Saturday, February 23, 2008

அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி

நடராஜா முரளிதரன்

கடந்த சில வாரங்களுக்கு முன்பாகக் “குறமகள்”(வள்ளிநாயகி) அவர்களினால் எழுதி வெளியீடு செய்யப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலை அந்நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற போது வாங்கிக் கொண்டேன். பின்பு அந்நூலை வாசித்தபோது அதனூடகக் கிடைத்த தகவல்களில் சிலவற்றை இங்கு மீட்பதே இப்பத்தியில் எனது நோக்கம்.

யாழ்ப்பாணச் சமூகம் என்பது பெரும் படிப்பைப் பாரம்பரியமாகக் கொண்டது என்ற “பெரும் புழுகுக்குள்” தோய்ந்து மூழ்கி எழும் பழக்கமும். வழக்கமும் வாய்க்கப் பெற்ற பாரம்பரியத்தில் வந்துதித்த என் போன்றோருக்கு வெறும் 175 வருட காலங்களுக்கு முன்னேதான் விரல் விட்டு எண்ணக் கூடிய யாழ்ப்பாணப் பெண்கள் சிலர் எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலே எழுதவும், வாசிக்கவுமான ஆரம்பக் கல்வியை கற்க ஆரம்பித்தார்கள் என்ற வரலாற்றுண்மையை அந் நூலின் வாயிலாகப் பெறக்கூடியதாக அமைந்த போது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. எனவேதான் இங்கு ஓர் கேள்வி எம்முள் இயல்பாகவே எழுப்பப்படுகிறது.

எமது பாரம்பரிய இந்துச் சமூகத்தில் காலங்காலமாக கடைக் கொள்ளும் அல்லது பேணப்படும் பெண் பற்றிய கருத்து நிலைப்பாடு என்பது யாது? இந்துக்களுக்கும் இந்துக்கள் என்ற அணியினுள் இன்று உள் அழுத்தப்பட்ட சைவ, சமண, சாக்த, வைணவ மதத்தவர் யாவருக்கும் “மனு தர்மமே” நெறிகாட்டும் வழிகாட்டியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த “மனு தர்மத்தில்”; பெண் என்றவள் இழிந்தவளாக, மிகக் கொடூரமான கட்டுக்குள் வளர்த்தெடுக்கப்படவேண்டியவளாக, ஆடை-ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட வேண்டியவளாக சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

அன்றைய நூல் வெளியீட்டு வைபவத்தில் இது தொடர்பாக கவிஞர் சேரன் விரிவாக எடுத்துக் கூறியும் இருந்தார். “இந்து” என்ற வார்த்தையை இந்திய சமூகக் கட்டுமானத்துக்குள் ஒர் பதப் பிரயோகமாகப் பயன்படுத்தியவர்கள் அல்லது கொணர்ந்தவர்கள் பர்சியர்கள் மற்றும் பிரிட்டிசார் என்றே வரலாறு கூறுகிறது. ஆனால் இன்று “இந்து” என்ற அந்த வார்த்தை பரந்து, விரிந்த இந்திய உபகண்ட சமூகங்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டும் வலுப்படைத்த “தேசிய” ஆயுதமாகப் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. எனவே இவ்வாறான வளர்ச்சியடையாத இறுக்கமான சமூகக் கட்டுமானத்துக்குள் இருந்து வெளிக்கிளம்புதல் என்பது அன்றைய யாழ்ப்பாணப் பெண்களைப் பொறுத்தவரையில் மிகக் கடினமானதாகவே இருந்திருக்கும்.

பெண்ணை ஆணிலும் பார்க்கத் தாழ்ந்தவளாகக் கருதும் கருத்துநிலையின் தளம் இந்தியச் சமூகத்திற்கு மாத்திரம் உரியதொன்றன்று. அது மேல்நாட்டுச் சமூகங்களுக்கும் உரிய ஒன்றாகும். இதற்கான காரணம், இச்சிந்தனை மரபு தந்தை வழி அதிகாரச் சமூகத்தின் நியமமாகும் என்று அந்நூலின் முகவுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.

1820களின் ஆரம்பத்தில் தெல்லிப்பளை, உடுவில் ஆகிய பகுதிகளிலேதான் முதன்முதலாகத் தமிழ்ப் பெண்களுக்கான கல்வி அமெரிக்க மிசனறிகளால் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே இங்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கிய மெதடிஸ்த திருச்சபையும், அங்கிளிக்கன் திருச்சபையும் இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டு இயங்குகையில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசன்களது கல்விசார் தொழிற்பாடு பிரிட்டனின் காலனித்துவக் கொள்கைகளோடு முரண்படுகின்ற கல்விப் போக்கினைக் கொண்டிருந்தது எனக் கூறப்படுகின்றது.

ஒரு பெண் கிறீஸ்தவளாக மாற்றப்பட்டுவிட்டால்; அவளது குடும்பத் தொடர்ச்சியே கிறீஸ்தவ மயப்பட்டுவிடும். ஏனவே மத விரிவாக்கலுக்கு பெண் கல்வி அத்தியாவசியமானது என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்ட கிறீஸ்தவ மதக் குழுக்கள் தங்களது மனித நேய அணுகுமுறையினூடாக யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களுக்கான சமூக அசைவியக்கத்தினை உந்தித் தள்ளுவதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தினை வகித்திருந்தனர். ஆனாலும் இந்தக் கிறீஸ்தவ மதக் குழுக்களை காலனியாதிக்க விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும் கொள்ள முடியும். ஏனெனில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுக் காலனியாதிக்கத்தின் விஸ்தீரணத்தை விரிவுபடுத்துகின்ற அதியுச்ச அதிகாரம் படைத்த மன்னனுக்கும் இந்த மத நிறுவனங்களுக்கும் இடையிலான நெருக்கங்கள் மிகவும் பின்னிப் பிணைந்தவை.

யாழ்ப்பாணப் பெண்கல்வியின் ஆரம்பகால வளர்ச்சிப்போக்கு புரட்டஸ்தாந்து மதநிறுவனங்களால் குடும்பங்களுக்குள் கிறீஸ்த்துவத்தை வலுப்படுத்தும் நோக்கினால் ஆனதாக ஏற்படுத்தப்பட்டதாக அமைந்தாலும் சமூக வரலாற்று வளர்ச்சிப் போக்கில் புரட்டஸ்தாந்து மதபோதகர்களும், அவர்களது சமூகம் பற்றிய கண்ணோட்டங்களும் ஏற்கனவே யாழ்ப்பாண மண்ணில் வேரூன்றியிருந்த இந்து, சைவப் பாரம்பரியங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் முன்னேறியவையே. ஆங்கிலேய காலனித்துவம் தனது நிர்வாக இயந்திரத்தை வலுப்படுத்துவதற்காக ஆங்கிலக்கல்வி பெற்ற அரசாங்க உத்தியோகங்களில் ஆண்களை அமர வைத்தபோது அங்கு ஒருவகைப் புதிய நடுத்தர வர்க்கம் தோற்றம் பெற்று வந்ததையும் இங்கு நாம் கண் கொள்ள வேண்டியதாக உள்ளது. எனவே அத்தகைய புதிய வர்க்கத்திலே பெண் தனது புதிய பாத்திரத்தைச் செம்மையாக வகுத்துக் கொள்ள அவளினதும் அவள் சார்ந்த குடும்பத்தினதும் ஆங்கிலக்கல்வி தொடர்பான அணுகுமுறை புதிய பரிமாணத்தைப் பெற்றது என்றும் கூறிவிடலாம். அத்துடன் ஆங்கிலக் கல்வி பெற்ற பெண் ஏற்கனவே நிலவி வந்த சமுதாயக் கட்டுமானங்களை உடைத்தெறியும் முழு உத்வேகம் பெற்றவளாக மாறிவிடாமலும் அதனோடு சார்ந்து பயணிப்பவளாகவும் அமைகிறாள். மேலும் அந்தப் பெண்ணானவள் தனது பிள்ளைகளை மேலும் கல்வியறிவு பெற்றவர்களாக உருவாக்கிவிடுவதன் மூலம் அரச உத்தியோகங்களை அவர்கள் பெறுவதற்கான வாய்ப்புக்களினால் சமூக அந்தஸ்த்து படிநிலையேற்றத்தை வேண்டி நிற்பதான சமூகப்பிராணியாகவும் மாற்றம் பெற்றவளாகி விடுகிறாள். இது இன்றைய கட்டம் உட்பட எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடியதாகவே அமைகிறது. மேலும் காலனித்துவம் உண்டாக்கியிருந்த பெண்களுக்கான இவ்வாறான படிநிலையேற்றத்தைச் சமூக,பண்பாட்டு,கருத்தியல் ஊடுருவலாகக் கட்டமைத்துக் கொண்ட ஆறுமுகநாவலர் போன்றோர் சைவமும், தமிழும் ஒருங்கே இணைந்த உணர்வு அலைகளைத் தோற்றுவித்தபோதும் சாதீயம், பெண்ணைக் கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்களில் புதிய சிந்தனைகளைப் பெற மறுத்தவர்களாகளாக அமைந்தமையினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதற்கும், பெண்களை மேலும் கடுமையான விதிமுறைகளுக்குள் ஆழ்த்துவதற்குமான கோட்பாடுகளை அதிதீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகளுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் அதை நோக்கிய திசைமுகத்தையே யாழ்ப்பாணச் சமூகத்திற்கு காட்டுபவர்களாகவுமே அமைந்தார்கள்.

“பாரம்பரிய பேணுகையை மேல்நாட்டுப் மத. பண்பாட்டு ஊடுருவலுக்கு எதிரான ஒரு கேடயமாகக் பயன்படுத்த விரும்பிய ஆறுமுகநாவலரிடம் கிறீஸ்தவப் பாதிரிகளிடமிருந்து எதிர்பார்ப்பதைப் போன்று பெண் கல்வியை எதிர்நோக்குவது சிரமமே” என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுகின்றார். ஆனால் குடும்பத்திற்கான பொறுப்புக்களை மாத்திரம் அல்ல அவளது உணர்வுகளைச் சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் ஆறுமுகநாவலர் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். 1865இல் அவரால் எழுதப்பட்ட “நான்காம் பாலபாடம்” என்னும் நூலில் அவரால் எழுதப்பட்ட நல்லொழுக்கம், கற்பு போன்ற விடயங்கள் வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பத்தாம் பசலித்தனமான பிற்போக்குக் கருத்துக்களால் நிறைந்து வழிவதாக நூலாசிரியர் சுட்டுவதை ஆழ்ந்த கவனத்தக்கு இட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது. “விதவைகள் மொட்டையடித்தல்” யாழ்ப்பாணச் சமூக மரபில் காணப்படாத போதிலும் இந்தியப் பிராமணியக் கருத்தியல்களை “இறக்குமதி” செய்து கொண்ட ஆறுமுகநாவலர் அதனை யாழ்ப்பாணச் சைவத் தமிழ்சமூக மரபிலும் ஒட்டுவதற்கு முனைந்துள்ளார்.

காலமாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு மரபு செழிப்புறுதலா அல்லது மரபுகளை உடைத்துக் கொண்டு சமூகம் மாறுதலுக்குள்ளாவதா அல்லாவிடின் இரண்டும் இணைந்தும், முரண்பட்டும் வரலாறு இயங்கியலுக்குள்ளாவதா என்பது போன்ற வாதப்பிரதிவாதங்கள் சமூகங்களில் தொடர்ச் சக்கரமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஒருவகையில் ஆறுமுகநாவலரது அடுத்த கட்டத் தொடர்ச்சியாகவே சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தோடு வந்த சேர்.பொன்.இராமநாதனை (ஆங்கிலேயப் பெண்மணியை அவர் மணம் முடித்தபோதும்) நோக்க முடியும். இலங்கை முழுமைக்குமான தேசிய அரசியலில் நாட்டம் கொண்டு பிரபல்யம் அடைந்திருந்த இராமநாதனே முதன்முதலாகப் பெண்களுக்கான சைவப்பாடசாலையை அதுவும் விடுதிப்பாடசாலையாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் அமைந்த மருதனாமடத்தில் 1913இல் நிறுவினார். 1820 களின் ஆரம்பத்தில் கிறீஸ்தவ மதக் குழுக்களினால் பெண் விடுதிப் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்ட வேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்பிள்ளைகள் அப் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதற்கும், கல்வி பெறுவதற்கும் யாழ்ப்பாண உயர் வேளாள குலம் பல்வேறுவகைகளில் தடைகளையும், குளறுபடிகளையும் விளைவித்திருக்கின்றது.

Wednesday, June 13, 2007

தேசம், தேசியம்,
தேசிய இயக்கங்கள்

-நடராஜா முரளிதரன்-

''தேசம், தேசியம், தேசிய இயக்கங்கள் ஆகியன எந்தவொரு இறுக்கமான சூத்திரத்துக்கும் கட்டுப்பட்டவையல்ல. தேசங்கள் “இயற்கையாக” உருவாகின்றவையல்ல, மாறாகக் “கற்பிதம் செய்யப்பட்ட சமூகங்களே”.

-பெனடிக்ற் அன்டர்சன்-

இவ்வாறு “அன்டர்சன்” மொழிகின்ற போது “கற்பனைச் சமூகம்” என்ற உடனடி முடிதலுக்கு விரைந்திடாது இவ்வுலக நடைமுறை யதார்த்தங்களின் அக, புறக் காரணிகளின் அடிப்படையினால் கட்டமைந்த புரிதலுக்குள்ளான “கற்பிதமாகவே” மேற் கண்ட சொல்லாடல்களை நான் பொருள் கொள்ளவிழைகின்றேன்.

உலகப் போர்களின் போது பெரு வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் இருந்து எழுந்த “தேசிய வெறி” அந்த நாடுகளைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் தனது தேசத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா அல்லது தனது தொழிலாளி வர்க்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா என்ற மாபெரும் வினாவைத் தொடுத்து நின்றது.

அசுர வளர்ச்சி கண்ட முதலாளித்துவம் ஏகாதிபத்திய விரிவு பெற்று சந்தைப் போட்டியில் இறங்கியதன் விளைவான உலகப் போர்கள் அந்தப் பேரரசுகள் சிதைந்து போகாமலே அவற்றைப் பொதுவுடமை அரசுகளாக மாற்றம் காணச் செய்து விடும் என்பதில் மார்க்சீய அறிஞர்களில் பலர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

எனவே அவ்வாறான பேரரசுகளுக்குள் உள்ளடங்கியிருந்த தேசங்களுக்கும்,தேசிய இனங்களுக்கும் விடுதலை வழங்குவது குறித்து உரிய கோட்பாடுகளை நெறிப்படுத்துவதில் பொதுவுடமைசார் அறிஞர்களில் பெரும்பகுதியினர் மிகுந்த தயக்கம் காட்டியே வந்துள்ளார்கள்.

ஆனால் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஓடி வந்த எங்களுக்கு அந்த நாடுகளில் காணப்படும் தேசியங்களோ தாங்கொணாத சமூக, பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளாகவே கருதப்படுகின்றது.

தேசியம் என்பது “இடது” அல்லது “வலது” வகைப்பட்ட சித்தாந்த வலைக்குள் சிக்குண்டிருக்கலாம். புரட்சிகரமானதாகவோ அல்லது பழமை சார்பானதாகவோ கூட இருக்கலாம். ஆயினும் அரசியல் கருத்தாக்கம் என்ற வகையில் அது ஏற்கனவே சமூகத்தில் நிலைபெற்றுள்ள அரசியல் கேள்விக்குள்ளாக்கப்படும் வேளைகளில் தனது கருத்தாக்கச் சக்தியை நிறுவுவதற்கான வாய்ப்பான தளத்தில் எழுந்து நிற்கிறது.

பாசிசமாக எழுந்து நின்ற ஜேர்மனியத் தேசியவாதம் தொட்டு முற்போக்குப் பதாகைகளைத் தாங்கிய ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்கத் தேசியங்கள் ஈறாக அனைத்துத் தேசியங்களுமே தமது பண்டைய வரலாறுகளை, பழமை வாய்ந்த கலை - இலக்கியப் பெருமைகளை, இதிகாசத் தொன்மங்களை முரசறைவது வழக்கம்.

அண்மைக் காலத் தமிழகத்தின் வரலாறு கூட சாதியொழிப்புப் போராட்டமாக, பார்ப்பனீய எதிர்ப்புப் போராட்டமாக, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டமாக வீரியம் பெற்று ஈற்றில் தமிழ்த் தேசியமாக மாற்றம் பெற்றதை உற்றுப் பார்க்கையில் உள்ளக உணர்வுக் கிடக்கைகளான மொழியுணர்வு, பண்பாட்டுணர்வு போன்றவை சமூகங்களை ஈர்ப்பதில், அணி கொள்ள வைப்பதில் அபரிமித ஆற்றல் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன.

ஆகவேதான் சமுதாயப் பிரச்சினையைத் தேசியப் பிரச்சினையிலிருந்து முற்றாகப் பிரித்துப் பார்ப்பதென்பது அந்த சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரப் பரிமாணங்களை விளங்கிக் கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்தி விடக் கூடும்.

நவீன தமிழகத்தில் எழுச்சியடைந்திருக்கும் தலித் விடுதலை உணர்வுகளும் கூட அதன் தமிழ்த் தேசியக் கலப்பிலிருந்து விடுபடவே முடியாத சம கால வரலாற்றுச் சூழலை நாம் அவதானிக்கலாம்.

தேசியம் பற்றிய எந்தவொரு கோட்பாட்டையும் வகுக்காததுதான் மார்க்சீயத்தின் மிகப் பெரும் தோல்வியாகும் என மார்க்சிய அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். ஆயினும் மார்க்சீய வழித் தடத்திலே பயணித்த “லெனின்” பின்வருமாறு கூறியிருந்தார்.

“ சுய நிர்ணய உரிமை என்ற அரசியல் சுதந்திரத்தை நாம் ஏற்கிறோம். அதாவது ஒடுக்கும் தேசங்களிலிருந்து பிரிவினையைக் கோருகின்றோம். அதற்குக் காரணம் நாம் பொருளாதார அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதற்குக் கனவு கண்டோம் என்பதாலோ அல்லது சிறிய அரசுகளை உருவாக்குதல் என்ற இலட்சியத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதாலோ அல்ல. மாறாக உண்மையான ஜனநாயக அடிப்படையில், உண்மையான சர்வ தேசிய அடிப்படையில், மேலும் பெரிய அரசுகளையும் மேலும் நெருக்கமான ஒற்றுமையையும் ஏன், தேசங்கள் இரண்டறக் கலந்து விடுவதையும் கூட விரும்புகின்றோம் என்பதால்தான். பிரிந்து போகும் சுதந்திரமில்லாமல் இதை நினைத்துப் பார்க்கவே முடியாது.”

“மார்க்சீயத்திற்கும் தேசியத்திற்கும் இடையேயான உறவு ஒரு சிக்கல் மிகுந்த உரையாடலாகவே தொடருகின்றது” என்று இன்னுமொரு மார்க்சீய அறிஞர் குறிப்பிட்டிருந்தார்.

எனவேதான் பொதுவுடமைச் சித்தாந்தத்தின் பேரால் உலகெங்கணும் பொதுவுடமையாளர்களும், பொதுவுடமை இயக்கங்களும் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாகப் புரிந்த வரலாற்றுத் தவறுகளையும், குற்றங்களையும் மறந்து விடாது மீண்டுமொரு முறை வரலாற்றின் குப்பைத் தொட்டிகளுக்குள் ஆழ்ந்து அவற்றை மீண்டுமொரு முறை புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.

சகல சித்தாந்தங்களின் பேரால் அமைக்கப்பட்ட அரசுகள் யாவுமே மக்களின் தனித்துவங்களை, அவர் தம் அடையாளங்களைப் புறந்தள்ளித் தீர்வுகளை மேலிருந்தவாறு திணித்து ஒடுக்குதலுக்குள்ளாக்கியதன் விளைவாகவே தேசியமும், தேசிய இயக்கங்களும் தோன்றின. புதிய தேசங்களும் பிறந்தன.

(துணை நூல்; : எஸ்.வி.ஆர் எழுதிய “தேசிய இனப்பிரச்சினை” என்ற கட்டுரை)
பிரிவினைக் கோரிக்கைகள்

-நடராஜா முரளிதரன்-

“சமஸ்டி” வடிவங்களை ஆய்வு செய்வதனூடாக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வுகளை முன் வைப்பதன் மூலம் இனப்பதற்றம் நிலவும் சமூகச் சூழ்நிலைகளில் ஓரளவு தணிவுகளை ஏற்படுத்தும் வரலாற்றுக் கள நிலவரங்களை சமாதான ஏற்பாட்டாளர்கள் என்று கூறிக் கொள்வோர் ஊக்குவிக்கும் முறைமையை உலகெங்கணும் நாம் பரவலாகக் காணுகின்றோம்.

இதே வகையான அடிப்படையைக் கருத்திற் கொண்டு 2002களில் தமிழர் தரப்பும், சிறிலங்கா அரசும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்த வேளைகளில் “ஒஸ்லோ பிரகடனம்” என்ற பதம் ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகப் பிரபல்யம் அடைந்திருந்தது. இந்த “ஒஸ்லோ பிரகடனம்” மூலம் பிரிவினைக் கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிட்டுவிட்டதாகவே உலகப் பத்திரிகைகள் எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தன.

