Sunday, August 10, 2008

வட-கிழக்கு மண்ணின் மைந்தர்கள் எழுகவே!

-நடராஜா முரளிதரன்-

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழ் “மசாலா” படத்துக்கே உரிய விறுவிறுப்புக் காட்சிகளோடு கூடிய முடிவிலி வரை நீளக்கூடியதுமான நாடகத்தொடர் போன்றே கிழக்கரசியல் நீளுவதாக என் கண்களுக்குத் தோற்றம் தருகின்றது. அண்மையில் கிழக்கின் முதல்வராகப்பட்ட “பிள்ளையான்” எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை நோக்கும்போது ஏறத்தாள இன்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக இரவல் படையின் கடாட்சத்தினால் வட-கிழக்கு மாகாணசபையின் முதல்வராகப் “பட்டாபிசேகம்” செய்து முடியையும் சூடிக்கொண்ட வரதராசப்பெருமாள் அவர்களையே எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையேற்படுகின்றது. அவர் “மணிமகுடத்தையும்” இழந்து ஏன் “பரிவாரங்களோடு” ஒரிசாவுக்குக் கப்பல் ஏறினார் என்ற கடந்த காலக் கதையை யாமெல்லோரும் நன்கு அறிவோம். அதை முற்கூட்டியே அன்றைய சூழ்நிலையில் யாராவது “அரசியல் ஆய்வாளர்கள்” ஆருடம் கூறியிருந்தார்களோ? என்பதும் இன்று எனக்கு நினைவில் இல்லை.

கட்டுக்கோப்பு, தியாகம், தலைமை விசுவாசம் போன்ற எவையுமே ஒரு குறிக்கோளுக்கான பயணத்தில் அக் குறிக்கோளுக்கான பயணத்தை மனசார வரித்துக் கொண்டவர்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுபவை. இவையெல்லாம் ஒரு சமன்பாட்டின் மாறிலிக்கான பரிமாணத்தை எப்போதும் கொண்டமைவதாகக் கட்டமைக்கப்படுவது சதா என்றுமே சுழற்ச்சிக்குள்ளாகும் மனித மனங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சமூகக் கட்டுமானங்களுக்கு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமாக அமைந்துவிட முடியாது.

கடந்த 25 வருடங்களாக நடைபெற்றுவரும் போரில் மிகப் பலம் வாய்ந்த எதிரிக்கு எதிராகப் பலவீனமான மக்கள் கூட்டம்(தமிழ் பேசும் மக்கள்) ஒன்று போராடுகின்றது என்பதே வரலாற்று உண்மையாகும்.. எதிரியின் பலம் என்பது அவனது பிரமாண்டமான மக்கள் தொகை, அவன் வசிக்கும் பாரிய நிலப்பரப்பு, இறைமை படைத்த அரசு என்ற வகையில் அவனுக்குக் கிடைக்கும் உலகளாவிய அரசுகளின் அரவணைப்பு என எதிரியின் பலத்துக்கான, மேலாண்மைக்கான பட்டியல் தொடர்ந்து நீண்டு கொண்டேயிருக்கும். எனவே பலம் பொருந்திய பகைவன் அவ்வப்போது பெறுகின்ற வெற்றிகள் என்ற தலைப்புக்குள் போராட்டத்தின் அறம் குறித்த நியாயத்தேடலைப் புதைத்துவிட முடியுமா?

பலவீனமான பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் அசுரபலம் பொருந்திய இஸ்ரேலினால் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது என்ற உண்மையினால் பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் அறத்தின் பாற்பட்டதல்ல என்று கூக்குரல் இட்டுவிட முடியுமா? மேற்குக்கரையென்றும், காசாவென்றும் பூகோள, புவியியல் தொடர்ச்சியற்ற நிலையிலும் அந்த மக்கள் தங்களை பாலஸ்தீனர்களாகக் காணுவதை எந்த வகையறாவுக்குள் இட்டு நிரப்ப முடியும்? ஏன் அந்த மக்கள் பிரதேசவாதிகளாக அறுந்துபடவில்லை?


