Tuesday, March 31, 2026

"போப் லியோ" ஈரான் மீதான போரைக் கண்டிக்கிறார் !

போப் லியோ (Pope Leo XIV), ஞாயிறு (Palm Sunday) திருப்பலியின்போது, போர் நடத்தும் தலைவர்களின் பிரார்த்தனைகளைக் கடவுள் கேட்கமாட்டார் என்றும், அவர்களின் “கைகள் இரத்தத்தால் நிரம்பியுள்ளன” என்றும் கூறினார். 

இது டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான ஒரு தெளிவான கண்டனமாகத் தெரிகிறது.

இந்தக் கருத்துக்கள், அமெரிக்கப் படைகள் ஆயிரக்கணக்கானோர் மத்திய கிழக்குக்கு வந்துகொண்டிருக்கும் நிலையிலும், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீற் ஹெக்செத் (Pete Hegseth) எதிரிகளுக்கு “எந்த இரக்கமும் இல்லை” என்று வன்முறையை வேண்டிப் பிரார்த்தனை செய்த சில நாட்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளன.

வத்திக்கான் நகரில் உள்ள சென்ற் பீற்றஸ் சதுக்கத்தில் நடைபெற்ற ஞாயிறு திருப்பலியில், போப் லியோ, ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான மோதலைக் "கோரமானது” (atrocious) என்று அழைத்தார். 

இயேசுவைப் போரினை நியாயப்படுத்தப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இதுதான் நமது கடவுள்: இயேசு, அமைதியின் அரசர். அவர் போரை நிராகரிக்கிறார். அவரை யாரும் போரை நியாயப்படுத்தப் பயன்படுத்த முடியாது,” என்று அவர் பல்லாயிரக்கணக்கான பக்தர்களிடம் கூறினார். 

"போர் நடத்துபவர்களின் பிரார்த்தனைகளை அவர் கேட்கமாட்டார், மாறாக நிராகரிப்பார்.”

என்ற பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டி, “நீங்கள் பல பிரார்த்தனைகள் செய்தாலும், நான் கேட்கமாட்டேன்: உங்கள் கைகள் இரத்தத்தால் நிரம்பியுள்ளன” என்று சொன்னார்.

முதல் அமெரிக்கப் போப்பாக இருக்கும் லியோ, எந்த அரசாங்கத்தையோ தனிநபரையோ நேரடியாகப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. 

ஆனால் அவரது கருத்துக்கள், ஹெக்செத்தின் பிரார்த்தனைக்குப் பிறகு, ஈரானுக்கு அருகில் அமெரிக்கத் தரைப்படைகள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் வந்துள்ளன.

ஹெக்செத், புதன்கிழமை ஒரு கிறிஸ்தவ வழிபாட்டு நிகழ்ச்சியில், “நீதியின் எதிரிகளுக்கும் நமது பெரிய நாட்டுக்கு எதிரானவர்களுக்கும் ஒவ்வொரு குண்டும் இலக்கைத் தாக்கட்டும். … அவர்களுக்கு எந்த இரக்கமும் வேண்டாம். தகுதியற்றவர்களுக்கு எதிராக அழிவுகரமான வன்முறைச் செயல்பாட்டை வழங்குங்கள்” என்று பிரார்த்தித்தார்.

போப், இயேசு தன்னைப் பாதுகாக்க வாளைப் பயன்படுத்திய சீடரைக் கண்டித்ததைச் சுட்டிக்காட்டி, “அவர் ஆயுதமேந்தவில்லை, போராடவில்லை. அவர் கடவுளின் மென்மையான முகத்தை வெளிப்படுத்தினார், எப்போதும் வன்முறையை நிராகரித்தார். தன்னைக் காப்பாற்றிக்கொள்ளாமல், சிலுவையில் அறைபட அனுமதித்தார்” என்றார்.

இந்த அமைதி வேண்டுகோள், அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் மோதல் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில் வந்துள்ளது. 

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர், அமெரிக்கப் படைகள் வந்தால் “அவர்களைத் தீயில் எரிப்போம்” என்று கூறியுள்ளார்.

அனைத்துத் தரப்பினரும் மதத்தைப் பயன்படுத்தித் தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயல்கின்றனர். 

ஹெக்செத்தின் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பென்டகனின் செயல்களுடன் இணைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போப் லியோ, மோதலில் லெபனான், இஸ்ரேல், வளைகுடா நாடுகளில் அழிவு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து போர் நிறுத்தம் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை வேண்டினார். கிறிஸ்தவர்கள் இந்தப் பகுதியில் ஈஸ்டர் கொண்டாட முடியாமல் போகலாம் என்று வருந்தினார்.

இந்த ஞாயிறு, கிறிஸ்தவர்களுக்குப் புனித வாரத்தின் தொடக்கம். இயேசு ஜெருசலேமுக்கு வந்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த நிகழ்வுகளை நினைவுகூரும் நாள்.

இதே நாளில், ஜெருசலேமில் உள்ள புனித கல்லறைத் தேவாலயத்தில் (Church of the Holy Sepulchre) கத்தோலிக்க கார்டினல் பியர்பட்டிஸ்டா பிசாபல்லாவை இஸ்ரேல் போலீஸ் நுழைய விடாமல் தடுத்தது. 

இதை அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் கண்டித்தன. அமெரிக்கத் தூதர் மைக் ஹக்காபி இதை “துரதிர்ஷ்டவசமான அதிகப்படியான நடவடிக்கை” என்றார். 

இத்தாலிப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் ஆகியோரும் மத சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று விமர்சித்தனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புக் காரணங்களால் தடுத்ததாகக் கூறினார். பின்னர், கார்டினலுக்கு உடனடியாக முழு அணுகல் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அறிவித்தார்.

இந்தச் செய்தி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. போப் லியோவின் கருத்துக்கள், போரின் மத்தியில் அமைதி மற்றும் மதத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான வலியுறுத்தலாக அமைந்துள்ளது.

NDP இன் முன்னாள் ஒன்டாரியோ மாகாணத் தலைவர் ஸ்டீபன் லூயிஸ் காலமானார்

 

NDP இன் முன்னாள் ஒன்டாரியோ மாகாணத் தலைவரும், கனடாவின் நீண்டகால சமூக ஆர்வலரும், சிறந்த பேச்சாளருமான ஸ்டீபன் லூயிஸ் (Stephen Lewis) காலமானார். அவருக்கு வயது 88.

அரசியல் பயணம்: 

இவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் முன்னாள் தூதராகவும், ஒன்டாரியோ மாகாணத்தின் NDP (New Democratic Party) கட்சியின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியவர்.

குடும்பம்: 

கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவின் கூட்டாட்சி NDP கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவி லூயிஸின் (Avi Lewis) தந்தை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா பணிகள்: 

ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னானின் சிறப்பு ஆலோசகராகவும், UNICEF-இன் துணை இயக்குநராகவும், ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV-AIDS) ஒழிப்புக்கான ஐநாவின் சிறப்புத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

மனிதநேயப் பணி: 

2003 ஆம் ஆண்டில் 'ஸ்டீபன் லூயிஸ் அறக்கட்டளை'யை நிறுவினார். ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய்க்கு எதிராகப் போராடும் அடிமட்ட அமைப்புகளுக்காக இந்த அறக்கட்டளை கடந்த ஆண்டு வரை 200 மில்லியன் டாலர்களுக்கும் மேல் நிதி திரட்டியுள்ளது.

அவரது மரணச் செய்தியை ஸ்டீபன் லூயிஸ் அறக்கட்டளை இன்று தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மறைந்த தலைவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி !

புதிய NDP தலைவர்

 புதிய ஜனநாயகக் கட்சி (NDP) கடந்த ஆண்டு நடைபெற்ற கனடியக் கூட்டாட்சித் தேர்தலில் அதிகாரப்பூர்வக் கட்சி அந்தஸ்தை இழந்த பின்னர், மீண்டும் தன்னைக் கட்டமைக்க முயல்கிறது. 

இந்நிலையில், முன்னாள் ஒலிபரப்பாளரும் தன்னை "சோசலிஸ்ட்" என்று அழைத்துக் கொள்ளும் அவி லூயிஸ் (Avi Lewis) அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற NDP தலைவர் தேர்வு மாநாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். முதல் வாக்கு எண்ணிக்கையிலேயே லூயிஸ் வெற்றி பெற்றது, அவருக்குப் பரவலான ஆதரவு கட்சிக்குள் இருப்பதை வலியுறுத்தியது. 

"மாநாட்டின் மகத்தான உந்துதலை” , "NDP மீட்சியாக” மாற்றுவதாக லூயிஸ் உறுதியளித்தார்.

ஞாயிற்றுக்கிழமை வெற்றிக்குப் பிறகு ஆதரவாளர்களிடம் பேசிய 58 வயது ஆவணப்படத் தயாரிப்பாளரும் முன்னாள் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான லூயிஸ், சமத்துவத்தை நோக்கியே கட்சியை மையப்படுத்தப் போவதாக உறுதியளித்தார். 

அதிக செல்வ வரிகள், பசுமை எரிசக்தி மற்றும் இலவச உயர்கல்வி ஆகியவற்றை வாக்குறுதி அளித்தார்.

“ஏற்கனவே நிறுவனங்களிடமிருந்து கூக்குரல் கேட்கிறது: ‘இவை அனைத்துக்கும் பணத்தை எப்படிச் செலுத்தப் போகிறீர்கள்?’ 

கோர்ப்பரேஷன்களையும் பில்லியனர்களையும் சரியாக வரி விதிக்கும் நேரம் இது. அவர்கள் இலாபத்தின் அலைக்கழிப்பில் சவாரி செய்யும் போது, 99% மக்கள் துன்பப்படுகின்றனர்,” என்று வின்னிபெக் நகரில் கரகோசம் எழுப்பிய கூட்டத்திடம் அவர் கூறினார்.

ஆளும் லிபரல் கட்சியின் நெறிமுறைத் தவறுகளை லூயிஸ் சுட்டிக்காட்டினார். எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கத்தையும், பில்லியன் கணக்கான லாபம் ஈட்டும் “மளிகைப் பேரரசர்களையும்” (grocery barons) NDP அரசு சவாலுக்கு உள்ளாக்கும் என்று உற்சாகமான ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

“99% மக்களுக்கு வழிகாட்டியாக NDP மீண்டும் வெற்றி பெறும். இந்தப் பயங்கரமான காலங்களின் இருண்ட வானத்தை, கூட்டுப் போராட்டத்தின் உற்சாகமான ஒளி ஒளிரச் செய்யும்,” என்றார்.

முன்னாள் கட்சித் தலைவர் டேவிட் லூயிஸின் பேரனும், முன்னாள் ஒன்ராறியோ NDP தலைவர் ஸ்டீபன் லூயிஸின் மகனுமான லூயிஸ், மேடையில் தனது மனைவியான புகழ்பெற்ற எழுத்தாளர் நயோமி கிளைன் (Naomi Klein) உட்பட ஆதரவாளர்களுடன் இணைந்திருந்தார்.

ஆறு எம்.பி.க்கள் மட்டுமே உள்ள, பலவீனமான கருத்துக் கணிப்பில் உள்ள, சுமார் 13 மில்லியன்  டொலர்கள் கடன் கொண்ட NDP கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். 

அரசியல் அலுவலகத்தில் இதுவரை பதவி வகிக்காதவர் மற்றும் பாராளுமன்றத்தில் இடம் இல்லாதவர் என்பது அந்த முயற்சியை மேலும் சிக்கலாக்கும்.

தலைவர் தேர்வில் அவர், எட்மண்டன் ஸ்ட்ராத்கோனா எம்.பி. ஹெதர் மெக்பெர்சன் (இரண்டாவது இடம்), தொழிற்சங்க அமைப்பாளர் றொப் ஆஷ்டன், பிரிட்டிஷ் கொலம்பியா நகரக் கவுன்சிலர் டானில் ஜான்ஸ்டன், விவசாயி டோனி மெக்வெயில் ஆகியோரைத் தோற்கடித்திருந்தார்.

பிரதமர் மார்க் கார்னி மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலீவியர் இருவரும் லூயிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்து, புதிய தலைவருடன் பணியாற்றவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில் NDPயின் வீழ்ச்சியால் லிபரல்களும் பழமைவாதிகளும் பயனடைந்தனர். 

அப்போதைய தலைவர் ஜக்மீத் சிங் தனது சொந்தத் தொகுதியில் தோற்று இராஜினாமா செய்திருந்தார்.

தற்போது கூட்டாட்சி அளவில் சுமார் 6% வாக்குகள் மட்டுமே உள்ள NDP, இந்த மாதத் தொடக்கத்தில் மற்றுமொரு அடியைச் சந்தித்தது. 

எம்.பி. லோரி இட்லவுட் லிபரலுக்கு மாறியதால், அதிகாரப்பூர்வக் கட்சி அந்தஸ்துக்கு தேவையான 12 எம்.பி.க்களுக்கு மிகவும் குறைவாகவே NDP உள்ளது.

2011ஆம் ஆண்டு, முன்னாள் தலைவர் ஜாக் லேட்டன் தலைமையில் NDP கட்சி 103 இடங்களை வென்றது.

பிற கூட்டாட்சிக் கட்சிகளைப் போலல்லாமல், NDP தனது மாகாணக் கட்சிகளுடன் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளது.

மனிற்றோபா மாகாண NDP தலைவரும், 2023இல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றவருமான 

வாப் கினேவ் (Wab Kinew) மேடையில் லூயிஸுடன் இணைந்திருந்தார். அவர் நாட்டின் மிகவும் பிரபலமான மாகாண முதல்வராகத்  தொடர்ந்து கருத்துக் கணிப்புகளில் இடம்பெறுகிறார்.

ஆனால் லூயிஸின் வெற்றிக்குப் பிறகு சில மாகாணத் தலைவர்களிடமிருந்து வந்த எதிர்வினைகள், கட்சியை ஒன்றிணைப்பதில் அவர் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகின்றன. 

பிரிட்டிஷ் கொலம்பியா NDP மாகாண முதல்வர் டேவிற் ஈபி (David Eby) லூயிஸின் வெற்றியைப் பாராட்டினாலும், தொழில்நுட்பம் மற்றும் சுரங்கத் துறைகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் தனது அரசின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டினார். 

இந்தத் துறைகள் இரண்டும் லூயிஸால் விமர்சிக்கப்பட்டவை. “நமது முன்னுரிமை, உழைக்கும் மக்களை உயர்த்துவதும், செழிப்பை வளர்ப்பதும் ஆகும்,” என்றார் ஈபி.

சுற்றுச்சூழல் சான்றுகளை வலுப்படுத்த லூயிஸ் முயன்றுள்ளார். பசுமை எரிசக்தி ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். 

காலநிலை நெருக்கடியின் விளைவுகளுக்கு எதிராக கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஐ முதலீடு செய்ய விரும்புகிறார்.

எண்ணெய், எரிவாயு மேம்பாட்டு விவகாரத்தில் லூயிஸுடன் மோதலில் இருந்த அல்பேட்டா NDP தலைவர் நஹீத் நென்ஷி (Naheed Nenshi), கூட்டாட்சிக் கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்தியல் மாற்றம் அல்பேட்டா மாகாணக் கட்சிக்கு உதவாது என்று எச்சரித்தார்.

“அல்பேட்டா NDP அரசின் தோல்வியைப் பகிரங்கமாகக் கொண்டாடிய இந்தப் புதிய தலைவரின் கீழ் கூட்டாட்சிக் கட்சியின் திசை, அல்பேட்டா நலனுக்கு உகந்ததல்ல என்பது தெளிவு,” என்றார்.

சஸ்கெச்சுவான் NDP தலைவர் கார்லா பெக் (Carla Beck), லூயிஸுடன் சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறி, அவரது நிலைப்பாடுகள் “கருத்தியல் ரீதியாகவும், யதார்த்தமற்றவையாகவும்” உள்ளன என்றார். புதிய பைப்லைன் திட்டங்களுக்கு எதிராக லூயிஸ் இடுகையிட்ட வீடியோவை அவர் சுட்டிக்காட்டினார்.

இடைக்காலத் தலைவர் டொன் டேவிஸ் (Don Davies), கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பிறகு NDP கட்சியை மீண்டும் கட்டமைக்கத் தயாராக உள்ளதாகக் கூறினார். பிரதமர் கார்னி நாளுக்கு நாள் மேலும் பழமைவாதமாக (conservative) மாறி வருவதை வாக்காளர்கள் கவலைப்படுத்துவதாக நம்புவதாகத் தெரிவித்தார்.



#NDP