உள்ளக “சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பிரதேச சுயாட்சிக்கு உரித்துடையவர்கள் என்ற முறைமையில் அது தொடர்பான தீர்வுத்திட்டங்களைப் பரிசீலிக்கத் தயார்” என்ற தமிழர் தரப்பின் அறிக்கைகள் திம்புப் பேச்சுவார்தைக் காலம் தொட்டு அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு வந்துள்ளன.

ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின் போது கனடாவைச் சேர்ந்த அரசியலமைப்பு அறிஞர் குழாம் ஒன்று “சமஸ்டி ஆட்சியமைப்பின்” அரசியலமைப்பு அடுக்கு முறைமைகள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் ஆலோசனைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இதில் முன்னாள் ஒன்ராறியோ மாகாண முதல்வர் “பொப் ரே”யும் அடங்கியிருந்தார்.

கனடா நாட்டின் அரசிலமைப்பு நிபுணர்கள் இரு தரப்பினரோடும் கருத்துக் கூறல்களையும், உரையாடல்களையும் நிகழ்த்தியதன் விளைவாகவே “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் ஐக்கியமான இலங்கைக்குள் சமஸ்டி ஆட்சி முறை தழுவிய தீர்வு” ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.

தேசங்கள் அமைக்கப்பட்டுவிட்டாலும் தேசத்துள் வாழும் மக்களுக்கான பிரச்சினைகள் வேறு ரூபங்களில் தொடரவே செய்யும் எனக் கருத்துக் கூறும் அறிஞர்கள் வலிமையுடைத்த தேசியம் சந்தையை விரிவு படுத்தவும், புவியியல் பரப்பு எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், உள்ளக மக்களின் பிரச்சினைகளைத் திசைதிருப்பி விடவும் வன்முறை சார்ந்த வழித்தடத்திலேயே பயணிக்கின்றது என்பதில் நம்பிக்கை கொள்ளுகிறார்கள்.

பெரியார் ஓரிடத்தில் கூறுகிறார். “இந்தியா ஒரு தேசமா? அதற்கு மொழி ஏது? மதம் ஏது? இந்து மதத்தால் இந்தியா தேசம் ஆயிற்று என்றால்….இஸ்லாமியருக்கும், கிறீஸ்தவருக்கும், பௌத்தர்களுக்கும், பார்சிக்களுக்கும் இந்தியா தேசமாகுமா?....மொழியைக் கொண்டு தேசம் பிரிப்பது என்றால் மாகாணம் ஒன்றுக்கு நான்கு, ஐந்து தேசங்கள் ஆகிவிடாதா?”

இங்குதான் உருவாக்கப்பட்ட, மற்றும் உருவாகி வரும் தேசங்களுக்குள்ளேயும் மேலும் புதிய வகைப் பிரச்சினைகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. கனடாவில் பிரஞ்சு மொழி பேசும் மக்களின் கியூபெக் பிரிவினைப் போராட்டத்தின் போது இப் பிரச்சினை ஒட்டாவோவின் அதி உயர் நீதிமன்றத்தால் கையாளப்பட்ட போது அதன் தீர்ப்பின்; சாரமானது இவ்வாறு கூறுகின்றது.

“அரசியல் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அல்லது நிறுவிக் கொள்ளும் உரிமையான வெளியக சுயநிர்ணய உரிமை, மேலாட்சிக்கு உட்பட்டு வாழும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் உரித்தானதாகும். ஒரு மக்கள் சமூகம் இன்னொரு சமூகத்தின் மேலாதிக்கத்தினுள் சிக்குண்டு தவிக்கும் போது அடக்குதலுக்கு உள்ளான சமூகமானது வெளியக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டலாம்.” “மேலும் ஒரு மக்கள் சமூகம் தனது உள்ளக சுயநிர்ணய உரிமையை அர்த்தபூர்வமான முறையில் அடைவதற்குத் தடை ஏற்படுமானால் இறுதி வழிமுறையாகப் பிரிந்து செல்லும் உரிமையைப் பிரகடனப்படுத்த அந்த மக்களுக்கு உரிமையுண்டு.”

இதே வகையிலான அம்சங்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை தொடர்பான பிரகடனங்களையும் நாம் கண்டு கொள்ள முடியும். இங்கு வெளியக சுயநிர்ணய உரிமையென்பது ஒரு மக்கள் சமூகமானது தனது அரசியல் தலைவிதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ளுமுகமாகப் பிரிந்து சென்று தனது அரசை நிறுவிக் கொள்ளுதல் என்பதாகும்.

அவ்வாறு ஓர் அரசைத் தமிழ்த் தேசியம் நிறுவ முற்படுகையில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்துகின்ற வடக்கு-கிழக்கு இணைந்த நிலப்பிரதேசத்தில் கிழக்கின் புவியியல் அமைவிடம் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் பரவலாகவும், செறிவாகவும் வாழும் சூழ்நிலை காணப்படுகின்றது.

எனவே இங்கு தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் அடிப்படை சார்ந்து கட்டமைக்கப்படும்(எதிர்காலத்தில் கட்டமைக்கப்படுமாயின்) தமிழ் அரச நிறுவனமானது எவ்வாறு முஸ்லீம், சிங்கள மக்களின் அரசியல் இருப்புக்களையும், எதிர்பார்ப்புக்களையும் எத்தகைய சவால்களுக்கூடாக கையாள முனையும் என்பதிலேயே தமிழ்த் தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் தீர்மானகரமாக வெளிப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்கு உள்ளக, வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளை தமிழ்த் தேசத்துக்குள் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு வழங்குவதில் எவ்வாறான அணுகுமுறையைப் பிரயோகித்தல் என்ற மாபெரும் கேள்வி எம் முன்னே கிளர்ந்தெழுகின்றது.

இவ்வாறான சிறுபான்மை இனங்களின் நியாமான அபிலாசைகளை அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் கையாள மறுத்து நிற்கும் போக்கே ஏற்கனவே கட்டப்பட்ட தேசங்களிலும், தேசியங்களிலும் பல்வேறு வகையான குழப்பகரமான நிலைகளுக்குத் தோற்றுவாய்களாய் அமைந்தன. தேசங்களின் கட்டமைவானது உலகப் போர்களாகவும், இனங்களுக்கிடையேயான வன்முறைக் களங்களாவும் மாறுண்ட போது மனிதநேயம், மானுடம் போன்றவை தூக்கி வீசியெறியப்பட்டன.

தேசங்கள் உடைகின்றன. எல்லைகள் இல்லாத, கடவுச் சீட்டுக்களின் தேவையேற்படாத ஒரு உலகம் குறித்த கனவுகள் பிறக்கின்றன.

எனவேதான் அமைய முற்படும் “தமிழ்த் தேசமும்” தமிழ் வெறியும், இன்னும் பல “வெறிகளும்” கொண்ட தேசமாக மாறி விடக் கூடாது.

Sunday, May 27, 2007

தேசியம் என்பது கதையாடலா?

-நடராஜா முரளிதரன்-

தேசம், தேசியம் என்ற சொல்லாடல்கள் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உலகச் சூழலே இன்று மேலோங்கியுள்ளது. இன்றைய உலக நெருக்கடிகள் பலவும் இந்தச் சொற்பதங்களின் உச்சக்கட்டத் தாக்கங்களை உள்ளடக்கியதாகவே கிளர்ந்த வண்ணம் உள்ளன.

நாடுகளுக்கு நாடுகள், தேசங்களுக்குத் தேசங்கள் இச் சொற்றொடர் குறித்த வியாக்கியானங்களோ அல்லது வரைவிலக்கணங்களோ வேறுபட்டுக் காணப்படுகின்றன. மொழித் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு தேசங்களும், தேசியங்களும் நவீன வரலாற்றில் பிறப்பெடுத்தமை குறித்த வரலாறுகளைப் பதினெட்டாம்; நுற்றாண்டு கால ஐரோப்பிய அரசியல், அறிவியல் புரட்சிகளின் வெளிப்பாடுகளாகவே ஆய்வாளர்கள் நோக்குகின்றனர். தேசியத்தின் எழுச்சியும், மதச் சிந்தனைகளின் வீழ்ச்சியும் சமகால அளவில் நிகழ்ந்ததன் விளைவாகப் பதினெட்டாம் நூற்றாண்டு கால ஐரோப்பாவில் நவீன தேசங்கள் தொடர்பான கட்டுமானங்கள் வலுப்பெறத் தொடங்கியிருந்தமையை உணர முடியும்.

இத்தகைய நவீன தேசங்களின் எழுச்சியில் காலனியாதிக்கம், மத நிறுவனங்களின் ஏகபோகம், முடியாட்சி போன்ற அதிகாரபீடங்களுக்கெதிரான கிளர்வுகளின், எழுச்சிகளின் உணர்வுகள் ஊட்டம் பெற்றிருந்தன. ஆயினும் தேசியம் என்பதானது மரபு, இனம், மதம், மொழி போன்ற ஒருமைப்பாடுகளிலிருந்து எழும் அல்லது கட்டப்படும் பொதுவான உளவியல் சார்ந்த உணர்வுத்தளத்தையே பெரிதும் சார்ந்து நிற்கிறது.

அவரவர் முகிழ்த்து வந்த அரசியல் அடியினையொற்றித் தேசிய இனம் தொடர்பான கருத்துருவாக்கங்கள் எம்மால் பேசப்பட்டு வந்துள்ளன. இந்த வகையில் தேசிய இனம் தொடர்பாக நான் வரித்துக் கொண்டிருந்த கருத்தமைவானது மொழி, பண்பாடு, தொடர்ச்சியாக வாழ்ந்த நிலப்பிரதேசம், தங்களுக்கேயுரித்தான பொருளாதார வாழ்வு போன்ற வரைமுறைகளைக் கொண்டிருக்கும் மக்கள் குழுமங்களைத் தேசிய இனங்களாக வரையறுத்துக் கொள்ளலாம் என்பதாகவே அமைந்தது. இங்கு மதம் இணைந்து கொள்ளவில்லை. ஏனெனில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் பரிமாணங்களுக்கு வலுவூட்டுவதே நான் சார்ந்திருந்த அரசியல் போக்கின் நலன்களுக்கு அமைவாக இருந்தன.

“தேசியவாதம் உச்சத்திலிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியத் தேசியங்களால் அவற்றிற்கு முட்டுக்கொடுப்பதற்காக உருவான சமூகவிஞ்ஞானக் கற்கைநெறிகள் இன்று முற்றாக மறக்கப்பட வேண்டியவை, மாற்றியமைக்கப்பட வேண்டியவை என்பது உலகப் பொதுக் கல்விக் கருத்து” எனத் தனது உரையொன்றில் பேராசிரியர் பொ.இரகுபதி குறிப்பிட்டிருந்தார்.

மொழி, மதம், வரலாறு, பொருளாதாரம், புவியியல் அமைவிடம் போன்ற பொதுக் காரணிகளை அடிப்படையில் வைத்துக் கட்டப்பட்ட தேசங்களுக்குள்ளேயும் புதியவகைச் சிக்கல்கள் எழுந்த வண்ணமே இருந்தன.

வர்க்கப்பிரச்சினை தீர்க்கப்படுழ் சமூகங்களில் இன, மத, மொழி முரண்பாடுகளுக்கான வாய்ப்புக்கள் அழிந்தொழிந்து போய்விடும் என்பதான சூத்திரத்தையே இடதுசாரிகளில் பெரும்பாலோனோர் ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள்.

மார்க்சீய-லெலினியக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சோசலிச நாடுகளிலேயும் கூட சிறுபான்மைத் தேசிய இனங்கள் அடக்குதலுக்கு உள்ளான வரலாறுகள் கண் முன்னே விரிந்து கிடக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலைகளுக்கு இடையே இங்கு நான் விசாரிப்புக்கு உட்படுத்த முனையும் விடயமானது ஈழத்திலே வாழுகின்ற தமிழ்பேசும் மக்களைத் தேசியம் என்ற வேலிக்குள் அடைப்பது தொடர்பான விடயத்தை ஒட்டியதெனலாம்.

ஈழத்தமிழ்த் தேசியமாக உச்ச வளர்ச்சியுற்ற யாழ்ப்பாணியம் கீழ்த்தட்டு மக்கள் குறித்துக் கவலை கொள்ளவில்லை - கிழக்கு மக்கள் குறித்தோ, முஸ்லீம் மக்கள் குறித்தோ அக்கறைப்படவில்லை - தலித்துக்கள் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற வகையில் இவ்வாறான தொடர் குற்றச்சாட்டுக்கள் மாற்றுக்கருத்தாளர்களால் ஈழத்தமிழ்த் தேசியத்தை நோக்கி முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

வளர்ச்சியுறும் எத்தேசியத்துக்குள்ளும் அதிகாரசக்திகள் தங்கள் நலன்களைப் பேணுமுகமாக மரபுகளின் காத்தலை, பழமையின் தொடர்ச்சியை நிறுவுதலுக்கான அவாவினைக் கொண்டிருப்பர்.

மறுபுறத்தில் தேசிய இனவிடுதலையென்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலையல்ல. விடுதலை குறித்த பயணத்தில் ஒரு படிக்கட்டமாக அதனை ஊடறுத்தலே ஏற்புடையதாக அமையும்.

“உலகம் கிராமமாகச் சுருங்கிவிட்டது”, “தேசம் என்ற கருத்தமைவு உடைந்து நெடு நாளாயிற்று” என்பது போன்ற கருத்துருவாக்கங்கள் வீரியம் பெற்றுவரும் இன்றைய உலகச் சூழுலிலும் கூடத் தேசங்களுக்குள்ளும், தேசியங்களுக்குள்ளும் காலகாலமாக நசிக்கப்பட்ட மக்கள் குழுமங்கள் தங்கள் நியாயத்தீர்ப்புக்காக குரலெழுப்புவதைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாதுதான்.

அதேவேளை இந்த முரண்பாடுகளையெல்லாம் வெளித்தாண்டிப் பலம் பொருந்திய இன்னுமோர் சக்தி இந்த முரண்தழைகளுக்குள் சிக்குண்ட சமூகங்களை அடக்குதலுக்கு உட்படுத்த முனையுமாக இருந்தால் அவ்வாறான சமூகங்கள் எடுத்தாள வேண்டிய நிலைப்பாடுதான் என்ன? இவ்வாறான எனது கூறலைப் “பச்சை யாழ்ப்பாணியம்” என்று பிரகடனப்படுத்த உங்களில் பலர் துடித்தெழலாம்.

எவ்வாறு ஒடுக்குதலுக்கு உட்பட்டதால் விழைந்த தேசியவாதம் குறுந்தேசியவாதமாக மாறிவிடக்கூடாதோ அதே சமாந்தரத்தில் வரலாற்றுச் சக்கரங்களைப் பின்னோக்கி இழுத்து நிறுத்துகின்ற குளறுபடிகளையும் அதிகாரத்தை நோக்கி உண்மை பேசுவதாகக் கூறிக்கொள்வோர் நிகழ்த்தி விடக் கூடாது.

கடந்த 25 வருடங்களாக மக்களே மகத்தான சக்திகள், அவர்களே இறுதியில் வரலாற்றைத் தீர்மானிப்பார்கள் என்று மொழிந்து வந்தபோது ஏற்படாத சந்தேகம் இன்று வரலாறு திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுவதாகவோ அன்று யாழ் குடாநாட்டு மத்தியதர வர்க்கத்தின் அபிலாசைகளுக்காகத் திணிக்கப்பட்ட “பெருங்கதையாடலாகவோ” தமிழ்த் தேசியம் சித்தரிக்கப்படுவதும் பல முனைகளில் வiலாற்றுத்திரிபுகளும், மிகைப்படுத்தல்களுமாய் நிறைந்து வழிகின்றது.

சமூக விடுதலைக்கான போர்த்தொடுப்பில் தேசியக் கருத்தமைவின் பெறுமானங்களைக் கேள்விக்குட்படுத்துதல் அதன் குறைபாடுகள் குறித்த பரிமாணங்களை அளவைப்படுத்துதல் என்பவை குறித்து எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது.

மாறாக அவற்றை முற்றிலும் நிராகரிப்பது குறித்தோ அவையுள்ளடக்கி வைத்திருக்கும் முற்போக்குக் குணாம்சங்களை மறுதலிப்பது குறித்தோ பெரிதும் அச்சப்படுகின்றேன்.

Friday, December 08, 2006

நான் போக முடியாத “மாவீரர் நாள்”

-நடராஜா முரளிதரன்-

1998 இன் நடுக்கூறில் நான் கனடாவிற்குள் நுழைந்த பின் அரசியல் தஞ்சம் கேட்டு 40 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தேன். அதன் பின் ஏறத்தாள இரண்டரை மாதங்கள் வரை கனடியச் சிறைகளுள் அடைக்கப்பட்ட பின்னர் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் கனடிய டாலர்கள் பிணை(ஒரு இலட்சம் வீடு, ஐம்பதினாயிரம் பணம்) அரசியல் செயல்பாடுகள் தொடர்பான 14 நிபந்தனைகள் உட்பட இரு வாரங்களுக்கு ஒரு தடவை “இமிக்கிரேசன்” அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திடல் போன்ற கண்டிப்பான நீதிமன்ற உத்தரவுகளின் பேரிலேயே நான் விடுதலை செய்யப்பட்டிருந்தேன்.

அதன் பின் ஏழரை வருடங்களின் பின் இவ்வருட மத்தியில் எனது பெயருக்கு முதற் தடவையாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடிய வேலை செய்ய அனுமதிக்கும் பத்திரம் வழங்கப்பட்டது. ஆயினும் இது வரை இலவச மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான “ஹெல்த் கார்ட்” எனக்கு வழங்கப்படவில்லை.

எனது மகள் உயர் கல்வி பெறுவதற்காக பல்கலைக் கழகத்துள் உட் புகுந்த போது அவளால் எந்தக் கடனுதவியையும் “ஒன்ராரியோ” அரசிடமிருந்து பெற முடியாமல் போனது. மாறாக “வெளிநாட்டு மாணவர்” என்ற இலச்சினை பொறிக்கப்பட்டு இரண்டரை மடங்குக்கு மேலான (குடியுரிமை பெற்ற அல்லது நிரந்தர வதிவிட உரிமை பெற்ற மாணவர்களோடு ஒப்பிடுகையில்) கட்டணத்தைப் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்துமாறு நிர்பந்திக்கப்பட்டாள்.

இவ்வாறான கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகள் ஒரு புறமிருக்க அரசியல் செயல்பாடுகள் தொடர்பான நீதிமன்றத்தின் கண்டிப்பான 14 நிபந்தனைகளும் எத்தகைய மீறல்களுக்கும் உட்படுத்தப்படாமல் என்னால் பேணப்பட வேண்டியவை. அல்லாவிட்டால் எனது பிணைகள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டு நானும் சிறையுள் மீண்டும் தள்ளப்படலாம்.

அத்தகைய நிபந்தனைகளுள் “விடுதலை புலிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ஆதரிக்கும் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் போன்றவற்றில் நான் பார்வையாளனாகவோ அல்லது பங்காளனாகவோ கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை என்பது முக்கியமான ஒன்று.

அரசியல் வேலைத் திட்டங்களை ஆழ் மனதில் புதைத்துக் கொண்டு கனடாவுக்கு நான் வந்ததாக யாரும் என்னை சந்தேகிக்கத் தேவையில்லை. ஆயினும் “மாவீரர் நாள்” வந்து போகும் வேளைகளில் அவ்வாறான நிகழ்வொன்றுக்கு நான் போக முடியாதது குறித்து எனது மனம் துயருறுவது வழக்கம்.

இத்தகைய எனது துயரத்துக்கு “அரசியல் முலாம்” பூசி விட முடியாது. நான் சார்ந்த அல்லது சார முயலுகின்ற அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டுச் சாதாரண தனி மனிதனாவே அந்த வேதனையின் வெளிப்பாடுகளைச் சுமந்து செல்ல நேருகிறது. ஈழப் போராட்ட களம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல்களில் இருந்து கொப்பளித்துப் பாய்ந்த குருதி வெள்ளத்தினால் சேறாகிய “குருN~த்திரமாகவே” கடந்த இரு தசாப்தங்களாகக் காட்சியளிக்கிறது.

அந்த மண்ணில் வாழ்ந்த, வாழும், வீழ்ந்த, வெளியேறிய மண்ணின் மைந்தர்கள் யாவருக்கும் அந்த மண்ணோடு பிணைந்த சொல்ல முடிந்த, சொல்லில் வடிக்க இயலாச் சரிதங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றாக என்னை மிகவும் பாதித்து நிற்கின்ற ஈழப் போர்க்களத்தில் வீழ்ந்து மடிந்த எனது நண்பன் “லிங்கம்” பற்றிய எண்ண அலைகள் சிலவற்றையே இங்கு மீட்க முயலுகின்றேன்.

1970 களில் காங்கேசன்துறை, தையிட்டியிலுள்ள “பொன்னுச்சாமி” வீட்டிற்கு மலையகத்திலிருந்து பத்து வயசு வேலைக்காரச் சிறுவனாக யாழ்ப்பாண “மேலாதிக்கப்” பேச்சு வழக்கில் “வடக்கத்தைப் பெடியனாக” லிங்கம் வந்திருந்தான்.

பொன்னுச்சாமி குடும்பத்தினர் கோவில், திருமண விழாக்களுக்கு சப்பறம் கட்டுதல், மாலை கட்டுதல், சிறிய கோவில்கள் சிலவற்றுக்குப் பூசை செய்தல் போன்ற பணிகளைப் புரிந்து கொண்டு “பாஸ்கரன் கோ~;டி” என்ற பெயரில் சிறிய இசைக் குழுவொன்றையும் இயக்கிக் கொண்டிருந்தார்கள்.

வந்த ஆரம்பத்தில் “லிங்கம்” அந்தக் குடும்பத்திற்குத் தேவையான எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். அந்த வேளைகளில் மாலை கட்டுவதற்குத் தேவையான முல்லை மலர்களைக் கொய்வதற்காக அடிக்கடி அவன் எனது வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அந்த வேளைகளில்தான் அவனுக்கும், எனக்குமான நட்பு மலர ஆரம்பித்தது. பின்பு அவை வாசிகசாலைச் சந்திப்பு, மாலை நேரங்களில் விளையாட்டு மைதானங்களில் சந்திப்பு எனவும் அவ் வேளைகளில் எங்களுக்குத் தெரிந்த அரசியல் குறித்துப் பேசிக் கொள்ளுதல் எனவும் நீண்டு விரிந்து சென்றது.

வழமையான யாழ்ப்பாண நடைமுறைகளுக்கு மாறாகப் “பொன்னுச்சாமி” குடும்பத்தினர் “லிங்கத்தை” தங்களில் ஒருவனாகக் கருதி அவனது பெயரை “பாஸ்கரன்” எனப் பெயர் மாற்றப் பதிவும் செய்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன் மிகச் சிறிய வயதுகளில் வசதி படைத்த பரங்கிய, சிங்களக் குடும்பங்களின் வீடுகளில் வீட்டு வேலைகள் புரிந்தமையினாலும், மலயகப் பின்னணியில் பிறந்து வளர்ந்தமையினாலும் “லிங்கம்” அந்தச் சின்ன வயதுகளிலேயே சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் மிகச் சரளமாகப் பேசக் கூடியவனாக இருந்தமை எங்களில் பலரைப் பிரமிக்க வைத்தது.

எங்கள் இருவரையும் பிணைத்துக் கொண்ட அந்தப் பால்ய சிநேகிதம் காரணமாக நாளடைவில் நான் சார்ந்த அரசியல் கருத்துக்கள் பால் அவன் ஈர்க்கப்படலானான் என்று கூறுவதை விடவும் என்னால் அதை நோக்கி இழுக்கப்பட்டான் என்று கூறுவது மிகப் பொருத்தமான உண்மையாக அமையுமோ எனச் சில வேளைகளில் நான் எனக்குள் நினைத்துக் கொள்வது வழக்கம்.

அவனுக்குத் தாய், தந்தையர், சகோதரர்கள், சொந்த உறவுகள் என யாரும் இருந்ததில்லை. எங்களோடு சேர்ந்து நாடகம் நடிப்பது, இசைக்குழுவில் “தபேலா” வாசிப்பது, ஓய்வான மாலைப் பொழுதுகளில் “கிரிக்கெட்” ஆடுவது போன்றவைகள் அவனைப் பரவசப்படுத்தின. சில வேளைகளில் நானும், லிங்கமும், எங்களது இன்னுமொரு நெருங்கிய நண்பனுமான நிமலேந்திரனும் சேர்ந்து கொண்டு காங்கேசன்துறைக் கடற்கரையில் “பனங்கள்” அருந்திப் “பார்ட்டி” கொண்டாடினோம். எனது மனைவியைக் குரும்பசிட்டியிலிருந்து நான் தூக்கிக் கொண்டோடி வருவதற்கு என்னோடு கூடவே அவனும் வந்திருந்தான்.

ஆனாலும் 80களில் வரலாறு இறுக்கிய “இன முரண்” சிக்கல்கள் வரலாற்றில் என்றுமேயில்லாத வகையில் இலங்கைத் தீவைப் பிரளயத்தை நோக்கித் தங்குதடையின்றிப் பயணிக்குமாறு உந்தித் தள்ளியது.

நாங்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. நான் ஏற்கனவே இரகசியமாகப் பணிபுரிந்து கொண்டிருந்த அமைப்பை நியாயப்படுத்துவதிலும், அதன் அமைப்பு வேலைகளைக் கட்டுவதிலும் தீவிரமாக ஈடுப்டிருந்த வேளைகளில் இயல்பாகவே “உணர்ச்சிவசப்படும்” இயல்பு படைத்த “லிங்கம்” எனக்கு உதவ முன் வந்தான்.

நாள் தோறும் இரவுகளைப் பகலாக்கி எம்மால் முடிந்தளவு அரசியல் வேலைத்திட்டங்களில் எங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தோம். அவ்வேளைகளில்தான் ஓர் நாள் இரவு “கர்ப்பிணியாக” இருந்த எனது மiவியைப் பார்க்கச் சென்ற சமயம் பார்த்து பலாலி இராணுவத்தினரால் நான் கைது செய்யப்பட்டேன்.

எனது கைது ஏற்படுத்திய காயம், அதனால் எழக்கூடிய சிக்கல்கள் அனைத்துமே “லிங்கத்தை” போர்க் கோலம் பூணுமுகமாக தமிழ்நாட்டுப் பயிற்ச்சி முகாமை நோக்கிப் படகேற வைத்தது. பயிற்ச்சி முடிந்து ஆயுதம் தாங்கிய “போராளியாக” மீண்ட “லிங்கம்” “யஸ்ரின்” என்ற புதிய பெயர் கொண்டு அழைக்கப்பட்டான்.

நான் சிறைக்குள் கம்பிகளை எண்ணிக்கொண்டிருந்த வேளைகளில் களங்கள் பல புகுந்த “யஸ்ரின்” பல விழுப்புண்களைத் தனதாக்கிக் கொண்டிருந்தான்.

அந்த “யஸ்ரின்” ஆகிய எனது “லிங்கம்” காலச் சூறாவளி என்னைச் “சுவிசில்” கரை சேர்த்த 90 களில் மணலாற்றில் இடம்பெற்ற “போர் விமானக் குண்டுவீச்சில்” பொடித் துகள்களாக்கப்பட்டான். சுக்கு நூறாக்கப்பட்ட அவனது தசைப் பிண்டங்களையோ, நொருங்கி முறிந்த அவனது எலும்புத் துண்டங்களையோ யாராலும் சேகரிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

என் மண் குறித்த “பிரக்ஞையை” தூண்டிவிட்ட “யாழ்ப்பாணத்தவன்” நான் தப்பிவிட, இழப்பதற்கு “உயிர்” தவிர ஏதுமற்ற அசல் பாட்டாளியான மலை நாட்டுத் தோட்டத் தொழிலாளி குடும்பத்தின் “லயனுகளுக்குள்” பிறந்து வளர்ந்த “லிங்கம்” தன்னை ஏன் ஆகுதியாக்கிக் கொண்டான்?

அவனது இறப்புக் குறித்து அழுவதற்கு இரத்த உறவுகள் எவருமே அற்ற இந்த உலகில் “லிங்கம்” அவன் மரியாதைக்கு உட்படுத்தப்படும் அன்றைய நாளிலாவது தனி மனிதனாக என்னால் சென்று சில கணங்கள் தொழப்படுதற்கான தடைகளை ஏன் என்னால் வெற்றி கொள்ள முடியாதுள்ளது?

Thursday, November 09, 2006

தேர்தலும், தமிழ் வேட்பாளர்களும்

-நடராஜா முரளிதரன்-

நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் நகரசபை, பிரதேச சபை, கல்விச் சபைத் தேர்தல்களில் வாக்களிப்பது தமிழர்களின் வரலாற்றுக் கடமையெனவும், கனடாவில் தமிழர்களுக்கு “அரசியல் தலைமைத்துவம்”, “பிரதிநிதித்துவம்” தேவையெனவும் கடந்த சில தினங்களாகப் பத்திரிகைப் பத்திகள் எழுதப்பட்டும் , பேட்டிகள் வழங்கப்பட்டும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பரப்புரைகள் ரொறொன்ரோ, மார்க்கம், மிசிசாகா எங்கணும் பரவலாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.

1977 இல் இடம்பெற்ற இலங்கைப் பொதுத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழீழத்துக்கான மக்கள் ஆணையைப் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்;பாகவும், இறுதித் தேர்தலாகவும் அத் தேர்தலைப் பிரகடனப் படுத்துவதாகக் கூறி ஒட்டுமொத்ததாகத் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அதற்கு ஆதரவாக வாக்களிப்பது வரலாற்றுக் கடமையென அழைப்பு விடுத்திருந்தார்கள். ஆனால் இன்று ஏறத்தாள மூன்று தசாப்தங்களைக் கடக்கின்ற சூழலிலும் சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் சாசனத்துக்குள் உட்பட்டுத் தமிழர் தரப்பின் அனைத்து வகையினரும் பங்கு கொண்ட தேர்தல் களங்களாகவே அண்மைய தேர்தல் களங்கள் யாவும் இலங்கைத் தீவில் அரங்கேறியிருந்தன.

எனவேதான் தேர்தல் காலத்து அரசியல்வாதிகளின் பிரச்சாரப் பரப்புரைகளின் போது வழங்கப்படும் வாக்குறுதிகள் குறித்த மக்களின் நம்பகத் தன்மை மேற்குலக நாடுகள் தொட்டு, மூன்றாம் உலக நாடுகள் ஈறாக எவ்வாறு அமையப் பெறுகின்றன என்பது மக்களைப் பொறுத்த வரையில் மிகச் சிக்கலான, சோகமான விடயமாக அமைந்து வருகின்றன.
கனடாவில் ரொறொன்ரோ (மார்க்கம், மிசிசாகா உட்பட) போன்ற பல்லினச் சமூகங்கள் நிறைந்து வாழும் பெரு நகரம் ஒன்றில் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் கனடியத் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கலாம் என்று மொழியப்படும் வாதங்களோ , அல்லது இங்கு வாழுகின்ற தமிழ் மக்களுடைய உணர்வுகளை, அபிலாசைகளைப் பிரதிபலிக்கலாம் என்பவை போன்ற கருத்துக்களோ மிகுந்த விவாதத்திற்கு உரியன என்றே நான் கருதுகின்றேன்.
சம~;டி ஆட்சி முறை அமுலில் இருக்கும் கனடா போன்ற நாட்டில் அதிகாரங்கள் தேசிய அரசு, மாகாண அரசு, உள்ளுராட்சிச் சபைகள் என்பவற்றுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நகர சபைகள் போக்குவரத்து, சூழல், பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், பாதுகாப்பு, வரி போன்ற பல விடயங்களைக் கையாளுகின்றது.

எனவே பல்லின மக்கள் செறிந்து வாழும் பெரு நகர மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யப் புறப்பட்டுத் “தேர்தல் களத்தில்” குதித்தவர்கள் தாம் சார்ந்த குறித்த ஓர் “இன” மக்களையோ, அவர்கள் சார்ந்த நலன்களையோ அடையாளப்படுத்த முனைவதாகக் கூறுவது தமிழ் “வாக்கு வங்கியினைக்” கவர்ந்திழுப்பதற்கான உத்தியாகவே கருத முடியும்.

மறு புறத்தே போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் இவ்வாறான தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் கனடா வாழ் தமிழ்ச் சமூகத்திற்கு கனடாவின் “தேசிய நீரோடையில்” இணைவதற்கான நம்பிக்கை ஊட்டத்தை வழங்க முடியும் என்பது ஏற்புடையதாக அமையும். பல்வேறு துறைகளில் கால் பதித்திருக்கும் தமிழர்களது வளர்ச்சி மேலும் வலுவடைவதற்கான படிக்கட்டுக்களில் ஒன்றாக அரசியலில் உட்புகுதலும் ஒன்று என்ற கணிப்பு அண்மைக் காலங்களில் தமிழ் பேசும் சிலரால் கூறப்பட்டு வருகிறது.

கனடா வாழ் தமிழ் சமூகம் என்பது கனடிய சிவில் சமுதாயத்தின் கூறுகளில் ஒன்று. உலக அரங்கில் கனடா ஜி-7 நாடுகளில் ஒன்று. அதாவது உற்பத்தித் தொழில் துறையில் அதி முன்னணியில் நிற்கும் உலக நாடுகளில் ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை பட்டியலிடும் உலகின் மிகச் சிறந்த நாடுகள் வரிசையில் பல தடவைகள் முதலிடத்தைத் தட்டிக் கொண்ட நாடு கனடா. அந்த வகையில் இன்றைய உலகு தழுவிய “முதலாளித்துவச் சமூக” முறைமைக்குள் பல்வேறு வகை “அனுகூலங்களைப்” பெற்றுத் திளைக்கும் நாடுகளில் கனடாவும், அங்கு வாழும் தமிழ்ச் சமூகமும் அமைகிறது.

எனவே மூன்றாம் உலக நாடுகளில் வாழும் 95 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வறிய மக்களோடு ஒப்பிடுகின்ற போது எமது கனடா வாழ் தமிழ் சமூகம் வலுப்படைத்து விளங்குகிறது என்றே நான் எண்ணுவேன். ஆகவே அத்தகைய “வளம்” படைத்த சமூகத்தை மேலும் வலுப் படைத்தாக மாற்றி “வீறு” கொண்டெழுவதற்கான பயணமாக இங்கு நிகழும் உள்ளுராட்சித் தேர்தல் அரங்குகள் அமையப் போவதில்லை.

அரசியல் பிரவேசத்துக்கான ஆரம்ப கட்டமாக நகரசபை அரசியல் ஊடாக தமிழர்கள் அரசியல் நிகழ்த்தத் தயார் நிலையில் உள்ளதாக நாங்கள் “புல்லரித்துப்” போவதாலோ, “புளகாங்கிதம்” அடைவதாலோ தினந்தோறும் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் எம் ஈழத்துத் தமிழ் சகோதரர்களுக்கு நல்லது எதுவும் நிகழப் போவதில்லை.

தனி மனிதர்களைப் பலப்படுத்துவதற்கான “வேட்டைக் களங்களில்”;, “அரசியல் சூதாட்டத்தில்” தேர்தல்கள் எவ்வாறு எமது சக தமிழ் வேட்பாளர்களால் அல்லது அவர்கள் சார்ந்தவர்களால் கையாளப்பட்டது என்பதை கடந்த உள்ளுராட்சித் தேர்தல்களின் போது தமிழ் வாக்காளர்கள் பட்டு உணர்ந்து கொண்டதையும் இச் சமயத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

மறு புறத்தில் வெற்றி பெற்ற பின் தமிழ் வேட்பாளர்கள் கர்வம் கொண்டும், மாலைக்கு அலையும் “பிரமுகர்களாக” மாறியும், முழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டும் “மூன்றாம் உலக” அரசியலை இங்கு இழுத்து வரும் அவலத்தையும் நிகழ்த்தி விடக் கூடாது.

ஆனால் இவ்வாறான குழப்பகரமான எனது “கருதுகோள்களுக்கு” மத்தியிலும் மார்க்கம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் பேராசிரியர் இலகுப்பிள்ளையும், மார்க்கம் (7,8) வட்டாரத்துக்கான கல்விச் சபை வேட்பாளர் நீதன் சண்முகராஜாவும் தங்களது கடந்த காலச் சேவை வரலாற்றாலும், கல்வித் தகமைகளாலும் ஒப்பு நோக்கில் மற்றைய தமிழ் வேட்பாளர்களை விடவும் வேறுபடுத்தி நோக்கு நிலைப்படுத்தப் பட வேண்டியவர்களாக உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் மறைத்து விட முடியாது.

Monday, October 30, 2006

வடக்குக் கிழக்கு மக்களின்
இணைப்பும் பிரிப்பும்

-நடராஜா முரளிதரன்-

சில தினங்களுக்கு முன் சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் வட-கிழக்கு மாகாணங்களின் இணைப்பை சட்ட விரோதமானது எனக் கூறித் தீர்ப்பளித்தமை இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய செய்தியாகும்.
1987ஆம் ஆண்டு யூலையில் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைய 1988 இல் வட, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களையும் இணைப்பதற்கு N;ஜ.ஆர் அவசரகாலச் சட்ட விதிகளையே பயன்யடுத்தியிருந்தார்.
வரலாற்று ரீதியாகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த பாரம்பரிய நிலப்பிரதேசம் என்ற அடிப்படையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கூடாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதித் தீர்மானம் ஏற்படுத்தப்படும் வரைக்கும் தற்காலிக இணைப்பு அமுலில் இருக்கும் என்பதாகவே இந்திய-இலங்கை ஒப்பந்த ஏற்பாட்டாளர்களால் அன்றைய காலகட்டத்தில் இவ் இணைப்புத் தொடர்பாகக் கூறப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்பட்ட காலம் முதல் தமிழ் பேசும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாகவோ அல்லது அவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பவைகளில் ஒன்றாகவோ “வடக்கு- கிழக்கு” இணைந்த “தாயக நிலம்” விளங்கி வந்ததை நாம் அறிவோம்.
1957ஆம் ஆண்டு யூலையில் இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும், தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற பண்டா – செல்வா உடன்படிக்கையின் போதும் மாகாண எல்லைகளைத் தாண்டி இரண்டோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோ பிரதேச சபைகள் இணைவதற்கான விதி இடம் பெறுவதாக அவ் உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் நான் இங்கு இப் பத்தியை எழுதுவதற்கான நோக்கம் வேறு வகையிலானது எனலாம். ஏனெனில் சிறிலங்காவின் பெரும்பான்மைச் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும், அதனால் இயங்குதலுக்குள்ளாக்கப்படும் அரசு யந்திரங்களில் ஒன்றான நீதித்துறைக்கும் வட,கிழக்கு இணைப்பை சிதைப்பதற்கும், பலவீனப்படுத்தவதற்குமான நோக்கங்கள் இருப்பது குறித்து நாம் யாரும் கவலை கொண்டு விட முடியாது.

கிழக்கிலே பெருமளவில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரைக்கும் தங்களது மத கலாச்சார, பண்பாடடு விழுமியங்களைக் காப்பதில், தங்களது தனித்துவத்தை பேணுவதில் உள்ள கரிசனையை, அக்கறையை அது தொடர்பான அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்துவதில் உள்ள தர்க்க, நியாங்களை நாம் யாரும் புறந்தள்ளி விட முடியாது.
ஆனால் கிழக்கிலே வாழும், வாழ்ந்த முஸ்லீம் சாராத தமிழ் மக்கள் சிலரால் அண்மைக் காலமாகக் கிளப்பப்பட்டு வரும் கிழக்குத் தொடர்பான “மண் வாசைன” மற்றும் அதனுடன் கூடவேயான “யாழ்பாண மேலாதிக்க வாதம்” தொடர்பான குற்றச்சாட்டுக்களில் எத்தகைய குணாம்சங்கள் அவர்களிடம் இருந்து வெளித்தள்ளலுக்கு உள்ளாகி வருகின்றன என்பது குறித்த பிரக்ஞை அல்லது சிந்தனைத் தளம் இங்கு அவசியமானது என்று நான் கருதுவேன்.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் மக்கள் கூட்டம் தாம் வாழும் மண் சார்ந்து உரிமையையும், உணர்வையும் ஒருங்கிணைத்து வாழுதல் இயல்பானது. இத்தகைய குணாம்சமானது முற்போக்கான பல கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. அத்தகைய உணர்வுநிலை சார்ந்த உளவியல் போக்கை அது சார்ந்த கிழக்கு வாழ் தமிழ் மக்களின் “மண் வாசனையை” அங்கீகரிக்க வேண்டிய புத்தி ஜீவிதத்தை தலைமை தாங்கும் சக்திகள் கொண்டிருத்தல் அவசியமாகின்றது.

அதே வேளை கிழக்கை வாழிடமாகக் கொண்ட தமிழ் “அதிகாரத்துவ சக்திகள்” சில தங்கள் “தலைகளைப்” பலப்படுத்துவதற்கான வேட்டைக் களத்தில் பிரித்தாளும் கோசங்களுக்கு உருவேற்றி அப்பாவிகளைப் “பலியாடுகள்” ஆக்கும் அவலத்தையும் உண்டுபண்ணி நிற்கின்றன.
தேசிய விடுதலைக்கான பரிமாணத்தில் பல் வேறுபட்ட சக்திகள் ஒருங்கிணைந்த ஒரு வகைக் கலவை நிலை உண்டு. இதை உணர மறுத்துச் செல்வதானது பேரினவாதத்தின் வேலைகளை இலகுவாக்கி விடுகிறது.

“தலித்துக்களின்” விடிவுக்காகப் போராடிய பெரியார் எழுப்பிய தனித் திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள சகல மொழி பேசும் மக்களையும் இணைத்துக் கொள்ள முயன்றதையும் அது சாத்தியத்திற்குள்ளாகாத வரலாற்றையும் காணுகின்றோம்.
கிழக்கிலே வாழ்ந்து வரும் சராசரித் தமிழ் மக்களிடத்தில் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் சமூகத்தின் அங்கங்களாக செயற்படும் போக்குத்தான் ஒப்பீட்டளவில் வரலாற்று ரீதியாக மேலோங்கிக் காணப்படுகின்றது. அதை யாராவது மறுதலித்துச் செயற்பட முனைந்து நிற்பார்களேயானால் அவர்கள் இன்றைய வட,கிழக்கு இணைப்பைத் துண்டாடி மகிழ்ந்து நிற்கும் சக்திகளுக்கு துணை போவதாகவே கருத முடியும்.

“மேலாதிக்க வாதம்” எத்தகைய சூழ்நிலையிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் முற்போக்குச் சக்திகள் ஒரே சிந்தனை படைத்தவர்களாகவே இருப்பார்கள்.

ஆயினும் மிகப் பலம் பொருந்திய “பொது எதிரி” யை வீழ்த்துதற்கான தளத்தில் ஒன்றிணைவதும் பின் மீண்டும், மீண்டும் எமது உரிமைகளுக்கான போராட்டங்களை விளிம்பு நிலை மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, உழைக்கும் வர்க்கத்துக்காக என நீட்சிப் படுத்துதலுமே போர்க்குணாம்சம் பொருந்தியவர்களின் கடமையாகிறது.

Monday, October 23, 2006

நான் நேரில் காணாத ஏ.ஜே.கனகரட்ணா!
-
-நடராஜா முரளிதரன்-

சென்னையிலிருந்து இணைய மடல் மூலம் வ.கீதா “ஏ.ஜே.கனகரட்ணா கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்” என்ற சேதியை அறிவித்தபோதுதான் அந்தத் துயரச் செய்தி எனது காதைக் கவ்விக் கொண்டது. இது வரைக்கும் நான் அந்த “ஆபூர்வ மனிதரை” நேரில் சந்திக்கக் கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் என் கண் காணாத அந்த மனிதரின் இழப்பு ஏன் என்னுள் இவ்வளவு துடிப்பை, சலனத்தை நிகழ்த்தி நிற்கிறது என்பதற்கான விடையை நான் எழுதும் இந்த வரிகளுக்கூடாகப் பெற்றுவிட முடியுமா? ஏன்பதையும் என்னால் கூற முடியாதுள்ளது. ஏனெனில் அந்த எல்லைகளையும் தாண்டி அவர் மீதான எனது நேசிப்பு விரவிக் கிடக்கிறது என்பதே உண்மையாக அமையும்.

எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது 1972 இல் முதல் தடவையாக அவரது மொழிபெயர்ப்புக் கட்டுரையொன்றினை “மல்லிகை” சிற்றிதழில் வாசித்த ஞாபகம். 1987 களில் நான் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்த வேளைகளில் அவர் குறித்து தமி;ழ் நாட்டின் மிகப்பெரும் இடதுசாரி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.வி;.ராஜதுரை அவர்களும், பத்திரிகையாளரான ஏ.எஸ்.பன்னீர்செல்வமும் நிறையவே என்னிடம் பேசியிருந்தார்கள். அப்படியொரு சமயத்தில்தான் பன்னீர்செல்வம் அவரது “மார்க்சீயமும் இலக்கியமும் - சில நோக்குகள்” (அலை வெளியீடு) என்ற தொகுப்பு நூலை எனக்கு வாசிக்கத் தந்திருந்தார். அந்த நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை தொடர்வதாகவே நான் எண்ணுகின்றேன். இந்தக் குறிப்புக்களை எழுதுவதற்கு முன் அப் புத்தகத்தையும், “காலம்” சஞ்சிகை வெளியிட்ட ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழையும் செல்வத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருந்தேன். “காலம்” சஞ்சிகை வெளியிட்ட ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழில் எஸ்.வி;.ராஜதுரை அவர்கள் “கலாச்சாரக் கமிசார்களின் ரசனைகளுக்கும் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கும் அவர்களது கறாரான அரசியல் தேவைகளுக்கும் வளைந்து கொடுக்காமல், அதே வேளை, மார்க்சிய தரிசனத்திலிருந்து சிறிதும் வழுவாமல் தமிழ் மொழிக்களத்தில் பண்பாட்டுச் செயற்பாடுகளை ஏறத்தாள நான்கு தசாப்தங்களாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் மனிதர்” என ஏ.ஜேயை விதந்துரைத்துள்ளார்.

ஆதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் சக்திகள், அதிகாரத்தை ஏற்கனவே கைப்பற்றியவர்கள் என எல்லோருமே கலை, இலக்கிய வடிவங்களைத் தாங்கள் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் கோட்பாடுகளுக்கு அமைய உற்பத்தி செய்யுமாறு உத்தரவுகளைப் பிறப்பித்தோ, கோசங்களை எழுப்பியோ வரும் வேளைகளில் அது குறித்த விசாரணைகளைத் விரிந்த தேடற் பரப்பில் ஆழ்ந்து நோக்கிய புலமை கொண்ட மனிதராகவே நான் ஏ.ஜே அவர்களைக் காணவிழைகின்றேன்.

ஏ.ஜே அவர்கள் தனது “மார்க்சீயமும் இலக்கியமும்” என்ற கட்டுரையொன்றிலே பின்வருமாறு கூறுகின்றார். “ஏனைய கலைஞர்களைப் போன்று, எழுத்தாளர்களும் தமது கற்பனையென்னும் ஆழியில் முத்துக் குளித்து வெளிக் கொணர்பவைதான் உன்னத படைப்புக்கள் என ஒரு சாரார் கருதி வருகின்றனர். இவர்களுடைய கொள்கைப்படி கலைஞர் புற உலகத்தை மறந்து அக உலகத்தில் இரண்டறக் கலந்து நிற்பவர்கள். இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் கலைஞர்கள் சூனியத்தில் வாழ்பவர்கள். இவ் வாதத்தினை மார்க்சீயம் ஏற்றுக் கொள்ளாது. சமுதாய ஒழுங்கு முறைகளுக்கிடையே ஏற்படும் தொடர்புகளின் விளைவாகவே அரசியல், சட்டம், சமயம், தத்துவம், கலை, இலக்கியம் போன்றவை தோன்றுகின்றன. உற்பத்தி முறைகள் அடித்தளம் என்றால் மேலே குறிப்பிட்ட கலை, இலக்கியம் போன்றவை மேற் கட்டுமானம். அடித்தளத்திற்கும், மேற் கட்டுமானத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை வரையறுப்பது அவ்வளவு எளிதன்று. அடித்தளம் எவ்வாறு மேற்கட்டுமானத்தைப் பாதிக்கின்றதோ அதே போன்று மேற்கட்டுமானமும் அடித்தளத்தைப் பாதிக்கின்றது. ஆதலால் பொருளாதார அடிப்படைகளும், கலை - இலக்கியம் போன்றவற்றிற்கும் இடையில் உள்ள தொடர்புகள் மிகச் சிக்கலானவை.”

இவற்றின் வழியே நெடுங்காலமாக அரசியல், இலக்கியத் துறைகளுள் இடது சாரிச் சித்தாந்தங்கள் கொச்சைப்படுத்தப்பட்டும், வழிபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதுமான அவலங்களைத் தமிழ்ச் சூழலுக்குப் புரிய வைப்பதில் ஏ.ஜே.கனகரட்ணா 1966களிலிருந்தே பெரிதும் முயன்று வந்துள்ளார். உலகின் உன்னதங்கள் என்று கருதப்பட்ட பல்வேறு சிந்தனைப் போக்குகளை ஏ.ஜே தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஒரு நூலினை இலக்கியம் என்று ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்று தீர்மானிப்பதற்கு, முதலில் அந்நூல் இலக்கியமா இல்லையா என்பதனை நிர்ணயித்த பின்புதான் மார்க்சீயக் கோட்பாட்டினைக் கொண்டு அதனை மதிப்பிடுதல் வேண்டுமென ரொட்ஸ்கி “இலக்கியமும் புரட்சியும்” என்ற நூலில் குறிப்பிட்டதையும் ஏ.ஜே.கனகரட்ணா தனது கட்டுரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலக்கியத்தினை உரிய முறையில் புரியாத எவரும் கோட்பாட்டு அளவுகோல்களை ஏந்துவது விபரீதத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். கட்சி, கலை, இலக்கியம் என எந்த வட்டங்களுக்குள்ளும் அகப்படாதவர். அவருள் அடங்க மறுத்த அறிவுப் பசியை மற்றவர்கள் ஒப்புதல் பெறாமலே அவரிடமிருந்து அள்ளிச் செல்ல அனுமதி அளித்தவர். கற்றுத் தெளிதலும், கற்றுக் கொடுத்தலும், உரையாடல்களுக்கூடாக ஊட்டம் அளித்தலும் அதற்கும் அப்பால் எண்ணிறைந்த இலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் பின்னணி முன்னாணாகத் திகழந்தவர் ஏ.ஜே அவர்கள்.

ஏ.ஜே அவர்களை பிரபலமான சிங்களப் புத்திஜீவியும், எழுத்தாளருமான ரெஜி சிறிவர்த்தனா முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொழும்புக்கு குடிபெயர்ந்து வருமாறு அழைப்பு விடுத்தபோது தான் “சேற்றில் அழுந்திய தடி” மாதிரி இருப்பதாகவும், தன்னைக் கொழும்பில் “மறுநடவு” செய்யத் தனக்கு விருப்பம் இல்லையெனவும் பதிலளித்திருந்தார். மேலும் ரெஜி கூறுகிறார். “உலகக் குடிமகனுக்குரிய கலாச்சாரமும், சர்வதேசப் பிரக்ஞையும் உடைய புத்திஜீவியான ஏ.ஜே யாழ்ப்பாண மண்ணிலும், அதன் வாழ்விலும் அனுபவத்திலும், மொழியிலும் வேரூன்றி உள்ளார் என்பதை அதிலிருந்து நான் உணர்ந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தை அதன் சோதனைக் காலத்தில் விட்டு வருவதை ஒரு துரோகச் செயல் என்று அவர் கருதி இருக்கலாம்.”

இலக்கியத்தைக் காதலித்தவர் என்று கருதப்படும் ஏ.ஜே தனி மனித வாழ்வில் கட்டைப் பிரமச்சாரி. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைக் கற்ற அவரின் தனிப் பெருந்துறையாக ஆங்கில இலக்கியம் விளங்கியது. “டெய்லி நியுஸ்”, “கோப்பிறேற்றர்”, “சற்றடே றிவ்வியு”, திசை போன்ற பத்திரிகைகளின் ஆசிரியர், துணை ஆசிரியர் பொறுப்புக்களில் பணியாற்றிய சிறந்த பத்திரிகையாளரும் கூட. பத்திரிகையாளர்
ஏ.எஸ்.பன்னீர்செல்வத்தின் பார்வையில் “ஏ.ஜேதான் யாழ்ப்பாண வாழ்வின் சிக்கல்களை எனக்குப் புரிய உதவியவர். யாழ்ப்பாணத்தை ஆண்ட துப்பாக்கி ஏந்திய பலர் வைத்த அடிப்படைச் சட்டங்களை, முடிச்சவிழ்த்தற்குரிய இன்றியமையாத தடயங்களைத் தந்தவர்.யாழ்ப்பாணத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் துயரங்கள் கூட மற்றவர்கள் தொலைவிலிருந்து காட்டிய மாதிரியிலிருந்து ஏ.ஜேயின் மாதிரி மிக வித்தியாசமானது. மண்ணை விட்டுப் பிரிய மறுத்த அந்த மகத்தான “மண்ணின் மைந்தன்” தான் துறை போகக் கற்றறிந்த உலக இலக்கியங்களுக்கூடாகவும், தனது வாழ்வின் ஊடாகவும் எமக்கு விட்டுச் சென்ற சேதிகளை எப்போது நாம் மறு வாசிப்புக்கு உள்ளாக்குவோம்.

Tuesday, October 10, 2006

“மறை பொருள்” குறுந் திரைப்படம்

-நடராஜா முரளிதரன்-

பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் போன்ற ஜனநாயக விழுமியங்கள் எத்தகைய விட்டுக் கொடுப்புகளுக்கும், சமரசங்களுக்கும் உட்படுத்தப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் ஓங்கி ஒலித்து வரும் இன்றைய உலகச் சூழலில் ஒரு படைப்பை மறுக்கும் உரிமையை தனி மனிதர்; ஒருவர் மேற்கொள்ளுகிற போது சமூகம் எத்தகைய அவலத்துக்குள் சிக்குண்ண நிகழ்கிறது என்பதையே இரு வாரங்களுக்கு முன் ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நிகழ்ந்த குறுந் திரைப்பட விழா தொடர்பான விமர்சனங்களில் “மறை பொருள்” குறுந் திரைப்படம் தொடர்பான “தர்சனின்” விமர்சனத்தை கடந்த வாரத்துக்கு முந்தைய “வைகறை” இதழ் ஒன்றில் வாசித்துக் கொண்ட போது என்னால் உணரக் கூடியதாக இருந்தது.

“மறை பொருள்” குறுந் திரைப்படம் சித்தரிக்கும் கருப் பொருள் “முஸ்லீம் பெண்கள் “பர்தா” அணிவதை ஒடுக்குமுறையாகப் பார்க்கிறார்கள் என்பதே” என்றும் அவ் விமர்சனத்தில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக நானும் எழுத்தாளர் தேவகாந்தனும் உரையாடிக் கொண்ட போது அவர் தெரிவித்த கருத்தொன்றினை இங்கு குறித்தல் பொருத்தம் என்று எண்ணுகின்றேன். “மறை பொருள்” என்ற படைப்பாக்கத்தில் உருவகிக்கப்படும் அப் பெண் பாத்திரம் அத்தகைய (“பர்தா” அணிவதை ஒடுக்குமுறையாகக் கருதும்) கருத்து நிலைப்பாட்டைக் கொண்டவளாக இருப்பின் அதில் ஏதும் தவறில்லையே? ஏன்று என்னிடம் சொல்லியிருந்தார்.

படைப்பாளியொருவன் தனது புனைவில் முழுச் சுதந்திரங்களோடு செயற்பாடு கொள்வது சமூக நிர்பந்தங்களால் பாதிப்புக்குள்ளாகுமானால் அதையும் மீறி அவன் முழு வீச்சோடு “சிருஸ்டி” புரியும் போது அதைச் சமூகக் காரணிகளைச் சுட்டிக்காட்டி மறுதலிப்பதானது எவ்வளவு தூரம் அபாயகரமானது என்பதையே இங்கு நான் எண்ணிப் பார்க்கின்றேன். இக் கருப்பொருள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனாலும் “இது ஏற்கக் கூடிய கருப்பொருள் அல்ல” என்று எப்படிக் கூறிவிட முடியும்?எனக்குத் தெரிந்த வரையில் முஸ்லீம் பெண்கள் “முக்காடு” அணிவதையோ, “பர்தா” அணிவதையோ ஒடுக்குமுறையாகப் பார்க்கவில்லை என்பதற்காக அவ்வாறான கருத்துடைய “முஸ்லீம் பெண்கள்” இவ்வுலகில் வாழவேயில்லை என்று அர்த்தப்படுத்தி விட முடியுமா?

நடுவர்கள் இப் படத்திற்கு விருது வழங்கவில்லை என்பதை இங்கு பிரச்சினைக்கு உரியதாக நான் கருதவில்லை.

ஆனாலும் “பர்தா” அணிவதை எப்படி உணர்கிறேன் என்பதை ஒரு முஸ்லீம் பெண் மட்டுமே சொல்ல வேண்டும், சொல்ல முடியும் என்ற கட்டளைகளைத் “தர்சன்” பிறபிப்பது படைப்பாக்கத்துக்கான எல்லைகளை வரையறை செய்து விடுவதில், மட்டுப்படுத்துவதில் படைப்பாளியை அல்லது கலைஞனைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்பதையே இங்கு நான் எடுத்துக் கூற விழைகின்றேன்.

முஸ்லீம் பெண்கள் எல்லோருமே “பர்தா” அணிவதில்லை. இந்தியாவிலே, துருக்கியிலே, பாலஸ்தீனத்திலே “பர்தா” அணியாத எத்தனையோ முஸ்லீம் பெண்களை நாம் காண முடியும். ஒரு குறுந் திரைப்படத்துக்கான மொழியைப் பேசுவதில், மாற்றுச் சினிமாவிற்கான பிரக்ஞையைக் கட்டுவதில் “மறை பொருள்” என்ற குறுந் திரைப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றுக் கொண்டதாகவே நான் கருதுவேன். படத்தைப் பார்த்த சிலரது கருத்துக்களும் அதற்கு வலுச் சேர்ப்பதற்கான சாட்சியமாக அமைந்ததை இங்கு குறிப்பிடலாம்.

உரையாடல் எதுவுமே இடம்பெறாது ஒற்றைப் பாத்திரத்தைக் கொண்டு நகர்ந்த அக் குறுந் திரைப்படத்தில் பருவப் பெண்ணொருத்தி கண்ணுக்கு மை தீட்டி, அழகான உடை தேர்ந்து நிலைக் கண்ணாடி முன்னே நின்று, நிமிர்ந்து அழகுப் பதுமையாகத் தன்னை அழகு செய்து கொள்ளுகிறாள். தன் அழகு மேலும் பூரித்திட மெருகூட்டும் முயற்சியிலே தன் கவனத்தையெல்லாம் குவித்து மேலும், மேலும் அது குறித்து அவள் முயன்று கொண்டிருந்தாள். ஏற்றத் தாழ்வுகள் படைத்த இச் சமூகச் சூழலிலும் கூட பால் பேதங்கள், வர்க்க பேதங்களையெல்லாம் கடந்து நாமெல்லாரும் ஓடிப் பிடிக்க முனைவதில், வெறி கொண்டு அலைவதில், விரட்டிச் செல்வதில் “அழகுணர்ச்சியும்” முக்கியமான ஒன்று.

எனவே அந்த அழகுக்கு உரியவள் தனக்கான ஒப்பனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த மறு கணங்களிலே கரிய “பர்தாவினால்” தனது உடலை உடுத்திப் போர்த்திக் கொள்ளுகிறாள். போர்த்தி முடித்த கையோடு நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளுகிறாள். பின் தனது கண்களை முடிக் கொள்ளுகிறாள். “மறை பொருள்” குறுந் திரைப்படமும் அத்தோடு முடிந்து கொள்கிறது.

அந்த முடிவோடு அது ஏற்படுத்திய தாக்கம் என்னை, எனது உணர்வுகளை உறைந்து போக வைத்தது. ஏன் அவள் தனது கண்களை இறுக மூடிக் கொண்டாள்? அந்த உளவியல் அர்த்தப்படுத்த விழையும் செய்திதான் என்ன? மொழியே பேசப்படாத அந்தக் “குறுஞ் சினிமா” வெளிப்படுத்திய சேதியால் மதம், பண்பாடு சார்ந்த முஸ்லீம் உணர்வுகள் காயப்படுத்தப்படுவதாக, மறுக்கப்படுவதாகக் “தர்சனால்” கிளப்பப்படும் கூற்றுக்களுக்கு பதிலாக அமைவதெல்லாம் “சினிமா” என்பது எப்போதும் சமூகத்தின் கதையை மாத்திரம் சொல்வதல்ல. மாறாக சமூகத்தின் தனிமாந்தர்களின் விருப்பு, வெறுப்புக்களையும் அவர்களது சொந்தக் கதைகளையும் கூட நல்ல சினிமா சொல்ல விழைகிறது.

மத அடிப்படை வாதத்தையும், அதன் கட்டுமானத்தில் இருந்து எழுப்பப்படும் பிற்போக்கான பெண் ஒடுக்குமுறை சார்ந்த கருத்தியல் நிலைப்பாடுகளையும் கடுமையாக விமர்சிக்கும் எத்தனையோ முஸலீம் அறிஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமிது.

என்னைப் பொறுத்தவரையில் “மறை பொருள்” குறுந் திரைப்படத்தை விழாவுக்கான திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்த துணிச்சலையிட்டு குறுந் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் காத்திரமான பங்களிப்பொன்றை குறுந் திரைப்படத் துறைக்கு ஆற்றியுள்ளார்கள் என்றே கருதுகின்றேன்.

1993 ஆம் ஆண்டு பங்களாதேசைச் சேர்ந்த “தஸ்லீமா நஸ்ரீன்” என்ற முஸ்லீம் பெண் எழுத்தாளர் “லஜ்ஜை“ என்ற நாவலை வெளியிட்ட போது “பங்களாதேஸ்” அரசு மதவெறியர்களுக்கு இசைந்து அந்த நாவலைத் தடை செய்தது. அதை முஸ்லீம் விரோத நாவல் என்று கூறிய மத வெறியர்கள் அவரைக் கொல்பவர்களுக்கு பரிசு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்கள். மதங்களால் மனித சமுதாயத்திற்கு விமோசனமில்லை என்ற கருத்துடைய “தஸ்லீமா” “மனித நேயம் என்பது மதத்திற்கான மற்றொரு பெயராக இருக்கட்டும்” என்று கூறினார். பெண்ணின் உடல் ஆணினால் உடமை கொள்ளப்பட்டு ஆணின் அதிகாரம் அங்கு நிறுவப்படுகிற போது பெண் தன் உடல் மீது தான் கொண்டுள்ள உரிமையை இழந்து விடுகிறாள்.

அதற்கு மேலாக ஆணாதிக்க சமூக மனோபாவமும் “பண்பாடு சார்ந்த அடையாளங்கள்” என்ற கட்டளைகளை பிறப்பிப்பதன் மூலம் இலகுவான இன்பம் சார் நுகர்வுப் பொருளாக பெண்ணை ஆக்குவதில் வெற்றி கண்டு விடுகிறது. எனவே அதனைக் கலை வடிவம் ஒன்றுக்கூடாகப் புரிய வைப்பதில் பெரு வெற்றி பெற்ற “மறை பொருள்” குறுந் திரைப்பட இயக்குனர் பொன்.சுதாவை மெச்சுவதற்கு எனது மனம் அவாவுறுகிறது.

Wednesday, September 27, 2006

“கைதுகள்”

-நடராஜா முரளிதரன்-

நான்கு வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவு முயற்சியில் ஈடுபட்டார்கள் என்று கூறியும், அதற்குத் துணை போனார்கள் என்று கூறியும் கனடாவிலும், அமெரிக்காவிலும் சில தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அதையடுத்து கனடிய, அமெரிக்க பிரதான தகவல் தொடர்பு ஊடக சாதனங்கள் அது தொடர்பாக “சுவாரசியத்தோடு” கூடிய பல்வேறு செய்திகளை “விறுவிறுப்பாக” வாசகர்களுக்கு உடன் வழங்கியிருந்ததை எம்மில் யாரும் மறந்திருக்க முடியாது.

அச் சமயத்தில் கனடாவில் வாழும் தமிழர்கள் யாவரும் தமிழர்கள் அல்லாதோரால் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுகிறார்கள், நோக்கப்படுகிறார்கள் என்பதாகவும், இந் நிலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல தமிழர் தரப்பு மட்டுமே காரணம் என்பது போலவும் அப்பாவித்தனமாகப் பத்திரிகைப் பத்திகள் எழுதப்பட்டமையை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்.

பலம் வாய்ந்த அரச முகவர்களின் அறிக்கைகள், பெரு முதலாளித்துவ ஊடக சாதனங்களின் பரப்புரைகளையெல்லாம் எவ்வித மறுதலிப்பும், விமர்சனமும் இன்றி உள்வாங்கிக் கொள்ளுங்கள் என்பதனை மறைமுகமாக வலியுறுத்துவது போலவும், அதை மீறுவுதும், கருத்துக் கூறுவதும் ஜனநாயக நெறிமுறை, விழுமியங்களுக்குள் அடங்கியிருந்த போதிலும் அவ்வாறு நடந்து கொள்வீர்களெனில் ஊடக அதர்மம் ஆகி விடும் என்பது போன்ற கருத்துக்களும் அப் பத்திகளின் வரிகளுக்கு இடையில் சொருகப்பட்டிருந்தன.

இவற்றையெல்லாம் நான் வாசித்துக் கொண்ட போது பழைய சில நினைவுகள் மீண்டு என் மூளையைக் குடைய ஆரம்பித்தது.
சுவிசில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி சுவிஸ் பொலீசாரால் நான் கைது செய்யப்பட்ட வேளைகளில் இடம்பெற்ற சில நிகழ்வுகளைப் இங்கே பகிர்ந்து கொள்வது எனக்குப் பொருத்தமாகப்படுகின்றது.

நான் கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக அப்போதைய இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சுவிசுக்கு விஜயம் செய்திருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சுவிசுக்கு வந்திருக்கவில்லை. அன்றைய அவரது பயணம் இலங்கை அரசின் முக்கிய எதிர்பார்ப்பொன்றினை நிறைவேற்றும் பொறுப்புடன் கூடிய அரச பயணமாகவே அமைந்திருந்தது.

சுவிசில் தமிழ் அகதிகளின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட முற்படுகிற வேளைகளில் எல்லாம் அவர்களுக்கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதில் சுவிஸ் அரச அதிகாரிகளுக்கு பெரிய அளவில் நடைமுறைச் சங்கடங்கள்;, சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம். அதன் காரணமாக அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலை எதிர்பார்த்துக் காத்திருந்த பல தமிழ் அகதிகள் தப்பிப்பிழைத்த வரலாறும் உண்டு.

ஆயினும் சுவிஸ் அரசின் அகதிகள் தொடர்பான கொள்கை எந்தக் காலத்திலுமே அகதிகள் அங்கு தொடர்ந்து வாழ்வதற்கான இயல்பு நிலையில் பதட்டத்தை, அச்ச உணர்வைத் தோற்றுவிக்கும் வகையிலானது எனலாம். எனவே அச் சூழலைப் பயன்படுத்திக் கதிர்காமர் சுவிஸ் அரசோடு பேரம் பேசியதன் பயன்பாடாகவே நான் சார்ந்த அமைப்புpன் மீதும், அந்த அமைப்பின் பொறுப்பாளர் என்ற வகையில் என் மீதும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இலங்கை அரசு எம் மீது குறி வைப்பதற்கான எடுகோள் அங்கு பாரிய அளவில் எம்மால் திரட்டப்பட்ட நிதியின் அளவால் நிர்ணயமானதாகும். ஆனால் எம் மீது சுவிஸ் காவல் துறையினர் இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக அதற்கு வாய்ப்பான வகையில் சாதகமான பொது ஜன அபிப்பிராயத்தை நிறுவுவதற்கான தளத்தை உருவாக்கும் நோக்கோடு திட்டமிட்ட வகையில் என் மீதும், நான் சார்ந்த அமைப்பின் மீதும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கூடாக உண்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையிலான பொய்யான பரப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.

அரசுகளும், ஆதிபத்தியத்தை கொண்ட அதிகார மையங்களும் தங்களது நலன்களுக்காக இவ்வாறான சித்து விளையாட்டுக்களை அரங்கேற்றுவது வரலாற்றுத் தொடர் நாடகக் காட்சிகளாகும்.

எனது எட்டுமாத சிறைவாசத்தின் பின் இறுதியில் எம் மீதான வழக்குகள் யாவும் தோற்கடிக்கப்பட்டு, பல வருடங்களின் பின் எமக்கான நட்ட ஈட்டுத் தொகைகளும் வழங்கப்பட்டன. இதை உணர்த்தும் சம்பவங்களில் ஒன்றாக சில தினங்களுக்கு முன்பாக சிரிய நாட்டைச் சேர்ந்தவரும் பின்பு கனடியப் பிரஜையாக ஆகிக் கொண்டவருமான “அரார்” அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக நீதிபதி டெனிஸ் ஓ’கார்னர் ஆர்.சி.எம்.பியினர் மீது அத்துமீறல்கள் நிகழ்ந்ததற்கான பொறுப்புக்களைச் சுமத்தி நீண்ட அறிக்கையொன்றினை வெளிப்படுத்திய சூழ்நிலையில் கனடியப் பாராளுமன்றமும் “அரார்” நடத்தப்பட்ட விதம் குறித்து ஏகமனதாக மன்னிப்புக் கோரியுள்ளதை நாம் நோக்க வேண்டும்.

ஒட்டாவாவை வசிப்பிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளுக்குத் தந்தையான “அரார்” என்ற கணணி பொறியியலாளர் 2001, செப்ரெம்பர் 11 அமெரிக்கத் தாக்குதலின் பின் மொரோக்கோவுக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்த நிலையில் பின் அமெரிக்கா ஊடாக கனடா திரும்பவிருந்த வேளையில் நியூயோர்க்கிலிருந்து சிரியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு அங்கு இரு வருடங்கள் வரையில் சிறையில் வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட வேளைகளில் கனடிய அமைப்புக்கள் அமெரிக்க அரசுக்கு வழங்கிய தகவல்கள் குறித்த விடயங்களே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தன.

1998 இல் அமைதியான வாழ்வு தேடி நான் எனது மனைவியோடும், எனது நான்கு பிள்ளைகளோடும் இணைவதற்காக கனடா வந்த போது 40 நாட்களின் பின் கனடிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போதும், அதற்குப் பின்னரும் இங்குள்ள தகவல் தொடர்பு ஊடக சாதனங்களால் “பயங்கரவாதியாகவே” சித்தரிக்கப்பட்டு வந்துள்ளேன். இன்றும் கூட “அகதி அந்தஸ்து” மறுக்கப்பட்ட சூழ்நிலையிலேதான் நானும், எனது குடும்பமும் நாடுகடத்தல் உத்தரவை எதிர்கொண்டு “இமிக்கிரேசனும்”, கோர்ட்டுமாக அலைந்து வருகிறோம்.

ஒரு பத்திரிகையாளர் “ நான் கனடா வரும் பொழுது கொண்டு வந்த கொலைப் பட்டியலில் தனது பெயர் மூன்றாவதாக உள்ளதென காவல் துறையினர் தன்னிடம் கூறியதாக” என்னிடம் கூறினார். ஆனால் உண்மை நிலை என்ன? அது முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது.
இவ்வாறே கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களும் நீதிமன்றில் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்படும் கணங்கள் வரை அவர்கள் “சந்தேக நபர்கள்” மாத்திரமே. எனவே இவ்வாறான கைதுகளால் “தமிழ் மாணவர்களின் எதிர்காலமே பாழ்பட்டு விடுவதாக” ஓலம் போடுவது செய்தி மிகைப்படுத்தலாக அமைந்து விடும். அண்மைய செய்திகளின் படி அவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களில் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அறிகிறேன். அந்தச் செய்திகளையும் கூட தமிழ் ஊடகங்கள் எந்தளவு வெளியிட்டுள்ளன என்பது குறித்து எந்தத் தரவுகளும் என்னிடம் இல்லை.

கடந்த வாரம் துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் மொன்றியலிலே “வெறியாட்டம்” போட்டுள்ளார். அதற்காக அவர் சார்ந்த சமூகத்தை சாட முடியுமா?

பத்திரிகைகளுக்கு “பரபரப்புச் செய்திகள்” விற்பனைக்கு அவசியமாகின்றன. அவை சமூகத்தில் மாறுபட்ட விளைச்சலை ஏற்படுத்துமாக அமையின் அதை எதிர்த்துப் போராடுவதுதான் எழுத்தாளனின் தர்மம்.

Tuesday, September 12, 2006

“கண்ணகி சிலை”
எஸ்.வி.ராஜதுரையும், ஞாநியும்

-நடராஜா முரளிதரன-

தமிழகத்தில் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு நிறுவப்பட்ட கண்ணகி சிலை கடந்த ஜெயலலிதா அரசின் ஆட்சிக்காலத்தில் அப்புறப்படுத்தப்பட்டமை தொடர்பான செய்திகள் தமிழக ஊடகங்களால் அன்று பரபரப்பாகப் பேசப்பட்டவை.

பின்னர் இன்றைய கலைஞர் ஆட்சியில் மீண்டும் கண்ணகி சிலை நாட்டப்பட்ட போது அதே “பரபரப்பு” எழுந்து பல்வேறு வகை விவாதக் களங்களுக்கு வழிசமைத்துக் கொடுத்தது. அந்தக் களங்களின் வெளிப்பாடு உச்சத்தில் இருந்த அத் தருணங்களில் அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாகக் கண்ணகி சிலை பற்றி “ஆனந்த விகடன்” வார இதழில் ஞாநி எழுதிய கட்டுரை சர்ச்சைக்குள்ளானதால் “ஆனந்த விகடன்” வார இதழ்கள் எரியூட்டப்பட்டன.

இதன் எதிர்வினையாக யூன் மாத 16-30, 2006 “புதிய பார்வை” மாதமிருமுறை இதழில் ஞாநி “தமிழ் பெண்களை கண்ணகியை பின்பற்றச் சொல்கிறதா கலைஞர் அரசு? என்ற தலைப்பில் மேலும் கலைஞர் மீது விமர்சனக் கணைகளை வீசி எறிந்திருந்தார்.

சில தினங்களுக்கு முன் எஸ்.வி.ராஜதுரை அவர்களின் “ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்” கட்டுரைத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருந்த போது “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” என்ற 5-1-2002 தினமணி நாளிதழில் பிரசுரமான அவரின் கட்டுரையும் அதில் உள்ளடங்கியிருந்தது. அக் கட்டுரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் “கண்ணகி சிலை நீக்கம்” குறித்து அச் சூழலில் அன்று எஸ்.வி.ஆரினால் தினமணியில் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரையாகும். இந்த இரு கட்டுரைகள் எவற்றைச் சுட்டுகின்றன? எத்தகைய முரண்களைக் கிளப்புகின்றன? தொடர்பாக உள் நுழையும் முயற்சியை அடிப்படையாக வைத்து அலசல் ஒன்றை இங்கு மேற்கொள்ளுவதே எனது நோக்கம்.

“கண்ணகி என்ற பாத்திரம், இரத்தமும் சதையுமாய்த் திரிந்த ஒரு குறிப்பிட்ட மெய்யான பெண்மணி என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லாமலிருக்கலாம். ஆனால் தமிழ் பண்பாட்டு வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாகவே இடம் பெற்றுள்ள பாத்திரமே “கண்ணகி” என்பதுதான் முக்கியமானது. மார்பகமொன்றைக் கிள்ளியெறிந்த கண்ணகியை “சிலப்பதிகாரம்” மட்டுமல்ல, “நற்றிணை”யும் குறிப்பிடுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் பெண்ணின் உருவகமாகவே “கண்ணகி” பார்க்கப்படுகிறாள். அநீதியை எதிர்த்துப் போராடுவதற்காகத் தனது மகப்பேறை, “தாய்மை”யைக் கூட இழக்கத் துணிபவளே அவள் என்பதைக் குறிப்பதுதான் மார்பகத்தைக் கிள்ளியெறிதல் என்பதாகும். சிலப்பதிகாரத்திலும் கூட “கண்ணகி”யின் “கற்பை” விவாதத்திற்குட்படுத்தும் நிகழ்வுகள் ஏதுமில்லை.” என்ற மையக்கருவை வலியுறுத்தும் வகையிலே எஸ்.வி.ஆரின் கட்டுரை அமைகிறது. மறுபுறத்தில் ஞாநி “புதிய பார்வை”யில் எழுப்பும் கேள்விகள்.

1) வேறு பெண்ணை நாடிப் போய் விட்டு, தன்னைப் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனைச் சகித்துக் கொண்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும், அதுவரை இன்னொரு ஆணின் துணையை நாடாமல் இருந்ததும்தான் கற்பு என்றால், அது கோவலன் போன்ற ஆண்களுக்கே வசதியான ஒரு தலைக் கற்பு. இது உண்மையா, இல்லையா?

2) அரசனுக்கு எதிராகக் கண்ணகி போராடிய விசயம், தனக்கு அநீதி செய்த கணவனுக்கு நீதி கேட்டுப் போராடிய பேதமைத்தனமா, இல்லையா? கணவனிடம் நீதிக்காகப் போராட முடியாதவள் அரசுக்கு எதிராகப் போராடிய கற்பனையெல்லோ இது.

3) கோவலனைத் தவறாகக் கொன்றதில் துளியும் சம்மந்தமில்லாத மதுரை மக்களை எரித்த கண்ணகியின் செயல், எங்கோ ஏற்பட்ட வேதனையை வேறெங்கோ வெளிப்படுத்துகிற இயலாமையா இல்லையா?

“பரந்துபட்ட மக்களால் சிக்கல் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் பண்பாட்டு விழுமியங்களை அந்த மக்களின் கூட்டு நினைவுகளிலிருந்து பிரித்தெடுக்க, பிய்த்தெடுக்க முனைபவர்கள் தற்காலிக வெற்றிகளை அவ்வப்போது பெறக் கூடும். எனினும் மானுட நாகரீகத்தின் வரலாறு அவர்களை “மூர்க்கர்கள்” என்றே பதிவு செய்து வந்துள்ளது.” என்ற எஸ்.வி.ஆரின் கூற்று மக்களினங்களின் வரலாறும், வாழ்வியலும் இலகுவில் பண்பாட்டு அடையாளங்களை இழப்பதற்கான தயார் நிலையில் இருப்பதில்லை. அவை மதிக்கப்படல் வேண்டும் என்ற மனித உரிமைகளுக்கான சாராம்சத்தைக் கோரி நிற்கிறது.

மாறாக ஞாநியோ “காட்டிலும் கழனியிலும் காலம், காலமாக உழைக்கும் தமிழ் பெண்களின் பிரதிநிதியா கண்ணகி? அவள் வண்ணச் சீரடியை மண்மகள் கண்டிலள் என்கிறது காப்பியம். அவள் உழைக்கும் பெண்ணல்ல. உழைக்கும் பெண்கள் சார்பாகப் போராடியவளுமல்ல. மதுரையைத் தீக்கிரையாக்கிய போது, பார்ப்பனரையும், பசுவையும் தீண்டாதே என்று தீக்கு உத்தரவிட்ட “இந்துத்துவக் குரல்” அவளுடையது. இந்தப் பண்பாட்டை தமிழர் பண்பாட்டின் அடையாளம் என்று நாங்கள் ஏன் ஏற்க வேண்டும்?” என்று குமுறுகிறார்.

“தி.மு.கவின் சொல்லாடல்களில் உள்ள “கற்பு”, “மானம்”, சிலப்பதிகாரம் குறித்த அதன் விளக்கங்கள் முதலியன விவாவதத்திற்குரியவை. எனினும் சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பொதுவான தமிழ் அடையாளத்தை உருவாக்குவதற்கு அக் கட்சி – குறிப்பாக அண்ணா – அன்று மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடாகவே அதன் ஒரு பகுதியாக கண்ணகி சிலை நிறுவியமை அமைந்தது. அதற்கு தமிழ் நாட்டு மக்களின் ஒப்புதலும் இருந்தது. அதனை ஒரே இரவில் துடைத்தெறிவது கொடூரமான மனித உரிமை மீறலாகும்” என்று எஸ்.வி.ஆர் தனது கட்டுரையில் சொல்லுகிறார்.

“கண்ணகி சிலை தமிழர் பண்பாட்டின் அடையாளம் என்று தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.” என்ற ஞாநியின் கூற்றையும், “ஆணாதிக்க, தந்தை வழிச் சமுதாய அமைப்பு விழுமியமான “கற்பு” என்பது சுமத்தப்பட்ட படிமமாக அல்லாமல் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பும் சாமானியக் குடிமகளின் படிமமாகக் கண்ணகி உருவகிக்கப்பட்டிருப்பது தமிழ் மரபுகளின் சிறப்புக்களில் ஒன்றாகும்.” என்ற எஸ்.வி.ஆரின் வாதமும் எங்களது சிந்தைகளை ஆழக் கிழறுபவை.

வரலாற்று நிகழ்வுகளை, சமூகங்களின் கூட்டுக் கற்பனையில் ஆழ வேரோடி நிற்கும் உணர்வுப் பிரவாகங்களையெல்லாம் “பண்பாட்டுப் புரட்சி” போன்ற சுலோகங்களின் பெயரால் மறுதலிக்க முற்படுவது மக்களினங்களை மாபெரும் துயரங்களுக்கும், சோகங்களுக்கும் இட்டுச் சென்ற வரலாறு நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது.

ஞாநி எம்மையெல்லாம் அந்தச் “சுத்தப்படுத்தல்களுக்கு” தயாராகுமாறு விரட்டுகிறார் போல் தென்படுகிறது எனக்கு.

Friday, September 01, 2006

கற்றுக் கொள்ள.....

-நடராஜா முரளிதரன்-

அமெரிக்கக் கண்டமெங்கணும் ஆங்கிலமும், ஸ்பானிசும், போர்த்துக்கீசும் (பிரேசில் நாட்டில் மட்டும்) பேசு மொழிகளாகக் கோலோச்சுவதை இன்று காணுகின்றோம். ஐரோப்பியர்கள் அமெரிக்க மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பாகவே இந்த நீண்ட பெரு தொடர் நிலப்பரப்பிலே பல்வேறு மொழிகளைப் பேசிய பல தரப்பட்ட கலாச்சார, பண்பாட்டு வாழ்க்கை அமைவுகளை வரித்துக் கொண்ட “மண்ணின் மைந்தர்கள்” திட்டுத், திட்டாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

ஆயினும் அசுர பலம் படைத்த ஆக்கிரமிப்பாளர்கள், குடியேற்றவாதிகள் முன்னே தனித்துவம் வாய்ந்த தொன்மை கொண்ட அக் குடிகளின் வன்மம் அடக்கப்பட்டு, முறியடிக்கப்பட்ட வரலாறே எம் கண் முன் விரிந்து கிடக்கிறது. அந்த முறியடிக்கப்பட்ட மாந்தர்களின் மனக் குமுறல்களை, ஆதங்கங்களை வரலாற்றின் புதைகுழிகளிலிருந்து மீட்டெடுப்பதில், மறு வாசிப்புக்குள்ளாக்குவதில் எங்களில் அநேகருக்கு ஈடுபாடு இருக்கப் போவதில்லை.

ஆனாலும் கடந்த சனிக்கிழமை ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற கருத்தரங்கமொன்றில் அந்தப் பழங்குடிகளின் சந்ததி வழி வந்த பெண் மனித உரிமைவாதியொருவர் அந்த மக்களின் உரிமைகள் குறித்ததோடல்லாமல் அதற்க்கும் மேலாக அந்த மக்களினங்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான ஏக்கங்களைப் பிரதிபலித்த போது அந்த உணர்வுகள் நெஞ்சைப் பிழிந்தமையை என்னால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

இந்தத் தளத்திலே உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிய பழங்குடி மக்களது போராட்ட வாழ்வுக் களங்களில் கனடாவிற்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மெக்சிக்கோவின் “சியாப்பாஸ்” பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பழங்குடி மாயன் இந்தியர்களின் துயரம் தோய்ந்த வரலாற்றுச் சுவடுகள் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பதை அண்மையில் நான் வாசித்துக் கொண்டிருந்த விடியல் பதிப்பகம் பிரசுரித்த “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்) என்ற நூல் எனக்கு உணர்த்தியது.

இந்த நூலின் 36வது அத்தியாயத்தில் “சியாப்பாஸ் பழங்குடிகளின் போராட்டத் தலைவர்களில் மிக முக்கியமானவர் என்று கருதப்படும் துணைத் தளபதி மார்க்கோஸ் காடுகளில் ஒழிந்தவாறான 17 ஆண்டு கால போராட்டத் தலைமறைவு வாழ்க்கையின் பின் 2001ஆம் ஆண்டு மார்ச் மாத நடுக் கூறில் மெக்சிக்கோ அதிபரின் அழைப்பையேற்றுப் பெருமளவு மக்கள் நிறைந்த மாபெரும் பேரணியொன்றை வழிநடத்திப் பல நூறு மைல்கள் கடந்து மெக்சிக்கோ நகரத் திடலை வந்தடைவதும், அச் சமயத்தில் தங்களது குறிக்கோளை வென்றெடுப்பதற்கான அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக “காம்பியோ” என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியும் கூறப்பட்டுள்ளது.” அரசியல் வன்முறைகள் உச்சம் பெற்றிருக்கும் முரண்பாட்டுக் களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களது தளைகளை அறுப்பதற்காக அமைதியைப் பேணிக்கொண்டு அடக்குமுறையாளனோடு தீர்வுக்காகப் பேசப் புறப்படுவது குறித்த வளர்ச்சிப் போக்கினை துணைத் தளபதி “மார்க்கோஸ்” எவ்வாறான அரசியல் பார்வையூடு அளவிடுகிறார் அல்லது அளவிட முனைந்தார் என்பது குறித்து இங்கு உரையாடவிழைவதே எனது நோக்கமாகும்.

காம்பியோ பத்திரிகைப் பேட்டியின் போது “ இனவெறிக்கு நிச்சயமாக ஏற்படப் போகின்ற தோல்வியைப் பற்றிய கருத்தானது அரசுக் கொள்கையின் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, மெக்சிக்கோ சமூகம் முழுவதினுடைய பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கான தீர்வை நாங்கள் மிகவும் நெருங்கி விட்டோம்;, எனினும் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது.

போர் வீரர்களான நாங்கள் கூறுவதைப் போல, போரில் வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் இன்னும் சில யுத்தங்களைப் புரிய வேண்டியிருக்கிறது. சமூகத்துடன் எங்களைப் பிணைப்பது இராணுவரீதியான எங்களது வலிமை அல்ல என்பதாலும், நல்ல விளைவுகளைத் தரப்போவது அமைதி வழியிலான போராட்டமே என்று நாங்கள் உறுதியாக நம்புவதாலும், எங்களுடைய ஆயுதங்களை நாங்கள் கீழே போட வேன்டும் என்பதே மார்ச் 11ம் தேதி எங்களுக்கு உணர்த்தும் செய்தி என்று நான் நினைக்கிறேன்.

மெக்சிக்கோ அரசு மட்டும்தான் இதைப் புரிந்து கொள்ளவில்லை.” என்று “மார்க்கோஸ்” கூறுகின்ற வார்த்தைகளானது சொல்லும் தீர்மானகரமான அரசியல் செய்தி என்ன என்பது பற்றிய புரிதலிலேதான் மக்களின் சுதந்திரம், அமைதியான வாழ்வு பிறப்பெடுத்தல் சாத்தியமாகும்.

மேலும் இன்னுமொரு பதிலில் “ஒரு படை என்ற விதத்தில் அது மறைந்து போய் விட வேண்டும். இராணுவத் தன்மை கொண்ட ஒருவனாக – ஒரு படை வீரனாக – வாழ்வது ஓர் அபத்தமாகும். ஏனென்றால், ஒருவன் தனது கருத்துக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று மற்றவர்களை வற்புறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு, ஆயுதங்களையே எப்போதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த அர்த்தத்தில், எங்களுடைய படை இராணுவத் தன்மையைக் கொண்டிருக்குமானால், அதற்கு எதிர்காலம் என்பதே கிடையாது. எமது தேசிய விடுதலைப் படை ஓர் இராணுவரீதியான அமைப்பாகவே தொடர்ந்து நீடிக்குமானால், அது தோல்வியடையப்போவது உறுதி. உலகத்தைப் பற்றிய ஒரு நிலைப்பாடு என்ற முறையில், ஒரு கருத்தியல் ரீதியான தேர்வு என்ற முறையில், அது நிச்சயமாகத் தோல்வியடையும். அது அதிகாரத்தைக் கைப்பற்றித், தன்னை புரட்சிகரமான இராணுவம் என்ற பெயரில் நிலை நிறுத்திக் கொள்ள முயலுமானால், அது இந்தத் தோல்வியை விட மோசமானதாயிருக்கும். தேசிய விடுதலை இயக்கங்களாக உருவான, 60- களையும் 70- களையும் சேர்ந்த அரசியல்- இராணுவ அமைப்புக்களினால் வெற்றி என்று கருதப்பட்டது எதுவோ, அது எங்களால் தோல்வியென்று கருதப்படுகின்றது.” என்றும் கூறுகின்றார்.

இங்கு துணைத் தளபதி “மார்க்கோஸ்” வியாக்கியானம் செய்யும் தத்துவார்த்தச் சிந்தனை முறைமைகள் இலத்தீன் அமெரிக்கச் சூழலில் மாத்திரமே பொருத்திப் பார்க்க முடிந்த நிகழ்வுகளா? அல்லது உலகளாவிய விரிந்த சமூகப் பரப்பில் மீள் வாசிப்புக்குரிய விடயங்களா?

சமூகத்திலே மேலே இருந்தவாறு அதிகாரம் செலுத்துகிற சூழல் புரட்சியை வெற்றி கொண்டவர்களுக்குக் கிடைத்தபோது சமூகத்திற்கான நன்மை, தீமைகளை அக் குழுவே தீர்மானிக்கும் பொழுது உலகத்தையோ, சமூகத்தையோ மாற்றியமைத்துவிட முடியாது என்பதாகவே “மார்க்கோஸ்” தனது வாதத்தை நிகழ்த்துகிறார்.

ஒரு புறத்தில் ஆயுதங்களை ஏந்தாமல் அணிதிரள்வது ஒரு விதத்தில் நிம்மதி அளிக்கும் செயல்பாடாக மாறிவிடுகிறது என்று அவர் சொல்வது இராணுவச் சொல்லாடல்கள் குறித்த அவரது விமர்சனப் பார்வை இவற்றிலிருந்து ஏதாவது நாம் கற்றுக் கொள்ள முடியுமா?

Thursday, August 31, 2006

ராஜீவ் காந்தி

-நடராஜா முரளிதரன்-

15 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவர் இந்திய நாட்டின் பிரதமராக இருக்கவில்லை. ஆனாலும் அவர் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று கூறப்படுகின்ற இந்திய தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆயினும் அன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் கொல்லப்பட்ட சில தினங்கள் கழித்து நடைபெற இருந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பாரதப் பிரதமராக முடிசூடிக் கொண்டிருந்திருப்பார். விமான விபத்தில் சஞ்சய் காந்தி கொல்லப்பட்ட போது வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர்தான் ராஜீவ் காந்தி. பின் இந்திரா காந்தியின் படுகொலையை அடுத்து அவரது வெற்றிடத்தை ராஜீவ் காந்தி நிரப்ப முற்பட்ட போது நவீன இந்தியாவின் நிர்மாணம் தொடர்பான சிந்தனைகள் இந்தியாவில் வலுப்பெறத் தொடங்கியிருந்த காலகட்டமாகும்.

நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் இந்திய மக்களுக்குத் தலைமை தாங்கிய காலகட்டங்களில் சோசலிச முகாம் சார்ந்த அணிசேரா நாடுகள் அணியில் இந்தியா வகித்த பாத்திரம் “பனிப்போர்” உலகு சார்ந்த வகையில் மிகவும் முக்கியமானது. ஆயினும் ராஜீவ் காந்தி வருகையின் பின்னர் கணணி மயப்படுத்தப்பட்ட நவீன இந்தியா, திறந்த பொருளாதாரம் என மேற்குலகு நோக்கிய சாய்வினை இந்தியா துரித கதியில் மேற் கொள்ள ஆரம்பித்து விட்டது எனலாம்.

எனவே 1991 மேயில் எதிர்பார்க்கப்பட்ட ராஜீவின் மீள்வருகை இந்தியாவினை “உலகமயமாதல்” நிகழ்ச்சி நிரலுக்குள் மேலும் உந்தித் தள்ளும் நிகழ்வினை உள்ளடக்கிய வாய்ப்பினைப் பெரும்பாலும் கொண்டிருந்தது. எனவே உலக முதலாளித்துவமும், இந்தியத் தரகு முதலாளி வர்க்கமும் பெரும் எதிர்பார்ப்புடன் உறுதியான அரசியல் தலைமையை எதிர்பார்த்துக் கிடந்த காலகட்டத்திலே நடைபெற்ற ராஜீவ் படுகொலையானது இந்திய உபகண்டத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டுப் 15 வருடங்களுக்குப் பின்னரும் அக் கொலையினால் எழுகின்ற அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்மானங்கள், கொள்கை வகுப்பாய்வுகள் ஆகியவற்றின் பாதிப்புக்குள்ளாhன சமூகமாக ஈழத் தமிழர் சமூகம் தொடர்ந்தும் ஆட்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது இந்திய ஆளும் வர்க்கங்களின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த அரசியல் என்ற வகையறாவுக்குள் மட்டுமே உள்ளடக்கப்பட்ட பிரச்சினைதான் ஈழத்தமிழர் பிரச்சினையா? என்பதை முடிவுறா விவாதமாக ஈழத்தமிழர்களாகிய நாம் இன்றும் சுமந்து கொண்டு திரிகிறோம்.

அண்மையில் தமிழர் தரப்பு நிலைப்பாடுகளை உலகளாவிய ரீதியில் பரப்புரை செய்வதில் முதன்மைப் பிரதிநிதியாகத் திகழும் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ராஜீவ் படுகொலை குறித்து இந்தியத் தொலைக்காட்சிக்குத் தெரிவித்திருந்த கருத்துக்கள் கடந்த வாரங்களில் இலங்கை-இந்திய அரசியல் அரங்கில் சூடு பிடித்து ஒரு கலக்குக் கலக்கியமையை இங்கு நோக்கலாம்.

ராஜீவ் காந்தி படுகொலையை “மாபெரும் துயரம்” என வர்ணித்த அவர் சோகம் ததும்பிய இத்தகைய வரலாற்றுப் பெருந் துன்பியல் நிகழ்வுக்காக நாங்கள் மிகுந்த துயர் அடைவதாகவும் அத் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருந்தார். மேலும் அவர் தொடர்கையில் “இந்திய அரசாங்கத்திடமும், இந்திய மக்களிடமும் நாம் வேண்டுவது யாதெனில் பெருந்தன்மையுடன் கடந்த காலத்தை ஒரு புறம் வைத்து விட்டு இலங்கை இனப்பிரச்சினையில் புதிய அணுகுமுறையுடன் கூடிய கையாளுதலை மேற்கொள்ளுங்கள் என்பதே” என்றும் சொல்லியிருந்தார்.

இந்திய இராணுவத்தின் சீக்கியப் புனிதப் “பொற் கோவில்” மீதான தாக்குதல் நடவடிக்கையைக் கண்டித்துப் பழிவாங்குதல் நடவடிக்கையாகவே சீக்கிய மெய்ப் பாதுகாவலர்களால் 1984 ஒக்ரோபரில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலையின் எதிரொலியாக இந்திய நாடெங்கணும் வாழ்ந்து வந்த பல்லாயிரக்கணக்கிலான சீக்கிய அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டும், அவர்களது சொத்துக்கள் எரித்து நாசமாக்கப்பட்டும் மனித சமூகமே வெட்கித் தலைகுனியும் வகையிலான வெறியாட்டம் சீக்கிய மக்களுக்கு எதிராக இந்திய மக்களால் (அதற்கான பொறுப்பை முழு இந்திய இந்திய சமூகத்திடமும் நாம் திணித்து விட முடியாது) நிகழ்த்தப்பட்டது.

அந்தச் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்து 20 வருடங்களுக்கும் மேலாகி விட்டன. ஆனால் இன்று சோனியா காந்தி வழங்கிய ஆசீர்வாதத்தால் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராகப் பதவியில் உள்ளார். அதை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு இந்திய மக்களின் மனோநிலை மிகத் தாராள நிலையிலுள்ளது என்பதே இங்கு உற்று நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஈழத் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்குமான உறவு “தொப்புள் கொடி உறவு” என்று கூறுவார்கள். ஐந்து கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ் நாட்டில் வசித்து வந்த போதும் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையிலான மேலாதிக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையை ஜே.ஆர் அரசுக்கு சாதகமாக ஏன் மேற்கொண்டது? என்பது சராசரித் தமிழ் மக்களது பார்வையில் பெரும் புதிராகவே தோன்றும்.

1987 யூலை மாதத்தில் ராஜீவ் காந்தியினால் உருவாக்கப்பட்ட “இந்திய-இலங்கை ஒப்பந்தம்” ஈழத் தமிழ் மக்களுக்காக இதுவரை காலமும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் மிகவும் வலுவானது, தமிழ் மக்களுக்கு கூடுதல் உரிமைகளை வழங்க வல்லது என வாதிப்போரை இன்றும் எம்மிடையே நாம் காணலாம். இவர்கள் முன் வைக்கும் வாதமானது

(1) இலங்கை நாடென்பது பல்லின, பல் மத நாடாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இவ் அங்கீகாரமானது சிங்கள, பௌத்த பேரினவாதிகளின் பேரினவாதச் சிந்தனைக்கு சாவு மணி அடிப்பதாகும்.

(2) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி இலங்கை என்ற நாட்டின் வட-கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களினதும், முஸ்லீம் மக்களினதும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தொடர்ச்சியான வாழ்நிலைப் பிரதேசங்களாகும்.

(3) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

(4) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி தமிழ் மொழி உத்தியோக மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

(5) அதி உச்சமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 13வது அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தத்தின் மூலம் இலங்கை என்ற நாட்டில் அதிகாரப் பரவலாக்கல் முறை ஏற்படுத்தப்படுகின்றது. இதனூடாக மாகாண சபைகள் பிறப்பெடுக்கின்றன என்ற ஐந்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைகிறது.

மறுபுறத்தில் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான இந்திய அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த பல விமர்சனங்களும் உண்டு. இந்திரா காந்தியின் மரணச்சடங்குக்காக ஜே.ஆர் டில்லி சென்றிருந்த வேளையில் சம்பிரதாய முறைப்படி ராஜீவை சந்தித்துக் கொண்டார். அந்த முதற் சந்திப்பிலேயே ஜே.ஆரின் அரசியல் சாணக்கிய அணுகுமுறைக்குள் ராஜீவ் விழுந்து கொண்டதாகவும் அதனால் ராஜீவுக்கு ஜே.ஆரை நன்கு பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியேற்று சிறிது காலத்துக்குள்ளாகவே இந்திராவுக்கு நெருக்கமாயிருந்த பார்த்தசாரதி போன்ற வெளிவிவகாரக் கொள்கை ஆலோசகர்களையும், இராஜதந்திரிகளையும் புறக்கணிக்கத் தொடங்கியிருந்தார். புதியவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

இதன் பின்னர் இலங்கை தொடர்பான இந்திய அணுகுமுறை கடுமையான போக்கிலிருந்து இலங்கை அரசு மீதான மென்மையான நட்புறவுடன் கூடிய புதியவகை அணுகுமுறையாக மாற்றம் பெற ஆரம்பித்தது. இதன் தொடர் விளைவாகவே போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு பூட்டானின் தலைநகரான திம்புவில் தமிழர் தரப்புக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் 1985 யூலை 8ம் தேதி ஆரம்பித்து ஆறு நாட்கள் வரை நடைபெற்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக இந்திய அரசிடம் ஈழத் தேசிய விடுதலை முன்னணியானது ( புளொட், கூட்டணி தவிர்ந்த ஏனைய முக்கிய 4 தமிழ் அமைப்புக்களின் கூட்டு) ஆரம்பிக்கப்படவிருக்கும் திம்புப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையாக சிறிலங்கா அரசானது தமிழரின் இனப்பிரச்சினை குறித்து ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும் எனச் சிறிலங்கா அரசினைக் கோருமாறு எடுத்தியம்பியது. அவ்வாறுகோரியமை இந்திய அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியமையால் ஈழத் தேசிய விடுதலை முன்னணியானது இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டு பல்வேறு வகையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டமை என்பது வரலாறு. இவ்வாறு நிகழ்ந்த திம்புப் பேச்சுவார்த்தையின் போது தமிழர் தரப்பு ஒருங்கிணைந்து தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படையான பின்வரும் நான்கு மூலக் கோட்பாடுகளை முன் வைத்தார்கள்.

(1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்.

(2) தமிழ் மக்களுக்கு இனம் காணக் கூடிய தனித்துவமான தாயகம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.

(3) தமிழர் தேசத்துக்கு எவராலும் பறித்தெடுக்க முடியாத சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.

(4) சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படையான உரிமைகளும் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.

இந்தக் கோட்பாடுகளைத் திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட சிறிலங்காத் தரப்பு ( ஜே.ஆரின் சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனா சிறிலங்கா அரச தூதுக் குழுவுக்குத் தலைமை வகித்திருந்தார்) இறுதிக் கோட்பாடு நீங்கலாக அனைத்தையும் முற்றாக நிராகரித்ததினாலும், அக் காலகட்டப் பகுதியில் வட-கிழக்கு மாகாணங்களில் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட யுத்த நிறுத்த மீறல்களாலும் வரலாற்றிலே முதன்முதலாக இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இடம்பெற்ற திம்புப் பேச்சுக்கள் முறிவடைந்து போயின.

இந்த முதலாவது (திம்புப் பேச்சுவார்த்தைகளில்) தோல்விக்குப் பின்னர் மீண்டும் ராஜீவ் தலைமையிலான இந்திய அரசு 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தெற்காசிய நாடுகளின் ( சார்க் ) உச்சி மாநாடு பெங்க@ரில்">பெங்க@ரில் ஏற்பாடாகியிருந்த வேளையில் தமிழர் தரப்புக்கு மீண்டுமொரு நெருக்குதலைக் கொடுத்து ஜே.ஆரினால் முன் வைக்கப்பட்ட பிறிதொரு தீர்வுத்திட்டத்தை ( இத் தீர்வுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் மூன்று கூறுகளாகாகப் பிரிக்கப்பட்டன) ஏற்குமாறு பலவந்தப்படுத்தியது.

இதன் மூலம் பெங்க@ர்">பெங்க@ர் சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இராஜதந்திர சாதனை படைத்து ராஜீவினதும், இந்தியாவினதும் ஆளுமை முத்திரையைப் பதித்து விட இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் எண்ண்pயிருந்தார்கள். விளைவு – தமிழர் தரப்பின் பிரதான அமைப்பு இவ் அரைகுறைத் தீர்வுத்திட்டம் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தைக் கூறு போடுகிறது என்று கூறி அத் திட்டத்தை அடியோடு நிராகரித்தது.

இந்தச் சந்தர்ப்பத்திலே நான் குறித்த ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது என எண்ணுகின்றேன். ஏறத்தாள 31 மாதங்கள் சிறிலங்காவின் இராணுவச் சிறைகளில் வாடிவதங்கிய நான் இறிதியாக 1986 டிசம்பர் 23ம் தேதி வெலிக்கடைச் சிறையிலிருந்து விடுதலையானேன்.

இரு நாட்களின் பின் யாழ்பாணம் சென்ற எனக்கு 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாத முற்பகுதியில் யாழ் நல்லூர் கோவிலின் அருகே அமைந்துள்ள அலுவலகத்தில் தமிழர் தரப்பின் பெருந் தலைவரை சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

அந்தச் சந்திப்பின் போது “கூறு போட்டுச் சிதைக்கப்பட்டதும், அதிகாரமற்றதுமான மாகாண அரசின் முதல்வராக முடிசூடுமாறு இந்திய அரசு வலிந்து என்னை அழைத்த போதும் அதனை நான் நிராகரித்தேன்” என்று என்னிடம் கூறியதை என்னால் நினைவு மீட்டுக் கொள்ள முடிகிறது.

Thursday, August 17, 2006

ஐரோப்பிய யூனியன் இன்று தடை செய்யுமா?

-நடராஜா முரளிதரன்-

இன்று மே வெள்ளி 19ல் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு(யூனியன்) தமிழர் தரப்புத் தொடர்பாக எடுக்கவுள்ள முடிவு தமிழ் பேசும் ஈழத்தவர்களுக்கு எத்தகைய தாக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தாது என்பது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சூடு பிடிக்கப்போகிறது.

ஏறத்தாள 4 இலட்சம் இலங்கைத் தமிழ் மக்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் செறிந்தும், பரவலாகவும் வாழ்வதால் அந்த நாட்டு அரசியலாளர்கள் அது குறித்து அக்கறைப்பட வேண்டியவர்களாக உள்ளார்கள்.

மேலும் தமிழ் அகதிகள் வருகை அதிகரிப்பினால் எழக்கூடிய சிக்கல்களை எவ்வாறு மட்டுப்படுத்துவது என்பது குறித்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சில கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக உள்ளார்கள். மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள மேற்படி நாடுகளுக்கு சிறிலங்காவிலே இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த அவதானங்களை, அபிப்பிராயங்களை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டு.

எல்லாவற்றையும் விட மேலானதாக அந்தந்த நாடுகளின் பூகோள, இராணுவ, பொருளாதார, தேசிய அரசியல் நலன்களின் பெறுபேறுகளை மையமாகவே வைத்து கொள்கை வகுப்பாய்வாளர்கள் வகுக்கும் கோட்பாடுகளின் அடிப்படையில் நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கை தீர்மானிக்கப்படுகின்றது என்று கூறுவதே மிகப் பொருத்தமானது.

எனவே நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்த வகையில் எமக்குச் சாதகமாக அமைவது மற்றவருக்குப் பாதகமாக அமையலாம். எமக்குப் பாதகமாக அமைவது மற்றவருக்குச் சாதகமாக அமையலாம்.

அண்மையில்; இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொனால்ட் காம்ப் தமிழர் தரப்பைத் தடை செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐரோப்பிய யூனியனைக் கோரியுள்ளதாக கூறியிருந்தார்.

உலகப் பெரு வல்லரசான அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் மீது கொடுக்கும் அழுத்தமானது மிகவும் முக்கியமானதொன்றாகவே கருதப்படும்.25 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் புருசெல்சில் எடுக்க உள்ள இந்த முடிவானது தமிழ் பேசும் மக்களுக்குப் பாதகமாக அமைந்து விடும் தமிழர் தரப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுவிடும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஐரோப்பிய இராஜதந்திரிகள்
மட்டத்திலிருந்து செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.

ஏதாவது பேரதிசயங்கள் நிகழ்ந்து முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டோ அல்லது சாதகமான வாய்ப்புக்கள் நிகழ்ந்தோ மாறுதல் அமைவதற்கான சூழ்நிலை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. ஐரோப்பியச் சூழ்நிலையில் ஏற்கனவே பிரிட்டன் தமிழர் தரப்பைத் தடை செய்து விட்டது. ஐரோப்பிய யூனியன் கடந்த வருடம் செப்ரம்பர் மாதம் தழிழர் தரப்பின் மீதான பிரயாணத் தடையை அமுல்படுத்திருந்தது.உலக அளவில் தடைகள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா,கனடா போன்ற நாடுகளில் ஏலவே அமுல்படுத்தப்பட்டுள்ளன.

தடைகள் என்பது அடக்கப்பட்ட மக்கள் மீது பிரயோகிக்கப்படும் போதெல்லாம் அதன் விளைவுகள் இன்னும் அதன் எல்லைகளைத் தாண்டி வன்முறைகள் மோசமாக நிகழ்வதற்கான தள நிலைமைகளை உருவாக்கிவிடுகிறது என்பதுதான் உண்மை.

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் அரசு அமுல்படுத்திய தடை தமிழர்களின் அரசியல் வன்முறை ஈடுபாட்டை மேலும் துரிதப்படுத்திய வரலாற்றுண்மையை இங்கு நோக்கலாம்.இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு வடகிழக்கு மாகாணசபையை வழங்குவதாகக் கூறிக் கொண்டு வந்த இந்திய இராணுவம் நடுநிலையாளர் ஸ்தானத்திலிருந்து விலகி தாக்குதலாளனாக மாறிய போது ஏது நிகழ்ந்தது?

இலங்கை அரசு, இந்திய அரசு, மாற்று அமைப்புக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து ஜே.ஆர் ஆட்சிக் காலத்தில் அமைத்த முக்கூட்டு பலமானதாக ஏன் அமையவில்லை? அடக்குமுறையைத் தனது மேலாதிக்கத்துக்காகப் பிரயோகிக்கும் எந்தப் பலம் பொருந்திய அமைப்பும் ஈற்றில் தகர்ந்து விடுகிறது.

ஐரோப்பிய யூனியன் ஏற்புடுத்த உள்ள இத்தடையானது கீழ்கண்ட பிரச்சினைகளைக் கிளப்பி விடும் என அரசியல் அவதானிகள் கருத்துக் கூறுவது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.

1) சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு தமிழர் தரப்பை ஊக்குவிப்பதற்குப் பதிலாக மேலும் தமிழர் தரப்பை அந்நியப்படுத்தும் நிகழ்வாக அமைந்து விடும்.

2) சிறிலங்கா அரசானது இதனைத் தமக்குச் சாதகமான சமிக்ஞையாகக் கருதிக் கொண்டுவிட ஜே.வி;.பியும், ஜாதிகஹெல உறுமய போன்ற போன்ற பேரினவாதக் கட்சிகளின் கூட்டும், முன்னெடுப்பும் முழு அளவிலான போரைத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவதற்கான வாய்ப்புகளை அரசுக்கு ஏற்படுத்திவிடும்.

3) தமிழ்-சிங்கள இனங்கள் மத்தியில் தற்போது காணப்படும் பதட்ட சூழ்நிலையானது தமிழ்-சிங்கள இனக் கலவரம் நடைபெறுவதற்கான ஏதுக்களை இட்டுச் சென்று விடும்.

4) ஐரோப்பாவில் இத் தடை அமுல்படுத்தப்படும்போது அங்கு வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கு பல சிரமங்களையும், தொல்லைகளையும் நடைமுறை வாழ்வில் விளைவித்து விடும்.

நடைமுறையில் இவ்வாறான தடைகள், அழுத்தங்கள் எதைச் சாதித்தன என்பது குறித்து ஆராயும் சில ஆய்வாளர்களது வியாக்கியானங்கள் வேறுவகையில் அமைகிறது.

1995 ஒக்ரோபரில் கனடா நாட்டில் மாணிக்கவாசகம் சுரேஸ் அவர்கள் கைது செய்யப்பட்டு தமிழர் தரப்பு மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டபோது அதனால் பாரதூரமான பாதிப்பு ஏதும் நிகழ்ந்து விடவில்லையே என்று என்னிடம் ஓர் ஆய்வாளர் கூறினார்.

1996 ஏப்ரல் 10ம் தேதி சுவிஸ் நாட்டில் தமிழர் தரப்புச் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு இலட்சக்கணக்கிலான பணம் வங்கியில் முடக்கப்பட்டுப் பாரிய அளவில் பொலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் விளைவு பொது மக்களிடம் அனுதாபமும், எழுச்சியும் மேலோங்கியது. நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் அரச தரப்பு தோல்வியைத் தழுவிக் கொண்டது மட்டுமல்லாது குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு ந~;டஈடும் பெற்றுக் கொண்டார்கள்.

தடைக்குள்ளான நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலே கூட தமிழர் தரப்புச் செயற்பாடுகள் ஓரளவு தொடருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவேதான் நோய்க்கான காரண காரியங்களை அறிதலின் மூலம் நோயைக் கட்டுப்படுத்துவதும், நோயாளியைக் குணப்படுத்துவதும் சிறந்த வைத்தியனின் சேவையாக அமைகிறது.

எனவே தடைகள் மூலம் தமிழர் தரப்பின் மீது பிரயோகிக்;கப்படும் அழுத்தங்கள் முற்றிலுமாக செயற்பாடுகளை நிறுத்திவிடுமா? என்பது போன்ற கேள்விகள் மக்கள் மனங்களில் இயல்பாக எழுவதும் அதற்கான பதில்கள் அவரவர் நிலைப்பாட்டில் வழங்கப்படுவதும் புலம் பெயர் வாழ்வில் பொதுவானதாகும்.

இந்த அடிப்படையில் ஐரோப்பியத்தடை நிகழுமாயின் போர் மேகங்கள் ஈழ வானில் இடிகளை முழக்கும். இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும்.
நாகரீகங்களின் மோதல்

-நடராஜா முரளிதரன்-

அண்மையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “விடுதலை” என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் அந்த நூலில் அமெரிக்க வரலாற்று அறிஞர் “சாமுவேல் ஹண்டிங்ரன்” முன்வைத்த “நாகரீகங்களின் மோதல்” என்ற வரலாற்றுக் கோட்பாடு தொடர்பாக “உலக வரலாறும் மனித விடுதலையும்” என்ற தலைப்பிலான கட்டுரையில் பாலசிங்கம் அவர்கள் சுருக்கமாகவும், சுவைபடவும் சில விடயங்களைக் கூறியுள்ளார்.

அவற்றில் என் வாசித்தலுக்கூடாகப் பெறப்பட்டவை குறித்து சிறிது அலசலாம்; என்று எண்ணுகின்றேன். சமகால, எதிர்கால உலக நெருக்கடிகளின் உச்சப் பரிமாணமாக வேறுபட்ட நாகரீகங்களைச் சேர்ந்த மக்கள் இனங்கள் மோதிக்கொள்வது வாயிலாகவே மனித வரலாறு கட்டவிழ்ந்து செல்லும் என்பதே “சாமுவேல் ஹண்டிங்ரனின்” கோட்பாட்டு மையமாகும்.

அவரது கோட்பாட்டை மேலும் அழுத்தியுரைக்கு முகமாக 1997 ஆம் ஆண்டு “நாகரீகங்களின் மோதலும் உலக ஒழுங்கை மீளமைத்தலும்” என்ற நூல் அவரால் மேலும் வெளியிடப்பட்டது. பனிப் போர் முடிவு கருத்தியல் முரண்பாடுகளையும், சிந்தாந்தச் சிக்கல்களையும் செயலிழக்க வைத்த நிலையில் சித்தாந்தங்களும், அரசியல் அமைப்பு வடிவங்களும், பொருளாதாரக் கட்டமைப்புக்களும் சமுதாயங்களின் தனித்துவத்தை ஆழ்ந்து அவதானிக்கத் தவறிவிட்டன. ஆனாலும் பண்பாட்டு அடையாளங்களே மனித சமூகங்களின் தனித் தன்மைகளை, அடையாளங்களை வரையறை செய்கின்றன. ஏந்த மக்கள் கூட்டமும் தங்களை இனம் கண்டு கொள்ளவும், இனம் காட்டிக் கொள்ளவும் பண்பாட்டு அம்சங்களே ஆதாரங்கள் .
பண்பாட்டின் அதி உயர் தோற்றமே நாகரீகம் எனலாம். சமூகங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியானது மனித நாகரீகங்களின் கதை சொல்லல்களாக முடிவுறாத தொடர்ச்சியாக நீள்கிறது.
இத் தொடர்ச்சியில் வளர்ச்சி பெற்ற, வளர்ச்சி பெற முயலும் பெரு நாகரீகங்கள் ஆதிக்கப் போட்டியை நிகழ்த்துகின்றன. முரண்பட்டுக்; கொள்கின்றன. புரட்சிகள் எழலாம்.விழலாம்.சமுக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். விதி விலக்காக கால வெள்ளத்தில் அமிழ்ந்து போன நாகரீகங்கள் இருந்த போதிலும் பெரு நாகரீகங்கள் இந்தக் காலச் சூறாவளிகளையெல்லாம் கடந்து தாக்குப் பிடிக்கின்றன என்றெல்லாம் “சாமுவேல் ஹண்டிங்ரன்” கூறுகின்றார்.

இந்த “நாகரீகங்களுக்கான மோதல்” வரலாற்றில் பெரிது, சிறிது என்ற எல்லைகளைக் கடந்து அனைத்து வகை மக்கள் கூட்டத்துக்குமான பொதுமையாக அமைந்து விடுமா? ஏன்ற கேள்வியே என் ஆழ் மனதில் நெருடிக் கொண்டிருந்தது.

சிறிலங்காவிலே இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இன முரண்பாட்டில் தமிழ், சிங்கள ஆகிய இரு இனங்களும் மொழி, மதம், பண்பாடு என அனைத்திலும் வேறுபாடு கொண்டவை. இந்த முரண்பாட்டினை தேசிய இன முரண்பாடாகவே உலகம் கண்டு கொள்கிறது. இவற்றை நாகரீகங்களுக்கிடையிலான மோதலாகவும் நோக்க முடியுமா? ஏன்பது குறித்தே நான் சிந்திக்க விழைகிறேன்.

இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சியின் வரலாற்றுப் போக்கு மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்தோடு முரண்படுவதை இன்று நாம் காணுகின்றோம். பல கோடி முஸ்லீம் மக்கள் தமது மதத்தை நாகரீகச் சின்னமாக நோக்குவதை, தமது வாழ்வின் அர்த்த பரிமாணங்களை இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு ஊடாகப் பெற முயல்வதை நாம் அவதானிக்க முடியும்.

இஸ்லாமிய மதமானது சமூக, அரசியல், பண்பாட்டுக் கருத்துருவாக்கங்களைத் தீவிர நிலையில் வழிநிலைப்படுத்த முயல்வதால் ஆயுதம் தாங்கிய இராணுவ வாதமாகவும் அது மாறி விடுகிறது. சிறிலங்காவை எடுத்துக் கொண்டால் சிங்கள நாகரீகமானது தனது பண்பாட்டின் தனித்துவத்தையும், சிறப்பான அம்சங்களையும் வலுப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அதனைத் தமிழ் நாகரீகத்தின் மீது திணித்து விட முயற்ச்சிப்பதாக கருதிக் கொள்ள முடியுமா? அல்லது தனது நாகரீகத்தின் இருப்புக் குறித்த அச்சம் காரணமாக தமிழ் நாகரீகத்தின் மீது மேலாதிக்கத்தை ஏற்படுத்தித் தமிழ் நாகரீகத்தைக் கட்டுக்குள் கொணர விழைந்ததன் விளை பொருள்தானா இன்று நிகழும் கோர யுத்தம்?

மறு புறத்தில் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அதிகார சக்திகள் இனங்களுக்கிடையிலான முரண்களைக் கிளறி விடுவதாகக் கூறிடும் வாதங்கள் மேற் குறிப்பிட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் அர்த்தம் இழந்து போவதையும் நோக்க முடியும்.

நாகரீகங்களுக்கிடையில் ஏற்படும் முரண்நிலைப் போக்கே எதிர்கால உலக அரசியலையும், மானுடத்தின் வரலாற்றையும் தீர்மானிக்கும் என்ற “சாமுவேல் ஹண்டிங்ரன்” நிலைப்பாடு உலகமயமாதலில் மேற்குலக கிறீஸ்தவ நாகரீகம் தனது பண்பாட்டு விழுமியங்களை சர்வதேசியப்படுத்தும் வேளைகளில் ஓரளவு பலம் வாய்ந்த நிலையில் காணப்படும் சீன, இஸ்லாமிய நாகரீகங்களோடு மோதுகின்ற களங்களை உருவாக்கி வந்த போதும் இன்றைய உலகின் போர்க்களங்களை நிர்மாணிப்பது இன நெருக்கடிகளால் விழைந்த இன மோதல்களே என்கிறது.

பிளவுபட்டு நிற்கும் பண்பாட்டு உலகங்கள் மத்தியில் ஒத்திசைவு ஏற்படாதென்றும், இந் நாகரீகங்கள் தங்களை உச்சநிலை வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல மாட்டாதவையென்றும் கூறும் “ஹண்டிங்ரன்” இவற்றினால் பேரழிவுகளே விழையும் என்றும் எதிர்வு கூறுகிறூர். இவ்வாறு நாகரீகக் கோட்பாட்டின் அடிப்படையில் உலக உறவுகளை ஆராய முற்படும் ஹண்டிங்ரனை நோக்கிச் சில கேள்விகளையும் பாலசிங்கம் அவர்கள் எழுப்புகிறார்.

ஈராக் மீதான அமெரிக்கப் போரை கிறீஸ்தவ-இஸ்லாமிய நாகரீக மோதலாக மட்டுமே எடை போட முடியுமா?மேற்குலக கிறீஸதவ நாகரீகத்தைச் சேர்ந்த நாடுகள் மத்தியிலே எழும் முரண்பாடுகளை எவ்வாறு புரிந்து கொள்வது?

இஸ்லாமிய நாகரீகத்தைச் சார்ந்த நாடுகள் ஒரே பண்பாட்டு உலகமாக ஒன்றுபட்டு நிற்காது பிளவுபட்டு முரண்படுவதேன்?

சீன தேசத்தை மேற்குலக கிறீஸ்தவ நாகரீகத்திற்கு விரோதமான சக்தியாக கருத முடியுமா?
போன்றவை அவர் எழுப்பிய கேள்விகளுள் முக்கியமானவை. அதைத் தொடர்ந்து “மனிதர்களின் சமூக வாழ்வில் பண்பாடு முக்கியமானதே. பண்பாடானது சமூகங்களின் ஆன்மாவாக, சமூக உறவுகளுக்கு ஆதாரமாக , சமூக ஒழுங்குகிற்கு அத்திவாரமாகத் திகழ்கிறது. எனினும் மனித அபிலாசைகளின் பரிமாணம் அகன்றது. அவற்றைப் பண்பாட்டு உலகுக்குள் முடக்கி விட முடியாது” என்ற கருத்தையும் பாலசிங்கம் அவர்கள் முன்வைக்கிறார்.

சுதந்திரமும், வாழ்நிலை முன்னேற்றமுமே மனித சமூகங்கள் யாவற்றினதும் பொதுவான விருப்பாய் , வரலாற்றின் அசைவியக்கமாய் அமைந்து நிற்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அதே வேளை சமுதாயங்கள் பண்பாட்டு உலகங்களினுள் சிறையுண்டிருப்பதையும் நிராகரித்துவிட முடியாது.

Wednesday, August 16, 2006

புஸ்பராஜாஓர் நோக்கு-4

-நடராஜா முரளிதரன்-

1971ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி அல்பிரட் துரையப்பாவுக்கு இலக்கு வைத்து அவரின் காரில் வைக்கப்பட்ட குண்டு, நேரம் முந்தி வெடித்ததால் துரையப்பா உயிர் தப்பியிருந்தார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சிவகுமாரன் முயற்ச்சியில் தோல்வியுற்றாலும் அவரால் நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதல் நிகழ்வானது அன்றைய காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்களால் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இன்னும் ஒருபடி மேலே கூறுவதானால் தமிழ்-சிங்கள தேசிய முரண்பாடு அரசியல் வன்முறையாக மாற்றம் பெற்றுக் கொண்டிருப்பதை இத்தகைய நிகழ்வுகளுக்கூடாக ஊடறுத்துக் காண முடியும். 1974ம் ஆண்டு தை மாதம் 10ம் தேதி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள்; மாலை நிகழ்வுக்காக யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தார்கள். மாநாட்டு மேடையிலே தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நயினார் முகமது பேசிக் கொண்டிருந்தார். அவ் வேளையிலே தான் யாழ் பொலீஸ் உதவி அதிபர் சந்திரசேகரா தலைமையில் பொலீஸார் குழப்பம் விளைவிக்க ஆரம்பித்தனர். இந்தக் குழப்பம் ஏன் உண்டானது? என்பது குறித்து பல்வேறு வகையான வதந்திகள் அன்று உலாவின. அவற்றில் முக்கியமான ஒன்றை இங்கு குறிப்பிட எண்ணுகின்றேன்.

வீரசிங்கம் மண்டபத்தின் முன்றலில் பொதுக்கூட்டம் ஒன்றை நிகழ்த்துவதற்கான அனுமதியை பொலீஸார் வழங்கவில்லையென்றும் ஆனாலும் மாநாட்டின் இறுதி நாளன்று மக்கள் பெருந்திரளாக எழுச்சியுடன் அங்கு கூடியிருந்தமையால் கூட்டத்தை மண்டபத்துக்கு வெளியே நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு ஏற்ப்பட்டதாகவும் என்பது அதில் ஒன்று. திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு பிரமித்த பொலீஸார் ஆரம்பத்தில் நடவடிக்கை எதனையும் எடுக்கத் துணிச்சல் பெறாதவர்களாக தத்தளித்துக் கொண்டிருந்தனர். இரவு பத்தரை மணியளவில் ஏ.எஸ்.பி சந்திரசேகரா மேலிடத்து ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு மாநாட்டு அமைப்பாளர்களுக்கு நேரம் தாண்டிக் கொண்டிருப்பதான பிரச்சினையை முன்வைத்து கூட்டத்தை மேலும் நீடிக்காமல் நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். மேலிடத்து ஆலோசனையின் பின்னணியில் அல்பிரட் துரையப்பா செயற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அங்கு குழுமியிருந்த மக்கள் திரள் ஏ.எஸ்.பியின் அழுத்தத்துக்கு அடிபணிய மறுத்துக் கூட்டத்தை தொடர்ந்து நடத்துமாறு கூட்ட அமைப்பாளர்களுக்கு கூக்குரல் இடத் தொடங்கியது. அவ்வேளையிலேதான் வெறி கொண்டவராக மாறிய சந்திரசேகரா கூட்டத்தைக் கலைத்து விரட்டுமாறு பொலீஸ் படைக்குக் கட்டளையிடுகிறார். பின்பு தான் எல்லா விபரீதங்களும் நிகழ்ந்தன.

புஸ்பராஜாவின் நூலிலே ஷஷநான் சுபாஸ் கபேயில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். பெருந்திரளான சனங்கள் அங்கும் இங்கும் எனக் கதறிய வண்ணம் ஓடிக் கொணடிருந்தனர். அவர்கள் உயிருக்குப் பயந்து ஓடுவது போல தென்பட்டனர். உடனே வெளியே வந்து என்ன நடந்தது என அறிய முயன்றேன். பொலீஸ் சுடுகின்றனர், பொலீஸ் குண்டெறிகின்றனர் என ஆளுக்கொரு தகவல் சொல்லிக்கொண்டு சிதறி ஓடிக்கொணடிருந்தனர்……….. சனங்கள் முண்டியடித்துக்கொண்டு ஒருவரையொருவர் தள்ளிவிட்டபடி, ஏறி மிதித்தபடி ஓடினர். அப்பொழுது எனது தங்கை புஸ்பராணி, சிவகுமாரன் போன்றவர்கள் வருவதைக் கண்டேன். விபரம் கூறிய சிவகுமாரன், சனங்களைப் பாதுகாப்பாக பஸ்களில் ஏற்றி அனுப்புவோம், வாருங்கள் ஒழுங்குகள் செய்வோம் என்றார். ……………சனங்களை ஏற்றி ஒரு பஸ்ஸை சிவகுமாரன் எடுத்தார்………..அன்றைய இரவு 9 தமிழர்களைப் பலி கொண்டது. 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந் நிகழ்ச்சியால் இளைஞர்கள் கொதித்துப் போனர். சிவகுமாரன் பைத்தியம் பிடித்தவர் போல் காணப்பட்டார். இந்தக் கொலைகளுக்குக் காரணமான ஏ.எஸ்.பி சந்திரசேகராவைக்…………….எனச் சிவகுமாரன் சபதம் போட்டார். (பக்-97,99) என உள்ளது.

சந்திரசேகரா யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அண்மையில் குடியிருந்தார். தினமும் யாழ் பொலீஸ் நிலையத்துக்குக் கைலாசப் பிள்ளையார் கோவிலைக் கடந்தே போவார். இதன்படி தாக்குதல் நிகழ்த்துவதற்கான இடமாக கைலாசபிள்ளையார் கோவிலடி தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரான்சிஸ், அளவெட்டி ஆனந்தன், நடேசானந்தன் ஆகியவர்களை சிவகுமாரன் தேர்ந்தெடுத்திருந்தார். கையால் தயாரிக்கப்பட்ட சன்னங்கள் போட்ட துப்பாக்கியால் சந்திரசேகரா மீது தாக்குதல் நிகழ்த்த சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சி, அது வெடிக்காததால் வீணானது. ஆயினும் மனந்தளராத சிவகுமாரன் சந்திரசேகராவை ஜீப்பில் இருந்து வெளியே இழுத்துத் தாக்குதல் நிகழ்த்த முற்படுகிறார். சென்றவர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கைகூடாததால் அவரது முயற்ச்சி தோல்வியைத் தழுவிக் கொள்கிறது. தப்பிச் சென்றுவிடுகிறார். இவ்வாறு சிவகுமாரன் முன்னெடுத்த தாக்குதல் நடவடிக்கைகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முழுவெற்றியை ஈட்டிக் கொள்ளவில்லை. நான் சிவகுமாரனுடன் அவர் இறக்கும் வரைக்கும் மிக நெருக்கமாகப் பழங்கியவன். இந்த ரீதியில் எனக்குப் பல உண்மைகள் தெரியும். சிவகுமாரனின் அனைத்து முயற்ச்சிகளும் தோல்வியில் முடிந்தது. சிவகுமாரனின் தூய்மையான எண்ணமும், விசுவாசமும், நேர்மையும், திறமையும், வீரமும் எப்படி எல்லா முயற்ச்சிகளிலும் தோல்வியைக் கொடுத்தன என்பதை ஆய்வு செய்ய வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். சிவகுமாரன் தனது தளபதிகளாக தேர்ந்தெடுத்தவர்களின் விவேகமின்மையே அவரின் தோல்விக்குக் காரணம் என எம்மால் ஒரு முடிவுக்கு வரக் கூடியதாக உள்ளதென(பக்-117) இந்தத் தோல்விகளுக்கான முழுக்காரணங்களையும் புஸ்பராஜா தனது நூலில் சிவகுமாரனைச் சூழவிருந்த சகாக்கள் அல்லது அவரோடு இணைந்து பங்கேற்றவர்கள் தலைகளில் பொறித்து விடுதல் ஏற்புடையதாக இல்லை.

வென்றால் உரிமை தலைவனுக்கு. தோற்றால் தொண்டன் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போல அல்லவா இருக்கிறது. கட்டுப்பாடு, சிறந்த பயிற்ச்சி, ஒருங்கிணைப்பு, தகவல் சேகரிப்பு, சிறந்த உபகரணங்கள் போன்ற விடயங்களை உள்வாங்கி நீண்ட கால அடிப்படையில் நிதானித்து செயற்படுவதன் மூலமே எந்த விடுதலை வரலாறும் வெற்றிக் கனிகளைப் பறித்திருக்கும்.

தமிழ் பேசும் மக்களுடைய உரிமைப் போராட்ட வரலாற்றிலே சிவகுமாரனது வரலாற்றினை பதிவுக்குள்ளாக்குவது, முன்னிலைப்படுத்துதல் என்ற தளத்தில் புஸ்பராஜா தனது நூலிலே சிவகுமாரனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

சிவகுமாரன் தலைமை தாங்கிய இறுதி நடவடிக்கை கோப்பாய் கிராமிய வங்கிக் கொள்ளை முயற்ச்சியாகும். இதில் சிவகுமாரனோடு இணைந்து கொண்டவர்கள் ஜீவராஜா, மகேந்திரன், பிரான்சிஸ் போன்றவர்கள். மருதனாமடம் சந்தியிலிருந்து கடத்தப்பட்ட காரினை வெளியே நிறுத்தி விட்டு வங்கியின் உள்ளே சிவகுமாரன் தலைமையிலான குழு கொள்ளையிட நுழைந்தது. ஆனால் வங்கி ஊழியர்கள் உசாரடைந்து மக்கள் போட்ட கூக்குரலில் பொலீசுக்கும் தகவல் சென்று விட்டது. வெளியே ஓடி வந்தவர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மூலம் தப்ப முயன்றும் முடியவில்லை. வெறும் காலால் ஓட்டம் பிடித்தார்கள்.

புகையிலைத் தோட்டங்களுக்கு ஊடாக ஓடிக்கொண்டிருந்த வேளையில் சிவகுமாரன் சுலபமாக பொலீசாரினால் சுற்றி வளைக்கப்பட்டார். இறுதியாக சிவகுமாரன் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியைப் பயன்படுத்திச் சண்டையிடுகிறார். ஆனால் ரவைகள் தீர்ந்து விடுகின்றன. தப்ப முடியாத நிலையில் சயனைட் சாப்பிடுகின்றார். சயனைட் சாப்பிட்ட நிலையில் மயங்கிய சிவகுமாரன் பொலீசாரினால் கைது செய்யப்பட்டு யாழ் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலீஸ் காவல் தொடர்கிறது. மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை பலர் வற்புறுத்தியும் பெற்றுக்கொள்ள மறுத்த சிவகுமாரன் ஈற்றில் வீரச்சாவை அறுவடை செய்து கொண்டார்.

அந்த நாள் 1974ம் ஆண்டு ஆனி மாதம் 5ம் நாள். ஈழத் தமிழினம் இச் சோக நாளை தம் வரலாறு முழுவதும் காவித் திரிவர்.

Friday, August 11, 2006

பொன்.கணேசமூர்த்தி -ஓர் அஞ்சலி

-நடராஜா முரளிதரன்-

வழமை போல் அன்றும் காலையில் எழுந்தவுடன் பல்லைத் துலக்குவதற்கு முன்பாகவே கணணியின் முன்பாக அமர்ந்து கொண்டு இணைய வலயத் தளங்களுக்குள் நுழைந்து கொண்டேன்.

வலயத் தளங்களுக்கூடாக ஒரு சுற்றுச் சுற்றி வரும் வேளையில் நிதர்சனத்துக்குள் புகுந்த எனக்குத் “தின்னவேலியில் வங்கி முகாமையாளர் சுட்டுப் படுகொலை” என்ற செய்தி தடுத்து நிறுத்தியது. இன்னும் அந்தச் செய்திக்குள் ஆழப் புகுந்த போது என்னோடு சிறுவயது முதற் கொண்டே பேசிப் பழகிய, கவிதை-பேச்சு-நாடகம்-அரசியல் போன்ற துறைகளில் கூட்டாக இணைந்து இயங்கிய, அரசியல் முரண்பாடுகள் குறித்துப் பலமுறைகள் என்னோடு கடுமையாக விவாதித்த, என்னைவிடக் குறைந்தது பத்து வருடங்களாவது வயதில் மூத்த “கணேசமூர்த்தி அண்ணை” என என்னால் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அந்தப் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி, கலை இலக்கியவாதி தின்னவேலித் தலங்காவல் பிள்ளையார் கோவிலுக்கு மிகச் சமீபமாக “ஹெல்மட்” அணிந்த நிலையில் தரையோடு தரையாக வீழ்த்தப்பட்டுக் கிடந்த நெஞ்சை அதிர வைத்த அந்தக் காட்சி, அது எழுப்பிய துயரம் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட முடியாதது. மரணம் வாய் பிளந்து நிற்கும் அந்தப் பூமியில் கொடூரமாக வீழ்த்தப்பட்ட உன்னருகில் உன்னவள் திலகமணி நினைவைக் கொன்று, வேதனையைக் கொன்று ஒரு நடைப் பிணமாய் குந்தியிருக்கும் பேய் அறைந்த நிலை என்னை இதனை எழுத வைக்கின்றது.

அரசியல் அத்காரத்தை வென்றெடுக்க நீ துப்பாக்கி ஏந்தவில்லை. இன்னும் ஒருபடி மேலே கூறுவதானால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் சீர்குலையும் தருணங்கள் வரை கூட்டணியின் மிதவாதப்பாதையோடு ஒத்துப் போனவன். தமிழ் இளைஞர் பேரவைக் காலங்களில் உமாமகேஸ்வரனுக்கு நெருக்கமான நண்பன். வர்க்கப் பார்வையோடு கூடிய இடதுசாரிச் சிந்தனைக்கு மேலாகக் கூர்மையடைந்துள்ள அடக்குமுறைக்கு உள்ளான தமிழ் பேசும் மக்களின் தமிழ்த் தேசியவாதமானது முற்போக்கான பல்வேறு குணாம்சங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்ற வாதத்தைப் பலமாக நம்பியவன் நீ.

ஆனாலும் உனது சிந்கனைத் தடத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வீழ்ச்சி எற்படுத்திய மாற்றம் கணிசமானது என்று நான் எண்ணுகின்றேன். அதுவும் குறிப்பாக உனது நெருங்கிய நண்பன், தமிழ்த் தேசியவாதி நா.கருணானந்தசிவம் (இளந் தமிழர் மன்ற நிறுவனர், ஆசிரியர்) அமைதிப் படையென வந்த இந்தியப்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வேளைகளில் வேதனைகளின் உச்சி வரை இழுத்துச் செல்லப்பட்டாய் நீ என்பதை நான் அறிவேன்.

அந்நியச் சிறகுகளின் அரவணைப்பில் உண்மையான சுதந்திரம் பெறப்பட முடியாதது என்பது மட்டுமல்ல “அரவணைத்த சிறகுகளின் என்புகளே இதயங்களைக் குத்திக் கிழிக்கும்” என்ற “வேலியே பயிரை மேய்ந்த கதையை” வரலாறு எங்கணும் நாம் பார்க்க முடியும்.

நீயும், உனது குடும்பமும் வாழ்ந்த பூமியிலிருந்து அடித்து விரட்டப்பட்டு வன்னி மண்ணுக்குச் சென்று வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் உனது மகன் போராளி அமைப்பில் தன்னைப் பிணைத்துக் கொண்டதையிட்டு நீ பெருமைப்பட்டுக் கொண்டதை எனது தையிட்டி நண்பன் தயாளசீலன் எனக்குக் கூறியிருந்தார்.

அவ் வேளைகளில் உன்னால் உருவாக்கப்பட்ட படைப்புக்களான “மண்ணுக்காக” திரைப்படமும், “சந்தனக்காடு” நாடகமும் தமிழ்த் தேசிய விடுதலைப் போருக்கு வலுச் சோப்பதாகவே அமைந்திருந்தது. உன்னால் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பும், இயற்றப்பட்ட இசைப்பாடல்களும் கூட அது குறித்த உருவகங்களே.

புஸ்பராஜா எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற நூலில் உனது பெயர் பலதடவை குறிக்கப்பட்டும், உனது மனைவி திலகமணி ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுத மயமாக்கப்பட்ட தருணங்களில் பங்களிப்புச் செய்த பெண்களில் முன்னுரிமை பெற்றவர் என்றும் எழுதப்பட்டுள்ளதை இங்கு பதிவுக்குள்ளாக்க விழைகின்றேன். ஏனெனில் உங்களது பங்களிப்புக்கான ஆதாரங்கள் பல்வேறு முனைகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்றன. ஆதன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஏதாவதோர் பக்கங்களிலாவது உங்களது பங்களிப்பு செறிவாக்கப்பட வேண்டும் என்று அவாவுறுகின்றேன்.

எனது தமிழ் ஆசிரியை குறமகள் வள்ளிநாயகி கணேசமூர்த்தி குறித்த நினைவுகளை “ஈழநாடு” பத்திரிகையில் எழுதுகையில் இந்திய இராணுவம் அமைதிப்படையாக வந்திறங்கிய நாட்களில் முன்பு விரட்டப்பட்டு ஓடிய காங்கேசன்துறைச் சமூகம் சங்கக்கடைக்கு வந்து தமக்குரிய பொருட்களைப் பெற்றுச் செல்லும் போது கடைசி முறையாகச் சந்தித்தோம். அவர் அப்போதும் எந்த அமைப்போடும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. “இனிச் சமாதானம் வருமென்று நினைக்கிறீர்களா ரீச்சர்?” என்று கேட்டார். “தமிழீழம் வராவிட்டாலும் மாகாண ரீதியான சமஸ்டி வரக்கூடும். இந்தியத் தலையீடு எப்படியும் சமாதானத்தைக் கொண்டு வரத்தானே வேண்டும் என்றேன்”. “நடந்ததை விட மோசமான யுத்தமும் நமக்கு அழிவும் தான் வரும். நான் சொன்னதை நீங்கள் ஒருக்காலும் மறக்க மாட்டீர்கள்” என்று கணேசமூர்த்தி கூறியதைப் பதிவாக்கியுள்ளார்.

எனவே சர்வதேச அரசியலைத் தெளிவாகப் புரிந்து கொண்ட கணேசமூர்த்தியிடம் இந்தியத் தலையீடு குறித்த தெளிவான விளக்கம் இருந்ததை இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

1986 டிசம்பரில் நான் விடுதலையாகி வெளிவந்த சில நாட்களில் இளந் தமிழர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பாரதி விழாவுக்குச் சென்றிருந்தேன். விழாவில் பட்டி மன்ற நிகழ்வும் ஒன்று. பட்டி மன்றத் தலைப்பு “குற்றவாளிக் கூண்டில் இந்திய சமாதானத் தூதுவர்கள்”. என்னையும் அதில் கலந்து கொள்ளுமாறு கணேசமூர்த்தியும், நண்பர் பாப்பாவும் “அழுங்குப்பிடி” பிடித்தார்கள். இறுதியில் பட்டி மன்றத் தீர்ப்பாளராக அந்த மன்றிலே பங்குபற்றியிருந்தேன்.

கணேசமுர்த்தி அவர்கள் “இந்திய சமாதானத் தூதுவர்கள் குற்றவாளிகளே” எனப் பல்வேறு ஆதாரங்களையும், புள்ளிவிபரங்களையும் முன்வைத்துச் சொற்போர் புரிந்தார். எனவே இந்தியா குறித்த அவரது நிலைப்பாடு தேடலோடு இணைந்த ஆழ்ந்த அரசியல் பிரக்ஞையை உள்ளடக்கியதெனலாம்.

நினைத்துப் பார்க்கின்றேன். 1976ம் ஆண்டு. தின்னவேலி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மாணவர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த வழக்காடு மன்றம். வழக்காடு மன்றத் தலைப்பு: “குற்றவாளிக் கூண்டில் தமிழ் ஈழப் பிரிவினை வாதிகள்”. தமிழ் ஈழப் பிரிவினை வாதிகள் குற்றவாளிகள் அற்றவர் என்ற தரப்பில் கருணானந்தசிவம், கணேசமூர்த்தி, சிவதாசன் போன்றோர்.

மறுபுறத்தில் குற்றவாளிகளே என வாதம் புரியப் புதுமைலோலன், நாவேந்தன் போன்ற மிகச் சிறந்த பேச்சாளர்கள். அந்தச் சொற்போரிலே கணேசமூர்த்தி சிங்களப் பேரின வாதத்தின் விளைவே தமிழ் பிரிவினைவாதம் எனவும் அதன் உருவாக்க்தினால் விளைந்ததே தமிழீழப் பிரிவினை வாதிகள் என்றும் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்து மிகச் சிறப்பாக சொற்பொழிவாற்றியிருந்தார்.

இளந் தமிழர் மன்றம் காங்கேசன்துறையிலே பாரதி விழாவை இரு நாட்கள் நடத்துவார்கள். முதல் நாள் யாழ் மாவட்டம் அடங்கலாக நாடகங்கள் கொணரப்பட்டு அதில் ஐந்து சிறந்த நாடகங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நாடகப் போட்டி இடம்பெறும். இரண்டாவது நாள் பட்டிமன்றம், கவியரங்கம், மன்ற நாடகம் , பரிசளிப்பு வைபவம் எனத் தொடரும்.

அவ்வேளைகளிலே கணேசமூர்த்தி முதல் நாள் நாடக நடுவராக மறுநாள் பட்டிமன்றம், கவியரங்கம், மன்ற நாடகம் என அனைத்திலும் பங்குறும் பன்முக ஆளுமை கொண்ட கலைஞனாகப் பரிணமித்ததை இன்றும் என்னால் நினைவுகூரக் கூடியதாக உள்ளது.

சிறுவயதில் எனக்குப் பேசுவதற்கு பேச்சு எழுதித் தந்தவராக, வாசிப்பதற்கு கவிதை எழுதித் தந்தவராக இருந்தவர் நீங்கள். ஒருவகையில் எனக்கு நீங்கள் ஆசிரியரும் கூட. நான் இன்று அந்த மண்ணிலே உயிரோடு இருந்திருந்தால் தரையோடு வீழ்த்தப்பட்ட அந்தப் புன்னகை தவழும் உடல் தாங்கிய அந்தப் பேழையை எனது தோள் சுமந்திருக்கும். அதனால் என் மனமும் பரித்திருக்கும்.

இன்று ஒட்டாத மண்ணில் உயிரைச் சுமந்து கொண்டு “பயங்கரவாதி” என்ற பட்டத்தையும் காவிக் கொண்டு அலைந்து திரியும் பறவை நான்.
எதைத் தான் என்னால் செய்வது? இதையே நான் தருவேன். ஏற்றுக் கொள்ளுங்கள்.

எல்லோரையும் போல
மரணத்தைக் கண்டு
நானும் அச்சப்படுகின்றேன்
ஆனாலும் கதவைத் தட்டாமலே
உள்ளே நுழைந்து கொண்டு
உன்னை மரணத்திற்கு
அழைத்துச் சென்ற
அந்த மரண தூதுவர்கள்
எனக்கு
மிகப்பெரிய அச்சத்தை
ஏற்படுத்துகிறார்கள்
ஆனாலும்
மரணத்தை
வெல்லும் உனது வாழ்வு
எனது வாழ்க்கை
பற்றிய பிடிப்பில்
மீண்டும் என்னை
அழைத்துச் செல்கிறது.