“ஒஸ்லோ” உடன்படிக்கையும், “உலக நாயகன்” அமெரிக்காவும் தாரை வார்த்தளித்த வரையறுக்கப்பட்ட சுயாட்சியதிகாரங்களை உள்ளடக்கிய பாலஸ்தீன அரசு என்ற கட்டமைப்பு பாலஸ்தீன மக்களின் அடிப்படைத் தேவைகளையே வழங்க முடியாது ஏன் தோல்வியுறுகின்றது? என்ற பாடங்களை வரலாற்றின் சகதிக்குள் மீண்டும், மீண்டும் தமிழ் மக்களாகிய நாம் சுழியோடித் தேட வேண்டியிருக்கிறது. கிழக்கு மாகாணசபையின் தேர்தல் பட்டாசு வெடிச்சத்தங்களின் அதிர்வுகள் ஓயு முன்னரே கிழக்கு மாகாணத் தமிழ்மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்குமான இனப்போரின் ஆரம்ப கட்டங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுவிட்டன. இரு புறமும் வீழ்த்தப்பட்ட பிணங்கள் வரிசையாக அடுக்கப்படுகின்றன. இந்த இலடச்சணத்தில் தொப்புள் கொடி உறவை அறுத்தவர்கள், அறுந்து பட்டவர்கள் சனநாயக அரசியல் நீரோட்டத்தில் உள் இழுக்கப்பட்டதாகவோ அல்லது உள் நுழைந்து கொண்டதாகவோ வீண் வார்த்தைகள் உரைக்கப்படுகின்றது.

முன்னாள் முதல்வர் “பெருமாள்” மாகாணசபைக்கான மேசை கதிரைகளை வாங்குவதற்கே கொழும்புக்கு ஏறியும், இறங்கவும், அலையவும் வேண்டியுள்ளதே எனப் புலம்பியடித்தது நேற்று முளைத்த பிள்ளையானுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. 1956ஜூன் 5ம் தேதி பண்டாரநாயக்கா தலைமையிலான அரசு தனிச் சிங்களச்சட்டத்தை விவாதிப்பதற்காக நாடளுமன்றில் கூடிய போது கிழக்கின் மைந்தர்கள் தமிழ்த் தேசிய உணர்வின் தீப்பிழம்பானமைதான் உண்மை வரலாறு. திருமலை இராஜவரோதயம், பட்டிருப்பு இராசமாணிக்கம், அறப்போரணித் தலைவர் அரியநாயகம், இராஜதுரை, சம்மந்தன், ஜோசப் பரராஜசிங்கம், காசி ஆனந்தன் போன்றோர் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஆரம்பமாவாதத்திற்கு வெகுகாலத்திற்கு முன்னரே கிழக்கு மாகாணமெங்கும் தமிழ்த் தேசிய உணர்வுவாதப் பிரச்சாரத்தில் தீவிர பங்கெடுத்துக்கொண்ட கிழக்கின் மைந்தர்கள்.

1977ஆம் ஆண்டு மிதவாதத் தமிழ்த் தலைமைகளால் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு என்று கருதப்பட்ட தேர்தலில் திருமலை, மூதூர், மட்டக்களப்பு, அம்பாறை அடங்கலாகப் பெருவாரியான தமிழ்மக்கள் “தமிழீழ ஆணைக்கு” ஆதரவாக வாக்களித்த வரலாற்றுண்மையை யாரும் மறுதுரைக்க முடியாது.
தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்குள் வெட்டிப் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகளாக விளங்கியவர்களே வட-கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்கள். முஸ்லீம் மக்களின் சுயத்தையும், தனித்துவத்தையும் அங்கீகரிக்க வேண்டிய கடப்பாடு அந்த இருபகுதித் தமிழ்மக்களுக்கும் உண்டு. தேங்காய்பூவும், பிட்டுமாக ஒன்றி வாழ்ந்த சமூகமாகத் தமிழ் முஸ்லீம் சமூகங்களின் கடந்த கால உறவுகளை மேடைகள் தோறும், பத்திகள் தோறும் பிரகடனப்படுத்துகின்றோம். ஆனால் இன்றைய சமகால தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கிடையிலான மெய்யான யதார்த்தம் என்ன? இரு சமூகங்களுக்கும் இடையிலான மத,பண்பாட்டு, கலாச்சார இடைவெளிகளுக்கு அப்பால் பாரிய பிரிவினை கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் வேரோடி நிற்கிறது. அப் பிரிவினைக்கான பெரு மையம்பொருளாதா ஏற்றத்தாழ்வேயாகும்.

பாரம்பரியமாகவே முஸ்லீம்கள் வியாபாரிகள். ஆதனால் வரலாற்று ரீதியாகப் பெரு வளர்ச்சியடைந்த தமிழ்-சிங்கள முரண்பாடு இயல்பாகவே வியாபார சமூகத்ததைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு சாதகமான வாய்ப்புக்களைத் தோற்றுவித்திருக்கின்றது. அதற்கும் அப்பால் முஸ்லீம்களின் அரசியல் தலைமை கொழும்பின் அரசியல் அதிகார மையத்தோடு காலத்திற்குக் காலம் சமரச அரசியல் உறவினைப் பூணுவதன் மூலமே தனது நலன்களை மாத்திரமல்லாமல் தனது சமூகத்தின் நலன்களையும் தக்க வைத்துக் கொள்ள முயன்று வந்துள்ளது. இத்தகைய அணுகுமுறை முஸ்லீம்களை ஒப்பீட்டுரீதியில் பொருளாதார ரீதியில் கிழக்குத் தமிழர்களுக்கு மேலாக வளர்த்துச் சென்றுள்ளது.

எனவே இயல்பாய் எழுந்த இந்த முரண்பாடுகளுக்கும் அப்பால் சிங்களப் பேரினவாதம் முஸ்லீம் அடிப்படைவாதிகளை தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை முறியடிப்பதற்கு பயன்படுத்திய நீண்ட கதையும் இங்குண்டு எனவே இவற்றின் வெளிப்பாடுகளான மோதலையும், முரணையும் எவ்வாறு கையாள்வது என்பதும் பொது எதிரியை வென்றெடுப்பதில் எவ்வாறு “ஐக்கிய முன்னணியைக்” கட்டுவது என்பதில் அரசியல் பாடங்களைக் கற்றுக் கொள்வதும் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியர்கள் முன் உள்ள வரலாற்றுக் கடமையாகும். அதற்கும் அப்பால் எங்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமே கிடையாது என்பதும் குறிப்பிட்ட பிரதேசத்தைச் சார்ந்தவர்களால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டோம் என்பதும் குறிப்பிட்ட சில தனிமனிதர்களின் அபிப்பிராயங்களாக, கருத்துக்களாக அமையலாம். அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மறுதலிப்பதில் எள்ளளவும் பிரியப்படுபவன் அல்ல நான். ஆனால் மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமை பறிப்பு, ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பெற்ற தமிழ்மக்கள் மீதான இனப் படுகொலைகள், சிறைகளிலே தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கும், மரணத்திற்கும் உள்ளாக்கப்படும் தமிழ் இளைஞர்கள், தமிழ் பேசும் இனத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள், உயர்கல்வி வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் கடைப்பிடிக்கப்பட்ட பாரபட்சங்கள், அந்நிய இராணுவ ஆக்கிரமிப்பு போன்றவை அனைத்தும் (சிறிய வேறுபாடுகள் தவிர்ந்து) வட-கிழக்கு மாகாணங்கள் முழுமைக்கும் பொதுமையாகவும் மலையகம் அடங்கலாகவும் நடைபெற்றன. இன்றும் நடைபெறுகின்றன.

ஆகவேதான் ஓர் இனத்துக்கான சுயநிர்ணய உரிமை என்ற சர்வதேச சட்ட வரையறையின் பிரகாரம் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய சுயநிர்ணய உரிமைக்காக வட-கிழக்கு மண்ணின் மைந்தர்கள் எழுகவே! என்று வாய் விட்டுக் கத்த வேண்டும் போலுள்ளது எனக்கு. .

No comments: