவ் உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் நான் இங்கு இப் பத்தியை எழுதுவதற்கான நோக்கம் வேறு வகையிலானது எனலாம். ஏனெனில் சிறிலங்காவின் பெரும்பான்மைச் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும், அதனால் இயங்குதலுக்குள்ளாக்கப்படும் அரசு யந்திரங்களில் ஒன்றான நீதித்துறைக்கும் வட,கிழக்கு இணைப்பை சிதைப்பதற்கும், பலவீனப்படுத்தவதற்குமான நோக்கங்கள் இருப்பது குறித்து நாம் யாரும் கவலை கொண்டு விட முடியாது.

கிழக்கிலே பெருமளவில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரைக்கும் தங்களது மத கலாச்சார, பண்பாடடு விழுமியங்களைக் காப்பதில், தங்களது தனித்துவத்தை பேணுவதில் உள்ள கரிசனையை, அக்கறையை அது தொடர்பான அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்துவதில் உள்ள தர்க்க, நியாங்களை நாம் யாரும் புறந்தள்ளி விட முடியாது.
ஆனால் கிழக்கிலே வாழும், வாழ்ந்த முஸ்லீம் சாராத தமிழ் மக்கள் சிலரால் அண்மைக் காலமாகக் கிளப்பப்பட்டு வரும் கிழக்குத் தொடர்பான “மண் வாசைன” மற்றும் அதனுடன் கூடவேயான “யாழ்பாண மேலாதிக்க வாதம்” தொடர்பான குற்றச்சாட்டுக்களில் எத்தகைய குணாம்சங்கள் அவர்களிடம் இருந்து வெளித்தள்ளலுக்கு உள்ளாகி வருகின்றன என்பது குறித்த பிரக்ஞை அல்லது சிந்தனைத் தளம் இங்கு அவசியமானது என்று நான் கருதுவேன்.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் மக்கள் கூட்டம் தாம் வாழும் மண் சார்ந்து உரிமையையும், உணர்வையும் ஒருங்கிணைத்து வாழுதல் இயல்பானது. இத்தகைய குணாம்சமானது முற்போக்கான பல கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. அத்தகைய உணர்வுநிலை சார்ந்த உளவியல் போக்கை அது சார்ந்த கிழக்கு வாழ் தமிழ் மக்களின் “மண் வாசனையை” அங்கீகரிக்க வேண்டிய புத்தி ஜீவிதத்தை தலைமை தாங்கும் சக்திகள் கொண்டிருத்தல் அவசியமாகின்றது.

அதே வேளை கிழக்கை வாழிடமாகக் கொண்ட தமிழ் “அதிகாரத்துவ சக்திகள்” சில தங்கள் “தலைகளைப்” பலப்படுத்துவதற்கான வேட்டைக் களத்தில் பிரித்தாளும் கோசங்களுக்கு உருவேற்றி அப்பாவிகளைப் “பலியாடுகள்” ஆக்கும் அவலத்தையும் உண்டுபண்ணி நிற்கின்றன.
தேசிய விடுதலைக்கான பரிமாணத்தில் பல் வேறுபட்ட சக்திகள் ஒருங்கிணைந்த ஒரு வகைக் கலவை நிலை உண்டு. இதை உணர மறுத்துச் செல்வதானது பேரினவாதத்தின் வேலைகளை இலகுவாக்கி விடுகிறது.

“தலித்துக்களின்” விடிவுக்காகப் போராடிய பெரியார் எழுப்பிய தனித் திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள சகல மொழி பேசும் மக்களையும் இணைத்துக் கொள்ள முயன்றதையும் அது சாத்தியத்திற்குள்ளாகாத வரலாற்றையும் காணுகின்றோம்.
கிழக்கிலே வாழ்ந்து வரும் சராசரித் தமிழ் மக்களிடத்தில் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் சமூகத்தின் அங்கங்களாக செயற்படும் போக்குத்தான் ஒப்பீட்டளவில் வரலாற்று ரீதியாக மேலோங்கிக் காணப்படுகின்றது. அதை யாராவது மறுதலித்துச் செயற்பட முனைந்து நிற்பார்களேயானால் அவர்கள் இன்றைய வட,கிழக்கு இணைப்பைத் துண்டாடி மகிழ்ந்து நிற்கும் சக்திகளுக்கு துணை போவதாகவே கருத முடியும்.

“மேலாதிக்க வாதம்” எத்தகைய சூழ்நிலையிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் முற்போக்குச் சக்திகள் ஒரே சிந்தனை படைத்தவர்களாகவே இருப்பார்கள்.

ஆயினும் மிகப் பலம் பொருந்திய “பொது எதிரி” யை வீழ்த்துதற்கான தளத்தில் ஒன்றிணைவதும் பின் மீண்டும், மீண்டும் எமது உரிமைகளுக்கான போராட்டங்களை விளிம்பு நிலை மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, உழைக்கும் வர்க்கத்துக்காக என நீட்சிப் படுத்துதலுமே போர்க்குணாம்சம் பொருந்தியவர்களின் கடமையாகிறது.

No comments: